Tuesday, October 3, 2023

இயற்பியல் துறையில் நோபல் பரிசு எதைப்பற்றிய ஆய்வுக்கு கொடுத்துள்ளனர் தெரியுமா?!


 


செந்தில் ஒரு படத்தில் ஊரில் உள்ள அனைவரிடமும் அந்த மலையை தூக்க போகிறேன் என்று காசு வசூல் செய்து விடுவார், மலையை தூக்க போகும் அன்று தெளிவாக "அந்த மலையை தூக்கி என் கைகளில் வையுங்கள் நான் தூக்குகிறேன்" என்று டபாய்ப்பார்.  அதாவது மலையை தூக்கும் அளவுக்கு கருவி நம்மிடம் இல்லை என்பது அவருக்கு தெரியும்


 அறிவியல் ஆராய்ச்சியை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் ஆய்வு கருவிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு புதிய ஆய்வு கருவிகள் நம் கைக்கு கிடைக்கும் போதெல்லாம் அதை சார்ந்த பல அறிவியல் விடுகதைகளுக்கு விடைகள் கிடைக்கின்றன.


19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நம்ம விஞ்ஞானிகள் கையில் மின்சாரத்தை கடத்தும்  வெற்றிடக் குழாய்   கிடைத்த உடன் ஆளாளுக்கு அதை வைத்துக் கொண்டு பல ஆய்வுகளை செய்து எலக்ட்ரான், நியூட்ரானின், உட்கருவின் இருப்பிடம் , எக்ஸ் கதிர்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.


மேலும் பிளக்கவே முடியாது என்று கருதப்பட்ட அணுவை பிளந்து கொண்டு சென்று உள்ளே என்ன இருக்கிறது என்று உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.


 ஆக ஆய்வு கருவிகளின் கண்டுபிடிப்புகள் என்பது  அறிவியல் உலகம் முன்னோக்கி பாய்ந்து செல்ல போடப்படும் ராஜபாட்டை.


  கைக்கு அடக்கமான பொருட்களையோ விஷயங்களையோ ஆய்வு செய்ய நமக்கு சுலபமாக ஆய்வு கருவிகள் கிட்டிவிடும். அதுவே கற்பனைக்கு எட்டாத பெரிய அளவில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்வதும் அல்லது நானோ ஸ்கேல் அளவில் இருக்கும் சின்னஞ்சிறு துகள்களை ஆய்வு செய்வதும் நமக்கு சவாலாக இருப்பதற்கு காரணம் அதற்கு உரிய கருவிகள் நம்மிடம் இல்லாததுதான்.


 பிரிக்கவே முடியாது என்று இருந்த அணுவை பிளந்தாயிற்று. உள்ளே சென்று எலக்ட்ரான்களை கண்டு கைகுலுக்கி சிறிது நேரம் அளவளாவி விட்டு வரலாம் என்று பார்த்தால் எலக்ட்ரான்களோ வடிவேல் பட காமெடியில் வரும் "வாம்மா மின்னல்" என்பது போல சரட்டு சரட்டு என்று தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன .


ஆக அவ்வளவு வேகமாக செல்லும் எலக்ட்ரானை அதன் இயக்கங்களை கண்டு ஆய்வு செய்ய மிக மிக நுண்ணிய நேர இடைவெளியில் தோன்றி மறையும் ஒளித்துடிப்பு தேவை.  அதாவது ஆட்டோ செகண்ட் துல்லியமான அளவில் துடிக்கும் ஒளி துடிப்பு தேவைப்படுகிறது.


மைக்ரோ செகண்ட், நானோ செகண்ட் கூட தெரியும், அது என்ன ஆட்டோ செகண்ட்?!!


 அதாவது ஒரு வினாடியை 100 கோடியே 100 கோடியாக பிரித்தால்  கிடைப்பது. அதாவது 1/10^-18 விநாடி. 




நுண்ணிய  ஒளித்துடிப்பை உருவாக்குவதில் உலகம் முழுவதும் உள்ள இயற்பியலார்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த வண்ணம் இருக்கின்றனர்.  இந்த ஆட்டோ செகண்ட் ஒளித்துடிப்புக்கு முன்பு 62ஃபெம்டோ செகண்ட் துல்லியமான ஒளி துடிப்பே  கண்டுபிடிக்க ப்பட்டிருந்தது.

1 ஃபெம்டோ செகண்ட் என்பது  ஆயிரம் ஆட்டோ செகண்ட்ஸ்.


 செகண்டுக்கு கீழே இறங்கி ஆட்டோ செகண்ட் துல்லியத்தில் ஒரு ஒளி துடிப்பை உருவாக்குவதன் மூலமாக அணுக்கருவை சுற்றி வரும் எலக்ட்ரான்களின் பாதை அதன் சுழற்சி வேகம் குறிப்பிட்ட நேரத்தில் அதன் இருப்பிடம் போன்ற பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும் என்று அறிவியல் உலகம் நம்புகிறது.


 இத்தகைய மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வினை கண்டறிந்த விஞ்ஞானிகள் மூவருக்கு தான் இந்த ஆண்டு இயற்பியல துறையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களின் இந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக வேதிவினை நடக்கும் பொழுது எலக்ட்ரான்களுக்கு இடையே எந்த மாதிரியான உறவுகள் ஏற்படுகிறது என்பதை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இது உயிரியல் துறையிலும் கூட ஏராளமான புதிய திறப்புகளை ஏற்படுத்தும் என்றால் மிகை இல்லை

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...