Saturday, February 3, 2018

”எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி


எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி

அப்பா, அப்பா, நான் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்பா! 100 மார்க்பா!!” என்று உற்சாக பட்டாசாய் நான் வந்து கூறும் போது,
அப்படியா சரி  என்று மட்டும் சிக்கனமாக பேசுவார். ஆனால் முகம் மட்டும்ஏன் 110 மார்க் வாங்கினா என்னவாம்?’ என்பது போன்ற பாவனையில் இருக்கும்.
மாலை வேளைகளில் பசங்களுடன் விளையாடிக் கொண்டு இருப்பேன். ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அப்பாவின் சைக்கிளில் இருந்து பிரத்தியேகமாக ஒலிக்கும் பெல் சத்தத்தில் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் வீட்டுக்கு சிட்டாக பறந்து விடுவேன்.
சேத்துக்குறோம் ஆனா உங்கப்பா வந்துட்டா உட்டு அடிச்சிட்டு ஓடக்கூடாதுஇது தான் நண்பர்கள் என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள எனக்கு போடும் கண்டிஷன்.  
ஆனாலும் பெல் சத்தத்தை கேட்காமல் நானே அசட்டையாக இருந்தாலும் கூட அவர்கள் தான் என்னை உசுப்பிவிடுவார்கள். ஒரு வேளை எனக்கு முன்னரே அப்பா வீட்டினுள் புகுந்து விட்டால் இருக்கவே இருக்கு பின்பக்க வாசல்.
அப்பா கேட்கும் முதல் கேள்வியேஜெயராஜ் எங்கே?” என்பது தான்.
நானோ உடனே கையில் சிக்கிய புத்தகத்துடன் கதவைத் திறந்து கொண்டு வெளிப்படுவேன்.
ஏதோ ஒண்ணாம் வகுப்பில் ஒரு நாள்தாங்க லீவு போட்டேன், அதுக்கு போய் அப்பா பக்கத்து வீட்டு கணேசன் அண்ணனுடன் எனக்கு மாடு வாங்கி கொடுத்து மேய்க்க விடுவது பற்றியும் பண்ணை அமைப்பு குறித்து சீரியஸாக உரையாட ஆரம்பித்து விட்டார்(என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு வரையில் லீவே எடுத்தது இல்லை. பத்தாம் வகுப்பில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரகாலம் அப்பா கூறியதற்கு இணங்க விடுப்பு எடுத்தேன்.
வடிவேல் ஊத்தாப்பம் ஆர்டர் செய்யும் ஜோக் பார்த்திருப்பீர்கள். மழைச்சாரல் மாதிரி 16 கரண்டி நெய்யெல்லாம் ஊற்றச் சொல்லி ஒரு நீளமான ஆர்டரைத் தருவார். சர்வரோ சிம்பிளாக “அய்யாவுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். அது போலதான் கல்வி ஆண்டு துவக்க நாட்களில் நான் இது வேண்டும் அது வேண்டும் என்று பெரிய பட்டியலையே தருவேன். அவரோ சிம்பிளாக எது அவசியமோ அதை மட்டும் வாங்கி வருவார்.
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அந்த காலத்தில் மாலை செய்தித் தாளில் தான் வெளிவரும். ரிசல்ட் பார்த்து விட்டு வெற்றியோடு திரும்பும் மாணவர்கள் பேருந்தில் இருந்து குட்டிக் கரணம் போட்டுத் தான் இறங்குவார்கள். அந்த ஆட்டம் அன்று முழுவதும் ஊருக்கே இனிப்பு வழங்கி முடிக்கும் வரை நீடிக்கும். நானோ வீட்டில் தவிப்போடு காத்திருப்பேன். அனேகமாக தூக்கம் சொக்கும் நேரம் செய்தித் தாளோடு வருவார். ஓரு ஆரஞ்சு மிட்டாய் கூட எனது தேர்ச்சியின் பொருட்டு நான் வழங்கியது கிடையாது. எனது தேர்ச்சியின் பால் அவருக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை ஆதலால் பரபரப்படைய மாட்டார். எந்த சூழலிலும் உணர்வெழுச்சியால் அடித்துச் செல்லப் பட்டவரில்லை. ஆரோக்கியமான உணர்வுசார் நுண்ணறிவு (EMOTIONAL INTELLIGENCE) கொண்டவர்.
