Sunday, November 15, 2020

புத்தகம் – நகர்துஞ்சும் நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த எட்டு தஸ்தாவேஜ்கள்

 

புத்தகம் – நகர்துஞ்சும் நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த எட்டு தஸ்தாவேஜ்கள்



வகைமை – சிறுகதைத் தொகுப்பு (ஆக்சுவலா ஒவ்வொன்றும் நெடுங்கதை அல்லது குறுநாவல்)

ஆசிரியர் – பாவெல் சக்தி

பாவெல் சக்தி அவர்கள் ஒரு இளம் வழக்கறிஞர். அவரது பெயரின் முன்னொட்டு “பாவெல்“ மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலின் நாயகன் பெயர். இதில் இருந்தே அவரைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்.

பின் நவீனத்துவமும் அடையாள அரசியலும் மற்றும் என்ஜிஓ க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம் என்ற இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட நிலையில் இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

ஆழ்ந்த செவ்வியல் தன்மையுடனான ஆனால் வெகு சுவாரசியமான நடையில் எழுதப்பட்ட எட்டு நெடுங்கதைகளையும் சட்டென்று நுணிப்புல் மேய்வது போல படித்துவிட்டு வைத்துவிட இயலாது. ஒரு நல்ல இசையை கண்களை மூடிக்கொண்டு ஒரு தவம் போல கேட்டு மகிழ்வோம் அல்லவா அது போல ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து வாசிக்க வேண்டி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு கதை என்று அவ்வப்போது வாசித்து இன்று தான் முடித்தேன்.

சிறுகதையின் தலைப்பு நிச்சயமாக தனித்துவம் வாய்ந்த ஒன்றுதான். இவ்வளவு நீளமான கோனார் நோட்ஸ் உதவியுடன் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் குறுந்தொகைப் பாடல் வரி போன்ற ஒரு தலைப்பு. நானே ஒரு நான்கு கதைகள் படித்த பின்புதான் இந்த தலைப்பு எனக்கு மனப்பாடம் ஆனது. ஆனாலும் கூட தட்டச்சு செய்த பின்பு புத்தகத்தை எடுத்து தலைப்பை சரிபார்த்துக் கொண்டேன்.

“செங்கோட்டு யானைகள்” – ரத்தம் தோய்ந்த தந்தங்களைக் கொண்ட போர்க்கள யானைகள் – பகலில் போர்க்களமாக காட்சி தரும் கோர்ட் கட்டிடங்கள்

நகர்துஞ்சும் நல்யாமத்தில் – ஊர் உறங்கும் இரவு வேளையில்

இரவு வேளையில் அந்தக் கோர்ட் கட்டிடங்கள் அங்கே பகலில் நடந்த வழக்குகள் பற்றி சிந்திப்பது போல அர்த்தம் தரவல்ல ஒரு அழகிய கற்பனையைக் கொண்ட தலைப்பு.

புத்தகத்தில் எட்டு நெடுங்கதைகளும் அங்கே கோர்ட்டில் நடந்தேறிய வழக்குகளைப் பற்றியது தான்.

முதலாவது கதை பட்டாளத்தார் வழக்கு பற்றியது. என்ன வழக்கு? இருக்கும் வீட்டைப் பிடிங்கிக் கொண்டு பட்டாளத்தாரையும் அவரது மனைவியையும் துரத்தியடித்து விடுகிறான் மகன். மகனுடன் நல்லுறவில் இருந்த வேளையில் அவனுக்கு சொத்தை எழுதி வைத்திருக்கிறார் பட்டாளத்தார். மனைவிக்கு கேன்சர் வைத்தியம் பார்க்க சொத்து பத்திரத்தை வைத்து கடன் வாங்கி செலவழித்து விடுகிறார். நோயுற்ற மனைவியோடு வீடு திரும்பும் வேளையில் பிள்ளைக்கு விஷயம் தெரிந்து வீட்டை விட்டு துரத்தியடித்து விடுகிறான். அவன் மீது வழக்கு தொடுக்கிறார் பட்டாளத்தார். சிவில் வழக்குகள் சட்டென்று முடியக்கூடியதா என்ன?

கதை பட்டாளத்தார் இறந்து கிடக்கும் நிலையில் துவங்கி பின்னோக்கி செல்கிறது. கதைகளில் பல இடங்களில் கண்களில் களுக் கென்று நீர்க் கோர்த்துக் கொண்டது. பிள்ளைகளை நம்பலாம் ஆனால் பிற்கால பாதுகாப்புக்கு கைவசம் ஏதாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்பு உணர்வு படிக்கும் அனைவருக்கும் ஏற்படும் என்பது திண்ணம்.

இரண்டாவது கதை “விஜயன் பகை பாவம் அச்சம் பழியென நான்கும்” என்கிற கதை.

நண்பனின் மனைவியை ஆசைநாயகி ஆக்கிக் கொள்ள  நண்பனை போட்டுத்தள்ளிவிடும் ஒருத்தனின் வழக்கு. கணவன் கொலையுண்ட பின்பு அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த நெடுங்கதை நண்பனை கொலை செய்யும் முன் அதன் பின் ஒருவனின் எண்ண ஓட்டத்தையும் உளவியலையும் அழகாக எழுத்தில் வார்த்துள்ளார் பாவெல்.

“யாம்பில மக்கா இப்படி செஞ்ச? ஒனக்கும் எம் பொண்டாட்டிக்கும் தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சும் ஒனகிட்ட எதாவது கேட்ருக்கனாடே? இப்ப கூட அவள நீ வச்சிக்கோ. எங்கேயாவது போய்றன்….“ என்று அவன் கெஞ்சும் அந்த இடம் எனது இரவுத் தூக்கத்தை காவு வாங்கியது.

