Wednesday, October 25, 2023

அணு உலையில் இருந்து கிளம்பும் பரிசுத்த ஆவிகள்

 1.       அணு உலையில் இருந்து கிளம்பும் பரிசுத்த ஆவிகள்


 


     “என்னப்பா சொல்ற நீ, அணுகுண்டு டெக்னாலஜிய பயன்படுத்தி மின்சாரம் தயாரிச்சாங்களா?”


     “டேய் அருண் முதல்ல கரண்ட் எப்படி தயார் பண்றாங்கன்னு தெரியுமா?”


     “நெய்வேலில நிலக்கரி பயன்படுத்தியும், மேட்டூர்ல தண்ணிய பயன்படுத்தியும் அப்புறமா ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி பக்கம்) காற்றாலை மூலமா பிறகு கூடங்குளத்தில் அணுஉலை என்று பல வகையில் தயார் பண்றாங்க. ஆனா எல்லாத்துலயும் அடிப்படை ஒண்ணுதான் தெரியுமா?”


     “என்னப்பா அடிப்படை?”


     ”காந்தம் தெரியுமா, அதாம்பா மேக்னெட்!!”


     “தெரியும்பா, நானே வச்சிருக்கேன்”


     “அதுல வட துருவம் தென் துருவம் எல்லாம் உண்டு, ஒத்த துருவங்கள் விலக்கும் எதிர் துருவங்கள் கவரும்”


     “அது தெரியும்பா”


     “ஒரு காந்தம் இருந்தா அதைச் சுற்றி காந்த புலம் உருவாகும். இரண்டு காந்தங்களை அருகருகே வைத்தால் இரண்டிற்கும் இடையில் வலிமையான காந்த புலம் இருக்கும்”


     “சரி, கரண்ட் எப்படி அதிலிருந்து வருதுன்னு சொல்லுங்கப்பா!!”


     “வரேன் இருடா, சதுர அல்லது செவ்வக வடிவில் நெருக்கி சுற்றப் பட்ட காப்பர் ஒயர்கள் கொண்ட அமைப்புக்கு பேர் காயில். அந்த காயிலை அந்த வலிமையான காந்த புலத்தில் அதாவது இரண்டு வலிமையான காந்த புலங்களுக்கு மத்தியில் செல்லும் அச்சில் காந்தபுலத்தை செங்குத்தாக வெட்டுமாறு சுழற்றினால் அந்த காயிலில் சுற்றப் பட்ட ஒயரில் மின்சாரம் உண்டாகும். இதுதான் மின்சாரம் உண்டாக்க வேண்டிய தத்துவம்”




     “நீங்க சொன்ன எல்லா வகை மின் நிலையங்களிலும் அப்படித்தான் மின்சாரம் உண்டு பண்றாங்களா?”


     “ஆமாம். சுழற்சி என்கிற இயக்க ஆற்றலை மின் ஆற்றலா மாற்றணும். அந்த சுழற்சியை யார் செய்றாங்க என்பது தான் மின்நிலையங்களை பிரித்து காண்பிக்கிறது”


     “எப்படிப்பா?”


     “மேட்டூர் அணை மாதிரியான நீர்த்தேக்கங்களில் வேகமாக அதிக அழுத்தத்துடன் வெளியேற்றப் படும் நீர் அந்த காயில் இருக்கும் அச்சை (இனி டர்பைன் என்று சொல்வேன்) சுழற்றும். இதுவே நெய்வேலியில் நிலக்கரியை எரித்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் நீரை கொதிக்க வைத்து நீராவியை உருவாக்கும். அந்த நீராவி அதிக அழுத்தத்துடன் டர்பைனை சுழற்றும் வகையில் செலுத்தப் படும். இதுவே காற்றாலை என்றால்…”


     “தெரியும்பா, காற்று அந்த ராட்சத ஃபேனோட ரெக்கையை சுழற்றும் அது டர்பைனை சுழற்றி மின்சாரத்தை உருவாக்கும்”


     “அப்புறம் அணு உலை மின்சாரத்திலும் நெய்வேலி கதை தான். ஆனால் அங்கே நிலக்கரியை எரிப்பதற்கு பதிலாக கட்டுப் படுத்தப் பட்ட அணு வெடிப்பு மூலம் பெறப்படும் வெப்பம் நீராவியாக பெறப்பட்டு டர்பைன் சுழற்றப் படும்”


     “ஆனா இந்த சோலார் பேனல் மூலமாக கிடைக்கும் மின்சாரம் டோட்டலா வேறவகை தானேப்பா?”