ஆனா பாருங்க முடிவெட்டிக் கொள்ள பணம் கொடுத்து தா.பழூருக்கு அனுப்பி வைப்பார். 5ம் வகுப்பு வரையிலும் அவரே வெட்டி விடுவார். கடையில் எங்களுக்கு முடி வெட்டி விடமாட்டார்கள் என்பதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தா.பழூருக்கு முடி வெட்டிக் கொள்வதற்காகவே செல்வேன். எந்த வகையிலும் எனக்கு தாழ்வு மனப்பான்மையோ எனது சுயமரியாதைக்கு பங்கமோ வர விட்டதில்லை அவர்.
பள்ளி பருவத்தில் தீனி வாங்குவதற்கு நயா பைசா கூட தரமாட்டார். “எதுவா இருந்தாலும் நான் வாங்கி வரேன் வீட்டில் சாப்பிடு” என்று சொல்லிவிடுவார் கறாராக. இலால்குடி விடுதியில் படித்த போது கூட போக 10 வர 10 செலவுக்கு 10 என் 30 ரூபாய் மட்டும் தருவார். ராணி காமிக்ஸ் புத்தக வாடகை 25 பைசா மட்டும்(அந்த கால லெண்டிங் லைப்ரரி) தவறாமல் தருவார்.
ஆனா பாருங்க கல்லூரி காலத்தில் நான் 200 கேட்டால் கூட 300 அனுப்பி வைப்பார். அது என் மேல் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மரியாதை என்று உணர்ந்து கொண்டேன்.
இவ்வளவு தூரம் ப்ராக்டிகல் சைக்காலஜியை கையாண்ட எனது தந்தை படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே. பார்த்தது அரசாங்க தலையாரி (கிராம காவலர் இப்போது கிராம உதவியாளர்) உத்தியோகம். அறிந்தது பத்திரம் எழுதுவது, நில அளவை என ஏராளமானவை. எழுத்து பிழை ஒன்று கூட காணவியலா எழுத்து நடை உடையவர்.
எங்கள் குடும்ப பெரியாராம் எங்கள் நடு சித்தப்பாவின் வழி காட்டுதலுக்கு இணங்க எனது அண்ணன் திருமணத்தை ஊரே வியக்கும் வண்ணம் ஒரு சுயமரியாதை திருமணமாக நடத்திக் காட்டினார். வீட்டின் பின்புறம் சினிமா திரையரங்கம் போல முக்கோண வடிவ நீளமான பந்தல் போட்டார். அனைத்து சாதியினரும் விருந்து உண்ட சமபந்தி போஜன திருமணவிழா அது.
எங்கள் ஊரில் அனைவரும் பார்த்து பிரமிக்கும் வண்ணமாக அப்பா எங்கள் நால்வரையும் நன்கு வளர்த்து படிக்க வைத்து அழகு பார்த்தவர். அனேகமாக எங்கள் ஊரின் முதல் பட்டதாரி பெண் எனது அக்கா ஜெயபாரதி தான்.
குழந்தைகளுக்கு படிப்பை விட பெரிய சொத்து வேறு எதுவும் இருக்க இயலாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இப்போது நாங்கள் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறோம். அவர் எங்களுக்கு மீன் சாப்பிட வழங்குவதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுத் தருவதே சாலச் சிறந்தது என்றுணர்ந்தார்.
எந்த சூழ்நிலையிலும் எனது தந்தை கண்கலங்கியதை நான் கண்டதில்லை. ஒரு மூன்று முறை தான் நான் பார்த்திருக்கிறேன்.
