Thursday, November 9, 2023

கலாச்சார வேறுபாடுகளை மதிப்போமாக...!!

(ரொம்பவும் தேடாதீங்க, கருத்து கடைசியில் உள்ளது) CCRT Hyderabad நினைவுகள்… “ஷி இஸ்ஸ ஃபேண்டஸி… ன்னான னான ன்னான… ஷி ஹேஸ்ஸ ஹார்மனி.. ன்னான னான ன்னான.. ….. ….. ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளாம்….” அவள் எங்களை கடந்து போகும் போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல் டைரக்டர் கௌதம் மேனன் ஸ்டைலில் எங்கள் காதுகளில் ஒளிக்கும். தனது நாற்பதுகளில் இருந்த நண்பர் ஒருவரோ “அழகே அழகு தேவதை…“ என ஜேசுதாஸ் அவர்களின் துணைகொண்டு “ராஜப்பார்வை“ பார்த்தார். ஆனால் எல்லோரும் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருக்கையில் “பார்த்த விழி பார்த்த படி பார்த்து இருக்க… காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க…“ என்று இரு கைகளிலும் வடையை வைத்துக் கொண்டு அதை உண்ண மறந்து அவளையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள். என்றெல்லாம் ஒரு பெண்ணின் அழகு குறித்த வர்ணனை செய்வது ஒரு ஆசிரியருக்கு அழகல்ல என்பதால் அவர் ஒரு நாகாலந்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் என சுருக்கமாக கூறித் தொடங்குகிறேன். சிசிஆர்டி ன் ஆரம்ப நாட்களில் அனைத்து மாநில ஆசிரியர்களும் அவரின் தோற்றம் மற்றும் நேர்த்தியான நவீன உடை குறித்து சிலாகித்தபடி இருப்பார்கள். ஆனால் சாப்பிட வரும் போது மட்டும் ரங்கீலா பட ஊர்மிளா மாதிரியான சிக்கன உடையில் வருவார். பெண்களுக்கான கடுமையான உடைக்கட்டுப் பாட்டை வலியுருத்தும் காஷ்மீர் நண்பர்கள் அவரை உள்ளூர இரசித்தபடி திட்டித் தீர்ப்பார்கள். ஒரு நாள் வகுப்பு துவங்கியபின் வேக வேகமாக ஓடிவந்த அந்த ஆசிரியை எனது அருகே இருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டார். எனது சக தமிழக ஆசிரிய நண்பர்கள் கிண்டல் கலந்த ஒரு பொறாமைப் பார்வை பார்த்தார்கள். நானோ நாகரிகம் கருதி நாற்காலியை நகர்த்தி இடைவெளியை அதிகரிப்பது போல பாவனை செய்தேன்.( நாற்காலி ஒரு இஞ்ச் கூட நகரவில்லை என பிறகு நண்பர்கள் கூறினார்கள்) என்னைப் பார்த்து நட்பு ரீதியில் புன்னகைத்து விட்டு “அச்சு ஃப்ச்சம் ட்தமில்நட்து?“ எனக்கு ஒரு எழவும் புரியாததால் வகுப்பை கவனியுங்கள் என முன்னோக்கி கை காண்பித்து சமாளித்தேன். இருந்தாலும் என்ன சொன்னார் என மனதில் ஒவ்வொரு வார்த்தையாக கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்து ஆழமாக சிந்தித்துக் கொண்டு இருந்தேன். ஒரு முப்பது நிமிடங்கள் கழித்து “யா அயாம் ஃப்ரம் டமில்நாடு“ என்றேன். நாகாலாந்து மக்கள் பேசும் ஆங்கிலம் கூட சீனமொழி மாதிரிதான் இருக்கும். வகுப்பு மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டு இருந்ததால் வகுப்போடு ஒன்றிவிட்டேன்(சத்தியமா!!) திடீரென்று அந்த ஆசிரியை ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்து ரகசியமாக கையில் கொட்டிக் கொண்டார். வகுப்பை பார்த்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு இருந்தார். பின் இடக்கையில் இருந்து கொஞ்சத்தை மட்டும் வலது கைக்கு மாற்றி எனது முகத்துக்கு நேராக நீட்டியபடி “ச்ச்சேக் ச்த்டிஸ்“ என்றார். “ஊவ்வ்வே…“ அடச்சே பான்பராக். அடுத்த நிமிடமே ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஜேசுதாஸ் அனைவரும் மூட்டை முடிச்சுக்களோடு வெளியேறி விட்டார்கள். நாகாலாந்து ஆசிரியர்கள் எட்டு பேருமே குட்கா போடுவார்கள். இடைவேளையின் போது அறைக்குச் செல்லும் போதெல்லாம் கொஞ்சம் “சரக்கும்“ போடுவார்கள். இது அங்கே உள்ள பரவலான பழக்கம் என பிறகு அறிந்து கொண்டேன். அவர்களின் பழக்கத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அந்த குட்கா நாற்றம் ஒவ்வாமை என்பதால் அதன் பின் அந்த ஆசிரியையைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட எதிர் முனைக்கு ஓடுவேன். மற்ற நாகாலாந்து ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் குட்கா வாடையோடு வளைய வருவதில்லை. கருத்து:பழக்க வழக்கத்திலேயே இத்தனை வேறுபாடு இருக்கையில் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்று கோஷமிட்டபடி எல்லோரையும் ஒரே கோணிப்பைக்குள் திணிக்க முயலுவது என்ன நியாயம். பன்முகக் கலாச்சாரத்தை சீரழிக்காமல் எல்லோரையும் அவரவர் பழக்க வழக்கங்களோடும் இந்தியர் என்ற உணர்வோடும் இருக்கச் செய்தாலே போதும். இல்லையெனில் உங்கள் கோணிப்பை அவிழ்த்து விட்ட நெல்லிக் காய் மூட்டையாகிவிடும்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...