     “கரெக்டா சொன்னடா செல்லக்குட்டி. ஐன்ஸ்டீன் கண்டறிந்த ஒளிமின் விளைவு அடிப்படையில் அது கிடைக்கிறது. இது பற்றி விளக்கமா வேற சந்தர்ப்பத்தில் கதைப்போம்”.


     “அப்பா அணு உலையில் எரிபொருளா பயன்படுத்தப் படுவது யுரேனியம் தானே?“


     “ஆமாம், ஆனா அப்படி வெறுமனே சொல்லக் கூடாது யுரேனியம்233, யுரேனியம் 235 போன்ற யுரேனியம் ஐசோடோப்புகளும் புளுட்டோனியம்239 ம் தான் அணுக்கருப் பிளவுக்கு உகந்தவை”


     “அப்பா, எனக்கு ஒரு டவுட்டு அணுகுண்டு பத்தி சொன்னப்ப, கிரிட்டிகல் மாஸ் என்கிற எல்லையை தாண்டியதும் தானாகவே வெடிக்கும் என்று சொன்னீங்க. ஆனா இங்க தானா வெடிக்காது இல்லையா? அப்போ எப்படி வெடிப்பை துவக்கி வைப்பாங்க?”


     “அப்படி கேளு, அணு குண்டு மாதிரி இங்கே எரிபொருள் இரண்டு துண்டா இருக்காது. ஆனால் மாத்திரை வடிவ பெல்லட் களாக சிறிது சிறிதாக செய்யப் பட்டு செங்குத்தான குழாய்களுக்குள் பத்திரமாக வைக்கப்படும். இது போன்ற குழாய்கள் நிறைய சேர்ந்து ஒரு உருளை வடிவ தொகுப்பாக அணுஉலையின் மையத்தில் இருக்கும்   ( fuel Assembly) பகுதியில் வைக்கப் படும். இது கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய வேலை என்பதால் மாதக் கணக்கில் ஆகும்“.



     “பத்திரமா உள்ளே வைத்த பிறகு எப்படி முதல் வெடிப்பை துவக்குவாங்க?”


     “அணுகுண்டு பற்றி சொன்னபோது சொல்லி இருக்கிறேன் அல்லவா, ஒரு யுரேனியம் இரண்டாக பிளந்த பிறகு வெப்ப ஆற்றலோடு மூன்று நியுட்ரான்கள் வெளியேறி வேறு மூன்று அணுக்களை பிளக்கும், பிறகு அவற்றிலிருந்தும் இதுவே என பிளவு தொடர் செயல்பாடாகவும் அபரிமிதமான ஆற்றலாகவும் வெளியாகும். ஆனால் இங்கே முதல் பிளவை நிகழ்த்த நியுட்ரான் கொண்டு எரிபொருள் தாக்கப்பட்டு வெடிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்படும்”


     “அப்புறம் அடுத்த மூன்று நியுட்ரான்கள் அடுத்த மூன்று அணுக்களை தாக்கி தொடர்வினையாக தொடர்ந்து வெடித்தபடியும் வெப்ப ஆற்றலை கொடுத்தபடியும் இருக்கும் தானே?”


     “வெரிகுட் டா செல்லக்குட்டி”


     “ஆனா எப்படிப்பா நிறுத்துவாங்க?”


     “நிறுத்துவது என்றில்லை, தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் நியுட்ரான் வேகத்தை மட்டுபடுத்துவது என்பதெல்லாம் ரொம்ப முக்கியம் பா”


     “நியுட்ரான் வேகத்தை ஏன் மட்டு படுத்தணும்”


     “அணுக்கரு பிளவுக்கு அதிவேக நியுட்ரான்களை விட மிதவேக நியுட்ரான்கள் தான் உகந்தவை. எனவே நியுட்ரான்களின் வேகத்தை மட்டு படுத்த காட்மியம் போன்ற உலோக கழிகள் அணு உலைக்குள் தாழ்த்தி உயர்த்தும் வகையில் வைத்திருப்பார்கள்“


     “எரிபொருள் தீர்ந்து போச்சுன்னா எப்படிப்பா மாற்றுவாங்க?“





     ”நல்ல கேள்வி, தற்போது அணு உலை செயல்பாட்டில் இருக்கும் போதே புதிய எரிபொருளை உள்ளே செலுத்தவும் பயன்படுத்தப் பட்ட எரிபொருளை அப்புறப் படுத்தவும் வழிவகை உண்டு. ஆனால் பழைய அணுஉலைகள் 18 அல்லது 24 மாதங்கள் முடிந்து நிறுத்தப் பட்டு எரிபொருள் மாற்றுவது பழைய உபயோகிக்கப் பட்ட எரிபொருளை அப்புறப் படுத்துவது என்று வேலைகள் நடக்கும்”.


     “அப்பா, பயன்படுத்திய யுரேனியத்தை தூக்கிப் போட்ருவாங்களா?”


     “அப்படில்லாம் தூக்கிப் போட்டா அந்த ஏரியாவில் இருக்குறவன் எல்லாம் கேன்சர் வந்து சாகவேண்டியது தான். ஆமாம், பயன்படுத்தப் பட்ட எரிபொருட்களில் இருந்தும் ஆபத்தான கதிர்வீச்சு பல நூறு ஆண்டுகளுக்கு வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். இப்போ வரைக்கும் அந்த பயன்படுத்தப் பட்ட எரிபொருட்களை என்ன செய்வதென்று தெரியாமல் பாதுகாப்பாக பத்திரப் படுத்தி சேம்பர்ஸ்ல வச்சிட்டு இருக்காங்க”


     “அப்பா மறுபடியும் எனக்கு ஒரு டவுட்டு!!”


     “கேளுப்பா”


     “அணுக்கரு இணைவு மூலம் ஹைட்ரஜன் குண்டு தயார் பண்ணுனாங்கன்னு சொன்னீங்கள்ல, அப்படின்னா, ஹைட்ரஜன் பாமை கட்டுப் படுத்தி வெடிச்சி மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்ல, வெறும் ஹைட்ரஜன் தானே, கதிரியக்க ஆபத்து எதுவும் இருக்காதுல்ல?!”


     “செல்லக்குட்டி நீ அறிவாளிடா, ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. ஹைட்ரஜன் பாமை எப்படி வெடிக்க வச்சாங்க?”


     “ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே சின்ன அணு அதாவது ஒரே ஒரு எலக்ட்ரான் புரோட்டான் உள்ளது. அதனால ரெண்டு ஹைட்ரஜன் அணுவை இணைத்து ஹீலியம் அணுவா மாத்தும் போது அபரிமிதமா வெடிக்கும். ஆனா அந்த இணைவு பிளாஸ்மா நிலையில் தான் நிகழும். அந்த நிலைக்கு போகணும்னா சூரியனின் மையத்தில் உள்ள அளவுக்கு 150000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கணும்னு சொன்னீங்க. அந்த வெப்பநிலையை பெற அணுகுண்டை வெடிக்க வைக்கணும்னு சொன்னீங்க”


     “பரவால்லையே ரொம்ப கரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே, ஆமாம், வெளியே அணுகுண்டு மூலமா ஒன்றரை லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேணும். அதே நேரத்தில் ஹைட்ரஜனை திரவநிலையில் வைக்க -254 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேணும். அதனாலதான் அந்த ஹைட்ரஜன் குண்டு கூட சாண்ட்விச் மாடலில் செய்திருந்தார்கள்”


     “அதெல்லாம் வேணாம்பா, ஃபியுசன் மூலமா மின்சாரம் தயார் பண்ணிட்டாங்களா இல்லையா?”


     “அவசரப்படாதடா, ஹைட்ரஜன் குண்டு போல அணுஉலையை தயார் பண்ண பலநாடுகள் இணைந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. இப்போதைக்கு டோகமாக் (TOKAMAK)  என்கிற மாடல் அணுஉலையை ரஷிய விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். அதில் டெஸ்ட் ரன் எல்லாம் சமீபத்தில் பண்ணிப் பார்த்திருக்காங்க. என்னதான் ஃபியுசன் ரியாக்டர் என்றாலும் அதில் வெடிப்பை துவங்குவதற்கு யுரேனிய அணுகுண்டுதான் தேவை”


     “அப்படின்னா இதுவும் ஆபத்தானது தான் இல்லையா? ஆனாலும் நமக்கு மின்சாரம் தேவையாச்சே என்னப்பா பண்றது?” என்று கவலையோடு அருண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.


     “அப்படில்லாம் ரொம்ப வெசனப்படாதடா தம்பி, உலக மின்சார பயன்பாட்டில் வெறும் பத்து விழுக்காடுதான் அணு உலை மூலமாக கிடைக்கிறது”


     “ஆமா, கதிர்வீச்சினால் என்னதான் ஆபத்துப்பா, அதை சரிபண்ணிட்டோம்னா நல்லது தானே?. கதிர்வீச்சு ஆபத்து பற்றி கொஞ்சம் சொல்லுங்கப்பா”


     “டேய் தம்பி அப்பாவுக்கு தூக்கம் வருது. இதுபற்றி நாம விலாவாரியாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்” என்று கூறிவிட்டு கவுந்தடித்து படுத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...