அமீரின் நாட்குறிப்பு கொலைகளத்து மாலை  கதை ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் ல் இழப்பீடு பெற்றுத் தர வேண்டிய வழக்கில் தொடங்கும் கதை அந்த ஆக்சிடெண்ட் ஆன பையனின் சூழல் அவனது காதலி அவனது குடும்ப நிலை என பல கோணங்களில் அலசுகிறது. நாம் நாள் தோறும் சாலைகளில் விபத்துகளை பார்த்து இதுவும் இன்னொன்று தானே என்று கடந்து போய்விடுகிறோம். இந்தக் கதையை வாசித்த பின்பு நமது மனம் அவர்களுக்கா இனியேனும் கசிந்து உருகும். இதில் கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் ஆகியவை இலக்கியத் தரத்துடன் பதிவு செய்யப் பட்டுள்ளது. “இந்தப் பாதங்கள் மண்மீது நடக்க வேண்டியவை அல்ல மலர்களின் மீது” ஆமாம், கதையில் வரும் காதலில் இதயம் படத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.

”பொச்சுக்கிளி -இன்முகம் காணும் அளவு” இந்தக் கதை ஒரு கூட்டுக்கதை எனலாம். கோபல்ல கிராமம் நாவலில் கி.ரா அவர்கள் அந்த கிராமத்தில் உள்ள நபர்களில் விசித்திரமான பட்டப் பெயர்களின் பெயர்க்காரணங்களைக் கூற இரண்டு அத்தியாயங்களை ஒதுக்கி இருப்பார். அது போல அடை மொழியோடு வலம் வரும் பெட்டி கேஸ் ஆட்களின் அடைமொழிகளை ஆர்வம் தாங்காத நீதிபதிக்கு ஒரு கான்ஸ்டபிள் சொல்வது போல அமைந்திருக்கும். முக்கியமா அந்த “சாம்பார் வாளி“ கதையை படித்த பின்பு தனியாக ஒரு ஐந்து நிமிடம் சிரித்தேன்.

“மூன்று பெண்கள்- செய்தக்க செய்யாமை யானும் கெடும்” மாமியார், மருமகள் மற்றும் பேத்தி தான் அந்த மூன்று பெண்கள். அவர்களின் பார்வையில் ஒரு டைவர்ஸ் கேஸ் தற்கொலை கேஸாக மாறிவிடுமோ என்று அஞ்சும் வேளையில் அதிர்ச்சிகரமான திருப்பமாக அது கோர்ட்ரூம் கொலை கேஸாக மாறிவிடுகிறது.

“நிழல் தன்னை அடி விட்டு நீங்காது” இந்த வழக்கு சாலையில் வழி மறிக்கும் போலீஸ் நிறுத்தாமல் போன வண்டியை வெறிகொண்டு உதைக்கப் போய் வண்டியில் அமர்ந்திருந்த சிறுகுழந்தை விபத்துக்குள்ளாகிறது. அதற்காக பழிவாங்கும் தந்தை கொலை செய்வதற்கு பதிலாக ஊனத்தை ஏற்படுத்தவல்ல ஒரு விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றுவதாக கூறப்பட்டுள்ளது. விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒருவனின் மனவோட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையில் குழந்தை கேட்கும் கேள்விகள் சுவாரசியம் கலந்த அழகு.

“சோபியா-மறத்தலை விடக் கொடிது வேறில்லை“

திருமணம் செய்துகொண்ட மனைவியை பலாத்காரம் செய்வதால் வந்த டைவர்ஸ் கேஸ் ஒன்றைப் பேசி முடித்து அதன் பிறகு ஒரு பிரபலமான மூன்று கொலை வழக்கில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான வேலைக்காரப் பெண்ணின் பரிதாப நிலை பற்றி பேசுகிறது. வெகுஜன ஈர்ப்புக்கு உள்ளான நிர்பயா வழக்கையும் அரசால் அலட்சியமாக கையாளப்பட்ட ஆசிஃபா வழக்கையும் “இந்த மாதிரி கேஸ பெரிசு படுத்துவதால் நாட்டோட டூரிஸம் பாதிக்கும்“ என்று பேசிய அருண்ஜேட்லி என உருக்கமான பல விஷயங்களை பேசி நமது மனதை கனமாக்கும் கதை

“நான்கு பேர் இரண்டு சம்பவங்கள்“ இந்தக் கதை சற்று நையாண்டித் தொனியில் எழுதப்பட்டுள்ளது. “போர் வரட்டும்“ என ரஜினி போல தள்ளாத வயது வரை “புரட்சி வரட்டும்“ எனக் காத்திருக்கும் கம்யுனிஸ்ட்டுகளை நையாண்டி செய்துள்ளார். பணமதிப்பிழப்பால் புஸ்வானம் ஆகிப்போன ஒரு கடத்தல் வழக்கு பற்றிய நகைச்சுவை நடையிலான கதை இது.

“நாரோயில்“ காரவங்களோட முகநூல் சகவாசம் மற்றும் பாபநாசம் படம் எல்லாம் பார்த்ததால் பாவெல் உடைய “நாரோயில்“ மணம் கமழும் அழகான உரையாடல்களை ரசிக்க முடிந்தது. அதற்காக டிஷ்னரியெல்லாம் வேண்டியதில்லை. போகப் போக உங்களுக்கே புரிந்து விடும்.

சற்றேரக் குறைய 400 பக்கங்களை எட்டும் புத்தகம் ஆனாலும் கூட சுவாரசியமாக ஆரம்பித்து முடிந்தது

வாய்ப்புள்ள நண்பர்கள் வாங்கி வாசியுங்கள். எதிர் வெளியீடாக வந்துள்ளது. கிண்டிலில் இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

 

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...