”வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
நீ விளையாட போகையில சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தையும் முளையிலே கிள்ளி வைப்பாங்க”
என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?
நான் ஆவி என்று கூறிவிட்டு பேயை பற்றி கூறிக்கொண்டு இருக்கிறேன்.
ஏனென்றால்,”ஆவியும் பேயும் ஒன்றே தான் இல்லை இல்லை வேறு வேறுதான்” என்று இந்த கருத்திலே கூட ஒரு கருத்தொற்றுமையை இந்த கதையை கிளப்பி விடுபவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
நான் இந்த கட்டுரையை எழுத காரணமாக இருந்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா? என்ற நிகழ்ச்சிதான்.
நிகழ்ச்சியில் ஆவி உண்டு அது தங்கள் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளது என்று ஒரு பிரிவினர் மிகவும் நம்பிக்கையுடன் வாதிட்டனர். அதிலும் அந்த Way of communication இருக்கிறதே அது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்து. அவர்கள் கூறிய பலவற்றில் நான் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1. A,B,C,D board.அவர்களிடம் இதற்கு பிரத்தியேக பெயர் உண்டு.
2. தானே எழுதுதல்.
முதல் வகையில் கூறப்பட்ட அந்த போர்டில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிரப்ப பட்டிருக்கும். அதோடல்லாமல் Yes/No என்ற வார்த்தைகளும் இருக்கும். ஆவியுடன் பேசுவதற்கு உரிமம் பெற்றிருக்கும் அந்த நபர் சில பல சித்து வேலைகள் செய்து விட்டு டம்ளரில் கை வைத்துக்கொண்டு குடும்பத்தினரை ஆவியிடம் நேர்காணல் செய்ய சொல்வார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றாற்போல் டம்ளர் தானே நகர்ந்து சென்று ஒவ்வொரு எழுத்தையும் காண்பித்து பதில் உருவாக்கும். (இதில் எந்த பௌதிக விதி உள்ளது என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள்) அவசரப்பட்டு(அல்லது பொறுமை இழந்த) குடும்பத்தினர் முழு வார்த்தையும் காண்பிக்கப் படுவதற்குள் வார்த்தையை முழுமையடைய செய்து விடுவார்கள். மேற்படி நேர்காணலில் சொல்லப்படும் அனைத்து ஆரூடங்களும் பொதுப்படையாக கூறப்படுபவைதான். இதை கூற எந்த பிரத்தியேக ஆவியோ அல்லது ஆவியின் செய்தி தொடர்பாளரோ தேவையில்லை. நாமே கூறிவிட முடியும்.
ஆட்டோ ரைட்டிங் எனப்படும் தானே எழுதுதல் வேலையை செய்பவர் அவ்வளவு கடினமாக தனது வேலையை வைத்துக் கொள்வது இல்லை. கொஞ்சம் நேரம் கண்ணை மூடிக்கொண்டு பேனாவை பேப்பரில் வைப்பார் அது ஆவியினால் நகர்த்தப்பட்டு வாக்கியங்களை உருவாக்கும்.(அவர் அப்படித்தான் கூறுகிறார்). இங்கேயும் நேர்காணல் நடைபெறும் ஆவி அனைத்து வினாக்களுக்கும் ஒரு குத்து மதிப்பான மழுப்பலான பதிலை கூறிவிட்டு மலையேறிவிடும்.
மேலே சொன்ன இரண்டிலும் பல விஷயங்கள் என் மர மண்டைக்கு புரியவில்லை.
1. படிப்பறிவு இல்லாத ஆவிகள் கூட ஆங்கிலத்தில் சரளமாக எழுதுகின்றன.(30 நாட்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் புத்தகம் ஆவி உலகத்தில் சல்லிசாக கிடைக்கிறது போலும்.)
2. ஆங்கிலம் தவிர எந்த மொழியிலும் போர்ட் அமைக்க மீடியமாக செயல்படும் நபர் அனுமதிப்பதில்லை.( ஆவியுலகம் இங்கிலாந்திற்கு அருகில் தான் உள்ளதோ என்னவோ?)
3. ஆங்கிலம் அறியாத எந்த மீடியத்தையும் நான் சந்தித்த்தில்லை.
4. ஆட்டோ ரைட்டிங் ல் எழுதுபவர் பேனாவை ஆவியே தள்ளிக் கொண்டு போய் எழுதி விடுகிறது என்று கூறுகிறார். ஆனால் உகாண்டா நாட்டு ஆவியாக இருப்பினும் அது எழுதுவதென்னவோ மீடியமாக செயல்படும் நபர் அறிந்த மொழிகளில் மட்டுமே.
5. என்னை மாதிரி யாராவது குறுக்கு விசாரணை நடத்தினால் வெல வெலத்து போய் நம்பாதவர்ளுக்கு பதில் இல்லை என்று நேர்காணலை முடித்து விடுகிறார்.
எல்லோருக்குமே இறப்புடன் நமது வாழ்க்கை முடிந்து விடுகிறதே என்ற ஆதங்கம் உள்ளது. என்னை மாதிரி நாத்திகர்கள் முடிந்தால் முடிந்து விட்டுபோகிறது என்று எதிர்கொள்ள தயாராகின்றனர். இயலாதவர்கள் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் போன்ற கருத்துக்களின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
மூடநம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்துவோர் அதனை வளர்த்து விடுகிறார்கள். இதில் பரிதாபத்திற்குறிய செய்தி என்னவென்றால் இம்மாதிரியான மூடநம்பிக்கைக்கு உரமூட்டி வளர்த்து விடுவோர் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும் தோன்றி மக்களை மூளைச் சலவை செய்து (வெளிப்படையாக கூறினால் பயமுறுத்தி) தங்களின் பால் வலுக்கட்டாயமாக ஈர்த்து தங்களுக்கு தேவையானவற்றை அறுவடை செய்து விடுகின்றனர்.
“மனிதனின் உடலில் உள்ள செல்களுக்கு பிராணவாயு கிடைக்கும் வரை நாம் இயங்கலாம். நின்றுவிட்டால் உடல் என்ற இயந்திரம் இயங்காது அவ்வளவே. மற்றபடி உயிர் உடலில் இருந்து மேலே சென்று காற்றில் கலந்து ஆவியுலகம் சென்று விடுவதில்லை”
எந்த ஒரு விஷயமும் அடிப்படை அறிவியல் ரீதியாக மட்டுமே நடக்கும். அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதையும் சந்தேகியுங்கள். நன்றி.
I am sorry to say brother,
ReplyDeleteThis statement indicated urs immaturity.