Thursday, January 11, 2024

மலையாளக் கரையோரம் – 1
“தைய்ய தைய்ய தைய்யா தைய்யா தக தைய்ய தைய்ய தைய்யா”- கேரளப் பயணம். சமக்ர சிக்ஷ அலுவலகத்தில் இருந்து பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான ஒரு பயிற்சிக்கு கேரளா செல்ல உங்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்கள். “ஓ.கே சார், ஆனா எதுவா இருந்தாலும் பொங்கலுக்கு பிறகு வந்தால் போறேன் சார்” “கவலைப் படாதீங்க சார் ஜனவரி கடைசில தான் வரும் ” என்று தெம்பூட்டினார்கள். அப்படி சொன்ன அடுத்த ரெண்டாம் நாளே ஜனவரி இரண்டு அன்று மூட்டையை கட்டுங்க என்று மெயில் வந்து விட்டது. புத்தாண்டில் பள்ளி திறப்பு அன்று போக முடியவில்லையே என்று வருத்தமாகிவிட்டது. இருந்தாலும் பரவாயில்ல ஒரு ஓசி டூர் வாய்ப்பை விடலாமா என்று மூட்டையை கட்டி முதுகில் கட்டிக் கொண்டு வண்டி ஏறிவிட்டேன். என்னுடன் துணைக்கு வர வேண்டிய ஆசிரியர் ஒருவர் மருத்துவ காரணங்களால் கடைசி நேரத்தில் வரஇயலவில்லை. ஆக, சோலோ ஜர்னி தான். திருச்சி திருவனந்தபுரம் இன்டர் சிட்டி ரயிலில் ஏழு மணிக்கெல்லாம் ஏறி அமர்ந்து விட்டேன். பயிற்சி நடைபெறும் AGRICULTURAL COOPERATIVE STAFF TRAINING CENTER இடத்திற்கு செல்லும் வழிமுறைகள் பற்றி கூகுளை குடைந்து கொண்டிருந்தேன். “ஆமா ஆமா கேரளா தான், திருவனந்த புரம் தான், டிரெயினிங் தான்“ என்று பின் சீட்டில் இருந்து ஒரு குரல். “திருவனந்தபுரத்தில் ஏதோ அக்ரி ட்ரெயினிங் சென்டராம்...” முன்னாடி சீட்டில் இருந்து ஒரு குரல். இதற்கிடையே வாட்சாப்பில் டிரெயினிங்க்காக ஆரம்பித்த குழுவில் “இண்டர் சிட்டில வரவங்க யாரெல்லாம்” என்று போல் நடந்தது. மொத்த பயிற்சி எண்ணிக்கையில் கால்வாசி பேர் அந்த ட்ரெயின்ல தான் இருந்தோம். “அப்பாடா, நாம தனி ஆள் இல்ல நம்ம பின்னால தமிழ்நாடே நிக்கிது“ என்ற தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் இட்லி தோசை என கடை விரிக்க எனக்கும் நாவில் ஒரு கங்கை ஊற்றெடுத்தது. “சார் பேன்ட்ரி எந்த பாக்ஸ்?” என்றேன் அருகில் இருந்த ஒருவரிடம். பிக் பாஸ் ல் “எதே திருவள்ளுவரா” என்று கேட்ட ஜி.பி. முத்து போல ஜெர்க் ஆனார். எதிர் சீட் பெண் “சார் இந்த வண்டில பேண்ட்ரி எல்லாம் இருக்காது, மதுரைல டிபன் விப்பாங்க வாங்கிக்கோங்க“ என்றது காதில் செந்தேன்குழலாக ஒலித்தது. மதுரைல இறங்கி இட்லி பார்சல் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து ட்ரெயின் புறப்படும் முன்பாகவே பிரித்துவிட்டேன். உள்ளே பார்த்தால் அருமையாக மூன்று இட்லிகளும் சாம்பார் சட்னி என கட்டி வைத்திருந்தனர். சட்னியை பிரித்தால் உள்ளே ஒன்றுமே இல்லை, பேஸ்ட்டின் அந்திமக்காலத்தில் பிதுக்குவது போல முயற்சித்தால் கொஞ்சமே கொஞ்சமாக வந்தது. பயபுள்ள, சட்னி கரண்டிய தொடைச்ச பேப்பர பார்சலாக்கிவிட்டான் போல!! ஆரல்வாய்மொழியை (ஏங்க, இது ஊர் பேருங்க) நெருங்கும் போது ராட்சத காற்றாடிகள் கண்ணில் படத் துவங்கின. அவற்றை பார்த்த போது THE BOY WHO HARNESSED THE WIND என்கிற படம் தான் ஞாபகம் வந்தது. அங்கே தொடங்கிய பசுமை திருவனந்தபுரம் வரை கேப் விடாமல் தொடர்ந்து வந்தது ட்ரெயினில் வரும் போதே திருநெல்வேலிக்கார ஆசிரியர் ஒருவர் தெள்ளத் தெளிவாக வாட்சாப் குழுவில் பயிற்சி மையம் செல்ல வழி சொல்லி விட்டார். சார் இறங்கும் போது எங்கள விட்றாதீங்க என்று அவரை அழைத்து கூறிவிட்டேன். ஒட்டு மொத்த தமிழ்நாடே அவர் பின்னாடி தான் நிக்கும் என்று நினைத்து ட்ரெயினை விட்டு இறங்கி அவரிடம் போய் பார்த்தால் அவர் ஒரு தனிமரமாக நின்று கொண்டு இருந்தார். வழி தெரிந்து போனதால் மொத்த கூட்டமும் மூட்டையில் இருந்து அவிழ்ந்த நெல்லிக்காய்களாக சிதறிப் போனது. எப்போதுமே வித்தைகளை இன்ஸ்டால் மெண்டில் சொல்லித்தரணும், மொத்தமாக கொட்டிக் கவிழ்த்தால் கத்துக் கொடுத்தவனுக்கே மரியாதை இருக்காது போல என்கிற தத்துவைத்தை அவசரகதியிலும் கற்றுக் கொண்டு ஆட்டோ பிடித்தோம். சற்றேறக்குறைய நான்கு நாட்கள் திருவனந்தபுரவாசி ஆகிவிட்டதால் ரிட்டன் ட்ரெயினுக்கு “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க“ என்று தனியே தன்னந்தனியே கிளம்பிவிட்டேன். திருவனந்தபுர சேட்டன்களுக்கு தமிழ்ல பேசினாவே தெளிவாகப் புரிகிறது. அவர்கள் மலையாளம் பரைஞ்சாலும் தெளிவா மனசிலாவுது. எத்தன படம் அமேசான்லயும் நெட்ஃபிளிக்ஸ்லயும் பாத்துருப்போம். முக்கியமா ஒரு விசயம், திருவனந்தபுரத்தில் பயணம் செய்யும் போது ஆட்டோவில் கூட சீட் பெல்ட்டை போட்டுக் கொள்வது உத்தமம். எந்த சாலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதுவும் 45 டிகிரி ஏறுகிறது. இறங்கும் போதெல்லாம் இப்போ பிரேக் ஃபெயிலியர் ஆனா என்ன ஆவது என்கிற எண்ணம் வந்து வயிற்றைக் கலக்கியது. ரிட்டன் பயணத்தில் உஷாராக ஆட்டோ சேட்டனிடம் கேட்டு நல்ல கடையில் நேந்திரம் சிப்ஸ், உன்னி அப்பம், அப்புறம் கொஞ்சம் முறுக்கு மிக்சர் வாங்கிக் கொண்டேன். அப்படியே சப்பாத்தி குருமாவும். வரும்போது ஏசி பெர்த் தான் புக் பண்ணி இருந்தேன். சைட் லோயர் கிடத்தது. எதிர் வரிசையின் வலது புறம் ஒரு கேரள தம்பதி மற்றும் குழந்தைக்கு பெர்த்தை அடுக்கடுக்காக கொடுத்திருந்தார்கள். நான் ஏறிய உடன் சப்பாத்தியை பிச்சி கிடாசிட்டேன். வயித்துக்குள்ள தாங்க. டேஸ்ட் கொஞ்சம் கம்மிங்கிறதால அப்படி சொல்லிட்டேன். அந்த கேரளப் பெண்ணும் பையனும் குழந்தை பிடிவாதமாக கேட்டதால் அப்பர் பெர்த்தில் சேஃப்டி செய்து படுக்க வைத்து விட்டனர். (ஆழம் தெரியாமல் காலை விடுவது மட்டுமல்ல, உயரம் தெரியாமல் கையை விடுவதும் தவறு என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது பின்னாடி சொல்றேன்) இருவரும் ஒரு பெரிய மொந்தையான பார்சலை பிரித்தனர். அடுக்கடுக்காக மிருதுவான வாசமான பரோட்டாக்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்ட பார்சல் அது. அதற்கு சைட் டிஸ் செம்ம திக்கான, காரசாரமான சிவப்பான சிக்கன் கிரேவி. வாசம் தூக்கி அடித்ததில் அப்பர் பெர்த்தில் எனக்கு தலை முட்டியது. நல்ல பெரிய வடிவான பரோட்டாவை