முதலாவது, எங்கள் ஊரில் மூங்கில் பிளாச்சில் தட்டி செய்து கோவிலில் பாதுகாப்பு அரண் வைத்திருந்தார்கள். சிறுவர்கள் நாங்கள் அதை பிடித்து தொங்கியபடி நடந்து சாகசம் செய்வோம். அப்போது ஒரு கயிறு திரி திரியாக அறுந்து வருவதை க்ளோசப் பில் யாரும் காட்டாத காரணத்தினால் அஜாக்கிரதையாக நான் தொங்கியபோது தட்டியும் என்னோடு சேர்ந்து தொங்கி பின் என்னோடே கீழே விழுந்தது. முட்டிக்கு கீழே இருந்த சதைப் பகுதி கொத்து பரோட்டா ஆகிவிட்டது. ரத்தம் வெள்ளமாய் பீரிட்டு வழிந்தோடியது. ஓவென்று அலறி துடித்தேன். எனது அப்பா சைக்கிளில் வேகமாக வந்து இறங்கி ஓடி வந்தார். அய்யய்யோ அப்பாவுக்கு தெரியாமல் விளையாட வந்து இப்படி ஆகிவிட்டதே என்கிற பயத்தில் நான் வாயை பொத்திக் கொண்டேன். ரத்தத்தை பார்த்த மாத்திரத்தில் அவர் கண்ணில் வழிந்த நீரை அப்போது தான் முதலில் கண்டேன்.
இரண்டாவதாக நடந்த சம்பவம் நான் மூன்றாவது படித்த போது நடந்தது. புளியமரத்தில் புளியாங்கா அடிப்பது மாணவர்களின் வாடிக்கை. மரத்தை நோக்கி மாணவர்கள் விர்ரென்று கருங்கல்லை எறிவார்கள். அப்படி எறியப்பட்ட கல்லொன்று கீழே விழவில்லை. சரியாக நான் மரத்தை கடக்கையில் செந்துறையை சுற்றி திருச்சிக்கு செல்லும் சுந்தரம் பஸ் போல பொத்தென்று எனது மண்டையில் விழுந்தது. தா.பழூருக்கு தையல் போட சென்றோம். எனக்கு மரத்துப் போகிற ஊசி போட்டு விட்டுத்தான் தையல் போட்டார்கள். எனக்கு ஊசி இறங்குவது சரக் சரக் என்று தான் உணரமுடிந்தது. ஆனால் எனது தந்தையின் கண்ணில் கண்ணீர் கட கட வென்று வழிந்தோடியது.
மூன்றாவது முறை, எனது விடுதிகால பொறுப்பற்ற தனத்தினால் படிப்பில் சற்று அசட்டையாக இருந்துவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட துன்பம். அவ்வளவுதான்.
எனது தந்தை தனது எழுபதாவது வயதில் இயற்கை எய்தினார். 2004 வது வருடம். நான் உட்கோட்டை பள்ளியில் பணியேற்று இரண்டாண்டுகள் கடந்த போது.
எனது வாழ்விலும் சரி எங்கள் குடும்பத்திலும் சரி அனேக விழாக்கள் அவரது மறைவுக்கு பின்பு நடந்தேறிய வண்ணம் உள்ளது. அது தான் இயல்பும் கூட. வாழ்க்கை சக்கரம் எதன் பொருட்டும் நிற்பதில்லை. அது இந்த பூமியை போல தொடர்ந்து சுழன்ற வண்ணம் உள்ளது என்பது தான் நிதர்சனம். ஆனாலும் கூட அவரின் இல்லாமை மனதில் ஒரு வெறுமையை தருகிறது. எனது இந்த எண்ணம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தான், இருந்தாலும்  உணர்வுகள் பகுத்தறிவு அறிவதில்லையே.
சீறிப் பாயும் புதுப் புனல் போல நினைவுச்சரங்களில் இருந்து சம்பவங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் கூட இத்துடன் முடிக்கிறேன்.





2 comments:

  1. அடேய் 3வது என்னடா தம்பி

    ReplyDelete
  2. பெரியப்பா மீண்டும் கண் முன்னே

    ReplyDelete

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...