Saturday, July 8, 2017

ஆண்டன் செக்காவ் ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர்



நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒரு மொழிப் பெயர்ப்புக் கதைத் தொகுப்பையும் எடுத்து வருவது வழக்கம். மேலை நாடுகளின் பண்பாடு கலாச்சாரத்தை ஒரு இலக்கியவாதியின் பார்வையில் பார்ப்பதென்பது அந்த நாட்டு வழக்கங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் போல தெளிவாக அறியலாம். அதில் ஒரு சுவாரசியம் எனக்கு. உங்களுக்கும் அந்த ஆவல் உண்டென்றால் நூலகத்தில் புலமை பித்தன் அவர்கள் மொழி பெயர்ப்பில் உலகச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் துவங்குங்கள்.

மறுபடி ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைகளுக்கு வருவோம். இவரது ‘CHAMELEON’ என்கிற சிறுகதையை ஆங்கில வடிவில் நான் எனது பள்ளி நாட்களில் கதைப் பகுதி (non – detail) இல் படித்ததாக ஞாபகம். மறுபடி மிர் பப்ளிகேஷன் நூல்களை திருச்சி மக்கள் மன்றத்தில் கொட்டிக் குவித்து 5 ரூபாய் 10 ரூபாய் என்று விற்பனை செய்தார்கள். அதில் அள்ளிக் கொண்டு வந்த ஒரு புத்தகத்தில் தமிழிலும் வாசித்திருக்கிறேன்.

“அட என்னப்பா கதைக்கு வாப்பா!!” என்கிறீர்களா. இதோ வந்துட்டேன். கதை ரொம்ப சின்னது தான். தெருவில் ஒரு போலீஸ் ஆபீஸரும் ஒரு போலீசும் ரோந்து செல்கிறார்கள். அங்கே கூட்டமாக உள்ளது. என்னவென்று பார்த்தபோது ஒரு நாய் ஒருவனின் கையை கடித்து இரத்தம் கொட்டிக் கொண்டு உள்ளது. அந்த குட்டி நாயையும் பிடித்து வைத்துள்ளார்கள். போலீஸ் ஆபீஸர் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த நாயை கொல்ல வேண்டும் என்கிறார். கூட்டத்தில் ஒருவர் “போலீஸ் உயர் அதிகாரி ஒருவரது நாய்” என்கிறார். உடனே அந்த நாயின் கட்சிக்கு தாவி விடுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த சின்னஞ் சிறு நாய் உன் கை உயரத்திற்கு தாவி உன்னை கடித்தது என்பதை நம்ப முடியாது. அந்த நாயிடம் நீ ஏதோ குறும்புத்தனம் பண்ணியிருக்கிறாய் உன்னை விட்டேனா பார் என்று சீறுகிறார். உடனே அவர் உடன் வந்த போலீஸ் காரர் இது நமது அதிகாரியின் நாய் கிடையாது என்கிறார். உடனே அவர் கடிபட்டவன் மீது இரக்கம் கொண்டு நாய் மீது சீறுகிறார். இந்த மாதிரி ஒரு மூன்று முறை கட்சி தாவும் சங்கடமான சூழல் ஏற்படுகிறது. மூன்று முறையும் சளைக்காமல் கட்சி மாறுகிறார். இறுதியில் அந்த நாய் அவர்களது அதிகாரியின் தம்பி உடையது என்று தெரிய வருகிறது. அந்த நாயை மீட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

நகைச்சுவையோடு நல்லதொரு கருத்தான கதை. சட்டம் அங்கேயும் கூட ஏழை பணக்காரர் பார்த்து தான் தன் கடமையை செய்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்ன வென்றால் ஒவ்வொரு முறை கட்சித் தாவும் போதும் அந்த அதிகாரி சூடாக இருப்பதாக கோட்டை கழற்றி அந்த போலீஸிடம் தருவதும் பின்னர் குளிர் வாட்டுவதாக கோட்டை அணிவதும் என இருப்பார்.
பள்ளி விழாக்களில் இந்த கதையை நாடகமாக போடலாம். வசனம் ஏதும் ஸ்பெஷலாக நீங்கள் எழுதி விடாதீர்கள் அவரது வசனத்தை அப்படியே பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நாடகக்காரி என்று புலமைப் பித்தன் அவர்கள் தலைப்பிட்ட ஆண்டன் செக்காவ் அவர்களின் “THE CHORUS GIRL” என்கிற கதை. இதுவும் சின்னஞ் சிறியது தான். வேண்டுமானால் கூகுளில் படிக்கத்தான் அதன் ஆங்கிலப் பெயரையும் கொடுத்துள்ளேன். எளிமையான ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒரு பெண் ஒருத்தியின் வீட்டில் ஆடவன் ஒருவன் இருக்கிறான். வழக்கமாக அங்கே வந்து போகிறவன். கதவு தட்டப் படுகிறது. இவன் மறைந்து கொள்கிறான். வந்தவள் அந்த ஆடவனின் மனைவி. இவனை கேட்கிறாள். இல்லை என்றதும் “உனக்கு பரிசளிக்க 900 ரூபிள் பணத்தை அலுவலகத்தில் கையாடல் செய்து விட்டான். உடனே அதனை தந்து அவன் சிறைக்கு செல்லாமல் காப்பாற்று என்று மிரட்டிக் கெஞ்சுகிறாள். காலில் விழக்கூட முனைகிறாள். அதனால் பதறி இவள் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் அத்தனையையும் இரக்கப்பட்டு தந்து விடுகிறாள். அவள் சென்றவுடன் அந்த ஆடவனிடம் வந்து “நீ எப்போது எனக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தாய்? ஒன்று கூட எனக்கு தந்தது இல்லையே!” என்கிறாள். அதற்கு அவனோ இவள் சொன்னதை காதில் கூட போட்டுக் கொள்ளாமல் அவள் எவ்வளவு கவுரவமானவள் இந்த ஈனப்பிறவியின் காலில் விழ நான் காரணமாகி விட்டேனே என்று அவளை அருவருப் போடு தள்ளி விட்டு சென்று விடுகிறான். தன் அனைத்து உடைமைகளையும் இழந்ததை எண்ணி இவள் அழுகிறாள்.

இந்த கதையின் ஆரம்பத்தில் நாம் அந்த ஆடவனின் மனைவிக்காக இரங்குவோம். கதை முடிவில் அந்த பெண்ணுக்காக இரக்கப்படுவோம்.  இவ்விரண்டு கதைகளையும் படித்த பின் ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டுள்ளேன்.

No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...