இரண்டாக கிழித்து சிக்கனை உள்ளே வைத்து அரைமடியாக மடித்து அப்படியே வாயில் வைத்து (நம்மாளுங்க ஆப் பாயில் சாப்பிடும் லாவகத்தோடு) அவன் மெல்லும் போது எனது கங்கை நதி தொண்டை வழியாக இறங்கியது. அநேகமாக கணவன் மனைவி இருவரும் பதினைந்து பரோட்டாக்களை விழுங்கி செரித்திருந்தனர். “பாக்க டம்மி பீஸா இருக்க பயங்கரமான ஆளா இருக்கியேடா” என்று தான் தோன்றியது. பரோட்டா ஏக்கத்தில் சீக்கிரமாகவே உறங்கிவிட்டேன். இரவு பனிரெண்டு மணிக்கு கழிவறை செல்ல உந்துதல். எழுந்து மொபைல் டார்ச் அடித்து செறுப்பை தேடினால் ஒன்று தான் இருக்கிறது. எவனோ அரைத்துக்கத்தில் நடந்தபோது செறுப்பை எட்டி உதைத்துவிட்டான் போல. அதுவும் எங்கோ சென்று விட்டது. அப்படியும் போக வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் பார்த்து விட்டேன். அடுத்த லோயர் பெர்த்தில் ஒரு இளம் பெண் உறங்கிக் கொண்டு இருந்தார். அங்கே டார்ச் அடிப்பது நான் தர்மடி வாங்க வழிவகுத்துவிடும் என்பதால் ஒற்றை செறுப்போடு கழிவறை சென்று நடராசரின் அனைத்து நடனமுத்திரைகளையும் பயன்படுத்தி சோலியை முடித்து வந்தேன். உறங்கியபடியே வந்ததில் மதுரை வந்ததே தெரியவில்லை. நல்வாய்ப்பாக மதுரை கடைசி நிறுத்தம். விடிந்தவுடன் வைகையில் அரியலூர் செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். மெல்ல மெல்ல கூட்டம் கரைந்தபிறகு செறுப்பை கண்டுபிடித்துவிட எண்ணி பின் தங்கினேன். மிகச் சரியாக நான் கணித்திருந்தது போல அந்த இளம் பெண் சீட்டுக்கு அடியில்தான் கிடந்தது. எதிர் சீட் குட்டிபாப்பா டாப் பெர்த்தில் கை நீட்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். நம்ம பரோட்டா தம்பதியினர் கைகளை உயர்த்தியும் டாப் பெர்த்தை தொட முடியவில்லை. அவளும் இவங்கள நம்பி குதிக்க தயாராக இல்லை. பரோட்டாவுக்காக பழிவாங்க இது நேரமில்லை என்று நானே அவளை தூக்கி இறக்கினேன். வைகை வர இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. ஆகவே ஏசி லௌஞ்சில் டிக்கெட் எடுத்து உட்கார்ந்து கொண்டே தூங்கினேன். வைகையிலும் ஏசிதான் புக் செய்திருந்தேன். ஓசில கிடைக்குதுன்னு ஏசில புக் பண்ணியது எம்மாம் பெரிய பிசகு என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். ஆமாம், அநேகமாக 5 டிகிரி வைத்திருப்பார்கள் போல. பயணத்தில் எங்குமே பயன்படுத்தி இராத அந்த ஜெர்கினை எடுத்து முதன் முறையாக போட்டுக் கொண்டேன். அப்படியும் குளிராகத்தான் இருந்தது.
அரியலூர் வந்ததே தெரியவில்லை. உள்ளபடியே வைகை விரைவு வண்டிதான். அரியலூர் வந்து இறங்கியவுடன் “தனியா போய் ஊர்சுற்றி விட்டா வர்ரீங்க?!” என்கிற கோபம் அருணிடம் இருந்தும் அவன் அம்மாவிடம் இருந்தும் என்னென்ன ரூபங்களில் வரப்போவுதோ என்ற பயம் மனதை லேசாக பிறாண்டியது. “மாணிக்கம் நீ கேரளாவில் என்ன செய்து கொண்டு இருந்தாய்?“ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது அடுத்த அத்தியாயத்தில்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...