Tuesday, May 27, 2025

From the Ashes -Saudi Arabian movie

From the Ashes -Saudi Arabian movie
கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் வெளியேற வழி இன்றி தீயில் கருகி இறந்து போன விஷயத்தை நாம் மறக்க முடியாது. அதுபோன்ற ஒரு தீ விபத்தை மையமாக கொண்டு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் அந்த நாட்டின் கலாச்சார கெடுபிடிகள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி சார்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் போன்ற பல விஷயங்களை பேசும் திரைப்படம் தான் இந்த From The Ashes. Secondary school 2300 இதுதான் அந்தப் பள்ளியின் பெயர். அது பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஒரு பள்ளி. கைகள் உட்பட முழு உடலையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் இதனை கண்காணிக்கவேறு கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் உள்ளே வந்த பிறகு வாட்ச் மேனால் பள்ளி வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பள்ளியில் படிப்பு நல்லொழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை மாதா மாதம் ஹானர் செய்கிறார்கள். அந்த அடிப்படையில் மாணவி அம்ரீன் சையத் ஒவ்வொரு மாதமும் அந்த பெருமையை பெறுகிறார். அதே பள்ளியில் பள்ளி முதல்வரின் பெண் ராணா இரண்டாமிடத்தில் இருந்து வருகிறார். பள்ளி முதல்வருக்கு அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பதற்கும் அம்ரின் போல சிறந்த மாணவி பட்டம் பெறுவதற்கும் ராணாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் . மேலும் பள்ளியின் முதல்வர் தனது கணவருடன் விவாகரத்து வழக்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். குழந்தை ராணாவை தந்தை இடம் காண்பிக்கவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் குறும்பு கேங் போல இந்த பள்ளியிலும் மூன்று பேர் இருக்கிறார்கள் ஹேமா, மோனா மற்றும் மிஷல். பதின்பருவ குழந்தைகளுக்கு விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடு என்பது பிரஷர் குக்கர் போன்றது தான் சமயம் வாய்க்கும் போது வெடித்து வெளியேறிவிடும். தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதுமே ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என தனித்தனியே பள்ளிகளை நடத்துவதில் உடன்பாடு கிடையாது. அனைத்து பள்ளிகளுக்கு ஆண் பெண் இருவரும் படிக்கக்கூடிய இருபாலர் பள்ளிகளாக இருப்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்துக்கு வழிவகுக்கும். சேர்ந்து படித்தாலே பேசினாலே இழுத்துக் கொண்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்கிற அதீத கற்பனை காரணமாக நிறையபேர் சின்னத்தம்பி பட அண்ணன்மார்கள் போலவே அலைகிறார்கள். ஒரு சுரங்க பாதையில் அழைத்துச் செல்வது போல குழந்தைகளை கைப்பிடித்து வேற்று ஆண்களின் பார்வை படாத வண்ணம் சிறுவயதிலிருந்தே பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என்று பார்த்து பார்த்து வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் போதோ அல்லது வேறு ஏதேனும் சூழலிலோ ஆண்களோடு கலந்து பேசும்போது அந்த உறவை எப்படி பேணுவது என்று அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததெல்லாம் அவர்களது அண்ணன்மார்கள் மாமன் மார்கள் என்ற நம்பகமான நெருங்கிய வட்ட ஆண்கள். எனவே வேற்று ஆண்கள் அவர்களை அணுகும் போது அவர்களைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருப்பதில்லை. படத்தில் வரும் இந்த பள்ளியிலும் கட்டுப்பாடுகள் கட்டுக்கடங்காமல் விதிக்கப்படுகின்றன ஆனாலும் கூட அந்த குழந்தைகள் சிகரெட் பிடித்தல் உள்ளிட்ட ஏராளமான விதிமீறல்களை பள்ளி வளாகத்திலேயே செய்கிறார்கள். மாணவிகளிடமிருந்து சூயிங்கமோ அல்லது சிகிரட்டோ பறிமுதல் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக மறைவிடம் ஏகி அதை துய்த்துப் பார்க்கத்தான் தலைபடுகிறார்கள். பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவனை திரும்பத் திரும்ப முன்னிருத்துவது என்பது அவனுடைய வகுப்பில் அவனை தனிமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பதை நான் பலமுறை கவனித்துள்ளேன். எனவே தேவைக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட மாணவர்களை அடிக்கடி முன்னிலைப்படுத்துதல் என்பது சரியாக இருக்காது. ஆசிரியர்களை பாராட்டும் போது கூட எந்த ஒரு தனி ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளையும் உயர்த்தி பிடித்து பாராட்டுவது ஆசிரியர்களிடம் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஒட்டுமொத்தமாக பொதுப்படையாகவே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அடிக்கடி சிறந்த மாணவிக்கான விருது வாங்குவதாலும் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாலும் இந்த படத்திலும் அப்படித்தான் அம்ரீன் சையது தனது வகுப்பில் பிற மாணவிகளின் பகையை சம்பாதித்துக் கொள்கிறாள். இந்தப் படத்தில் கவனித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண்களின் படங்களை ஆல்பமாக ஒட்டி வைத்து இருக்கிறார் பள்ளியின் துப்புரவு தொழிலாளி. அவரிடம் காசு அல்லது பொருள் கொடுத்து அந்த படங்களை பார்ப்பதை மாணவிகள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல் செய்கிறார்கள். இந்த விஷயம் எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. கதைக்கு வருவோம்: ஒரு நாள் அம்ரீன் தனது கணக்கு பாட புத்தகத்தை காணவில்லை என்று ஸ்டோர் ரூமில் இருந்து வேறு ஒரு பாட புத்தகம் எடுப்பதற்காக வருகிறாள். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பதட்டத்தில் தடுமாறி விழுந்து மயக்கமாகி விடுகிறாள். அந்த சமயத்தில் பள்ளியில் தீ பற்றி பரவுகிறது. மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேறி மெயின் கேட் போகிறார்கள் அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருக்கிறது. துறையின் அனுமதியை பெற்று தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்கிறார்கள். பள்ளிக் காவலாளி பள்ளியை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார். தீயுடன் புகையும் ஏராளமாக பரவுவதால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பள்ளியின் முதல்வர் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். பள்ளியில் துணை முதல்வர் மாணவிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற படாதபாடு படுகிறார். வெளியே கதவும் பூட்டப்பட்டு இருப்பதால் கையறு நிலையில் நிற்கிறார். அது சமயம் மாடியில் கதவை திறந்து விடலாம் என்று போராடி சாவியை கண்டுபிடித்து எடுத்து மாடி கதவை திறந்து மேல் மடியில் இருந்த மாணவிகளை மொட்டை மாடிக்கு அனுப்பி காப்பாற்றி விட்டு மூச்சுத் திணறால் உயிர் துறக்கிறார். ஸ்டோர் ரூமில் பூட்டப்பட்டு கிடந்த அம்ரீனும் இறந்து போகிறாள். தீ விபத்துக்கு காரணமானவர் யார் அம்ரினை ஸ்டோர் ரூமில் பூட்டியது யார் என்கிற கேள்விகளோடு படம் பயணித்து அதிர்ச்சிகரமான திருப்பத்தில் முடிவடைகிறது. இந்த படத்தில் தீ விபத்து காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார்கள் பார்க்கும் நமக்கே மூச்சு திணறல் ஏற்பட்டு விடும். மாணவிகள் தீ விபத்தில் இருந்து வெளியேறும் போது கூட அவர்களின் ஹிஜாப் மூடாமல் இருப்பது பற்றியே அங்கே இருக்கும் ஆண்கள் கவலைப்படுகிறார்கள். தீ காயத்தோடு அங்கங்கே அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மாணவிகள் அருகே அவர்களது தந்தையர் வந்து தனது தலையில் போர்த்தியிருக்கும் துணியை எடுத்து அந்த மாணவிகள் தலையில் போட்டு மூடுகிறார்கள். மத அடிப்படைவாதங்கள் என்பவை எவ்வளவு பிற்போக்குத்தனமானவை என்பதையும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை மிகக் கடுமையாக கடைப்பிடிப்பதற்கு மத அடிப்படை வாதமே காரணம் என்பதையும் இந்த படத்தில் காணலாம். படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

Wednesday, May 21, 2025

நானே “நானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!

சென்ற அத்தியாயத்தில் நானோ டெக்னாலஜியின் சாத்தியங்கள், நானோ மீட்டர் என்றால் எவ்வளவு சைஸ் என்று ஓவர் பில்டப் கொடுத்து ஒரு ட்ரெய்லர் ஓட்டி மெயின் பிச்சர் வந்து கிட்டு இருக்குன்னு சொல்லியிருந்தேன். இந்த கட்டுரையின் நோக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பவர்களையும் துரத்திப் பிடித்து அவர்களும் கேட்கும் வண்ணம் இதனை வழங்குவது தான். ஆகையால் அதிக அளவில் ஆழ்ந்த அறிவியல் விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த அத்தியாயத்திற்கான சோர்ஸ் கன்டென்ட் படித்து விட்டு பிளந்த வாயை இன்னும் என்னால் மூட இயலவில்லை. நானோ டெக்னாலஜியின் ஆரம்ப விதை பற்றியது இது. இந்த விதையை ஊன்றியவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பி.ஃபேயின்மான். விதையை ஊன்றியது 1959 டிசம்பர் மாதம். அமெரிக்காவில் இயற்பியல் விஞ்ஞானிகள் நிறைந்த அவை ஒன்றில் அவர் நிகழ்த்திய உரையில் அவர் அள்ளித் தெளித்த தகவல்கள் யாவும் பிரமிக்கத் தக்கவை. அவர் வாயில் இருந்து வந்த ஒரு வாக்கியத்தை வாங்கி வந்து ஆய்வு செய்து நாம் ஒரு பி.எச்டி பெற்று விடலாம். ஒரு பெரிய ஆய்வுக்கான சுரங்கத்தை திறந்து காண்பித்திருப்பார். ”நான் ஈ” படத்தில் சமந்தா பாத்தீங்களா? ”ஆமாம் கொள்ளை அழகு” ”ஆமாம் நீங்க அழக மட்டும் தான் பாத்தீங்க, நான் அறிவியல் மனப்பான்மையோடு அவர் செய்யும் வேலையை பார்த்தேன்” ”என்ன வேலை செய்யுறாங்க?” “பென்சில் முனையில் சிற்ப வேலை செய்வாங்க” ”இத நெறய பேரு செய்வாங்களே. செய்தித்தாளில் கூட பாத்துருக்கலாமே” ’நமக்கு சமந்தா செய்தது மட்டும் தான் மனசுல நிக்குது’ ஜோக்ஸ் அபார்ட். ஃபேயின்மான் அவர்களில் பேச்சின் தலைப்பு ”There is Plenty of Room at the Bottom”. (அங்கே அடியில் ஏராளமாக இடம் உள்ளது ம்ம்.. சரியா டிரான்ஸ்லேட் பண்ணிட்டேனா?) அவர் ஏதோ லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு ரூம் கேட்டு வந்தவர்களுக்கு சொன்ன பதில் போல உள்ளதா? சரி போகப் போக பெயர்க் காரணம் புரியும். “என்சைக்ளோபீடியாவின் 24 பாகங்கள் அடங்கிய புத்தகத்தை (அப்போது அது தான் ஆகப் பெரிய புத்தகம், இப்போது சி.டி வடிவில் சுருங்கி விட்டது) ஒரு குண்டூசி முனையில் எழுதினால் என்ன?” என்று கேள்வி கேட்டு அரங்கத்தை வியப்பில் ஆழ்த்துகிறார். குண்டூசி முனை ஒரு இஞ்ச் ல் பதினாறில் ஒரு பாகம் அதனை 25000 மடங்கு உருப் பெருக்கினால் அதன் பரப்பு என்சைக்ளோபீடியாவின் ஒட்டு மொத்த புத்தகங்களின் பக்கங்களின் பரப்பளவுக்கு சமம் என்று கணக்கிட்டு சொல்கிறார். அடுத்து உலக நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கணக்கிட்டு அதனை எழுதுவதற்கு ஒரு சூத்திரம் சொல்கிறார். அணுக்களை கொண்டு எழுதலாம் என்கிறார். எனவே ”கீழே இடம் உள்ளது என்பது அல்ல ஏராளமான இடம்(plenty of Room) உள்ளது என்பதே அவர் கூறியது” “ஏம்பா ’சொல்றது சுளுவு செய்யறது இன்னா கஸ்டம் தெரியுமா’ னு நம்ம பாரதியார் சொல்லிருக்காருப்பா” “அது திருவள்ளுவர்ங்க” அப்போது இருந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கொண்டு அவ்வாறு எழுதுவதும் சாத்தியம் படிப்பதும் சாத்தியம் என்று தொழில்நுட்ப ரீதியான விளக்கமும் அளித்துள்ளார். எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை ரிவர்சில் மாற்றி பயன் படுத்தி எழுதலாம், அதே மைக்ராஸ்கோப் கொண்டு படிக்கலாம் என்கிறார். ஏற்கனவே பெரிதாக இருப்பதை கஷ்டப்பட்டு சுருக்குவானேன், அப்புறம் அதை கஷ்டப்பட்டு படிப்பானேன்? ( “நான் ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போவனும்” னு வடிவேல் கேட்டது போல் கேட்காதீர்கள்.) இந்த மாதிரியான விசித்திர சிந்தனைதான் ஒரு புதிய அறிவியல் சாத்தியத்திற்கான கதவை திறந்து விட்டுள்ளது. அடுத்து அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறி பற்றியும் கூறத் தவறவில்லை. ”இப்போது கணினி இரண்டு அறைகளை அடைத்துக் கொண்டு ராட்சசன் போல படுத்துக் கிடக்கிறது. அதன் பாகங்களையும் இணைப்பு வொயர்களையும் 10 முதல் 100 அணுக்களின் அகலத்தில் செய்தால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும்” என்கிறார். (இந்த விஷயம் இன்றளவும் கூட சாத்தியப் படவில்லை) அதன் நினைவுத் திறனை ஒரு ”பிட்” ஐ 5 கன அணு அளவில் பதிவு செய்தால் குறுகிய இடத்தில் ஏராளமான தகவல்களை சேமிக்கலாம். (இதுவும் இன்றளவிலும் இந்த அளவு நுண்ணியதாக சாத்தியப் படவில்லை) அவரின் கற்பனை நிஜத்திலிருந்து லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் ஒரு ஃபிளாப்பி டிஸ்க்கையே (1.62 எம்.பி நினைவு திறன்) லாரியில் ஏற்றித் தான் கொண்டு வருவார்கள். ”விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் போட்டுக் கொண்டு ஊசியில் நூல் கோர்க்க முடியுமா?” ஆனால் இதைவிடவும் பலநூறு மடங்கு கஷ்டமானது தான் அவர் கூறிய விஷயங்கள். அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க இயந்திரங்களின் போதாமை பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அப்போது இருந்த எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் துல்லியத் தன்மையை 100 மடங்கு மேம்படுத்த வேண்டியுள்ளது என்கிறார். அப்படி மேம்படுத்தினால் பல உயிரியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்கான வாசல்களை அது திறந்துவிடும் என்றும் கூறுகிறார். அடுத்ததாக இன்னுமொரு விபரீத ஆலோசனையையும் வழங்குகிறார். ”swallow the surgeon” என்கிறார். ”ஆத்தாடி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை விழுங்குவதா?” அதே தான் அறுவை சிகிச்சை செய்யும் வல்லமை படைத்த ஒரு நானோ ரோபாட்டை (சென்ற வாரம் சொன்ன நானோபாட்) விழுங்கி வைத்தோமானால் அது உள்ளே சென்று ”ஆபரேஷன்” செய்து முடித்து “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு” என்று மெசேஜ் தட்டிவிடும். மேலே தரப்பட்ட கருத்துக்கள் யாவுமே கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே (Tip of an Iceberg). அவரது உரையின் பி.டி.எஃப் வடிவத்தை இங்கே(க்ளிக்குக)இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளுங்கள். இன்னும் சுவாரசியமான நானோ டெக்னாலஜி விஷயங்களுடன் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.

Monday, May 19, 2025

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!!

பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு பணி முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட்டனர். நான் மிச்ச மீதி தபால் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு பாட்டி வந்தார். வந்து அவரது இரண்டு பேரன்களின் (இரட்டையர்) மதிப்பெண்களை கேட்டார். மார்க் பற்றி பெரிய அளவில் அவருக்கு விவரம் தெரியாது என்றாலும் அவர்களது மார்க்கை (398&413)கூறி "உங்க பேர பசங்க நிறைய மார்க் வாங்கி இருக்காங்க, நல்லா படிச்சிருக்காங்க " என்று பாராட்டினேன். உடனே அவரது கண்ணில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே "அப்பா இல்லாத பசங்க சார் அவங்க நல்லா படிச்சிக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம்" என்றார். "கவலையே படாதீங்க பசங்க ஜோரா படிச்சி பெரிய வேலைக்கு போகப்போறாங்க பாருங்க" என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தேன் பொது தேர்வுகளில் எடுக்கப்படும் 100% தேர்ச்சி மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் ஒருவரும் விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதச் செய்து அவரவர் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெற வைப்பது என்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும். 2018 இல் நான் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் சவாலாக விளங்கிய செட் என்றால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு எழுதிய மாணவர்கள்தான். அந்த வகுப்புக்கே நாங்கள் செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பும் அளவுக்கு பெரிய அளவில் ரகளை செய்து விட்டார்கள். அடுத்த நாளில் பிரச்சனையின் மையப் புள்ளியாக இருந்த நான்கைந்து மாணவர்களை தனியே அழைத்து கண்டித்து அவர்களிடம் ஒரு மணி நேரம் அளவுக்கு பேசி, ஆசிரியர்கள் அனைவரிடமும் தாங்கள் செய்தது தவறு என்று வருத்தத்தை தெரிவிக்கச் செய்து அதன் பிறகு ஆசிரியர்கள் அனைவரும் "இந்த ஒரு முறை இவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம் சார்" என்று கூறி அவர்களாகவே அந்த மாணவர்களை மீண்டும் வகுப்பில் அனுமதித்தார்கள். பத்தாம் வகுப்பு வந்த பிறகும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் மீண்டும் ஏராளமான பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டும் பள்ளி பொருட்களை சேதம் செய்து கொண்டும் இருந்தனர். அதிலும் ஒரு மாணவனை 15 நாட்கள் சஸ்பென்ட் செய்து ஒரு பெரிய பிரச்சனையை தவிர்த்தோம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய புரிதலும் அன்பும் அதிகமாகும் வகுப்புகளில் அற்புதங்கள் நடக்கும். எல்லா மாணவர்களையும் எல்லா ஆசிரியர்களும் பெரும்பாலும் நேசித்தாலும் சில சமயங்களில் மிகப்பெரிய அளவுபாசப்பிணைப்பு ஏற்படும் செட்டுகள் அமையும். அதுபோன்ற சமயங்களில் அவர்களின் கல்வி அடைவு மிகப்பெரிய உச்சத்தை தொடும். எனக்கு அது போல் இரண்டு மூன்று செட்டுகள் அமைந்தன. இந்த மாணவர்கள் செய்த காரியங்களால் ஆசிரியர்கள் & மாணவர்கள் இடையிலான பிணைப்பு குறைந்து போனால் அது கல்வி அடைவுகளிலும் எதிரொலிக்குமே என்று மிகப்பெரிய வருத்தத்தோடு தான் இருந்தேன். ஆனால் அவ்வாறு நடைபெறாதவாறு ஆசிரியர் மாணவர் உறவு மிகச் சுமுகமான அளவில் இருக்குமாறு பராமரித்தது நிச்சயமாக எங்களுடைய ஆசிரிய பெருமக்கள் தான். தொடர்ந்து மாணவர்களின் சிறு சிறு முன்னேற்றங்களை உற்சாகப்படுத்தியும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு பெரிய வேலைகளை சிறுசிறு வேலைகளாக உடைத்து தருவது என்று பல விஷயங்களை தொடர்ந்து முயன்ற வண்ணம் இருந்தனர். ஒரு மாணவிக்கு அவ்வப்போது வலிப்பு வந்துவிடும் அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களிடம் அந்த மாணவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அவருக்கு பெரிய வேலைகள் எல்லாம் வழங்க வேண்டாம் படிப்பை விட அவரது உடல் நலன் ரொம்ப முக்கியம் என்று கூறியிருந்தேன். ஆனால் ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி இரவு நேரத்தில் கூட அவரிடம் தொடர்ந்து பேசி வேலை கொடுத்து whatsapp மூலமாக வாங்கி மதிப்பீடு செய்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்பதை கேள்விப்பட்ட போது உள்ளபடியே நான் கலங்கிப் போனேன். அதுபோல் வெளியூரில் இருந்து வந்து உறவினர் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது ஊருக்கு சென்றால் திரும்பி வர முரண்டு பிடிப்பார்கள். ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பள்ளிக்கு வருவது மற்ற நாட்களில் அவனது தந்தை தரும் பேருந்து கட்டணத்தை எடுத்துக் கொண்டு எங்காவது ஊர் சுற்றிவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு சென்று விடுவது என்று இருந்தான். அவனை எத்தனை முறை அழைத்து பேசினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனது தந்தையை அழைத்து அவரிடமும் பேசி பார்த்தோம் .அவனது தந்தையோ அவனை கண்டிக்கும் அளவுக்கு இல்லை. அவன் செய்த தவறுகளில் உச்சத்திலும் உச்சமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில தமிழ் தேர்வுக்கு வரவே இல்லை. அதுபோல் தேர்வு இடைப்பட்ட நாட்களில் உள்ள பயிற்சி வகுப்புகளுக்கும் வரவில்லை. அனைத்து ஆசிரியர்கள் தொலைபேசி எண்களையும் பிளாக் லிஸ்டில் வைத்திருந்தான். ஆசிரியர்கள் அவனுக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமாக வாய்ஸ் நோட் அனுப்பியும் கூட அதை அவன் ஓபன் செய்து கேட்டிருந்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன் பிறகு அவர்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி அவனது பெற்றோரையும் அவனையும் பள்ளிக்கு அழைத்து நீங்களே பேசி அவனை பரிச்சை எழுதும் அளவுக்கு சரி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இந்த திட்டம் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியது. மீதி தேர்வுகள் அனைத்தையும் எழுதி 70 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலும் கூட தேர்வுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் கூட அவனை அழைத்து அவனிடம் பேசி உற்சாகப்படுத்தி தேர்ச்சி அடையும் அளவுக்கு அவன் இருக்கிறானா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க காலை மாலை மற்றும் சனிக்கிழமைகள் என அனைத்து நாட்களிலும் வேலைகளை பிரித்துக் கொண்டு செய்த ஆசிரியர்களை எண்ணி நான் வியப்படைந்தேன். நானே கூட சில சமயங்களில் "டீச்சர் இருந்த வாரம் ரெஸ்ட் எடுங்களேன்" என்று கூறியும் கூட அவர்கள் "வேண்டாம் சார் கொஞ்சம் வேலை இருக்கு" என்பார்கள் உள்ளபடியே இந்த செட்டு மாணவர்கள் நினைத்து நான் பயந்தபடி இருந்தாலும் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் பேரன்பையும் பெருங்கருணையையும் காண்பித்து அவர்களை தங்கள் வழிககு கொண்டு வந்து 100 விழுக்காடு தேர்ச்சியை எட்ட வைத்தனர். ஆசிரியர்களின் தொடர் உழைப்புக்கு அங்கீகாரமாக பள்ளி சராசரி மதிப்பெண் 360 என்கிற உச்சத்தை இந்த ஆண்டு எட்டியது. எங்கள் கிராம மக்கள் மத்தியில் எங்கள் பள்ளி மீது பேர் அபிமானம் இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பெரும் உழைப்பு தான்!! பத்தாம் வகுப்பு என்று இல்லாமல் மற்ற வகுப்புகளிலும் அடிப்படை திறன்கள், கையெழுத்து, கல்வி இணை செயல்பாடுகள் கலை இலக்கியம் விளையாட்டு என்று மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்க அவர்கள் காட்டும் ஆர்வமும் உழைப்பும் மிகப் பெரியது. அதுபோல ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது வகுப்பில் உள்ள அனைத்து பெற்றோரிடமும் தொடர்ந்து நேரிலும் தொலைபேசியிலும் பேசி நட்புறவோடு சம்பந்தப்பட்ட மாணவனின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். எங்கள் பள்ளி ஆசிரியர்களில் குழு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பது தான். அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!

சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...