Saturday, October 25, 2025
இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம்
"இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம் அவர்களின் நாவல். ஏற்கனவே இவரது இரண்டு நாவல்களை வாசித்து உள்ளேன்.
வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் சொந்த காச செலவு பண்ணியாவது வாசிக்கும் ஆர்வத்தை பிறருக்கும் தூண்டிவிட முயலுவார்கள். அப்படி பிறந்தது தானே பிரபலமான முகநூல் வாசிப்பு குழுமமான "வாசிப்பை நேசிப்போம்" குழுமம்
நானும் பள்ளிக்கு வரும் உயரதிகாரிகள், சக ஆசிரியர் தோழர்கள் மற்றும் அலுவல் ரீதியாக பள்ளியை காண வருவோர் என அனைவருக்கும் புத்தகங்களை பரிசு வழங்குவது வழக்கம்.
அலமாரியில் புத்தகங்கள் குறைய குறைய ரீஃபில் செய்துவிடுவேன். சமீபத்தில் அரியலூரில் உள்ள புத்தக கடையில் 1500 க்கு நூல்கள் வாங்கினேன். வாங்கிய நூல்களில் வாசிக்காத நூல்கள் இருந்தால் எடுத்து வாசித்துவிட்டு வைத்துவிடுவேன்.
அவ்வாறு வாசித்தது தான் "இப்போது உயிரோடிருக்கிறேன்" ஆனால் ரெண்டே சிட்டிங்கில் முடித்துவிடுவேன் என்று நினைக்கவில்லை.
பதினைந்து வயது பையன் தமிழரசனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போய்விடுகின்றன. கிராமத்தில் விவசாயம் ரைஸ் மில் என ஓரளவு வசதியான குடும்பம் என்றாலும் தொடர் மருத்துவ செலவுகள் அவர்களை வேதனைக்கு உள்ளாக்கி பொருளாதார ரீதியாக நலிவுறச்செய்து விடுகிறது. ஆனாலும் கூட முற்றிலும் குணமாக்க இயலா கையறு நிலையில் இருக்கின்றனர்.
கார்ப்பரேட் மருத்துவமனை மருத்துவர்கள் அவ்வளவு எளிதில் பேசமாட்டேன் என்கிறார்கள். நோயாளிகளிடம் முழு உண்மையை கூறாமல் அலைக்கழிக்கிறார்கள்.
டயாலிஸிஸ் நடைமுறைகள் அதற்கு வேதனையோடு காத்திருக்கும் பெரும் கூட்டம் என விவரனைகளை வாசிக்கும் போது மனது கனத்து போகிறது.
கண்டிப்பான தோரணையோடு கம்பீரமாக வலம் வரும் தந்தையர்கள் தான் பிள்ளைகள் வியாதியில் உழலும் போது ஒடிந்து போகிறார்கள். தமிழரசன் தந்தை டயாலிஸிஸ் க்கு காத்திருக்கும் வரிசையில் சிறுவன் ஒருவனை பார்த்த மாத்திரத்தில் வாயில் துண்டை வைத்துக் கொண்டு அழுகிறார்.
கார்ப்பரேட் மருத்துவமனையில் சிக்கலான ஆபரேஷன் ப்ரொசீஜர் துவங்கும் முன்பாக கவுன்சிலிங் போகச் சொல்வார்கள். அங்கே பணிபுரிபவர்கள் சாமர்த்தியமான ஆட்களாக இருப்பார்கள். அப்படி ஒரு அகிலா என்கிற பாத்திரம் இந்த நாவலில் உண்டு. அகிலா பேசுவதை பார்த்தால் நோயாளிகளிடம் பேசுவதற்கு கூட புரோட்டோக்கால் இருப்பது போல் உள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த விஷயங்களை தவணை முறையில் சொல்லி தமிழரசன் பெற்றோரை சாவடிப்பார். ஒவ்வொரு இலக்குக்கும் இது முடிஞ்சா அவ்வளவு தான் என்று சொல்லி சொல்லியே புதுப்புது பூதங்களை இலக்காக வைப்பது தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல இருக்கும்.
