Thursday, September 28, 2023

நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய பரிந்துரைகள்!!

 நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய  பரிந்துரைகள்!!


சமூக நீதி குறித்த புரிதல் மாணவர்களுக்கு இல்லாமல் இருந்தால் வியப்பில்லை. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கே இல்லாமல் இருக்கிறது. 

எனவே சமூக நீதி, கலாச்சார பாகுபாடுகளை மதித்தல் போன்ற விஷயங்களில் ஆசிரியர்களுக்கே விழிப்புணர்வு தேவையாக உள்ளது.  ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சாதி அடிப்படையிலான குழுக்களாக செயல்படுவது, சாதி அடிப்படையில் ஓய்வறையை பகிர்வது  (உதாரணமாக அறிவியல் ஆசிரியர்கள் ஆய்வகத்தை ஓய்வறையாக பயன்படுத்தினால் தனது இனம் சார்ந்தோரை மட்டும் அங்கே நிரந்தரமாக அனுமதிப்பது)


இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது நல்லது. சமூகத்தில் பெரும்பாலான இடைசாதியினர் (MBC & BC வகையறா) இட ஒதுக்கீட்டில் பெருவாரியான விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயன் அடைந்தாலும் இடஒதுக்கீடு சார்ந்த விஷயங்களில் பட்டியல் இனத்தாரை குற்றவாளிகளாக நிறுத்துகின்றனர். 

அல்லது அவ்வாறு பேசப்படும் இடங்களில் கள்ள மௌனத்தோடு வாளாவிருந்து விடுகிறார்கள். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதை கற்றுத் தரும் பள்ளிகளில் சாதிச் சான்றினை கேட்கிறார்கள் – என்பது போன்ற செய்திகள் திட்டமிட்டு பரப்ப படுகிறது. 


முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏன் அவசியம், அதிகாரப் பரவலாக்கத்தில் இட ஒதுக்கீட்டின் பங்கு என்ன என்பது பற்றி பெரும்பாலான ஆசிரியர்களுக்கே சரியான புரிதல் இருப்பதில்லை.  எனவே எனது முதல் இரண்டு பரிந்துரைகளிளும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிருத்துகிறேன்.


பள்ளிகளில் கலை இலக்கிய போட்டிகள் வருடம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. சமூக நல்லிணக்கத்தை கருப்பொருளாக கொண்ட பல்வகைப் போட்டிகளை பள்ளி தோறும் நடத்த ஆவண செய்ய வேண்டும். பள்ளி அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க நிதியுதவி அளிக்கப் பட வேண்டும்.

UBUNTUISM  என்ற கருத்தாக்கத்தை வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளில் முன்னிருத்த வேண்டும். 


(UBUNTUISM ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்த ஒரு மானுடவியல் ஆய்வாளர் அங்கிருந்த பழங்குடி சிறுவர்களுக்கு முன்னால் சுவையான இனிப்புகள் நிறைந்த கூடையை வைத்து அவர்களுக்கு பந்தயம் வைத்துள்ளார். ”துவக்க கோட்டில் இருந்து யார் வேகமாக ஓடிவந்து கூடையை முதலில் தொடுகிறார்களோ அவர்களுக்கே கூடையில் உள்ள அனைத்து இனிப்புகளும் சொந்தம்” என்று கூறியுள்ளார். ஆனால் சிறுவர்கள் அனைவரும் கைகோர்த்தபடி ஒன்றாக ஓடி வந்து இனிப்பை எடுத்து சமமாக பகிர்ந்து உண்டனராம். அனைவரையும் அரவணைத்து இணைந்து முன்னேறும் இந்த கோட்பாடு UBUNTUISM எனப்படுகிறது.) 


வகுப்பறைகளில் மாணவர்கள் குழுவாக செய்யும் செயல்பாடுகள், தாங்களே கற்கும் செயல்பாடுகள், Team Project  போன்ற அனைத்திலும் அனைத்து இன மாணவர்களும் இணைந்த குழுவை ஏற்படுத்தித் தர வேண்டும்.  குழுவில் உள்ள கடைசி மாணவரையும் அரவணைத்து செல்ல சொல்லித் தர வேண்டும்.


“Remembering the Titans” என்கிற ஆங்கிலப் படத்தில் கருப்பின மாணவர்களும் வெள்ளையின மாணவர்களும் கலந்த ஒரு அணியை கட்டமைத்து அவர்களுக்குள் ஒரு உணர்வு பூர்வமான ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி நாட்டிலேயே வெற்றிகரமான அணியாக உருவாக்கி சாதிப்பார் அந்த அணியின் பயிற்சியாளர். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்ட திரைப்படமாகும்.


விளையாட்டினைப் போல மாணவர்களை ஒருமித்த குழுவாக உணர்வுப்பூர்வமாக இணைக்கும் விஷயம் வேறில்லை. எனவே பள்ளிகளில் விளையாட்டிற்கு போதுமான முக்கியத்துவம் வழங்கி பள்ளி அளவிலான பல்வகை விளையாட்டு அணிகளை உருவாக்க வேண்டும். அணியில் அனைத்து சமூக மாணவர்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


சமய மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மதிக்கும் பக்குவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நீதி போதனை வகுப்புகளிலோ அல்லது மொழிப்பாட வகுப்புகளிலோ போதனை செய்ய ஆசிரியர்களை வலியுறுத்துவதோடு அது சார்ந்த கற்பித்தல் கையேடுகளைக் கூட வழங்கலாம்.  சமூக நல்லிணக்க நட்பினை ஏற்படுத்திக் கொள்ள மாணவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.


”சமூக நல்லிணக்க சிற்றுலா” கல்லூரி படிக்கும் காலங்களில் இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்று விருந்துண்டு வருவார்கள். அது போல வகுப்பில் உள்ள அனைத்து சமூக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஒவ்வொரு நாள் ( ஒரு தெருவில் 4 மாணவர்கள் இருந்தால் அவர்கள் அனைவர் வீட்டிற்கும் ஒரே நாள்) சென்று பார்த்து சிற்றுண்டி சாப்பிட்டு வருதலை ஒரு செயல்பாடாக நடத்தலாம். ஆசிரியர்கள் மூலமாக ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் சிற்றுண்டி செலவினை பள்ளியே ஏற்கத்தக்க வகையில் நிதியுதவியும் செய்யலாம்.


பள்ளி நூலகங்களில் சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறுகதை நூல்களை பெருமளவு வைக்க வேண்டும். குறிப்பாக அந்த நூல்களை குறிவைத்து நூல் திறனாய்வு போட்டிகளை நடத்தலாம்.

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...