Sunday, June 2, 2024

அந்த அரபிக் கடலோரம் - 5

அந்த அரபிக் கடலோரம் – 5 ”மெட்ரோவில் சுத்திப் பாக்கப் போறோம்....”
எர்ணாகுளம் வந்த மூன்றாவது நாள் காலை சற்று ரிலாக்சாக கிளம்பலாம் என்று சற்று மெதுவாகவே எழுந்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன். அன்பழகன் மாமா வழக்கமான டீ டைம் க்கு எழுந்து விட்டதால் எழுந்து பல்துலக்கிக் கொண்டு டீக்கடைக்கு சென்றோம். லாட்ஜில் முதல் நாளே தேனீருக்கு ஏற்பாடு உள்ளதா என்று விசாரித்த போது, “சார் இங்க பசங்க யாரும் இல்ல, நீங்க போய் குடிச்சிக்கலாம் சார். பக்கத்துல தான் கடை இருக்கு” என்று கூறிவிட்டார்கள். கடைக்கு வர வாய்ப்பில்லை என்றாலும் தேனீர் பார்சல் வாங்கி வரக் கேட்டனர். வரும் போது ஃப்ளாஸ்க் எதுவும் எடுத்து வரவில்லை. ஆனால் தண்ணீர் பாட்டில்களில் மூன்று எவர் சில்வர் நீர் குடுவைகள். எனவே அதில் வாங்கி வந்தோம். ஆனால் ஆறிப் போய்விடுமே என்றதற்கு, “அதான் ஒவ்வொரு அறையிலும் எலக்ட்ரிக் கெட்டில் கொடுத்திருக்காங்களே“ என்றனர். ஆகா, அது வாட்டர் ஜக் என்றல்லவா நினைத்திருந்தோம். அவர்கள் அதில் தண்ணீர் சூடு செய்தே குடித்திருக்கிறார்கள். அரவர்கள் தான் கொடுத்த வாடகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சவுத் ஸ்டேஷன் முக்கில் ஒரு சின்னஞ்சிறு கடையில் பெரிய flask கண்டெய்னர்களில் டீ, காபி என வைத்துக் கொண்டு பிடித்து பிடித்து தருகிறார்கள். கூட்டம் அதிகாலை 5.30 ல் இருந்தே மொய்க்கிறது. சாயங்கால வேளைகளில் இருப்பதில்லை. காலையிலேயே வடை, சமோசா, அப்புறம் ரொட்டி மாதிரி மொத்தையாக ஒன்று என காலையிலேயே பலகாரங்களும் பறக்கின்றன. நானெல்லாம் டயட் கான்சியஸ் பர்சன் (பொதுவில் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறேன்) என்பதால் ஸ்ட்ரிக்ட்டாக டீ போதும் என்று கூறிவிட்டேன். எர்ணாகுளம் அருகே சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் உள்ளது என்பதை பயணம் திட்டமிடும் போதே அறிந்திருந்தேன். ஆனாலும் கோயில் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். இவங்க கோயிலுக்கு போனா வகை தொகை இல்லாம காக்க வைப்பாங்க, சட்டைய கழட்டச் சொல்வாங்க ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ். மேலும் இந்த பயணத்தை ஆன்மீக பயணமாக மாற்றிவிடக் கூடாது என்பதால் ஒரு சிறு ஆன்மீகமற்ற அரசியல் செய்தேன். “அகிலா, அந்த கோயில் இங்கிருந்து ஒரு 120 கிமீ வருமாம், திருவனந்தபுரம் வரும் போது பாத்துக்கலாம்” மூன்றாம் நாள் திட்டம், மரைன் டிரைவ் பகுதியை சுற்றிப் பார்ப்பது, அப்படியே வாட்டர் மெட்ரோவில் ஃபோர்ட் கொச்சி போய் விட்டு அன்று இருட்டிப் போனதால் பார்க்காத பகுதிகளை பார்த்துவிட்டு மீண்டும் வாட்டர் மெட்ரோவில் மரைன் டிரைவ் வந்து விட்டு சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு அப்படியே லுலுமால் போய்விட்டு லாட்ஜ் திரும்பி ரயிலை பிடிக்க கிளம்ப வேண்டியது தான். இரண்டு நாட்கள் எர்ணாகுளம் பகுதியை சுற்றியதால் கிட்டதட்ட எர்ணாகுளம் வாசி போல ஒரு தைரியம் பிறந்துவிட்டது. இன்றைக்கு கேப் வேண்டாம் மெட்ரோவிலேயே ஊர் சுற்றிவிடலாம் என்று முடிவு செய்தாச்சு. இன்றைக்கு (20.05.2024) எங்களது இருபதாவது இணையேற்பு நாள். நேற்று இரவு அகிலாவுக்கு மேக்ஸ் கடையில் புத்தாடை வாங்கினோம் அல்லவா. எனக்கு நான் இந்த மாதம் ஒரு நாள் திருச்சிக்கு சென்றபோது மூன்று காட்டன் பேண்ட், மூன்று செட் டீ சர்ட் வாங்கி இருந்தேன். அதில் ஒன்றை இன்றைக்காக வைத்திருந்தேன். விசேஷ நாள் என்பதால் காலையிலேயே உற்சாகமாக கிளம்பிவிட்டோம். காலை உணவை வழக்கம் போல் பேக் ரெஸ்டாரண்டில் முடித்துக் கொண்டோம். அங்கே பெரும்பாலும் வெண்ணீர் வைக்கிறார்கள். வெட்டி வேர் போல ஏதோ ஒரு பட்டையை போட்டு காய்ச்சி இளம் பிங்க் கலர் (கெமிஸ்ட்ரி பிராக்டிகலில் வாலுமெட்ரிக் டைட்ரேஷனில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கோனிக்கல் ஃபிளாஸ்க்கில் உள்ள சோடியம் ஹைட்ராக்சைடில் விடும் போது 20 எம்எல் ல் ஒரு நிறம் வரும் அல்லவா அந்த நிறம்) தண்ணீர் தருகிறார்கள். இதே நீர் தான் எங்களுக்கு திருவனந்தபுரம் டிரெயினிங்கிலும் கொடுத்தார்கள். பேக் இன் ல் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் எர்ணாகுளம் சவுத் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. என்னைத் தவிர அநேகமாக அனைவருக்கும் இதுதான் முதல் மெட்ரோ பயணம். எட்டு டிக்கெட் கேட்டால் ஒரே டிக்கெட்டில் எட்டு போட்டு கொடுத்துவிட்டனர். அங்கே கேட் பாஸ் ல் ஸ்கேன்னரை எட்டு முறை தனித்தனியே டிக்கெட்டால் முத்தமிட்டால் தான் கேட் திறக்கிறது. திறந்து மூடும் நேர இடைவெளியில் அகிலா சாமர்த்தியமாக காலை நுழைத்தவுடன் ப்ளாஸ்டிக் டோர் டப்பென்று சாத்தியது. (ச்சே, என்ன ப்ளாஸ்டிக்கோ, என்னா டோரோ,அப்படி ஒன்றும் வலிக்க வில்லையாம்!!) இரண்டு நிமிடங்களுக்குள் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துவிட்டது. மறுபடியும் எட்டு முத்தங்கள் எட்டு கேட் பாஸ்கள். வெளியே வந்து மரைன் டிரைவுக்கு ஆட்டோ பிடித்தோம். ஐம்பது ரூபாயில் மூன்று நிமிடங்களில் மரைன் டிரைவ் வந்துவிட்டது. எர்ணாகுளம் ஆட்டோக்கள் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். எந்த இடத்திலும் ஆட்டோ பேரம் பேசாமல் கண்மூடிக் கொண்டு ஏறலாம். நாங்கள் எதிர் கொண்ட வரை மிகச் சரியான நியாயமான கட்டணம் தான் கேட்கிறார்கள். ரயில் நிலையத்தில் இறங்கி நாங்கள் ஆட்டோ கேட்ட போது மறுத்து பக்கத்துல தான் சார் நடந்தே போயிடுங்க என்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மரைன் டிரைவ் பகுதியும் கடல் புறத்தின் எக்ஸ்டென்ஷனான பேக்வாட்டர்ஸ் போலத்தான் உள்ளது. துறைமுகம் அமைப்பதற்காக மணல் தோண்டி எடுத்து ஆழப்படுத்தி ஒரு தீவையே அமைத்திருக்கிறார்கள். மரைன் டிரைவ் பகுதியில் உள்ளே நுழையும் இடத்தில் அப்துல் கலாம் பெயரில் ஒரு தூண் உள்ளது. அதில் நிறைய உருவங்கள் செதுக்கி இருந்தது. அப்புறம் கரையை ஒட்டி நீளமான பேவர் ப்ளாக் காரிடார் தான இந்த மரைன் டிரைவ் பகுதி. ஆலப்புழா போல இங்கேயும் கொஞ்சம் அசந்தால் போட்டில் இழுத்து போட்டு போட்டியை உருவிவிடுவார்கள் போல் தெரிகிறது. கையை பிடித்து இழுக்காத குறையாக அழைக்கிறார்கள். மரைன் டிரைவின் இரண்டு முனைப் பகுதிகளிலும் அழகான புதுமையான பாலங்கள் உள்ளன. இரவில் வண்ணமயமாக இருக்கும் போல. நாங்கள் போனது காலை பத்துமணி. அங்கே சுவிஸ்கடிகார மணிக்கூண்டு சிறிதாக அழகாக உள்ளது. அந்த ப்ரிட்ஜ் பகுதியில் வித வித மான கோணங்களில் படம் எடுத்துக் கொண்டோம். மரைன் டிரைவின் ஒரு ஓரத்தில் தான் ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. டிக்கெட் கேட் பாஸ் என வழக்கமான மெட்ரோ நடைமுறைகள் தான இங்கேயும். லேண்ட் மெட்ரோ முழுக்க முழுக்க வானத்தில் தான் பறக்கிறது. சென்னையில் தான் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கிறது. எனவே அவைகளில் கூட்டம் பிதுங்க பிதுங்க ஏறிக் கொள்கிறார்கள். ஆனால் வாட்டர் மெட்ரோ அப்படி செல்ல முடியாது அல்லவா? எனவே உள்ளே வந்தவர்களை பட்டியில் அடைக்கவே ஒரு அறை உள்ளது. அங்கே வரிசைக் கிரமமாக அமர்ந்து கொள்ள வேண்டும். வாட்டர் மெட்ரோ போட் வந்தவுடன் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டும் அனுமதிக்கிறார்கள். முதல் மெட்ரோவுக்கு எங்களுக்கு அடுத்த ஆளோடு முடிந்து விட்டது. லேட்டாக அடுத்த மெட்ரோவில் இடம் கிடைத்தாலும் ஜன்னல் சீட் கிடைத்ததில் மகிழ்ச்சி. முழுவதும் குளிரூட்டப்பட்டு மிகவும் தூய்மையாக பராமரிக்கப் படுகிறது. உள்ளே அமர்ந்திருக்கும் போது எல்இடி திரையில் அவசரகால பாதுகாப்பு முறைகள் பற்றி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அளுங்கள் குளுங்கள் இல்லாமல் அழகாக செல்கிறது. மிகப் பிரமாண்டமான கண்ணாடி ஜன்னல் வழியாக கடலை பார்க்க முடிகிறது. நாங்கள் கடந்தபோது ஒரு பெரிய கப்பலில் இருந்து சரக்கு (ஏங்க இது கண்டெய்னர்ங்க) இறக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எங்களை கடந்து சென்ற ஒரு பெரிய இரண்டு மாடி படகு அந்த கப்பலுக்கு அருகே சென்றது. அங்கே கப்பலோடு பார்த்த போது தம்மாதுண்டாக தெரிந்தது. இந்த ஒப்பீட்டு காட்சியில் தான் கப்பலின் மிக பிரமாண்டமான உயரம் எங்களுக்கு விளங்கியது. அது ஏன் இந்த சரக்கு கப்பல்களில் M S C என்று ஆங்கில எழுத்துக்களை பெரிதாக எழுதி வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை விஷயம் அறிந்தவர்கள் விளக்கி கூறுங்கள். இருபது நிமிடங்களில் ஃபோர்ட் கொச்சி சென்று விட்டது. ஃபோர்ட் கொச்சி அருகே நெருங்கிய போது டால்பின்கள் தண்ணீரில் இருந்து குதித்து மேலெழும்பின. மக்கள் கூட்டமாக ஆர்ப்பரித்து அந்த ஒரு பக்கமாக சென்றுவிட்டனர். போட் ஒரு பக்கமாக சாய்ந்து விடுமோ என்கிற பயத்தில் நான் செல்லவே இல்லை. இவ்வளவு பெரிய போட்டை என் 90 கிலோ எடையால் தாங்கி பிடித்து காப்பாற்றிவிடலாம் என்கிற ஒரு நப்பாசைதான். ஆனால் போட்டில் ஒரு அளுங்கல் குளுங்கல் இல்லை. இறங்கி அப்படியே நடந்து இடங்களை பார்த்துக் கொண்டே சென்றோம். இளநீர் கடை இருந்தது. யாரைக் கேட்டாலும் வேண்டாம் என்றுவிட்டார்கள். “எனக்கு தாகமாக இருக்கு நான் குடிக்கிறேன்“ என்று நின்று கொண்டேன். “நல்ல வழுக்கையாக கொடுங்கள்“ என்று கூறியது தான் தாமதம் ஒவ்வொருவராக தங்களுக்கும் வேண்டும் என்று வந்துவிட்டார்கள். எட்டு பேரில் ஏழு பேர் இளநீர் குடித்தோம். நான் என்னுடையது மற்றும் அகிலாவுடையது என்று இரண்டு இளநீர் வழுக்கைகளையும் சாப்பிட்டேன். (ஒரு வேளை வழுக்கை சாப்பிட்டால் வழுக்கை விழாதோ?!) முதல் நாள் வந்த போது பூட்டிக் கிடந்த வாஸ்கோடகாமா நினைவிடமான அந்த சர்ச் இன்று திறந்து இருந்தது. வாஸ்கோடகாமா சடலம் அந்த பேராலயம் உள்ளேதான் தகனம் செய்யப் பட்டுள்ளது. மீண்டும் சில ஆண்டுகள் கழித்து சடலத்தின் மிச்ச சொச்சங்கள் தோண்டப்பட்டு லிஸ்பன் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தகனம் செய்யப் பட்டுள்ளதாக அங்கே குறிப்பிட்டுள்ளார்கள். அங்கங்கே நின்று பார்த்து படம் எடுத்துக் கொண்டு இருந்த போது லேசாக துவங்கிய மழை சட சடவென அடித்துப் பெய்தது. நானும் சித்துவும் ஓரே ஓட்டமாக ஓடி மெட்ரோ ஸ்டேஷனில் தஞ்சமடைந்தோம். ஏன் சும்மா நிப்பானேன் என்று டிக்கெட் க்யு வில் நின்று டிக்கெட் எடுத்துவிட்டேன். மழைக்காக ஒதுங்கி நின்ற மற்றவர்களும் ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து விட்டனர். கேட்டில் டிக்கெட் களை ஒற்றி எடுத்தவுடன் கழிவறைக்கு எடுத்தேன் ஓட்டம். நல்ல மழை வேறு அல்லவா. மெட்ரோ ஸ்டேஷன் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப் படுகின்றன. மீண்டும் மரைன் டிரைவ் பகுதிக்கே வந்துவிட்டோம். வாட்டர் மெட்ரோ வைபின் ஐலேண்ட் பகுதிக்கும் இயக்கப் படுகிறது. எங்களுக்கு நேர நிர்வாக