Saturday, July 8, 2017

நமக்கு சாப்பாடு தாங்க முக்கியம்


“பேரழிவு ஆயுதங்கள் (WEAPONS OF MASS DESTRUCTION) எதுவும் ஈராக்கில் இல்லை அது ஆந்திராவில் தான் உள்ளது. அது ஆந்திராவின் காரமான உணவுதான்” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது பிரிவு உபச்சார விழா விருந்தின் போது நகைச்சுவையாக கூறியது போல பேப்பரில் செய்தி படித்திருக்கிறேன்.
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து சிசிஆர்டி பயிற்சி ஹைதராபாத்தில் போட்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். அன்றிலிருந்தே எனது கனவுகளில் ஒட்டு மொத்த ஆந்திராவின் நிலப் பரப்பிலும் மிளகாய் வற்றல் காயப் போட்டிருப்பது போல கனவு வர ஆரம்பித்தது.
அப்போது சிசிஆர்டி மையம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்தது. அது முழுக்க விஐபி ஏரியா. எந்த நேரமும் மயான அமைதியாக இருக்கும். நாங்கள் காலை மாலை வேளைகளில் நடந்து செல்லும் போது அந்த அமைதிக்கு குந்தகம் விளைவிப்போம்.
காலின் பவல் சொன்னது உண்மைதான் என சிசிஆர்டி மெஸ்ஸில் பல முறை உணர்ந்திருக்கிறேன். எல்லா உணவுகளும் செந்நிறம் தான். மாலை வேளைகளில் தேநீர் அருந்தினால் அதுவும் காரமாகத்தான் இருந்தது. டீத் தூளோடு ரெண்டு மிளகாயை கிள்ளி போட்டிருப்பார்கள் போல. என்ன அதிர்ந்து விட்டீர்களா? உணவு காரத்தோடு எனது உள்மன உளவியல் காரமும் சேர்ந்து கொண்டு என்னை பயமுறுத்திக் கொண்டு இருந்தது.
காஷ்மீர் நண்பர்கள் காரம் போதவில்லை(?!!!) என தர்கா ஏரியாவில் இருந்து சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். அவர்களை நாங்கள் பிரம்மிப்போடு பார்ப்போம். பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எனது கனவில் மிளகாய் வற்றல் காய ஆரம்பித்தது. காஷ்மீர் பனியில் மிளகாய் எப்படி காயும் என லாஜிக்காக கேட்டு அந்த கனவை விரட்டியடித்து விட்டேன்.
நாகாலாந்து நண்பர்களோ ”மோப்பக் குழையும் அனிச்சம்” என்பது போல மென்மையான நாவுடையவர்கள். அவர்கள் அனைவருமே தங்கள் மாநில பதப்படுத்தப் பட்ட உணவுகளை எடுத்து வந்து சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிடுவார்கள். தனியே ஒரு மூலையில் அமர்ந்து குழுவாக சாப்பிடுவார்கள்.
ஒரு முறை தர்கா ஏரியாவில் தேனீர் கடைக்கு சென்றிருந்தோம். அங்கே இரண்டு சமோசாவும் தேனீரும் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தோம். தட்டில் இரண்டு சமோசாக்கள் வந்தது. பார்த்த உடன் பக்கென்றாகி விட்டது. இரண்டையும் ஒன்றாக திணித்தால் கூட எனது வாயில் மற்றுமொரு சமோசாவிற்கு இடமிருக்கும். கடைக்காரனை திட்டிக் கொண்டே ஒன்றை எடுத்து சுண்டலை வாயில் விட்டெறிவது போல எறிந்தேன். பார்த்தால் மறுபடியும் ஒரு “பக்”. கல்லிடுக்கில் அமர்ந்திருக்கும் பல்லி போல இரண்டு பச்சை மிளகாய்களை சமோசாவிற்கு அடியில் வைத்திருக்கிறார்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் உள்ளே போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று திகைத்துப் போனேன்.
இவ்வாறாக “மணம் சுவை திடம்“ எதுவும் இல்லாமல் கழிந்து கொண்டிருந்த ஹைதராபாத் நாட்களின் ஒரு காலை நேரத்தில் பல் தேய்த்துக் கொண்டிருந்த போது அருமையான ஒரு மணம். எங்கோ உளுந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த மணம் வந்த திசையை ஆய்வு செய்தேன். அது எங்கள் மெஸ்ஸை நோக்கி சென்றது. “என்னடா இது அதிசயம்“ என்று அவசர அவசரமாக வாய்க் கொப்பளித்து இரண்டு மக் தண்ணீரில் குளித்து(?!) விட்டு நண்பர்களையும் உசுப்பி விட்டு ஓடினேன்.
அங்கே காஷ்மீர் நண்பர்கள் எனக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். வடை மோகத்தில் நம்மள மிஞ்ச யாருமில்லை என்கிற இறுமாப்பு அன்றோடு அழிந்து போனது. எல்லோரும் தட்டில் வடையை வைத்து சாம்பார் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்னதான் வடை மோகம் என்றாலும் அது “சைட் டிஷ்“ தானே? இவர்கள் அதையே “மெயின் டிஷ்“ ஆக சாப்பிடுகிறார்களே என வியந்து கொண்டே பரிமாறும் இடத்திற்கு போனேன். அங்கே கேட்பார் இன்றி ஒரு பாத்திரத்தில் அழகாக வடைகள் நிறைய இருந்தன. நான் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டு ஒரு நான்கு வடைகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அப்புறம் தாவித் தாவி கண்களால் துழாவினேன் இதற்கு பொருத்தமான இட்லியோ அல்லது பொங்கலோ இல்லை. என்னடா இது சீக்கிரமே வந்து விட்டோமோ என்று சந்தேகமாக காஷ்மீர் நண்பர் ஆஸாத்தை (இவர் இன்று வரை மாதம் ஒரு முறை போனில் பேசிக் கொண்டிருக்கும் நல்ல நண்பர்) கேட்டேன், ”ஏய் சாப்பாடே அவ்வளவு தான்ப்பா” என்றார்.
எனக்கு வந்ததே கோபம், வடை இருந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து வந்து டேபிளில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அட இதுவும் நல்ல காரம்தான். இருந்தாலும் வடையாச்சே அதனால் ஒரு 12 வடைகளோடு அன்றைய காலை சிற்றுண்டியை(?!) முடித்துக் கொண்டேன்.
சாப்பாட்டிற்கு ஆ“காரம்“ என ஆந்திராக் காரர்கள் தான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆத்தாடி என்னா காரம்!!!

No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...