Sunday, February 4, 2018

வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்


வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்

தமிழ் எம்.ஏ என்கிற படத்தில் தமிழ் படித்த காரணத்தினால் வாழ வழியின்றி வாழ்க்கையை வீணடித்தவன் கதை பற்றி பார்த்திருப்போம். இலக்கியத்தை வாழ்வாதாரமாக கொண்டிருப்போர் அதைக் கொண்டு பொருளாதார நிறைவோடு வாழ இயலாது என்பது அந்நாளில் இருந்து இந்நாள் வரையில் நிதர்சனம்.
புகழ் வெளிச்சம் தம் மீது படுமாறு நின்று கொண்டு இருப்போர் மட்டுமே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என வணிக ரீதியாகவும் இலாபகரமான “தொழிலாக“ இலக்கியத்தை கொண்டிருக்கிறார்கள். அதனால் வணிக சமரசங்களுக்கு உட்பட்டே இலக்கியம் படைக்கின்றனர்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் புலமை மிகுந்தோரெல்லாம் தனவந்தர்களை புகழ்ந்து பாடல் புனைந்து அவர்களது உள்ளத்தை குளிர வைத்து பரிசில் பெற்றுச் சென்று வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
வானம் வசப்படும் கதையில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை கூட தமிழ் இலக்கிய ஆர்வலராக கதை மூலம் அறியப் படுகிறார். தமிழ் புலவர்களுக்கு பரிசுகளும் பண்டங்களும் கொடுத்து அவர்கள் பசி போக்கி தமிழ் தொண்டுக்கு புலவர்களை தயார் படுத்தியிருக்கிறார்.
இராம கவிராயர் என்கிற ஒரு புலவரின் வீட்டில் அடுப்பங்கரையில் அல்ல அடுப்பினுள்ளேயே பூனை படுத்து நீல் துயில் கொள்ளும் அளவுக்கு அடுப்புக்கு ஓய்வளித்து பட்டினியை உணவாக கொண்டு தம் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தை பசியால் வாடி வதங்கிப் போய் கிடப்பது பொறுக்காமல் ஆனந்தரங்கம் பிள்ளையின் கொடைதன்மை பற்றி கேள்வியுற்று புதுச்சேரி விரைகிறார்.
வீட்டிலே போய் பார்க்கிறார், அங்கே அவர் இல்லை, களத்து மேட்டில் அவர் இருப்பதாக தகவல் கூறிவிட்டு அவர்தம் நிலை கண்டு இரங்கி உணவு தயார் செய்து அளிக்க முனைகிறார் அவரது மனைவி. ஆனால் அதை அவர் மறுதளித்து களத்து மேட்டுக்கே விரைந்து சென்று பாடல் பாடுகிறார். பாடலின் உள் பொருளாக தனது நிலை பற்றியும் விளக்கி பாடுகிறார்.
ஆனந்தரங்கரோ ”சரி பொறும்” என கூறி காக்க வைத்து விட்டு வேறு அலுவல்களை பார்க்கிறார். ராமகவிராயருக்கோ குழந்தையின் நிலை கண் முன்னே வந்து வந்து போகிறது. எனவே பொறுக்க மாட்டாமல் அவர் முன்னே வந்து ஞாபகப் படுத்தியவண்ணம் இருக்கிறார். அதற்கு “பறக்காதீரும் புலவரே” என்கிறார். அதற்கும் பதிலாக ஒரு பாடலை பாடுகிறார்.
“பொக்கு பறக்கும்; புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பார்
நானேன் பறப்பேன் நராதிபனே?
திக்கு விஜயம் செலுத்தி, உயர்
செங்கோல் நடத்தும் அரங்கா! நின்
பக்கம் இருக்க ஒரு நாளும்
பறவேன், பறவேன், பறவேன்”
