Thursday, January 28, 2021

தி கிரேட் இண்டியன் கிச்சன் மலையாளப் படம் குறித்த எனது பார்வை

 தி கிரேட் இண்டியன் கிச்சன்

வாட்சாப்பில் வலம் வருகிற பிரபலமான மீம்ஸ் களில் ஒன்று, மிக்சியை போட்டு குண்டான பெண்ணையும், அம்மியை போட்டு ஒல்லியான பெண்ணையும் படமாக போட்டிருப்பார்கள். பழமையை கைவிட்டதால் இப்படி ஆகிவிட்டார்களாம். நீங்க


ள் இந்த மீம்ஸ் ஐ வரிந்து கட்டிக் கொண்டு ஷேர் செய்தவர் எனில் “கைய கொடுங்க சார்” உங்களுக்குள்ளும் ஒரு கலாச்சார காவலர் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டுள்ளார்.

இந்த கலாச்சார காவலர் அவதாரம் எடுக்கும் ஆட்கள் எல்லோரும் பெண்களுக்குத்தான் நிறைய பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்தவண்ணம் உள்ளனர். இதுவே ஒரு சைக்கிளை போட்டு ஒல்லியான ஆணையும் பைக்கையோ அல்லது காரையோ போட்டு குண்டான ஆணையும்  வரைந்து பாரம்பரியத்தை காக்க அறைகூவல் விடுப்பார்களா?

துப்பட்டா போடுங்க தோழி என்று துப்புக்கெட்டு அலையும் கூட்டம் என்றைக்காவது சிக்ஸ் பேக் வைத்திருப்பவன் கூட கமுக்கமாக அடக்கி வாசிக்கும் போது ஃபேமிலி பேக்கைத் தள்ளிக்கொண்டு நிற்கும் குருக்களிடம் போய் ’துப்பட்டா வேண்டாம் துண்டையாவது போட்டு கலாச்சாரத்தை காப்பாத்துங்க தோழர்’ என்று கூறியது உண்டா?

சோ, நம்ம கலாச்சார கவலை எல்லாம் நைசாக எல்லா வேலைகளையும் பெண்களிடம் தள்ளிவிட்டு ஹாயாக குந்திக்கொண்டு சொகுசு காண்பதற்கு மட்டும் தான் என்பது தான் உண்மை. அவர்களைக் கட்டுப் படுத்துவதற்கென்றே ஆகம விதிகளில் ஆகப்பெரிய பட்டியலே உண்டு. அதையெல்லாம் காட்டிவிட வேண்டியதுதான். இது அனைத்து மத அடிப்படை வாதங்களுக்கும் பொருந்தும். (நீங்க இந்துக்களை மட்டும் தான் குறை சொல்வீங்களா என்று கமெண்ட வேண்டாம்.) நான் அறிந்தவரை அனைத்து மத அடிப்படை வாதங்களும் பாலின சமத்துவத்திற்கு எதிரானவையே.

காலை எழுந்தவுடன் தெய்வத்தையோ அல்லது கொழுநனையோ தொழுது (ஆமாம், பின்ன வள்ளுவர் கூட “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்றல்லவா கூறியுள்ளார்) ”சம்பவம்” நடந்திருந்தால் குளித்து முழுகி கோலம் போட்டு, கோமாதா இருந்தால் பால் கறந்து தேனீர் போட்டுக் கொண்டு வந்து வீட்டினரை எழுப்பி விட வேண்டும். (பாரதிதாசன் கூட குடும்ப விளக்கில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்)

அடுத்ததாக கணவன் அலுவலகம் செல்பவனாக இருந்தால், காலை சிற்றுண்டி மற்றும் மதியப் பேருண்டி இரண்டையும் துரிதகதியில் ரெடிபண்ணி அனுப்ப வேண்டும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றி பேர் எடுக்க வேண்டுமானால், கணவனின் அன்றைய உடையை தேர்வு செய்து இஸ்திரி செய்து மாட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு கிச்சனில் இருக்கும் பயன்படுத்திய பாத்திர பண்டங்களை கழுவ வேண்டும். அப்புறம் துணிமணி துவைத்தல், வீடு பெருக்கி துடைத்தல் அப்புறம் நேரம் வாய்த்தால் கொஞ்சம் ஓய்வு அப்படியே மாலை சிற்றுண்டி இரவு பேருண்டி இடையிடையே தேனீர் கொட்டை வடிநீர் இத்தியாதி.