60% அளவுக்கே வெற்றி விகிதம் உள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள இடியாப்ப சிக்கல் நடைமுறைகளை முன்னமே சொன்னால் காசு இருக்கிற வரைக்கும் டயாலிஸிஸ் செஞ்சிட்டு இல்லாதப்போ செத்துப் போறோம் என்று ஓடி இருப்பார்கள். வாசிக்கும் நமக்கே மூச்சு முட்டுகிறது.
டயாலிஸிஸ் நடைபெறும் போது பக்கத்து மெஷினில் டயாலிஸிஸ் செய்துகொள்பவர் இறந்து போகிறார்.
இரண்டாண்டுகள் டயாலிஸிஸ் ல் ஃப்ளாட்,கார், நகைகள் எல்லாவற்றையும் விற்று விட்டு நடுத்தெருவுக்கு வந்த ஐடி ஊழியர் கணவர் சீக்கிரம் இறந்து போனால் நல்லது என்கிறார்.
டயாலிஸிஸ் நோயாளிகள் பற்றிய பல கதைகள் வருகிறது. வாசிக்கும் நமக்கு பதற்றமாக உள்ளது.
எனக்கு பைபாஸ் சர்ஜரிக்கு சென்னையில் புதிதாக துவங்கப்பட்ட கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர் அன்பரசு அவர்கள் அவ்வளவு ஃப்ரெண்ட்லி. வாட்ஸாப் நம்பர் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.
இருந்தாலும் செகண்ட் ஒப்பீனியன் பார்ப்போம் என்று சென்னையின் மாபெரும் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சென்று காத்திருந்து மதிய வேளையில் உள்ளே சென்றால் அங்கே மருத்துவர் யாரையும் பார்க்க முடியவில்லை. அங்கே இருக்கும் சிப்பந்திகள் மொழம் நீளத்துக்கு டெஸ்ட்டுகளை எழுதி எடுக்க சொன்னார்கள். அவை அனைத்தும் ஏற்கனவே எடுத்து ரிப்போர்ட் கைவசம் உள்ளது என்று நான் கூறியதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. நான் போடா போடா புண்ணாக்கு என்று பாட்டு பாடிவிட்டு அன்பரசு அவர்களிடமே வந்துவிட்டேன்.
அரியலூரில் இருந்து வருவேன் என்பதால் வருடம் ஒருமுறை ரிவ்யூ வந்தால் போதும் என்று கூறிவிட்டார். ஏதாவது சந்தேகம் அல்லது உபாதைகள் என்றால் வாட்சாப் ல் செய்தி போட்டால் அவர் செய்தியை பார்த்த உடனே பதில் அனுப்பி விடுவார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மற்றொரு கார்ப்பரேட் மருத்துவமனைக்கு மாறினாலும் அவரது இயல்பில் மாற்றம் இல்லை. அதே பொறுமை மற்றும் கனிவு.
இந்த நாவலை வாசித்தபிறகு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது புரிகிறது. உடல் நலனை அக்கறையோடு பேணவேண்டும் என்கிற எண்ணத்தை ஆழமாக பதிய வைக்கிறது.
இமையம் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பு. மருத்துவமனை நடைமுறைகளை இவ்வளவு நுணுக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ள வேறு நாவல் இருக்கிறதா என்று தெரியவில்லை. முக்கியமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அவ்வளவு விஷயங்களை கதைப் போக்கில் சொல்லிப் போகிறது. அனைவரும் வாசியுங்கள்.
Subscribe to:
Comments (Atom)
இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம்
"இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம் அவர்களின் நாவல். ஏற்கனவே இவரது இரண்டு நாவல்களை வாசித்து உள்ளேன். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் சொந்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