என்ற பாடலை கேட்டு அவரது அவசரம் அறிந்து உரிய பொருளும் பொன்னும் துணிமணிகளும் கொடுத்து அனுப்புகிறார். தீர்ந்து போனதும் என்னை வந்து பாருங்கள் என்று வேறு கூறுகிறார்.
தாசி எனும் தேவரடியார்கள்
1740- 50 களில் கோவில் தோறும் தேவரடியார்கள் என்கிற பெயரில் தெய்வத்திற்கு நேர்ந்து விட்ட தாசிகள் இருந்திருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளில் அவர்களது ஆட்டம் இன்றியமையாத வழக்கமாக இருந்துள்ளது. நல்ல அழகும் “திறமையும்“ உடைய தாசிகள் “எட்டுத் திக்கும் விட்டெறிய“ (பேரும் புகழோடும் என்பதற்கான பிரபஞ்சனின் பதம்) வாழ்ந்திருக்கிறார்கள்.
நஞ்சை புஞ்சை நகை நட்டு என ஏராளமான சொத்து சுகத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
தாசி குலத்தில் பெண் பிறந்தால் மிகப் பெரிய கொண்டாட்டமாக இருந்துள்ளது. தாயானவள் ஓய்வு பெறும் வயதை எட்டும் போது மகளை தொழிலில் இழுத்து விடுவாள். அதுவும் தாசி மகள் இளைய தாசியை கன்னி கழிக்க பெரும் பணக்கார ஆண்களிடம் மிகப் பெரிய போட்டி இருந்துள்ளது. தாசி வீட்டில் பிறக்கும் ஆண்பிள்ளை வேண்டா பிள்ளை தான். ஆட்களை கூட்டி வருவது போன்ற சில வேலைகளுக்கு அவர்களை பழக்குவார்கள்.
தாசி முதுமையடையும் போது மேக நோய் கண்டிருந்தால் அவளிடம் சென்று வந்த அனைத்து பணக்கார வீட்டுக் காரர்களும் வைத்தியரை தேடி ஓடுவார்கள். தாசியானவர்கள் தனது பெண் பிள்ளைகள் வயது வந்தவுடன் ஆண்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது குறித்தும், அவர்களிடமிருந்து பரிசுகளை பெற என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நுணுக்கமாக பயிற்றுவித்துள்ளனர்.( இது குறித்து பிரபஞ்சன் அவர்கள் தனது நீல நதி என்கிற நாவலிலும் அழகாக விவரித்துள்ளார்.)
கதையில் பானுகிரகி என்கிற தாசி பெரும் பணக்காரியாக வாழ்ந்திருக்கிறாள். அதே போல பொன்னி என்கிற வேதபுரீஸ்வரர் கோவில் ஆட்டக்காரியும் கூட வசதியான வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.
அருமையாக பாடல் பாட வல்லவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பி செய்த குறும்புகள் குறித்து பாடல் மூலமாக ஆனந்த ரங்கருக்கு உணர்த்துகிறாள் பானுகிரகி. அதை புரிந்து கொண்டு தனது தம்பியை கண்டிக்கிறார் ஆனந்த ரங்கர்.
இது போல சொர்ணம் என்கிற தாசிக்கு பிறந்த மகன் ஆறுமுகம் எதுவும் தெரியாத தத்தியாக வாழ்கிறான். அவனை அழைத்து திருட்டு பழக்குகிறார்கள். அவன் காவலர்களிடம் மாட்டி சிறை சென்று பின்பு அடிமையாக மொரிஷியஸ் தீவுக்கு விற்கப் படுகிறான்.
பெரிய தனவந்தர்கள் கேட்டால் இல்லை என்று கூறும் சுதந்திரம் வேசிப் பெண்டிருக்கு இருந்திருக்க வில்லை. அவர்கள் என்னதான் பணத்தில் திளைத்தாலும் அவர்களின் இறுதிகால வாழ்க்கை இரங்கத்தக்கதாகத்தான் இருந்து உள்ளது.

No comments:

Post a Comment

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...