Friday, January 12, 2024

மலையாளக் கரையோரம் -2

மலையாளக் கரையோரம் – 2
பள்ளிப் பயணம் ஆயத்தம்!! முதல் நாள் பயிற்சி சரியாக 9.30 க்கு துவங்கியது. பரஸ்பர அறிமுக நிகழ்வினை பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மரியதாஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார். முதல் அமர்வில் பள்ளிமேலாண்மைக் குழுவில் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் என்கிற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியர்கள் அனைவரும் ஆறு குழுக்களாக வட்ட வட்டமாக அமர்ந்து கொண்டு தமிழகப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்வுகள் என்றொரு பட்டியலை தயார் செய்யத் துவங்கினோம். அனைத்து குழுக்களும் தீயா வேலை செய்தார்கள். சிலர் அடிஷனல் பேப்பர் கூட கேட்டார்கள். அவர்கள் தொகுத்த மொத்த விஷயங்களை பின்வரும் வகையில் அடக்கி விடலாம். “சார் எஸ்எம்சி கூட்டத்துக்கு கூப்பிட்டாக்கூட குவார்ட்டரும் கோழிபிரியாணியும் கேட்கும் அளவுக்கு மக்கள் கெட்டுப் போய்ட்டாங்க சார்” என்று ஒரு தலைமையாசிரியர் அங்கலாய்த்தார். “அவர்களுடைய தினக்கூலியை விட்டுவிட்டு வர மாட்டேங்கிறாங்க சார்!!“ “சார், முதல்ல தலைமையாசிரியர்களுக்கு அவர்களுடன் இணைந்து பணிபுரிவதிலும் பள்ளி நடவடிக்கைகளில் அவர்களின் தலையீடுகளை அனுமதிப்பதிலும் ஒரு தயக்கம் உள்ளது“ என்று மண்டையில் அடித்தார் ஒரு தலைமையாசிரியர். “அவர்களுக்குறிய அதிகாரம் என்ன என்பது தெரியாமல் இருக்கிறார்கள், பள்ளி திட்டங்களில் நமக்கு என்ன தெரியபோவுது எல்லாம் தலைமையாசிரியர் பார்த்துக் கொள்வார்“ என்கிற அலட்சிய எண்ணம் உள்ளது என்றார் ஒரு ஆசிரியர் பயிற்றுனர். முக்கியமாக " ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது போல ஒரே மாநிலம் ஒரே நாளில் எஸ் எம் சி கூட்டம் அதுவும் நேரம் நிமிடம் துல்லியமாக அட்டவணை போடுவது என்பது சரியில்லை, ஏனெனில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை அந்த நாளில் இருக்கலாம். எனவே எந்த வாரம் என்று மட்டும் அரசு கூறினால் போதுமானது மற்றபடி கிழமை நேரம் போன்றவற்றை தலைமை ஆசிரியர்களே இறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை அனேகமாக எல்லோரிடமிருந்து வந்தது. உரிமையாளர்களை அதிகாரப் படுத்துவது தான் பள்ளி மேலாண்மைக்குழுவின் அடிப்படை நோக்கம். பள்ளிக்கு என்னென்ன தேவைகள் என்பதை பார்த்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கூட்டத்தில் விவாதித்து பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை தயார் செய்து தீர்மானம் இயற்றி அரசுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் அனுப்புவது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும் என்றார் ஷியாம் சுந்தர். இவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மதுரை பில்லர் ஹாலில் நடைபெற்ற தலைமையாசிரியர்கள் பயிற்சியில் குழந்தைகள் உரிமை பற்றி ஒரு இரண்டு மணிநேர வகுப்பினை அவ்வளவு சுவாரசியமான பொருள் பொதிந்த வகுப்பாக கொண்டு சென்றார். குரலில் தேய்வோ சோர்வோ கிஞ்சிற்றும் கிடையாது. பிரச்சனைக்கு தீர்வு சொன்ன தலைமையாசிரியர்களில் ஒருவர், “சார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இதற்கெல்லாம் ரூல்ஸ் போடுவதோ ரிசர்வேஷன் கொடுப்பதோ கூடாது. அந்த ஊரில் இருக்கும் பணக்கார குடும்பம், அல்லது பெரிய ஆள் இவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் பள்ளிக்கு நிறைய செய்வார்கள். அவர்கள் சொன்னா மற்றவர்கள் கேட்டுக் கொள்வார்கள்” என்று பள்ளிமேலாண்மைக்குழு சட்டகத்தின் அச்சாணியை கழற்றினார். ஷியாம் சுந்தரோ,“விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறாரே” என்கிற தோரணையில் அவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். நானோ ஒரு தலைமையாசிரியரிடமே சமூக நீதிப் பார்வை கிஞ்சிற்றும் இல்லையே என்று தலையில் அடித்துக் கொண்டேன். ஏற்கனவே இரண்டுமுறை மைக்கை வாங்கி விட்டேன் மறுமுறை பிடுங்கினால் எனக்கு மைக்கடி நிச்சயம் என்பதால் அவருக்கு பதிலடி தரமுடியவில்லை. ஆரம்பத்தில் உறுப்பினர்களை ஆர்வமுடன் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு வரச் செய்ய அவர்களுக்கு அவர்களுடைய கூலிக்கு நிகரான ஊக்கத்தொகை வழங்கலாம் என்று பெரும்பான்மை ஆசிரியர்கள் கூறி இருந்தார்கள். ஒரு துவக்கப் பள்ளி தலைமையாசிரியரோ, நான் கூட்டம் நடக்கும் நாளில் எல்லாம் சிறு சிறு பாடல் பாடுதல் அல்லது விளையாட்டு போல வைத்து அவர்களுக்கு பரிசு தருகிறேன். எனவே ஆர்வத்தோடு கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றார். அன்று மதியம் கேரளப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அங்கே சிறப்பாக இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழக நடைமுறைகள் பற்றியும் மற்ற இன்ன பிற குழுக்கள் குறித்தும் ஏராளமான கருத்துகளை எடுத்து வைத்தார். மதியம் நான்காவது அமர்வில் அடுத்த நாள் பள்ளிகளுக்கு செல்ல குழுக்களை உருவாக்கினார்கள். 14 பேர் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப் பட்டன. ஏழு குழுக்களுக்கும் காலை ஒரு பள்ளி மதியம் ஒரு பள்ளி என்று 14 பள்ளிகளின் பட்டியல் தரப் பட்டது. குழுவில் ஒரே மாவட்டத்தினர், ஒரே அறையில் தங்கி இருப்போர் போன்று எதுவும் இணைந்து இருக்க கூடாது. புதியவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நடவடிக்கைகளில் பெற்றோர் ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் மட்டுமே களப் பயண நோக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற வினாக்களை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டார்கள். ஏற்கனவே எனக்கு வழித்துணையாக அரியலூர் மாவட்ட த்தில் இருந்து வரவேண்டிய வட்டார வள மைய ஆசிரியரும் இல்லை. எனது அறைத் தோழர்களும் இல்லை. முற்றிலும் புதிய குழுவில் பணியாற்ற வேண்டும். அடுத்த நாள் காலை ஏழு டெம்போ டிராவலர் வேன்கள் பயிற்சி மைய வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்தன. அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு வேனில் ஏறி அமர்ந்தோம். அந்தந்த குழு ஒருங்கிணைப்பாளர்கள் வருகைப் பதிவு செய்து கொண்டார்கள். கேரளப் பள்ளிகளின் இயங்குமுறை, பெற்றோர் பள்ளி ஒத்துழைப்பு என ஏராளமான விஷயங்களை கிரகித்து வர ஒரு பதினைந்து வினாக்கள் அடங்கிய பட்டியலோடு வேனில் ஏறி அமர்ந்தேன். “ஆமா, பள்ளிக்கூடத்தில் அப்படி என்னாத்த பாத்தீங்கோ“ என்ற உங்கள் கேள்விக்கு அடுத்த அத்தியாயத்தில் பதில் கூறுகிறேன்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...