Monday, May 19, 2025
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!!
பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு பணி முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
நான் மிச்ச மீதி தபால் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு பாட்டி வந்தார். வந்து அவரது இரண்டு பேரன்களின் (இரட்டையர்) மதிப்பெண்களை கேட்டார். மார்க் பற்றி பெரிய அளவில் அவருக்கு விவரம் தெரியாது என்றாலும் அவர்களது மார்க்கை (398&413)கூறி "உங்க பேர பசங்க நிறைய மார்க் வாங்கி இருக்காங்க, நல்லா படிச்சிருக்காங்க " என்று பாராட்டினேன்.
உடனே அவரது கண்ணில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே "அப்பா இல்லாத பசங்க சார் அவங்க நல்லா படிச்சிக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம்" என்றார்.
"கவலையே படாதீங்க பசங்க ஜோரா படிச்சி பெரிய வேலைக்கு போகப்போறாங்க பாருங்க" என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தேன்
பொது தேர்வுகளில் எடுக்கப்படும் 100% தேர்ச்சி மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் ஒருவரும் விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதச் செய்து அவரவர் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெற வைப்பது என்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்.
2018 இல் நான் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் சவாலாக விளங்கிய செட் என்றால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு எழுதிய மாணவர்கள்தான்.
அந்த வகுப்புக்கே நாங்கள் செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பும் அளவுக்கு பெரிய அளவில் ரகளை செய்து விட்டார்கள்.
அடுத்த நாளில் பிரச்சனையின் மையப் புள்ளியாக இருந்த நான்கைந்து மாணவர்களை தனியே அழைத்து கண்டித்து அவர்களிடம் ஒரு மணி நேரம் அளவுக்கு பேசி, ஆசிரியர்கள் அனைவரிடமும் தாங்கள் செய்தது தவறு என்று வருத்தத்தை தெரிவிக்கச் செய்து அதன் பிறகு ஆசிரியர்கள் அனைவரும் "இந்த ஒரு முறை இவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம் சார்" என்று கூறி அவர்களாகவே அந்த மாணவர்களை மீண்டும் வகுப்பில் அனுமதித்தார்கள்.
பத்தாம் வகுப்பு வந்த பிறகும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் மீண்டும் ஏராளமான பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டும் பள்ளி பொருட்களை சேதம் செய்து கொண்டும் இருந்தனர்.
அதிலும் ஒரு மாணவனை 15 நாட்கள் சஸ்பென்ட் செய்து ஒரு பெரிய பிரச்சனையை தவிர்த்தோம்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய புரிதலும் அன்பும் அதிகமாகும் வகுப்புகளில் அற்புதங்கள் நடக்கும். எல்லா மாணவர்களையும் எல்லா ஆசிரியர்களும் பெரும்பாலும் நேசித்தாலும் சில சமயங்களில் மிகப்பெரிய அளவுபாசப்பிணைப்பு
ஏற்படும் செட்டுகள் அமையும்.
அதுபோன்ற சமயங்களில் அவர்களின் கல்வி அடைவு மிகப்பெரிய உச்சத்தை தொடும். எனக்கு அது போல் இரண்டு மூன்று செட்டுகள் அமைந்தன.
இந்த மாணவர்கள் செய்த காரியங்களால் ஆசிரியர்கள் & மாணவர்கள் இடையிலான பிணைப்பு குறைந்து போனால் அது கல்வி அடைவுகளிலும் எதிரொலிக்குமே என்று மிகப்பெரிய வருத்தத்தோடு தான் இருந்தேன்.
ஆனால் அவ்வாறு நடைபெறாதவாறு ஆசிரியர் மாணவர் உறவு மிகச் சுமுகமான அளவில் இருக்குமாறு பராமரித்தது நிச்சயமாக எங்களுடைய ஆசிரிய பெருமக்கள் தான்.
தொடர்ந்து மாணவர்களின் சிறு சிறு முன்னேற்றங்களை உற்சாகப்படுத்தியும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு பெரிய வேலைகளை சிறுசிறு வேலைகளாக உடைத்து தருவது என்று பல விஷயங்களை தொடர்ந்து முயன்ற வண்ணம் இருந்தனர்.
ஒரு மாணவிக்கு அவ்வப்போது வலிப்பு வந்துவிடும் அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களிடம் அந்த மாணவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அவருக்கு பெரிய வேலைகள் எல்லாம் வழங்க வேண்டாம் படிப்பை விட அவரது உடல் நலன் ரொம்ப முக்கியம் என்று கூறியிருந்தேன். ஆனால் ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி இரவு நேரத்தில் கூட அவரிடம் தொடர்ந்து பேசி வேலை கொடுத்து whatsapp மூலமாக வாங்கி மதிப்பீடு செய்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்பதை கேள்விப்பட்ட போது உள்ளபடியே நான் கலங்கிப் போனேன்.
அதுபோல் வெளியூரில் இருந்து வந்து உறவினர் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது ஊருக்கு சென்றால் திரும்பி வர முரண்டு பிடிப்பார்கள்.
ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பள்ளிக்கு வருவது மற்ற நாட்களில் அவனது தந்தை தரும் பேருந்து கட்டணத்தை எடுத்துக் கொண்டு எங்காவது ஊர் சுற்றிவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு சென்று விடுவது என்று இருந்தான்.
அவனை எத்தனை முறை அழைத்து பேசினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனது தந்தையை அழைத்து அவரிடமும் பேசி பார்த்தோம் .அவனது தந்தையோ அவனை கண்டிக்கும் அளவுக்கு இல்லை.
அவன் செய்த தவறுகளில் உச்சத்திலும் உச்சமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில தமிழ் தேர்வுக்கு வரவே இல்லை. அதுபோல் தேர்வு இடைப்பட்ட நாட்களில் உள்ள பயிற்சி வகுப்புகளுக்கும் வரவில்லை. அனைத்து ஆசிரியர்கள் தொலைபேசி எண்களையும் பிளாக் லிஸ்டில் வைத்திருந்தான்.
ஆசிரியர்கள் அவனுக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமாக வாய்ஸ் நோட் அனுப்பியும் கூட அதை அவன் ஓபன் செய்து கேட்டிருந்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதன் பிறகு அவர்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி அவனது பெற்றோரையும் அவனையும் பள்ளிக்கு அழைத்து நீங்களே பேசி அவனை பரிச்சை எழுதும் அளவுக்கு சரி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
இந்த திட்டம் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியது. மீதி தேர்வுகள் அனைத்தையும் எழுதி 70 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலும் கூட தேர்வுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் கூட அவனை அழைத்து அவனிடம் பேசி உற்சாகப்படுத்தி தேர்ச்சி அடையும் அளவுக்கு அவன் இருக்கிறானா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க காலை மாலை மற்றும் சனிக்கிழமைகள் என அனைத்து நாட்களிலும் வேலைகளை பிரித்துக் கொண்டு செய்த ஆசிரியர்களை எண்ணி நான் வியப்படைந்தேன். நானே கூட சில சமயங்களில் "டீச்சர் இருந்த வாரம் ரெஸ்ட் எடுங்களேன்" என்று கூறியும் கூட அவர்கள் "வேண்டாம் சார் கொஞ்சம் வேலை இருக்கு" என்பார்கள்
உள்ளபடியே இந்த செட்டு மாணவர்கள் நினைத்து நான் பயந்தபடி இருந்தாலும் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் பேரன்பையும் பெருங்கருணையையும் காண்பித்து அவர்களை தங்கள் வழிககு கொண்டு வந்து 100 விழுக்காடு தேர்ச்சியை எட்ட வைத்தனர்.
ஆசிரியர்களின் தொடர் உழைப்புக்கு அங்கீகாரமாக பள்ளி சராசரி மதிப்பெண் 360 என்கிற உச்சத்தை இந்த ஆண்டு எட்டியது.
எங்கள் கிராம மக்கள் மத்தியில் எங்கள் பள்ளி மீது பேர் அபிமானம் இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பெரும் உழைப்பு தான்!!
பத்தாம் வகுப்பு என்று இல்லாமல் மற்ற வகுப்புகளிலும் அடிப்படை திறன்கள், கையெழுத்து, கல்வி இணை செயல்பாடுகள் கலை இலக்கியம் விளையாட்டு என்று மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்க அவர்கள் காட்டும் ஆர்வமும் உழைப்பும் மிகப் பெரியது. அதுபோல ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது வகுப்பில் உள்ள அனைத்து பெற்றோரிடமும் தொடர்ந்து நேரிலும் தொலைபேசியிலும் பேசி நட்புறவோடு சம்பந்தப்பட்ட மாணவனின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களில் குழு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பது தான். அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!
சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment