Sunday, March 19, 2017

ச்சீ ச்சீ இந்தக் கதை ரொம்பப் புளிக்கும்!!


”புளிய மரத்தில் புளி உளுக்க ஏறியவர் தவறி விழுந்து மரணம்” செய்தியை பார்த்ததும் ”பகீர்” என்றது.
உடனே அம்மாவுக்கு போன் செய்து “புளி உளுக்க ஆள் கூப்பிடாதே வேணும்னா கீழ உழுவறத மட்டும் பொறுக்கிக்க” என்று சொல்லிவிட்டேன்.
எங்க வீட்டு புளியமரத்துக்கு வயது 75 ஐ தாண்டி இருக்கும். தரையோடு செங்குத்தாய் வேர் பிடித்து “நாட்டாமை விஜயகுமார்“ மாதிரி சும்மா கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும்.
அந்த வழியாக செல்வோருக்கு இளைப்பாற நிழலை வள்ளலாக வாரி இறைக்கும் “ஏசி” வசதியுடன். அவர்கள் வீட்டு கூரையில் கூட கதிரவன் ஒலி ஊடுருவும் ஆனால் எங்கள் மரம் கதிரவனின் ஒலியை தரை தொட அனுமதித்தது இல்லை.
மூன்று பேர் சேர்ந்தால் கூட கட்டியணைப்பது சிரமம். அவ்வளவு பருத்த மரம். நானும் சில புளிய மரங்களை பார்த்திருக்கிறேன் “மண்டியிட்ட யானை“ கணக்காக கீழே வளைந்து தரையை தொட்டுக் கொண்டிருக்கும். பால் மறவா பாலகர்கள் கூட கிளை பிடித்து ஏறி ஊஞ்சல் ஆட அனுமதிக்கும்.
 இந்த விஷயத்தில் எங்கள் மரம் கண்டிப்பான பேர்வழி. பெரியவர்கள் கூட ஏணியின் உதவி இல்லாமல் அதன் கிளை பற்ற இயலா வண்ணம் ஓங்கி உயர்ந்தது. அருகில் உள்ள மாமரத்தில் நாங்கள் நுனிக் கொம்பு வரை ஏறி உள்ளதிலேயே கடைசி மாங்காய் வரை பறித்து தின்றிருக்கிறோம் ஆனால் இந்த புளியமரத்திடம் எங்களால் கடைசி வரை ஜெயிக்க இயலவில்லை.
புளியமரம் காய்க்கத் தொடங்கியவுடன் நாங்கள் மரத்தை அன்னாந்து ஏக்கமாய் பார்த்த வண்ணம் சுற்றி சுற்றி வருவோம். வடை சுட்டுக் கொண்டிருக்கும் அம்மா பிள்ளைகளுக்காக சுடும் போதே ஓரிரு வடையை ஏமாந்து போகக் கூடாதென்று எடுத்துக் கொடுப்பார். அதுபோல புளியமரம் எங்கள் மீது இரக்கம் கொண்டு ஒன்றிரண்டு செங்காயை வீசும். தரையில் வீழ்ந்தவுடன் பாய்ந்து சென்று எடுத்துக் கொள்வோம்.
“செங்காய்“ புளியானது காயாக இருக்கும் போது ஓட்டுடன் ஒட்டி உறவாடும். செங்காயாகும் போது அந்த உறவு விரிசல் விடும்.
உங்கள் காதலியின் முகத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காண வேண்டுமானால் அவளிடம் ஒரு புளியங்காயை கொடுத்து கடிக்கச் சொல்லுங்கள். அந்த புளிப்புத் தாங்காமல் அதே நேரம் அதில் கிரங்கி கண்மூடி “ஸ்ஸ்…அப்பா” முகத்தை அஷ்ட கோணலாக்குவாள். புளியங்காயை பற்றி நினைக்கும் போதே நாவில் புளிப்பு உணரப்பட்டு நீர் சுரந்து விடும். புளியங்காய் பற்றி “உள்ளத்தால் உள்ளளும் தீதே“ , “ச்ச்..ட்“ அடச்சே கீ போர்டில் ரெண்டு சொட்டு எச்சில் விழுந்து விட்டதே.

“செங்காய்“ பருவம் மனிதர்களின் குமரப்பருவம்(adolescent) மாதிரி. இந்தப் பருவத்தில் பையன்களும் பெண்களும் பாதுகாப்பாய் கரம் பற்றி இருந்த பெற்றோரிடம் இருந்து தங்கள் கரங்களை மெல்ல விடுவித்துக் கொள்வர். அது போல இது காரும் தங்களை பாதுகாத்த ஓட்டிலிருந்து மெல்ல புளி தங்களை விடுவித்துக் கொள்ளும். ஆனால் சுவையோ இனிப்பும் அல்லாது புளிப்பும் அல்லாத ஒரு கலவையான சுவை. கடிக்கும் போது மாவுமாதிரி வழுக்கிக் கொண்டு கொட்டை தனித்து பிரியும். எவ்வளவு கடும் புளிப்பு கொண்ட புளியை உடைய மரமாயினும் செங்காய் மட்டும் வெல்லக் கட்டி தான்.
புளி நன்கு பழுத்து விட்டால் ஓட்டினை முற்றிலும் விவகாரத்து செய்து உள்ளே ஒடுங்கிக் கொள்ளும். எங்கள் மரத்து புளியானது ஓடு என்னும் பெட்டியில் பத்திரமாக நரம்பினால் முடிந்து வைத்த “பஞ்சாமிர்தம்” என்று சொன்னால் அது மிகை அல்ல. அப்படி ஒரு இனிப்பு சுவை கொண்ட புளி . “யப்பா என்னா இனிப்பு” என்று சிறுவர்களின் கல்லடி படும் எங்கள் புளி “காய்த்த மரம்” பழமொழி எவ்வளவு உண்மை “காய்த்த மரம் கல்லடி படும்”
ஓடு உடைக்க வசதியாக இருக்க வேண்டும் என வாசலில் காய வைத்தால் பாதையோடு போவோர் வருவோர் எல்லாம் ஒன்றை எடுத்து விண்டு வாயில் போட்டு நாக்கு மற்றும் கன்னக் கதுப்புகள் மூன்றையும் உள்நோக்கி இழுத்து மொத்த இனிப்பையும் ஒரே உறிஞ்சில் சுவைத்து விட பேராசை கொள்வார்கள்.
புளிசாதம் செய்யும் சமையல் விற்பன்னர்கள் எல்லோரும் புளிரசம் வைத்தபின் சிறு துண்டு வெல்லக்கட்டியை போடுவார்கள் சுவை கூட்டுவதற்காக. ஆனால் எங்க மரத்துப் புளியை கரைத்து ஊற்றினால் போதும் புளி ரசத்திற்கு ஒரு தனி சுவை வந்துவிடும். பிரச்சினை என்னவென்றால் இந்த சுவை ரகசியம் “எங்கள் ஊர் அறிந்த“ ஒன்று. சற்று தாமதித்தாலும் காற்றில் இற்று விழும் புளியம் பழங்கள் எங்களுக்கு சொந்தமில்லை. இதன் பொருட்டு எங்கள் அம்மா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவார்.
புளியம் பழத்தில் இருந்து ஓடு நீக்குவது சற்று கடினமான விஷயம். காம்பினை சுற்றிலும் லேசாக தட்டி அப்படியே கூடாக பிரித்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். முதல் மரியாதை படத்தில் சிவாஜி மீன் சாப்பிடுவது மாதிரியெல்லாம் இதில் பண்ண இயலாது. நான் பல முறை முயன்று இருக்கிறேன். அரை ஓடு கூடாக வந்தாலே பெரும் வெற்றிதான். தரையில் ஒரே தட்டு தட்டி ’சினிமாவில் வில்லன் அடி வாங்கி விழும் போது நொறுங்கும் இற்றுப் போன மரச் சாமான்கள்’ போல நொறுக்க வேண்டும் பின்பு புளியோடு ஒட்டியிருக்கும் சில ஓட்டுத் துகல்களை தட்டிவிட்டு தனியே போட்டு விட வேண்டும்.
அதன் பின்னர் கொட்டை எடுத்தல் “ரொம்ப கஷ்டம்“ கையில் எண்ணை தடவிக் கொண்டு ஒரு கோணி ஊசி அல்லது ஊக்கு கொண்டு கீறி பிதுக்கி எடுக்க வேண்டும், ’வயிற்றில் ஒரு கீறு கீறி பிள்ளையை வெளியே எடுக்கும் மருத்துவரின் லாவகத்துடன்’ . புளி கொட்டை எடுக்கும் போது வீடெங்கும் புளியங்கொட்டை கறுப்பு முத்துக்களாய் சிதறி கிடக்கும்.
பிறகு மரத்துக்கும் புளிக்கும் தொப்புள் கொடி பந்தமாய் இணைக்கும்  நரம்பினை நீக்குதல். காம்பினை பிடித்துக் கொண்டு புளியினை இழுத்தால் பிரிந்து விடும். அந்தக் காம்பினைத் தூக்கி எறிந்து விடுவதில்லை. அந்த நரம்பு மண்டலம் எங்கள் வீட்டுக் குழம்புக்கு ஒரு மண்டலம் புளி வழங்கும்.
அடுத்து புளியங்கொட்டை அதை என்ன செய்வது? அது அடுத்த பதிவில். இதுவே சற்று நீண்டு விட்டது. இப்போதெல்லாம் பதிவு பதினைந்து வார்த்தைகள் தாண்டி விட்டாலே இளைய தலைமுறையினர் தாண்டி போய் விடுகிறார்கள். 

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...