Wednesday, September 20, 2023

அறிவியல் பூர்வமான(?!) கம்பி கட்டும் கதைகள்

 


"அண்ணே விஷயம் தெரியுமா, விஷயம் தெரியுமா...."


"சொன்னாத்தானேடா தெரியும்?!"


"அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சதுர வடிவில் இருப்பதால் வட்டமாக பூமியை சுற்றும் செயற்கோள்களால் படம் புடிக்க முடியலயாம்னே"


"இதென்னடா புதுப் புரளியா இருக்கு?!"


"அதனால கெப்ளர் என்பவர் சதுரமா ஒரு சேட்டிலைட் செய்து லாஞ்ச் பண்ணாராம்..."


"அடேய், அதுவும் வட்டமாத்தானேடா சுத்தும்"


"குறுக்கால பேசாதண்ணே"


"சரி மேக்கொண்டு சொல்லு "


"ஆனா, அந்த சேட்டிலைட் புடிச்ச படத்தில கோவில் வட்ட வடிவமா இருந்துச்சாம்ணே, நம்ம ஆளுவ அந்த காலத்திலேயே கோளாறான ஆளுவலா இருந்திருக்காம்ணே"


"மறுபடியும் ஒரு கம்பி கட்டுற கதையா?!

அம்மன் டி ஆர் ஒய் கம்பிகள போட்டு நல்லா கட்றீங்கடா"


"அம்புட்டும் சைன்ஸ் ணே, கோவிலில் இருக்கும் எல்லா கோபுரமும் மின்காந்த அலைகள மொட்ட கோபுரத்துக்கு அனுப்புமாம்ணே, அந்த மொட்ட கோபுரம் சாட்டிலைட்டுக்கு அனுப்பும் போது அப்படியே திரிச்சி அனுப்பி கொளப்பி உட்ருமாம்ணே"


"அடேய், சாட்டிலைட்,மின்காந்த அலைகள், கெப்ளர் இத வச்சே செம்மயா கம்பி கட்றீங்களேடா"


"சும்மா கேலி பேசாதண்ணே எல்லாம் விஞ்ஞானம்"


"சரிடா சரிடா அப்படியே காஸ்மிக்  கதிர்கள், நியூட்ரினோக்கள் னு டெவலப் ஆகுங்கடே!!"


***†***********†*****†***†***********


ஒரு பெட்ரோல் பங்கில் two wheeler ல் கணவன் மனைவி குழந்தை மூவரும் பெட்ரோல் போடுகின்றனர்.


திடீரென அந்த இடத்தில் தீப்பற்றி எரிந்து அந்த குழந்தை மேல் தீ பிடிக்கிறது எல்லோரும் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்ற முயல்கிறார்கள்.


 இந்த மாதிரி ஒரு காணொளியோடு ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.


 அதாவது பெட்ரோல் பங்க் அருகில் செல்போன் பயன்படுத்துவதால் இந்த மாதிரியான தீ விபத்து ஏற்படும் என்று சொல்வதோடு அல்லாமல் அக்கறையோடு நீங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போதும் சரி எப்போதுமே பாக்கெட்டில் ஃபோனை வைத்தாலே நீங்கள் டேட்டாவை அணைத்து வையுங்கள் என்று அக்கறையான ஒரு அறிவுரை வேறு.


 ஆனால் உண்மை என்னவென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பம்ப் அருகிலேயே பேடிஎம் பேமென்ட் டிவைஸ் இருக்கிறது.


அது வயர்லெஸ் டேட்டா இணைப்போடு தான் இயங்குகிறது அந்த டிவைஸ் எப்போதுமே பெட்ரோல் பம்ப் பக்கத்திலேயே இருக்கும்போது அதில் பற்றாத தீ யா  செல்போனில் பற்றுகிறது.


செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியேஷன் அயனியாக்காத (non ionization radiation) ரேடியேஷன் ஆகும்.


****கொஞ்சம் புரிதலுக்காக******


( அணு என்பது எப்போதும் நடுநிலையாக இருக்கும். அதற்கு எந்த ஒரு மின்சுமையும் இருக்காது.

 அணுவின் உள்ளே எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற துகள்கள் இருப்பது நமக்கு தெரியும்.


 அதில் புரோட்டான் நேர்மின் சுமையும் எலக்ட்ரான் எதிர் மின்சுமையும் உடையது.


 புரோட்டானும் எலக்ட்ரானும் சமமான எண்ணிக்கையில் இருப்பதால் அணு எப்போதும் நடுநிலையாக இருக்கும்.


 அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை வெளியே தூக்கி விட்டால் புரோட்டானின் கை ஓங்குகிறது எனவே அணு நேர்மின் அயனியாக மாறுகிறது.


அல்லது ஒரு புரோட்டானை வெளியே தள்ளினால்  எலக்ட்ரான் கை ஓங்குகிறது எனவே அணுவானது எதிர்மின் அயனியாக மாறுகிறது.


  மேகத்திலிருந்து மின்னல் என்கிற மின்சாரம் பூமியை நோக்கி பாயும் போது காற்றில் மின்சாரத்தை கடத்துவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அது தனது வழியை தானே போட்டுக் கொள்கிறது.


 அதாவது காற்றில் உள்ள நடுநிலை அணுக்களை அயனியாக மாற்றி அதாவது நடுநிலை அணுவை மின்சாரத்தை கடத்தவல்ல அயனியாக மாற்றி கீழ் நோக்கி இறங்குகிறது.


 அணுகுண்டு மற்றும் அணு உலைகளில்  வெளிப்படும் கதிர்வீச்சுகள் அயனியாக்கம் செய்ய வல்லவை.


 ஆனால் செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் அயனியாக்கம் செய்ய இயலாதவை என்பதுதான் உண்மை.)


****** நன்றி *****


அகவே பெட்ரோல் பங்க் தீவிபத்து வழக்கில் செல்போன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்ததாக ஒரு விசயம், இந்த யார்க்கருக்கு எனக்கு மிகவும் நெருக்கமான அறிவியல் ஆர்வலர்கள் கூட போல்ட் ஆகிவிட்டனர்.


மின்சார ரயில் பாதைக்கு அருகே நின்று செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது அப்படி எடுத்தால் அந்த மின்சாரம் செல்போன் ஃப்ளாஷ் வழியாக போட்டோ  எடுப்பவரையோ அல்லது  போட்டோ எடுக்கப்படுபவரையோ தாக்கி ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.  ஆதாரமாக ஒரு காணொளியும் காட்டுகிறார்கள்.


வண்டில போறப்ப கார்ல போறப்ப நடந்து போறப்ப எல்லா இடத்திலும் விடாம செல்போனை யூஸ் பண்ணாலும் ஊர்ல எந்த பிரச்சனை வந்தாலும் முதல் குற்றவாளியா செல்போனை தான் முன்னிருத்துகிறாங்க நம்ம ஆளுங்க.


ஆமாம் வாட்சாப் யூனிவர்சிட்டியின் அடுத்த கண்டுபிடிப்பு செல்போனில் உள்ள ஃப்ளாஷ் மின்சாரத்தை கடத்தும் என்பதுதான்.


செல்போனில் உள்ள பிளாஷ் லைட் சாதாரண எல்.இ.டி பல்பு தான்.


 ஒரு எல்இடி பல்பு வெளிச்சம் மின்சாரத்தை கடத்தும்னா ரயில்வே ஸ்டேஷன்ல நூற்றுக்கணக்கான எல்இடி பல்பு அங்கங்க மாட்டி வச்சிருக்காங்களே!!


அப்போ அது மின் விபத்துகளை ஏற்படுத்தாதா?!


வாட்ஸ் அப்பில் வரும் எந்த தகவலாக இருந்தாலும் அதில் ஏதேனும் நாசா விஞ்ஞானி பெயரே இருந்தாலும்கூட, அல்லது அறிவியல் பூர்வமான சில வார்த்தைகள் அங்கங்கே தெளிக்கப்பட்டு இருந்தாலும் கூட அதனை உடனடியாக நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை.


 அதை முழுமையாக படித்து சிந்தித்து தேவையானால் கூகுள் செய்து பார்த்து உண்மையை உணர்ந்த பிறகு பரப்புங்கள் நான் மேலே சொன்ன இந்த இரண்டு whatsapp வதந்திகளும் பல வருட காலமாக வற்றாத ஜீவநதியாக வாட்ஸ் அப்பில் பாய்ந்து கொண்டுள்ளது!!


***************************


"சும்மா எதையாவது சொல்லி கடவுள் சக்திய கேலி பண்ணப்டாது ஆமா, உட்டா திருநல்லாறு கோவில் கோபுரத்தை கடக்கும் போது சாட்டிலைட் நின்னுடுது ங்கறது கூட பொய்யின்னு சொல்வீங்க போலயே"


"என்னாது,சாட்டிலைட் ப்ரேக் அடிக்குதா,  ஸ்பீடு கொறஞ்சாலே விழுந்திடுமேடா"


"அப்படி ஒத்துக்க,  அதனாலதான் நாசா விஞ்ஞானிகள்கூட பயப்படுறாங்களாம்"


"என்னடா உங்கூட ரோதனையா போச்சு, நான் எதடா ஒத்துக்கிட்டேன்?! உனக்கு அறிவியலும் தெரியல, அறிவியல் அறிஞர்கள் சொல்றதும் தெரியல ஆனா வதந்திகள மட்டும் விலாவாரியா தெரிஞ்சி வச்சிருக்கீங்களேப்பா, இதுக்கு இஸ்ரோ  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையே விளக்கம் சொல்லிட்டாரேடா!!"


"இத்த கூட புரிஞ்சிக்கிற அளவுக்கு நாலெட்ஜ் இல்ல என்னதான் டிகிரி வாங்குனயோ  போ "


"யப்பா டேய் விட்ருடா....!!!"


இன்னும் சுவாரசியமான கம்பி கட்டும் கதைகளை வாட்சாப் யுனிவர்சிட்டியில் கண்டவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள். சிறந்த ஒன்றுக்கு ஒரு கிலோ தரமான கட்டுக் கம்பி பரிசாக வழங்கப்படும்!!

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...