Saturday, September 2, 2023

கோட்டா ஃபேக்டரி என்னும் கோச்சிங் இண்டஸ்ட்ரி!!

 

(இது இந்து ஆங்கில பத்திரிக்கையில்  "Kota's crash course"  என்கிற தலைப்பில் வந்த நடுப்பக்க கட்டுரையின் சாராம்சம்)



கோட்டா என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் ஐஐடி மற்றும் நீட் கோச்சிங் அளிக்கும் ஏராளமான சென்டர்களை கொண்டுள்ள நகரம்.


ராஜஸ்தான், உத்தர பிரதேஷ் 

,மத்திய பிரதேஷ், ஹரியானா, பஞ்சாப் போன்ற அருகமை மாநிலங்கள் கிட்டத்தட்ட மொத்த வட இந்திய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கோட்டாவிற்கு படையெடுக்கிறார்கள்!!( பெற்றோர்களால் வீரத் திலகம் இட்டு தள்ளிவிடப்படுகிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும்) 


அங்கே படிக்கும் ஜோதி (17 வயது) என்கிற மாணவியின் ஸ்டேட்மென்ட்

" கோட்டாவில் இது எனக்கு இரண்டாவது வருடம், என்னுடைய கவனம் முழுவதும் டெல்லி எய்ம்ஸ் இல் மருத்துவ சீட் வாங்க வேண்டும் என்பதுதான்!!

ஹாஸ்டலில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது.

 கோட்டாவில் எந்த இடத்தையும் நான் சுற்றி பார்க்க சென்றதே இல்லை.

 குடும்பம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் நான் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் படிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை என்றால் நான் இன்னும் கூடுதலாக படித்து வருகிறேன்"

ஜோதி மேலும் கூறிய போது அவளது வகுப்பு மாணவி ஒருவர் தனது சொந்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று வந்தததற்காக நிர்வாகத்தால் கடுமையாக கடிந்து கொள்ள பட்டாராம்.


அங்கு தனது பையனை படிக்க வைத்திருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரிய பெற்றோர் கூறுவது " இங்கே ஏராளமானவர்கள் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை பார்க்கும்போது நமது பிள்ளைகளும் இன்னும் போட்டி போட்டுக் கொண்டு கடுமையாக உழைத்து மெடிக்கல் சீட்டு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லவா" 

ஆனால் அதுவே பிள்ளைகளின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை தரும் என்பதை வசதியாக மறந்துவிட்டார் அந்த ஆசிரியர்.


லடாக்கில் இருந்து இரண்டு 18 வயது மாணவர்கள் பெங்களூரு நாராயணா கோச்சிங் சென்டரில் இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து சீட் கிடைக்காமல் தற்போது கோட்டாவில் சேர்ந்துள்ளார்கள். 


மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம் ரூப்பா பருய் என்கிற பெண்மணி தனது மகனை கோட்டாவில் 2019ல் பயிற்சிக்கு சேர்த்து இருக்கிறார். அவரது மகன் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து சென்று விட்டார். நிர்வாகம் அவருக்கு ஹாஸ்டல் வார்டன் பணியை கொடுத்துள்ளது. வசதியாக அங்கே செட்டில் ஆகிவிட்டு தற்போது தனது ஏழாம் வகுப்பு படிக்கும் (?!)மகளை அங்கே பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.


அங்கே பயிற்சியில் இருக்கும் மாணவர்களை அழைப்பதற்கான சொலவடைகள் பவுண்டேஷன் என்பது ஏழு முதல் பத்து வரை உள்ள மாணவர்கள், ரன்னிங் என்பது 11 & 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் டிராப்பர்ஸ் என்பது பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் நாம் இங்கே ரிப்பீட்டர்ஸ் என்று கூறுகிறோம் அல்லவா அது!!


ஏழாம் வகுப்பில் இருந்து பயிற்சி நடைபெறுகிறது என்கிறீர்கள், அப்போ அவர்களது பள்ளி படிப்பு என்று கேட்பீர்கள், அவர்களது பெயர்கள் எல்லாம் டம்மி பள்ளிகளில் enroll ஆகி இருக்கும் ஏனென்றால் அவர்களின் Board exam எழுத வேண்டும் அல்லவா? Board exam  போதுமட்டும் போய் எழுதிவிட்டு வந்து விடுவார்கள்!!


மெரிட் என்றாலே மாணவர்களை தரப்படுத்தி வர்ணாசிரம அடுக்குகளை போல ஒரு அடுக்குகளை உருவாக்குவது தானே?!

 கோட்டாவிலும் இந்த நடைமுறை உண்டு அங்கே மாணவர்களுக்கு மூன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

 ஒன்று அடையாளத்திற்கு மற்றொன்று வருகை பதிவுக்கு. மூன்றாவதாக சில மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் ஸ்டார் பேட்ச். இந்த மாணவர்கள் மட்டும் அங்கே extra facilities பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நூலகத்தை வரம்பின்றி பயன்படுத்தலாம். ஆய்வகங்களை பயன்படுத்தலாம். அவர்களுக்கு மட்டும் Best teachers கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்கள் நிர்வாகத்திற்கு பணம் தருவது வழக்கமான ஒன்று . ஆனால் அந்த ஸ்டார் பேட்ச் மாணவர்களுக்கு நிர்வாகம் பணம் தரும். என்றால் அவர்கள் இந்த கொச்சின் இல்லாமலே கூட தேர்வாகி விடுவார்கள். அவர்கள் டாப் ரேங்கில் செலக்ட் ஆனால் அவர்களின் பெயர்களை போட்டு விளம்பரப்படுத்தி இன்னும் பல மாணவர்களை ஈர்ப்பதற்கு பயன்படும் அல்லவா?!

 அங்கே இருக்கும் ஒரு விடுதி சொந்தக்காரர் கூறுவது "சில மையங்கள் பரீட்சை முடியும் வரை மாணவர்களை பெற்றோர் சந்திக்க அனுமதிப்பதில்லை"


" உனக்காக இவ்வளவு செலவு பண்ணி இருக்கேன் கவனத்தில் வைத்துக்கொள் நல்ல காலேஜ்ல செலக்ட் ஆகாமல் வீட்டு பக்கம் வந்துராத" என்று சில பெற்றோர்கள் கூறிச் செல்வதாக அங்கே உள்ள ஒரு மருத்துவர் கூறுகிறார்.

சிலர் கூறுவார்கள் பலர் கூறுவதில்லை அவ்வளவுதான் மேட்டர். ஆனால் அதன் பின்னால் இருக்கும் பொருள் எல்லாம் ஒன்றுதான்.


 இதுதான் மாணவர்களை மிகப்பெரிய குற்ற உணர்விற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்குகிறது இந்த கட்டுரையின் சொல்ல வந்த முக்கியமான விஷயம் இதுதான் நீட் பரீட்சை வந்ததுக்கப்பிறகு அது சார்ந்த தற்கொலை மரணங்கள் தமிழகத்தில் நடந்தேறிய வண்ணம் உள்ளது.

 சமூக வலைதளங்களில் எழுதுவார் பலர் இந்த தற்கொலை மரணங்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்றும் அதற்கு என்னவோ ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதல் தான் காரணம் என்றெல்லாம் மனம் போன போக்கில் எழுதுகிறார்கள்.

 எங்கெல்லாம் வளரிளம் பருவ (adolescent) மாணவர்களுக்கு பெரிய அழுத்தத்தை தருகிறோமா அங்கெல்லாம் இது நடந்தேறிய வண்ணம் உள்ளது.


கோட்டாவின் தற்கொலை மரணங்களின் புள்ளி விவரங்களை பாருங்கள், இந்த ஆண்டு மட்டும் 23 குழந்தைகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். அதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே ஆறு பேர்.   2013 துவங்கி அங்கே நடந்தேறி வரும் தற்கொலை மரணங்களில் இந்த ஆண்டு அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். சென்ற ஆண்டில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் 2014 இல் இருந்து 2023 வரை 118 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

 உயர்ந்து வரும் இந்த மரணங்களால் விழித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் கோட்டா இண்டஸ்ட்ரியில் இரண்டு மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் வைக்க கூடாது என்று உத்தரவு போடும் அளவுக்கு நிலைமை விபரீதமாக சென்றுள்ளது.

 ஆனால் மாணவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த இரண்டு மாதங்கள் தேர்வு எழுதவில்லை என்றால் இனிவரும் மாதங்களில் இந்த தேர்வுகளுக்கான பகுதிகளும் சேர்த்து எங்களை இன்னும் வேகமாக அழுத்தும் என்கிறார்கள்.

இந்த நுழைவு தேர்வுகளால் மாணவர்களின் மெரிட்டை தான் கண்டுபிடிக்கிறோம் என்று மனசாட்சி இல்லாமல் கூறுபவர்களே கேளுங்கள், அங்கே ஆலன் என்கிற ஒரு தனிப்பட்ட கோச்சிங் சென்டரில் மட்டும் ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் கோட்டாவில் அவர் அவர்களுக்கு 23 வளாகங்கள் உள்ளதாம், ஒவ்வொரு வளாகத்திலும் கிட்டத்தட்ட 6000 மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். 6000 மாணவர்கள் என்றால் அவர்களுக்கான விடுதி சாப்பாடு கழிவறை என எவ்வளவு வசதிகள் செய்து தர வேண்டி உள்ளது.  அதை எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு செய்கிறார்கள்.

 1.25 லட்சம் மாணவர்கள் என்றால் ஒவ்வொருவரிடம் டியூஷன் பீஸ் விடுதி கட்டணம் என்று குறைந்தபட்சம் வருடத்திற்கு ஐந்து லட்சத்துக்கு மேலாவது கறப்பார்கள் அப்படி என்றால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவை எண்ணி பாருங்கள்!!


ஏழாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையில் அந்த கோச்சிங் ஃபேக்டரியில் கச்சா பொருட்களாக இடப்படும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!!


 பள்ளி என்றால் என்னவென்றே தெரியாமல் முழுக்க முழுக்க கோச்சிங் என்ற பல்சக்கரத்துக்குள் சிக்கி சின்னா பின்னமாகும் அவர்களது மன வளர்ச்சியை எண்ணும்போது சற்று பீதியாகத் தான் உள்ளது!!


கோட்டா நடைமுறைகள் பற்றி இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள netflix ல் கோட்டா ஃபேக்டரி என்ற ஒரு வெப் சீரிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது பாருங்கள்.


( படத்தில் இருப்பது கோட்டாவில் உள்ள பிரபலமான கோவிலில் பிரகாரத்திற்கு அடுத்ததாக உள்ள சுவரில் மாணவர்கள் தங்களது ஆசையை எழுதியுள்ளார்கள்)

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...