Tuesday, November 14, 2023
குழந்தைகளின் ஆளுமையை காப்போம்
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் சூழல் அமைவதிலே!!
பெற்றோர் வளர்ப்பதில் 50 விழுக்காடு தாக்கம் இருந்தாலும் மீதமுள்ள 50 விழுக்காடு சமூக சூழல் வயதொத்த நண்பர்களின் அழுத்தம் (peer pressure) போன்ற காரணிகள் தாக்கத்தை செலுத்தும்.
80 களிலும் 90 களிலும் பதின் பருவத்தை கழித்தவர்கள் நல்வாய்ப்பினை பெற்றோர் எனலாம், ஏனெனில் அவர்களுக்கான சூழலியல் கவன சிதறல் காரணிகள் தற்போதைக் காட்டிலும் மிக மிக குறைவு தான்.
90களில் இருந்த பதின் பருவ மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் நண்பர்களோடு விளையாடி ஊரை சுற்றி வருதல் இவை தவிர்த்த வேறு பொழுதுபோக்கு நிச்சயமாக இல்லை எனலாம் . இதைத் தாண்டியும் பொழுது போக்கு என்றால் நூலகம் சென்று நூல்களை எடுத்து வாசித்தல் வானொலியில் பாடல்கள் கேட்டல் என்கிற அளவில் தான் இருக்கும்.
ஆனால் தற்போது எதை எடுப்பது எதை விடுவது என்கிற பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பொழுது போக்குகள் மலிந்து கிடக்கின்றன. அவை எந்த அளவுக்கு ஆரோக்கியமானவையாக ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயமாக கேள்விக்குறி தான்.
பதின் பருவ மாணவர்களின் உளவியல் சிக்கலுக்கு அவர்கள் 'தான் எப்படிப்பட்ட ஆளுமையாக வளர வேண்டும்?! நமக்கு என்னென்ன தெரிகிறது? எது நமக்கான இலக்கு? இதை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் எல்லோரும் தவறு என்கிறார்கள் இதை செய்யலாமா செய்யக்கூடாதா? எதைச் செய்தால் வயது ஒத்த நண்பர்களின் மத்தியில் கெத்தாக காண்பித்துக் கொள்ளலாம்?' என்பன போன்ற பல நுட்பமான காரணிகள் உண்டு.
பழக்கவழக்கங்களிலும் ஆளுமையிலும் தற்போதைய காலகட்டத்தில் சினிமாவின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது.
எங்கேயெல்லாம் செய்யலாமா செய்யக்கூடாதா என்கிற குழப்பம் மேலோங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் சினிமாக்கள் மிகச் சரியாக தவறான பாதையையே காட்டுகின்றன.
சினிமாக்களில் 90களில் தொடங்கி தற்போது வரை பல விஷயங்களில் "இது
அப்படி ஒன்றும் தவறு இல்லையே!" (normalizing) என்கிற ஒரு போக்கினை குழந்தைகள் மனதில் விதைத்து வருகின்றன அவற்றுள் சிலவற்றை கீழே பார்ப்போம்.
1. புகைப்பிடிப்பது- பழைய படங்களில் ஒருவரை கெட்டவராக காண்பிக்க அவர் சிகரெட் பிடிப்பதாக காண்பிப்பார்கள் ஆனால் தற்பொழுது கதாநாயகர்களே சிகரெட்டை ஸ்டைலின் அடையாளமாக காட்டுகிறார்கள்.
2. மது அருந்துதல்- பழைய படங்களிலும் சரி வீடுகளிலும் சரி மது அருந்துதலை அபாண்டமான குற்றம், மிகப்பெரிய தவறு என்பது போல காட்டுவார்கள் ஆனால் சமீபமாக "எப்போதாவது மது அருந்துதல் (occasional drinking) நண்பர்களோடு மது அருந்துதல்( social drinking) என்கிற போர்வையில் இவையெல்லாம் அப்படி என்று பெரிய தவறு இல்லை என்று ஆகி வருகின்றன முக்கியமாக ஹீரோ அவரது தம்பி தந்தை தாத்தா உள்ளிட்ட அனைவரும் சகஜமாக அருந்துகிறார்கள்.
