Wednesday, September 27, 2023

ஆயிஷா - குறுநாவல்


ஆயிஷா - குறுநாவல்



ஆசிரியர் – “ஆயிஷா“ நடராசன்


அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்களில் இந்தக் கதையை அறியாதவர்கள் எவரும் இருக்க இயலாது. ஏனென்றால் அனைத்துப் பயிற்சிகளிலும் இந்தக் கதை குறித்து பேசி இருக்கிறார்கள்.


 மேலும் இந்தக் கதை குறும்படமாகவும் பல பயிற்சிகளில் திரையிடப் பட்டிருக்கிறது.


நூலாசிரியரைப் பற்றி கல்விப் புலம் சார்ந்தவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அறிவியல் மற்றும் கல்விமுறைகள் சார்ந்து நிறைய நூல்கள் எழுதியுள்ளார். நிறைய நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் இவர் பேசிய Zoom meeting பார்த்தேன். நாம் கொண்டாட மறந்த ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் சுவாரசியமாக பேசினார். 


தனது மாணவர்கள் குறித்து தி இந்து தமிழ்திசையில் தொடர் ஒன்று எழுதினார். அப்போது செவ்வாய்க் கிழமைகளில் நான் முதலில் திறக்கும் பக்கம் அதுதான். இவர் எழுதிய ”இது யாருடைய வகுப்பறை?” என்கிற நூல் அற்புதமான கல்வி சார்ந்த கட்டுரைகள் நிறைந்தது. அதில் இவர் ஃபின்லாந்து கல்வி முறை குறித்து எழுதிய கட்டுரைதான் வாட்சாப்பில் பகிரப்பட்டு ஃபின்லாந்து கல்விமுறை குறித்து ஏராளமான பேர் சிலாகித்துப் பேச காரணமானது.


நான் பத்தாம் வகுப்பு படித்தபோது (1992) எனது கணித ஆசிரியரிடம் பாடம் சார்ந்து சற்று நுணுக்கமான சந்தேகம் (அநேகமாக திரிகோணமிதி என்று நினைக்கிறேன்.) கேட்டதற்கு ஒரு அருமையான பதில் கிடைத்தது. ஆமாம், அதற்குப் பிறகு அந்த ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் தைரியம் ஒரு பயலுக்கும் வந்ததே இல்லை.


“அப்படி என்ன பதில் கிடைத்ததாம்?”

ஒரு முறைப்பு, ஒரு அலட்சிய உடல்மொழி அப்புறம் வேறுபல கேள்விகள் கேட்டுவிட்டு “அதெல்லாம் தெரியுமா உனக்கு? ச்சீ உக்காரு”


ஆனால் எனக்கு டியுஷன் எடுத்த ஆசிரியர் சீமான் சாரிடம் (அவர் தொழில்முறை ஆசிரியர் அல்ல ஒரு டிப்ளமோ இன்ஜினியர், வேலை கிடைக்கும் வரை டியுஷன் எடுத்தார்) என்ன கேள்வி வேண்டுமானாலும் தைரியமாக கேட்கலாம்.


அப்புறம் நான் “அந்த“ ஊரில் பி.எட் பயிற்சி ஆசிரியராக இரண்டுமாதம் பயிற்சியில் இருந்த போது ஒரு வினோதமான ஆசிரியர் ஒருவர் இருந்தார். வகுப்பில் எந்த ஒரு சிறு ஒழுங்கீன செயல் நடந்தாலும் (அப்போது நானே உள்ளே இருந்தாலும்) திடுமென நுழைந்து ”கடைசி மூணு பெஞ்ச் முட்டி போடு”, “கடைசி மூணு பெஞ்ச் கையை நீட்டு”, “கடைசி மூணு பெஞ்ச் வெளில போ” இப்படியேத்தான் தண்டனை வழங்குவார்.


”அடடே பூரா ரவுடிப் பயலுகளையும் புடிச்சி கடைசில போட்டு வைத்திருக்கிறாரே, மத்த பசங்கள கெடுக்காம இருக்க என்னா ஐடியா” என்று வியந்துபோய் முதல் பெஞ்ச் பசங்களை விசாரித்தேன்.


“அட அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், நாங்க எல்லாம் அவர்கிட்ட டியுசன் படிக்கிறோம், அந்த பசங்க டியுசன் படிக்காதவங்க சார்”

அதிர்ச்சியில் மயக்கமே வந்து விட்டது. 


என்ன ஒரு அருவருக்கத்தக்க செயல் என்று ஆச்சர்யப் பட்டு போனேன். “பாடம் எல்லோருக்கும் எப்படிடா நடத்துவார்?”

“ஸ்கூல்ல கொஞ்சமா நடத்துவார் சார், அதோட தொடர்ச்சிய டியுசன்ல நடத்துவார் சார்”

நான் மேலே சொன்ன ஆசிரியர்களின் பொறுப்பற்றத் தனத்தை சுட்டிக்காட்டும் கதைதான் ஆயிஷா.


கதையை ஒரு இயற்பியல் ஆசிரியை செல்ஃப் நேரேஷன் செய்வது போல இருக்கும்.


ஆயிஷா வின் தோற்றம் அப்படி ஒன்றும் வசீகரம் இல்லை. அப்பா அம்மா இல்லாத அநாதைப் பெண். அம்மாவின் தங்கை வீட்டில் இருந்து படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி.


 பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டே பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கே கணிதத்தில் வீட்டுப்பாடம் செய்து கொடுக்கிறாள்.


அதே நடத்திய பாடம், சிறிதும் சுவாரசியம் இல்லாத வகுப்பறைகள், ஆசிரியர்கள் தங்கள் பணியின் மீது சிறிதும் பற்றோ அல்லது புதுமையோ இன்றி கடனே என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியான பள்ளி வளாகத்தில் உள்ள “மீத்திறக்குழந்தை“  ஆயிஷா கேள்விகளால் வேள்விகள் செய்தவண்ணம் இருக்கிறாள்.


கிங்லீங் என்பவர் எழுதிய ட்ருத் ஆஃப் மேக்னெட் புத்தகத்தை ஆசிரியருக்கே பரிந்துரை செய்கிறாள்.


“கம்பி வழியே பாயும் மின்சாரத்திற்கும் மின்னல் மூலமாக பாயும் மின்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?”


“குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் மெழுகுவர்த்தி அதிக பிரகாசத்தை அளிக்கிறது, ஆனால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் விறகு நெருப்பு குறைந்த வெளிச்சத்தை அளிக்கிறது ஏன்?”


“அசோகரை புத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?”

இப்படி பல கேள்விகள் கேட்டு, சில ஆசிரியர்களின் எளிய வகுப்பறை சூழலை கடுமையானதாக மாற்றிவிடுகிறாள்.


எனக்குத் தெரிந்து ஒரு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒரு பதினோறாம் வகுப்பு மாணவி வகுப்பில் ரொம்ப பணிவாகவே கரும்பலகையில் உள்ள தவறை சுட்டிக் காண்பித்ததற்கு கடுமையாக தண்டிக்கப் பட்டாள். 


பிறகு ஆசிரியர் அறை வரையில் வந்து புத்தகத்தை ஆதாரமாக காண்பித்து தனது வாதத்தை நிலை நாட்டிய குற்றத்திற்காக மீண்டும் கடுமையாக தண்டிக்கப்பட்டாள். விடை தெரியாதபோது கேள்விகள் ஆசிரியர்களின் ஈகோவை தட்டி எழுப்பி விடுகிறது.


இதுபோலவே ஆயிஷாவும் எல்லா ஆசிரியர்களாலும் வெறுக்கப் பட்டாள், தாக்கப்பட்டாள்.


“ஆபரேஷன் செய்யும் போது வலிக்காமல் இருக்க கொடுக்கும் மருந்து என்ன  மிஸ்?” என்று கேட்கிறாள்.


அடுத்த நாள் ஒரு எலிக்கு அந்த மருந்தை ஊசிமூலம் கொடுத்து சோதிக்கிறாள், மரத்துப் போய் கிடக்கிறது..

“மிஸ் மிஸ், ஆயிஷா மயங்கி கிடக்கிறா மிஸ்” என்று பதட்டத்தோடு மாணவிகள் ஓடி வருகின்றனர்.

ஆயிஷாவின் பரிசோதனை எலி இறந்து கிடக்கிறது, ஆயிஷாவும் தான்.


மாணவர்களின் வினாக்கள் ஆசிரியரை தன்னை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்களின் கேள்விகளால் நான் நிறைய வாசித்துள்ளேன். 


பிறகு மாணவர்கள் கேள்விகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே நிறைய விஷயங்களை படித்து வகுப்பில் அறிமுகப் படுத்துவேன். அந்த மாதிரியான தருணங்கள் மனது லேசானது போல உணர்ந்த தருணங்கள். மாணவர்களோடு நட்புறவு அதிகமான தருணங்கள்.


எனவே குழந்தைகளின் கேள்விகளை ஆர்வத்தோடு எதிர்கொள்ளுங்கள். தெரியவில்லை என்றால், “தெரியலேப்பா, நாளைக்கு படிச்சிட்டு வந்து சொல்றேன்“ என்று நேர்மையாக கூறுங்கள் ஒன்றும் குறைந்து விடாது.


வகுப்பறையை உரையாடல் நிறைந்த கலகலப்பான ஒன்றாக மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள் மலர்களில் இருந்து வண்டுகள் தேன் உறிஞ்சுவது போல பாடங்களை கிரகித்துக் கொள்வார்கள் மாணவர்கள்.


இந்தக் கதை இலவசமாக வழங்கப்படும் புத்தகம் ஆகும். ஆயிஷா குறுநாவல் என்று கூகுளிடம் கேளுங்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...