Friday, May 3, 2019

“கிரீன் புக்” – அமெரிக்க நிறவெறியின் கேட்டலாக்


“கிரீன் புக்” – அமெரிக்க நிறவெறியின் கேட்டலாக்

“டோனி லிப்” என்பவர் பிரபல பாரில் பவுன்சர் ஆக வேலை பார்க்கிறார். எந்த பிரச்சனை ன்னாலும் முஷ்டியை முறுக்கிக் கொண்டு போவார். பெரிய குடும்பம். பார் திடீரென மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாக சொல்கிறார்கள். அந்த மூன்று மாதம் குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கிறார். அடுத்தநாளே வாட்ச் 50 டாலருக்கு அடகுக்கு போகிறது. ஆசாமி நிரம்ப நிற வெறி உடையவர். வீட்டிற்கு மின்பழுது நீக்க வந்த பணியாளர்களுக்கு டோனிலிப் ன் மனைவி க்ளாசில் ஜுஸ் கொடுக்கிறார். பணியாளர்கள் கருப்பினத்தவர். டோனி லிப் அந்த க்ளாசினை அருவெறுப்போடு எடுத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறார். – இது தான் டோனி லிப்.
”டான் ஷெர்லி” அமெரிக்காவின் மிகப்பெரிய ப்யானோ இசைக் கலைஞர். கருப்பினத்தவர். இசையால் கிடைத்த கட்டற்ற வருமானம். நல்ல வசதியான மாளிகையில் மகாராஜா போல வாழ்ந்து வருகிறார். கம்மங்கூழ் கொடுத்தால் கூட மடியில் டவல் போட்டுக் கொண்டு ஃபோர்க் கரண்டி எல்லாம் எடுத்துக் கொண்டு தான் அமர்வார். அவ்வளவு டீசன்ட். நடத்தையும் அவ்வாறே. வீணாக வம்புக்கு  போக மாட்டார். எதையும் டிப்ளமேட்டிக்காக அணுகி சுமுகமாக முடிக்க வேண்டும் என எண்ணுபவர்.
“கிரீன் புக்” – இந்தப் புத்தகம் நிற வெறி உச்சத்தில் இருந்த 1960 களில் கருப்பினத்தவர் எங்கே பயணம் சென்றாலும் கையோடு எடுத்துக் கொண்டு செல்லும் புத்தகம். அதில் கருப்பினத்தவரால் நடத்தப்படும் உணவு விடுதிகள் தங்கும் விடுதிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும். மற்ற இடங்கள் வெள்ளைக் காரர்களுக்கானது. பிரச்சனையின்றி எங்கேயும் போய் வர வேண்டுமானால் “கிரீன் புக்” கை வசம் இருக்க வேண்டும்.
இப்போ மேட்டருக்கு வருவோம். இந்தப் படம் உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எடுக்கப் பட்டது. 1962 ல் கதை நடப்பதாக காட்டப் படுகிறது.
வேலையின்றி தவிக்கும் டோனி லிப். நிறவெறி மிகுந்த தெற்கு மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஷெர்லிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இரண்டு மாத சுற்றுப் பிரயாணமாக காரில் சென்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முடிக்க திட்டமிடுகிறார். அதனால் பாடி கார்ட் கம் டிரைவராக பணியாற்ற ஆள் தேடுகிறார். 
இன்டெர்வியுவுக்கு வரும் டோனிலிப் காக்க வைக்கப் பட்டு உள்ளே அனுப்ப படுகிறார். அங்கே அரண்மனை போன்ற ஒரு வீட்டில் மகாராஜா போல ஷெர்லி வந்து அமர்கிறார். “ஒரு கருப்பனுக்கு இவ்வளவு பவுசா” என்கிற அலட்சிய மனப்பான்மையோடு டோனி லிப் அவரைப் பார்க்கிறார். அவரது வேலையின் தன்மை மற்றும் தாராள சம்பளம் குறித்து பேசுகிறார். ஒரு புறம் ஒரு கருப்பன் கிட்ட வேலை செய்வதா என்கிற அவரது நிறவெறி மனது அரித்தாலும் அவரது குடும்பத் தேவை சார் நெருக்கடிகள் அவரை சம்மதிக்க வைக்கிறது.
இப்படித்தான் டோனி லிப் ம் ஷெர்லியும் முதலில் இணைகிறார்கள். பயணம் தொடங்குகிறது. ஷெர்லியின் முதல் நிகழ்ச்சியிலேயே மனதை பரிகொடுத்து அவர் மீது மரியாதையும் பாசமும் வருகிறது டோனிக்கு. என்னதான் விலையுயர்ந்த ஆடைகள் என மிடுக்கான தோற்றத்துடன் இருந்தாலும் அவரது நிறம் அவரை அவ்வப்போது அவமானத்துக்கு உள்ளாக்குகிறது. அம்மாதிரியான தருணங்களில் டோனி இடையில் புகுந்து காப்பாற்றுகிறார்.
ஒரு மழை இரவில் போலீஸ் இவர்களது காரை வழிமறிக்கிறது. கொட்டும் மழையில் டோனி இறங்கி ஆவணங்களை காண்பித்துக் கொண்டு இருக்கிறார். உள்ளே ஷெர்லியை பார்த்ததும் போலீஸ் காரர் இறங்கச் சொல்கிறார். ரெண்டு வெள்ளைக் காரனுவ மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம் ஒரு கருப்பு ஆளு உள்ளே காரில் அமர்ந்திருப்பதா என்று கோபமுறுகிறார். கோபக்கார டோனி போலீஸ் மேலேயே கை வைக்க இருவரும் லாக்கப் ல் வைக்கப் படுகிறார்கள். போலீஸ் காரர்களிடம் கைதிகளின் உரிமைகள் பற்றி வாக்குவாதம் செய்து ஒரு போன் செய்ய அனுமதி பெற்று போன் செய்கிறார். பிறகு கால் வருகிறது. போலீஸ் அதிகாரி சப்த நாடியும் ஒடுங்கிப் போய் பேசுகிறார். அவர்கள் வெளியே விடப்படுகிறார்கள். “ஆமாம், யார்கிட்ட பேசுனீங்க?” என்று டோனி கேட்க “அபிராகாம் லிங்கனிடம் ” என்று அமைதியாக பதிலளிக்கிறார் ஷெர்லி.
கிருஸ்மஸ் நெருங்குகிறது. பயணம் செய்யும் சாலைகளில் எல்லாம் பனித் திவலைகள் மழை போல பொழிகிறது. இறுதியாக ஒரு நிகழ்ச்சி அது முடிந்த பின்னர் ஊருக்கு கிளம்பவேண்டும். ராஜமரியாதையோடு வரவேற்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். வரவேற்று ஓய்வெடுக்க ஒரு கேவலமான அழுக்கு அறை தரப்படுகிறது. சரி பரவாயில்லை என்று அங்கேயே உடை மாற்றிக் கொண்டு சாப்பிட வருகிறார். அங்கே கருப்பர்கள் அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது என்று மறுக்கிறார்கள். ” இந்த நிகழ்ச்சியின் நாயகன் அவர். அவர் நிமித்தமாகத் தான் இந்த ஹோட்டலில் இத்தனை பேர் சாப்பிட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள் அவருக்கே நீங்கள் அனுமதி மறுக்கிறீர்கள்” என்று டோனி கேட்கிறார். “இந்த ஹோட்டலுக்குன்னு ஒரு பாரம்பரியம் பழக்க வழக்கம் இருக்கு அதை எவர் பொருட்டும் மாற்ற இயலாது புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார் விடுதி சிப்பந்தி. பின்னர் இருவரும் அருகில் உள்ள கருப்பர்களுக்கான உணவு விடுதியில் உணவு உண்டு அங்கேயே ஒரு அருமையான துள்ளிசைக் கச்சேரி நடத்தி விட்டு ஒப்புக் கொண்ட அந்த நிகழ்ச்சியை கேன்சல் செய்து விட்டு கிளம்பி விடுகிறார்கள்.
மற்றுமொரு சம்பவம்- ஒரு பெரிய துணிக்கடையில் விலையுயர்ந்த ஆடை வாங்க செல்கிறார்கள். விலை டிசைன் எல்லாவற்றையும் டோனி பார்த்து எடுத்து விடுகிறார். “அங்கே தான் ட்ரயல் ரூம் இருக்கு சென்று போட்டு பாருங்கள்” என்கிறார் கடைக்காரர். ஆனால் உடை ஷெர்லிக்கு என்று தெரிந்த அடுத்த வினாடி உடையை பிடுங்கிக் கொண்டு  “நீங்க எல்லாம் துணியை ட்ரயல் பார்க்க கூடாது” என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விடுகிறார்.
இவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுற டோனிக்கு லெட்டர் ஒழுங்கா எழுத வரலையா என்று நான் வாயைப் பொளந்தேன். அப்புறம் தான் தோன்றியது அவன் ஒரு அமெரிக்க அன் எஜுக்கேட்டட். டோனி தனது அன்பு மனைவிக்கு கடிதங்களை கவிதையாய் எழுத ஷெர்லி உதவுகிறார். டோனி தனது மனைவிக்கு எழுதும் அன்பு ஒழுகும் கடிதங்கள் சார்ந்த காட்சிகள் நல்ல கவிதை.
வசதியே இல்லாத வெள்ளையர் டோனி பெரிய குடும்பமாக வாழ்கிறார். அவ்வளவு பெரிய பணக்கார ஷெர்லி தனி மரமாக இருக்கிறார். “தயக்கத்தை வென்று முதலில் பேசி உறவுகளை சீர் செய்யப் பயந்து பயந்து தனி மரமாக வாழும் மனிதர்கள் இந்த உலகில் நிரம்ப உள்ளனர்” என்று அருமையான தத்துவத்தை போகிற போக்கில் விட்டெரிகிறார் டோனி.
கிருஸ்மஸ் இரவில் எப்படியாவது டோனியை குடும்பத்தோடு சேர்த்து விட வேண்டும் என களைப்பாக இருக்கும் டோனிக்கு ஓய்வு கொடுத்து விட்டு அந்த பனி கொட்டும் இரவில் தானே காரோட்டி கிருஸ்மஸ் பண்டிகையை  குடும்பத்தோடு டோனி கொண்டாடும் படி செய்து விட்டு தனது கூட்டிற்கு செல்லும் ஷெர்லி, தனிமையின் புழுக்கமும் அமைதியின் நாராச இரைச்சலும் மனதை உலுக்கவே அழையா விருந்தாளியாய் டோனியின் வெள்ளைக் குடும்பத்தின் கதவை தட்டுகிறார். டோனியின் மனைவி அவரை ஆரத் தழுவி வரவேற்கிறாள் என்பதோடு படம் முடிகிறது.
இங்கே இந்தியாவில் சாதி தெரியாத வரைக்கும் என்ன வேணும்னாலும் பெற இயலும். சாதியைக் கூறும் வெளிப்படையான அடையாளங்கள் இல்லை. ஆனால் தங்கள் தோற்றமும் நிறமுமே வேற்றுமைக்கு காரணமாக இருக்கும் போது அமெரிக்க வாழ் கருப்பர்கள் எப்படி தங்களின் அடையாளத்தை மறைக்க இயலும். எனவே இங்கு நிலவிய சாதியக் கொடுமைகளைக் காட்டிலும் அதிக இன்னல்களை அவர்கள் அனுபவித்திருக்கக் கூடும். ஒரு வெள்ளையன் பேருந்தில் நிற்கும் போது கருப்பர்கள் அமர இயலாது. அவர்களின் இடத்தை வெள்ளையர்களுக்கு விட்டுத் தர வேண்டும். இந்த இடத்தில் தானே மார்ட்டின் லூதர் கிங் ன் போராட்டத்திற்கான பொறி கிளம்பியது.
இந்த “கிரீன் புக்” என்பதற்கான விளக்கத்தை அறிந்த போது பார்சி விடுதியில் இருந்து நள்ளிரவில் அம்பேத்கர் வெளியேற்றப் பட்ட சம்பவம் தான் எனக்கு ஞாபகம் வந்தது.


No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...