எல்லைக்குள் அந்த திட்டம் இல்லாத காரணத்தினால் செல்லவில்லை. சரவண பவன் ஓட்டல் மரைன் டிரைவ் பகுதியில் இருக்கு ஆனால் எவ்வளவு தொலைவு? மேப்பில் 600 மீ போட்டு தெளிவான படம் வரைந்து பாகங்கள் குறித்து இருந்தனர். எனவே அனைவரையும் “தோ கிலோ மீட்டர் ” தாத்தா கணக்காக பக்கம் தான் வாங்க என்று நடக்க வைத்தே அழைத்துச் சென்று விட்டோம். நாங்கள் போன நேரத்திற்கே மீல்ஸ் முடிந்து விட்டது. மீல்ஸ் முடிந்து விட்டது என்றதுமே சாரதியும் அருணும் உற்சாகமாகி விட்டார்கள். அவர்கள் விருப்பம் போல் ஃப்ரைட் ரைஸ் சப்பாத்தி என்று தெறிக்க விட்டனர். ஒரே ஒரு மீல்ஸ் அன்பழகன் மாமாவுக்கு கொடுத்து விட்டோம். நான் அந்த மட்ட மதிய வேலையில் தோசை சாப்பிட்டேன். ஏனெனில் சரவண பவன் தோசை ஒரு யுனிக்கான சுவையோடு இருக்கும். சென்னையில் சாப்பிட்ட அதே சுவை எர்ணாகுளத்திலும். இதே சரவண பவன் தோசை சுவை தஞ்சாவுர் பழைய பேருந்து நிலைய வசந்த பவனிலும் கிடைக்கும். (சரியான சாப்பாட்டு ராமன் என்று நினைக்க வேண்டாம். எனக்கு ஜீரண சக்தியோடு ஞாபக சக்தியும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா🤣) சரவண பவனில் இருந்து இரண்டு ஆட்டோக்களில் மெட்ரோ ஸ்டேஷன் விரைந்தோம். தலா நாற்பது ரூபா தான். மெட்ரோவில் லுலு மால் செல்வது தான் சுலபம். ஏனெனில் மெட்ரோ ஸ்டேஷன் டவரில் லுலு மாலின் மூன்றாவது மாடியை இணைக்கும் ஒரு நடைபாதையை சொருகி வைத்துள்ளார்கள். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் லுலுமால் சென்றிருக்கிறேன். நான் பெரும்பாலும் மால் களில் எதையும் வாங்குவதில்லை. வேடிக்கை மட்டும் தான். நிறைய கடைகள் அழகாகவும் அலங்காரமாகவும் உள்ளன. போட்டோ எடுப்பதற்கென்றே ஏராளமான பகுதிகள் உள்ளன. வந்ததற்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்போம் என்று அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கினேன். As I told earlier I am diet conscious You know?! எனவே என்னைத் தவிர அனைவருக்கும் வாங்கினேன். திருச்சி மெயின்காட்கேட்டில் இருவது ரூவாய்க்கு கிடைக்கும் அதே கோன் இங்கே எழுவது ரூபாய். அது போல காபி 90 ரூபாய். நான் பார்த்த வரையில் ஸ்டேஷனரி பொருட்கள் லார்ஜ் ஸ்கேல் பேக்கிங் உள்ளன. அவை சற்று மலிவாக தெரிந்தன. பர்த்டே சாக்லேட் கொடுக்கும் பசங்களுக்கு கொடுப்பதற்காக எனது மேசை டிராவில் டப்பாவில் பேனாக்கள் வைத்திருப்பேன். அதற்காக ஒரு டப்பாவை எடுத்து பார்த்தேன். ஏற்கனவே ஒரு லெதர் பவுச்சை நான் ”விலை அதிகம் ஆனால் குவாலிட்டியாக இல்லை” என்று நிராகரித்த காரணத்தினால் (இதெல்லாம் கம்பெனி சீக்ரெட் பாஸ்) அகிலாவின் பார்வையின் உஷ்ணம் தாங்காமல் அந்த டப்பா தானாக கீழே இறங்கியது. லுலுமாலில் இருந்து வெளியே வந்த போது உலகம் இருட்டிவிட்டிருந்தது. அடப்பாவிகளா இவ்வளவு ஈசியா நேரம் போயிடுதே!! பழனி போனா பஞ்சாமிர்தம் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். ஐயப்பன் கோயில் என்றால் டாலர் பொறி. அது போல கேரளா என்றால் நேந்திரம் சிப்ஸ். ஆகவே மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே அனைவரும் சேர்ந்து மொத்தமாக 1700 ரூபாய்களுக்கு தீனி வாங்கினோம். பேக் இன் ரெஸ்டாரண்டில் இரவு உணவை (Actually ‘LAST SUPPER’ in Baque in) முடித்துக் கொண்டு லாட்ஜ் வந்து பேக்கிங் வேலைகளை தொடங்கினோம். குடும்பத்தோடு சுற்றுலா சென்றாலே போகும் போது 100 கிலோ எடை உள்ள லக்கேஜ் வரும் போது குறைந்தபட்சம் 125 கிலோ ஆகிவிடும். 200 கிலோவை தாண்டுபவர்களை எல்லாம் பார்த்துள்ளேன். இரவு திருச்சி செல்லும் அதே கொச்சின் காரைக்கால் விரைவு வண்டி தான். 10.25 க்கு எடுக்கிறது. நான் அனைவரிடமும் ரயில் பத்து மணிக்கு என்று கூறி வைத்து கிளப்பி கூட்டி வந்திருந்தேன். (மறுபடியும் கம்பெனி சீக்ரெட் பாஸ்) ரிட்டர்ன் பயணத்தில் இரண்டு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. நான் லோயர் பெர்த்தில் படுத்து கண்ணை மூடி திறந்தால் திருச்சி வந்து விட்டது. ஆக, இவ்வாறாக எங்கள் பயணம் இனிதே நிறைவுற்றது. அடுத்த நாள் அமர்ந்து எனது நோட் பேட் ஆப்பில் அவ்வப்போது இட்டு வைத்திருந்த செலவு கணக்குகளை மீட்டு எடுத்து டைரியில் போட்டு கூட்டி வகுத்தால் சராசரி தலா செலவினம் 6500 ரூபாய் வந்திருந்தது. ஆக்சுவலாக நான் தோராயமாக ஏழாயிரம் வரலாம் என்று கூறியிருந்தேன். பரவாயில்லை ஒரு நல்ல டூர் மேனேஜருக்கான சர்வ லட்சணங்களும் வந்து விட்டன என்று என் முதுகை நானே தட்டிக் கொண்டு மாலை வரை ஒரு செம்ம தூக்கம் போட்டேன். எங்க அடுத்த டூர் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில பகுதிகள் அல்லது அந்த மான். எங்களது திட்டமிடல் மற்றும் பயணம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடும் என்கிற வகையில் தான் இந்த தொடர் கட்டுரைகளை எழுதினேன். வாசித்த அனைவருக்கும் நன்றி.

2 comments:

  1. Jayaraj, MSC means shipping company name . If I am not wrong it is" Mediterranean Shipping Company or Corporation....

    ReplyDelete
  2. வயது கூட கூட ஞாபகம் குறையும் என்பார்கள் ஆனால் உங்களுக்கு ஞாபகம் ரொம்பவும் கூட்கொண்டே செல்கிறது வாழ்க வளமுடன் Sir.

    ReplyDelete

அணுக்கரு உலை - அமைப்பு

அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?! " டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!" "ஆமாம்பா, அணு உலை...