வேலைக்குச் செல்லும் கணவன் வீட்டில் இருக்கும் மனைவி எனில் நிச்சயமாக மேலே இருக்கும் வேலைகளில் எழுபத்தி ஐந்து விழுக்காடு செய்து தான் ஆகவேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைக்கத்தான் மிக்சி, கிரைண்டர் குக்கர் என்று பல சாதனங்கள் வந்துள்ளன. அதற்கும் இந்த பழமை விரும்பிகளான “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” கோஷ்டி வேட்டு வைக்கிறார்கள். அம்மியில் அரைத்தால் உடற்பயிற்சி மேலும் போனசாக சட்னி சுவையாக வரும், குக்கரில் வேகவைத்தால் சத்துகள் அழிந்து பாழாகின்றன என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நடுத்தர வர்க்க மனைவிமார்கள் கலாச்சாரத்தோடு கணவனையும் காக்க களத்தில் இறங்கி மிக்சியையும் குக்கரையும் பரணில் ஏற்றி விடுகின்றனர்.

இப்போ படத்திற்கு வருவோம். முதல் காட்சியில் கதாநாயகியின் டான்ஸ் கிளாஸை காண்பிக்கிறார்கள். இடையிடையே சுவையான குழி பணியாரம் மற்றும் பல கேரள பட்சணங்கள் தயாராவதை காட்டுகிறார்கள். அடுத்தக் காட்சியில் பெண் பார்க்கும் படலம், அதற்கடுத்து கல்யாணம். அதன் பிறகு நான் மேலே சொன்ன வேலைகள் வரிசைக் கிரமமாக மாமியாரும் மருமகளும் மூச்சு வாங்க வேர்த்து ஓடி ஓடி செய்கின்றனர்.

மாமனார் தொரை கையில் ஒரு ஸ்மார்ட் போனோடு ஈசிச் சேரில் சாய்ந்த வண்ணம் இருக்கிறார். பிரஷில் பேஸ்ட் வைத்து கொண்டு வந்து மனைவி கொடுத்தால் தான் அவர் பல் விளக்க எழுந்து போவார். ’அப்படியே ஒரு மக்கில் தண்ணீர் கொண்டு வந்து பல்லை விளக்கி விட்டு டீயை வாயில் ஊற்றி கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றினால் என்னவாம்?’ என்பது அவரது மைண்ட் வாய்சாக இருக்கலாம். அடுத்து தொரை வெளியே கிளம்பும் போது செருப்பை அவரது காலருகில் போட வேண்டும்.

இவ்வளவு பெரிய அக்கப் போரில் நாயகியை தனியே சிக்க வைத்துவிட்டு மாமியார் மகள் வீட்டுக்கு சேவகம் செய்ய சென்றுவிடுவாள். (அவளைப் பொறுத்தவரை போர்க்களம் தான் மாறி உள்ளது). நாயகியும் பகல் எல்லாம் ஓடி ஓடி உழைத்து விட்டு இரவில் சோர்ந்து போய் தலை சாய்க்கும் போது கணவனின் ஆசைக்கு உடல் சாய்த்து பிறகு உறங்கி அடுத்தநாள் எழுந்து குளித்து அடுத்த நாள் வேலைகளை கவனிக்க வேண்டும்.

வீட்டில் ஒருத்தருக்கு சாம்பார் மற்றொருவருக்கு சட்னி. மாமனார் தொரைக்கு குக்கர் சாதம் ஆகாதாம், விறகு அடுப்பில் சோறு வடிக்க வேண்டும். மாமனாருக்கு வாஷிங் மெஷினில் துவைத்தால் துணி வெளுத்து போய்விடுமாம். (அடேய் நீ உடுத்துற லங்கோடும் வேட்டியும் ஏற்கனவே சமையலறை கைப்பிடித்துணி போலதானே உள்ளது!!) அப்புறம் சாப்பாட்டு மேசையை கொத்துபரோட்டோ போடும் தோசை கல் போல அலங்கோலம் பண்ணி வைத்து விடுகிறார்கள். இதுவே ஓட்டல் என்றால் ரொம்ப கச்சிதமாக சுத்தமாக சாப்பிடுகிறான் நாயகன். ”ஏம்பா இங்க நல்லா தானே டேபிள் மேனர்ஸ் ஃபாலோ பண்ற வீட்டில் ஏன்?” என்று கேட்டதற்காக கோபித்துக் கொண்டு சாரி கேட்கும் வரை பேச மாட்டேன் என்கிறான்.

இதுவே மாதவிடாய் காலம் என்றால் “அப்பாலே போ சாத்தானே!!” என்று விலக்கி வைத்துவிடுகிறார்கள்.

“நாளைக்கு சபரி மலைக்கு மாலை போடப் போறேன் அதனால…“ என்று முதுகை பிராண்டும் கணவனிடம் ”ஏம்பா நேரடியா ஆட்டத்தில குதிச்சா எனக்கு சரியா வரல கொஞ்சமா விளையாடிட்டு குதிக்கலாம்ல..“ என்ற கேட்டவுடன் “உன் முகரையை பாத்தா அந்த மாதிரி விளையாட தோணல“ என்று மூக்குடைக்கிறான்.

அப்புறம் மாலை போட்டுக் கொண்டு அப்பனும் புள்ளையும் பண்ற அட்ராசிட்டி இருக்கே அடடா!! இதுல வேற நாயகிக்கு மாதவிடாய் காலம் வருகிறது. பார்த்தாலே பரவசம் என்பது போய் பார்த்தாலே பாவம் என்று பதுங்கு குழிக்குள் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் நாயகி வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசையை தெரிவிக்கும் போது, அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிபடாது என்கிறான் கிழவன். “மோளே, உன் மாமியார் எம்.ஏ படிச்சவதான், எம்புட்டு அழகா கலாச்சாரத்த காவ காக்குறா. போ போ கையில கரண்டிய எடுத்துக் கிட்டு கலாச்சாரத்த காப்பாத்து போ” என்று விரட்டிவிடுகிறான்.

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி“ என்று கதாயநாயகி என்ன செய்கிறாள் என்பதை மட்டுமாவது சொல்லாமல் விட்டுவிடுகிறேன். இல்லன்னா “ஸ்பாய்லர் அலர்ட்“ போடவேண்டி வரும்.

நான் பார்த்து வளர்ந்த சூழல் படி, ’படத்தில் சற்று மிகையாக கூறி உள்ளார்களோ?’ என எனக்கு தோன்றியது. இதுவே வேறு சிலருக்கு ’இதுவே குறைவாகத்தான் இருக்கு, பாருங்க சில இடங்களில் கலாச்சாரம் காப்பாற்றப் படாமல் அம்போன்னு கெடக்கு’ என்று தோன்றி இருக்கலாம்.

தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்வோரும் கூட வீட்டு வேலைகள் விஷயத்தில் “அது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்” என்று சைலண்டாக ஒதுங்கிக் கொள்வதையே பார்த்திருக்கிறேன். “என் மனைவி தங்கமானவ, எனக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டா!!“ என்று பாராட்டி வேலை வாங்கும் யுத்தியை சிலர் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி பெருமையாக கூறுவார்கள்.  “எங்க வீட்ல எங்க சாருக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டேன்“ என்று கூறும் பரிதாப ஜீவன்களும் உண்டு.

அதுவும் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் மேலே படத்தில் சொன்னமாதிரி ஒரு கணவன் இருந்தால் அந்தப் பெண்ணின் நிலமை எப்படி இருக்கும் பாருங்கள்.

சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து செய்வது தனது “ஆண்மை“க்கு இழுக்கு என எண்ணும் போக்கு சிலரிடம் உள்ளது. ஆண்பிள்ளைகளைப் பொறுத்தவரை அவன் வளரும் சுற்றுச் சூழலில் எந்தமாதிரி ஆண்களைப் பார்த்து வளர்கிறானோ அப்படியே தன்னை குடும்பத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முனைவான்.

பெண்பிள்ளைகளைப் பொறுத்தவரையில் “கண்ணான கண்ணே“ என்றெல்லாம் ”ஆனந்த யாழை” மீட்டி விட்டு ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் திடுதிப்பென்று “இந்தாம்மா பிடி, இதுதான் கலாச்சாரம் இத நீ தான் கண்ணுங்கருத்துமா காப்பாத்தணும்” என்று ஒரு துப்பட்டாவை ஒப்படைத்து விடுகின்றனர்.

இவ்வளவு பேசுறியே நீ எப்படி? நானெல்லாம் வெண்ணீர் வைக்க கூட தெரியாத வெள்ளந்தி பையனா இருந்து கல்யாணத்திற்கு பிறகு பிரியாணியையே பிரிச்சி மேயும் தரமான “தாமு“வாக அவதாரம் எடுத்துள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று வயதாக இருக்கும் போது எனது மகன் அருணிடம் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போய் வாஷ்பேசினில் போடச் சொன்னதற்கு “நான் என்ன பொம்பளையா?” என்று கோபத்தோடு சீறினான்.

அந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து வேலைகளையும் பாலின பாகுபாடு இன்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் நாங்கள் ”மூவரும்”

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...