3. பள்ளிப் பருவத்தில் இயல்பாக எழும் எதிர் பாலின ஈர்ப்பினை காதல் காவியம் புடலங்காய் என்று நீட்டி முழக்குதல் - அழகி ஆட்டோகிராப் தொடங்கி சமீபத்தில் வந்த 96 வரை எல்லாராலும் சிலாகிக்கப்பட்ட படங்கள் அனைத்துமே இந்த தவறினை செய்கின்றன. அதனால்தான் பதின் பருவத்தில் உள்ள ஆண்களும் சரி பெண்களும் சரி எதிர்பாலின ஈர்ப்பினை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு மனச்சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
4. வன்முறை - எந்த ஒரு சிக்கலையும் எதிர்த்து நிற்றல் ஓடி ஒளிதல் ( Fight or flight response ) என்பதைத் தாண்டி பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு அமைதியான முறையில் சுமுகமான தீர்வினை எட்டும் ஒரு பக்குவமான மனநிலை கோழைத்தனமாக பார்க்கப்படுகிறது. மேலும் வன்முறையைக் கையில் எடுத்தல் என்பது ஆண்மையின் பெருமை என்பது போல சினிமாக்களில் கட்டமைக்கிறார்கள். எனவே பதின் பருவத்தினர் முக்கியமாக ஆண்கள் சிறிய பிரச்சனைக்கு எல்லாம் வன்முறையில் இறங்கும் போக்கு அதிகமாக உள்ளது.
5. கெட்ட வார்த்தை பேசுதல்- குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை கேட்ட வார்த்தையை தான் பேசுகிறார்கள் என்று ஒரு சினிமாவில் வசனம் வந்தது நல்ல விஷயம் தான். ஆனால் சினிமாக்களில் தான் எந்தெந்த சூழலில் எந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை எடுத்து வீச வேண்டும் என்பதை சொல்லித் தருகிறார்கள். எந்த ஒரு படத்தின் அறிமுகத்தையும் பரபரப்பான விஷயமாக்க கெட்டதாகவே இருந்தாலும் பரபரப்புக்காக கெட்ட வார்த்தை பேசும் காட்சியை டீசரில் வைக்கிறார்கள். ஆக வீர பராக்கிரமத்தோடு இருக்கும் கதாநாயகன் செய்யும் எதுவுமே குழந்தைகளை சட்டென்று ஈர்க்கும் அது போல தான் அவர்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளும் பராக்கிரமத்தில் அடையாளமாக குழந்தைகளால் பாவிக்கப்படும்.
எனவேதான் சினிமாக்களில் இருப்பவர்கள் சற்று சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். கோடிகளில் புரளும் கதாநாயகர்கள் தெருக்கோடியில் இருக்கும் சின்னஞ்சிறுவனை கூட மனதில் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும்.
இது பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் சினிமா இயக்குனர்கள் கூறுவது "நாங்கள் என்ன சமூகத்தில் இல்லாத விஷயத்தையா சொல்லிவிட்டோம் இவையெல்லாம் சமூகத்தில் இருப்பது தானே?!" என்று கூறுவார்கள். ஆனால் சமூகம் என்பது நல்லவை கெட்டவை இரண்டும் கலந்தது தானே!!
மிகுந்த ஒப்பனையுடன் கவர்ச்சிகரமாக நாம் கெட்டதை காண்பிக்கும் போது அது வெகு எளிதாக வளரிளம் பருவ குழந்தைகளை ஈர்த்து விடும்.
இறுதியாக ஒன்று முற்றிலுமாக சினிமாக்காரர்களை மட்டும் குறை சொல்லி விட முடியாது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு நிச்சயமாக பெற்றோர்களின் பங்கு அவசியம் எனவே நல்ல விஷயங்களை பாராட்டவும் கெட்ட விஷயங்களுக்காக கண்டிக்கவும் ஒருபோதும் தயங்கி நிற்கலாகாது.
மிக சிக்கலான அதி முக்கியமான பருவத்தில் குழந்தைகள் நம் வசம் தான் உள்ளனர். எனவே மிக கவனமாக அவர்களது ஆளுமையை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களுக்கும் உண்டு. நல்லவை எவை அல்லவை எவை என்கிற சரியான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.
சூழலியல் புறத்தாக்கம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு எதிரான ஒரு கவசமாக இருந்து குழந்தைகளை பாதுகாத்து சரியாக வளர்த்து எடுக்க நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியரால் இயலும். சமூக காரணிகள் பெற்றோர் வளர்ப்பு மற்றும் சூழலியல் தாக்கங்களை குறை கூறிக்கொண்டு ஆசிரியர்கள் வாளாவிருத்தலாகாது!!
இது போன்ற ஒரு ஆசிரியராக நாம் இருத்தல் தான் குழந்தைகள் தினத்தில் நாம் அவர்களுக்கு தரும் சிறந்த பரிசு!!
Subscribe to:
Post Comments (Atom)
கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!
சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment