Tuesday, September 24, 2024

மதிப்பீட்டு முறைகள் மட்டும் மாறவே மாறாதா?

கல்வித் துறையில் ஏதேனும் சின்ன சின்ன பரபரப்புகள் எழுந்து அடங்கும்போதெல்லாம் எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை என்கிற அங்கலாய்ப்புகள் வருவது வாடிக்கை. ஆனால் EDUCATION SYSTEM என்பது என்ன என்கிற புரிதல் பெரும்பான்மையானவருக்கு இருப்பதில்லை. எஜூகேசன் சிஸ்டம் என்பது பின்வரும் அடுக்குகளை உள்ளடக்கியது.
EDUCATION POLICY அதாவது அரசு கல்விக் கொள்கையை உருவாக்கும். கனடா போன்ற பரப்பளவில் பெரிய நாடுகள் அந்தந்த மாகாணங்களே தங்களுக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் இந்தியா பெரிய துணைக் கண்டம், கலாச்சார பன்முகத்தன்மை உள்ள நாடு. ஆனால் இங்கே கல்விக் கொள்கையை Centralise செய்கிறார்கள். கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மாநில அரசுகள் அவரவர்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளும் வகையில் நெகிழ்வு தன்மையோடு இருத்தலே அவசியம். சரி அது வேற மேட்டர் நாம் விஷயத்துக்கு வருவோம். கல்வி கொள்கைகள் என்பன அவ்வப்போது அமையும் அரசுகளை பொறுத்து மாறும். பொதுவாக கல்விக் கொள்கை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு என்னென்ன விதமான அறிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு தற்போது இருக்கும் நவீன உலகில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மதிப்பு கல்வி இவற்றின் அடிப்படையில் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படும். CURRICULUM FRAMEWORK கலைத்திட்ட வடிவமைப்பு கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை வழிகாட்டியாக கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது கூட NCF2023 புதிய கல்விக்கொள்கைக்கு (NEP 2020) சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இவற்றை கல்வித் துறையின் வல்லுனர் குழு நிர்ணயம் செய்வார்கள். SYLLABUS பிறகு வகுப்பு வாரியாக கலைத்திட்டத்தில் உள்ள விஷயங்கள் பிரித்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். ஆனால் தற்போது நாம் NEET/IIT-JEE என்று இவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டத்தை அமைத்து வைத்திருக்கிறோம். Inclusive ஆக இருக்க வேண்டிய விஷயம் நிறைய மாணவர்கள் தெறித்து ஓடுவதற்கு ஏற்றாற்போல் உள்ளது. கல்லூரிகளில் கணித புலம் காலியாக கிடப்பது கவலைக்குறியது. TEXT BOOKS பாடத்திட்டங்களில் உள்ள கருத்துக்கள் மாணவர்களுக்கு எளிமையாக சென்று சேர ஏதுவாக பாட புத்தகங்கள் எழுதப்படுகின்றன பாட புத்தகங்களை வல்லுநர் குழுவும் பாடத்தில் தேர்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களும் இணைந்து உருவாக்குகிறார்கள். PEDAGOGY பாட புத்தகம் கைக்கு வந்த பிறகு பாடப்புத்தகங்களில் இருக்கும் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியச் செய்வதற்கு கற்றல் கற்பித்தல் முறைகள் ஆசிரியர்களால் வகுக்கப்படுகின்றன. இதற்கு கல்வித் துறையும் வழிகாட்டுதலும் உண்டு. ASSESSMENT மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளதுஎன்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன. கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ற அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் பல இடங்களில் “அந்த காலம் அது வசந்த் அன்கோ காலம்”, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” போன்ற அறிய பொக்கிஷங்கள் இடம் பெற்றுள்ளன. கல்விக் கொள்கை கள் மாற்றம் அடையும்போது அதற்கு ஏற்றார் போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதிய புதிய கல்வி அறிவியல் கருத்துக்கள் எல்லாவற்றையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு பாடத்திட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. அந்த காலத்தில் பாட புத்தகம் என்பது கருப்பு வெள்ளையில் மட்டுமே இருக்கும். படங்கள் அரிதாகவே இருக்கும் அதுவும் கையால் வரையப் பட்டதாக இருக்கும். தற்போது பாட புத்தகங்களில் வண்ண படங்கள் இடம்பெறுகின்றன பாடப் புத்தகங்கள் சார்ந்த கருத்துக்களை காணொளி வடிவில் காண்பதற்கு QR CODE வழங்கப்பட்டுள்ளன. ஆக மாணவர்களுக்கு தேடல் இருந்தால் அவர்களுக்கு கை அருகிலேயே அனைத்து பாடக் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியை செய்ய வல்ல நவீனப்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அநேகமாக வேறு மாநிலங்களில் இவ்வளவு நவீனமாக இல்லை. மணற்கேணி ஆப் மாணவர்கள் ஆசிரியர்கள் பிரத்தியேகமாக பாடம் சார்ந்த காணொளிகளை பார்க்கும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆக பாடப்புத்தக வடிவமைப்பிலும் அதற்கான innovative supporting tools வடிவமைப்பிலும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை. எந்த பாடமாக இருந்தாலும் லக்சர் மெத்தட் ஒரு நாளும் கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த கற்பித்தல் முறை தற்போது மலையேறிப் போனது. தற்போதுள்ள கற்பித்தல் முறைகள் நவீனமாகவும் பன்முகத் தன்மையோடும் உள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆசிரியர்கள் ஆடல் பாடல் பொருத்தமான காணொளிகள் படங்கள் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் என்று நவீன மயமாக கற்றல் கற்பித்தலை உயிரோட்டமாக கொண்டு செல்கின்றனர். ஆக கல்வி அமைப்பில் உள்ள மேலே உள்ள ஐந்து அடுக்குகளும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் இன்றளவும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் பழைய முறையே மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. பரீட்சை பேனா பேப்பர் மதிப்பெண் இந்த முறை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது வருத்தத்திற்கு உரியது. ஆனா பாருங்க இந்த அதரப் பழசான தேர்வு முறையை எவ்வளவு நவீனமயமாக நாம் நடத்தி வருகிறோம். ஆமாம் முன்பெல்லாம் மாணவர் பெயர்ப் பட்டியல் தயார் செய்வது பெரிய வேலை. ஆமாம், மாணவர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் இடம் பெறப் போகும் பெயர் அல்லவா. அதற்கு பிறகு அந்த பெயரில் உள்ள பிழைகளை சரி செய்வது மாபெரும் சிக்கல் நிறைந்த வேலை. அதற்குப் பிறகு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் போட்டோ ஒட்டி தயாரித்து வழங்க வேண்டும் ஆள் மாறாட்டம் செய்ய இடம் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும். மாணவர்களை அறை வாரியாக பிரித்து அமரச் செய்து தேர்வு எழுத வைத்து பேப்பர் வாங்கி அழகாக அடுக்கி மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்புவது என்பது மாபெரும் சிக்கலான பொறுப்பான தலைவலி பிடித்த வேலை. ஆனால் மிக மிக எளிய முறையில் தற்போது ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அவனது தேர்வு பேப்பரிலேயே வந்துவிடுகிறது. பேப்பர் மாறிப் போவதற்கோ ஆள்மாறாட்டம் செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை. அக, தேர்வு நடத்தும் முறை என்பது எந்த ஒரு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கணினி மையப்படுத்தப்பட்டு ஆக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு நவீனமயப் படுத்தப் பட்ட மதிப்பீட்டு முறையில் என்ன சிக்கலை கண்டீர்கள் என்று நீங்கள் எண்ணலாம். மாணவர்கள் தங்கள் அறிவினை பெறுவதற்கு பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. அதே வேளையில் அவர்களின் புரிதலை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்படும் ஒரே வாய்ப்பு இறுதி பரீட்சை அன்று தரப்படும் பேப்பர் பேனாவோடு முடிந்து போகிறது. இங்கே பாடப் பொருள் சார்ந்த நுண்ணறிவை சோதிப்பது என்பது குறைவாகத்தான் இருக்கிறது மாறாக மனப்பாட முறையை சோதிப்பது என்பது தான் 90 விழுக்காடு உள்ளது. மாணவர்கள் செயல்திட்டம் சமர்ப்பிப்பது, செமினார் எடுப்பது, POWER POINT PRESENTATION உருவாக்குவது, பாடம் சார் கண்காட்சி பொருட்களை உருவாக்கி காட்சிப் படுத்தி விளக்கி கூறுவது, பாட கருத்துக்களை கலையாக்கம் செய்வது இப்படி பன்முக தன்மைகள் வகுப்பறைகளில் வெளிப்படுகின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் கொன்று புதைத்து கம்பீரமாக நிற்பது பேப்பரும் பேனாவும் தான். ஒரு வெளிச்ச கீற்று தென்படுவது போல CCE என்கிற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்காவது தனிப்பட்ட வகுப்பு செயல்பாடுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு செயல்பாடுகள் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையை கொண்டிருந்தது. அங்கே மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை வந்து சேரும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் எவ்வளவு முயற்சித்தும் எட்டாம் வகுப்புக்கு மேல் அந்த முறையை கொண்டு வரவே இயலவில்லை. இன்னும் சொல்லப் போனால் அது எட்டாம் வகுப்பில் இருந்து சுருங்கி திரும்பி போய் ஏழாம் வகுப்பில் படுத்துக் கொண்டது. ஆக எல்லாவற்றையும் எண்களாகவே பார்த்து பழகிய பெற்றோருக்கு மதிப்பீடு என்பது எண் சார்ந்த விஷயமாகவே இருக்க வேண்டும் என்கிற ஒரு பிடிவாதம் உள்ளது. அதோடு மட்டுமின்றி மதிப்பீட்டுக்கு எண்கள் வழங்கி விட்டால் அது ஒப்பீடு செய்வதற்கு சுலபமாக இருக்கும். உங்கள் பையன் நன்றாக படிக்கிறான் என்கிற ஒற்றை பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை, எனது பையன் யாரை விட எல்லாம் நன்றாக படிக்கிறான் என்கிற ஒப்பிட்டு மதிப்பீட்டு முறைக்கு பழகிப்போன வர்ணாசிரம அடுக்குகளை கொண்ட சமூகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்களை வழங்கும் கிரேடு முறையை ஏற்பது சற்று கடினம் தான். இந்த மதிப்பீட்டு முறை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடும் பின்லாந்தில் எப்படி இருக்கிறது?! பின்லாந்தை பொருத்தவரையில் தேசிய அளவிலான கட்டாய தேர்வு என்ற ஒன்று அடிப்படை வகுப்புகளுக்கு கிடையாது. சில இடைநிலை வகுப்புகளுக்கு கணிதம் ஆங்கிலம் ஸ்வேதிஷ் ஆகிய பாடங்களுக்கு தேசிய தேர்வுகள் இருந்தாலும் அந்த தேர்வுகளை எழுத செய்வதும் வேண்டாம் என்று மறுதலிப்பதும் ஆசிரியர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார்கள். அங்கே தனது மாணவர்களின் புரிதலை அளப்பதற்கான மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்களே உருவாக்கும் சுதந்திரம் உள்ளது. அவர்கள் முதன் முதலில் எழுதும் தேசிய அளவிலான தேர்வு என்பது மேல்நிலை வகுப்புகளில் இறுதி கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. கீழ்நிலை வகுப்புகளுக்கு WILMA என்றொரு இணைய வழி மூலமாக தொடர் மதிப்பீட்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இங்கே EMIS PORTAL மூலமாக அவ்வப்போது இந்த வகைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கடுத்ததாக எல்லோரும் சிலாகித்த படம் தென்கொரிய கல்வி முறைகளிலும் மதிப்பீடு அனைத்து விதமான வளர்ச்சிகளை HOLISTIC DEVELOPMENT கருத்தில் கொள்ளும் வண்ணமாக மதிப்பீடு முறைகள் உள்ளன . வகுப்பு தேர்வுகள், செயல்திட்டம், பாட இணை செயல்பாடுகளில் பங்கேற்பு போன்றவற்றுக்கு எல்லாம் மதிப்பெண்கள் அங்கே வழங்கப்படுகின்றன. இடைநிலை வகுப்புகளில் தென் கொரியாவில் ஒவ்வொரு வகுப்பிலும் இடைப்பருவ தேர்வு ஆண்டு தேர்வு உள்ளன. அங்கே கிரேட் சிஸ்டம் தான் மதிப்பீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது ரேங்க் கிடையாது. கனடா போன்ற பெரிய நாடுகளில் கல்வி கொள்கைகள் கூட அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வு தன்மையோடு உள்ளது. மதிப்பீடு முறைகளையும் மாகாணங்களே இறுதி செய்து கொள்கின்றன. இங்கே நமது மக்கள் எண்களை கண்டு மயங்கி கிடக்கும் அந்த அறியாமையில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும். எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் போக்கினை மாற்ற வேண்டும். அதுபோல இங்கே ஒழிக்கப்பட வேண்டிய மற்றும் ஒரு விஷயம் ரேங்க் என்கிற தரப்படுத்துதல். அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிவிடுதல், கிரேடு முறை, தரப்படுத்தும் முறையை எல்லா வகையிலும் ஒழித்துக் கட்டுதல் ( ரேங்க்கை ஒழித்தாலும் 600/600 ஐ கொண்டாடுதல் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்களை கொண்டாடுதல் எல்லாவற்றிலும் ரேங்க் ஒட்டிக் கொண்டு தான் உள்ளது) எண்களில் ஒன்றும் இல்லை என்பதை முழுமையாக அனைவருக்கும் தெளிவு படுத்தும் விதமான ஒரு பன்முகத்தன்மை கொண்ட புதிய மதிப்பீட்டு முறை அவசியமாக வரவேண்டும். உணவின் சுவை உணறாது அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கும் ஒரு பசி கொண்டவனைப் போல மாணவர்கள் பாடக்கருத்துகளை புரிந்து கொள்ளாமல் அள்ளிவிழுங்கி தேர்வுகளில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்த அவல நிலை மாற வேண்டும். இதையே மாநில பாடத்திட்ட கருத்துக் கேட்புக் குழுவிடம் நான் கூறியிருந்தேன். இங்கே சற்று விசாலமாக கூறியுள்ளேன்.

Sunday, September 22, 2024

ஆன்லைன் வகுப்புகளின் காலத்தில் கூட ரோபோ ஆசிரியர்களுக்கு இடமில்லை!!

நான் வேலைக்கு சேர்ந்த காலகட்டத்தில் பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பெரும்பாலும் இருக்காது. பள்ளியில் பணிபுரியும் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் தான் ஆங்கிலப் பாடம் எடுப்போம். 2004 துவங்கி 2011 ல் உட்கோட்டை பள்ளியில் இருந்து முதுகலை கணித ஆசிரியராக செல்லும் வரையில் நான் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகவே அறியப் பட்டேன். கணித பாடவேளைகள் ரொம்ப சீரியஸாக செல்லும். ஆனால் ஆங்கிலப் பாடவேளைகள் ரொம்ப ஜாலியாக செல்லும். நான் வாசித்தவை நடப்பு கால நிகழ்வுகள் போன்ற பல விஷயங்களை பாடத்தோடு ஒட்டி கதைக்க நல்ல வாய்ப்பாக அமையும். ஆங்கில துணைப்பாடக் கதைகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்து வைத்து ருசித்து நடத்திய காலம் அது. அந்த காலகட்டத்தில் தான் மேலே நான் சொன்ன தலைப்பில் ஐசக் அசிமோவ் எழுதிய அறிவியல் புனைகதையை நடத்தினேன். நாங்கள் நடத்திய காலத்தில் இந்த பாடம் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Prose ல் Tommy found a Book என்கிற தலைப்பில் வந்து இருந்தது. தற்போது புதிய பாடபுத்தகத்தில் அதே ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Non-detail story பகுதியில் The Fun They Had என்கிற தலைப்பில் வந்துள்ளது. இயல்பிலேயே அறிவியல் சார்ந்த விஷயம் மேல் எனக்கு ஆர்வமுண்டு. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த பாடத்தை அனுபவித்து நடத்தினேன். ஐசக் அசிமோவ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியர். அறிவியல் புனைகதைகள் ஏராளமாக எழுதியவர். இந்த கதைக்கு வருவோம். கதை நடக்கும் காலகட்டம் 2157. டாமி மற்றும் மார்கீ அண்ணன் தங்கை. டாமி வீட்டின் பரண் மீது இருந்து ஒரு புத்தகம் ஒன்றை கண்டு பிடிக்கிறான். அன்றைய காலகட்டம் வன்புத்தகங்கள் சுத்தமாக மறைந்து மென்புத்தகங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் காலம். கசங்கி மடங்கிய காகித புத்தகம் அவனுக்கு வியப்பைத் தருகிறது. அந்த புத்தகம் பழங்கால பள்ளிகள் பற்றிய புத்தகம். அன்றைய காலகட்டத்தில் திரையில் எழுத்துகள் ஓடும் ஆனால் காகித புத்தகத்தில் நிலையாக நிற்கும் எழுத்துகளை வாசிப்பது அவனுக்கு வியப்பை தருகிறது. மார்கீ அவனிடம் அந்த புத்தகம் பற்றி கேட்கிறாள். இது பள்ளிகள் பற்றிய புத்தகம் என்கிறான். அவளுக்கோ பள்ளி என்றாலே வெறுப்பு. பள்ளியை பற்றி எழுத என்ன இருக்கிறது என்று வெறுப்பாக கேட்கிறாள். அவர்களது வீட்டில் பள்ளி என்பது வீட்டில் இருக்கும் கணினி. அது அவர்களுக்கான பாடத்தை நடத்துகிறது. வீட்டுப் பாடம் கொடுக்கிறது. அவர்கள் வீட்டுப் பாடத்தை அதற்கான துவாரத்தில் கொடுக்க அது திருத்தி மதிப்பெண் வழங்கி வெளியே தள்ளுகிறது. பாடவாரியாக நேரம் பிரித்து வைத்து பிள்ளைகளை கணினி முன்பு அமர்ந்து பெற்றோர் படிக்கச் செய்கின்றனர். மார்கியின் பள்ளிக் கணினி அவளுக்கு புவியியல் பாடத்தில் டெஸ்ட் மேல் டெஸ்ட்டாக வைத்து சோதிக்கிறது. அவளும் தொடர்ந்து புவியியலில் பெயிலாகியபடி இருக்கிறாள். அதனாலேயே பள்ளி என்றால் வெறுப்புக்கு உள்ளாகிறாள். இறுதியில் அவளது அம்மா மெக்கானிக் ரோபோவை வரச்செய்து பள்ளியை சரி செய்கிறாள். புவியியல் பாடம் சற்று வேகமாக சென்றுள்ளது. மார்கியின் மீது எந்த தவறும் இல்லை என்று மெக்கானிக் கூறுகிறார். மெக்கானிக் பள்ளி ரோபோவை கழட்டியபோது மார்கி “இதை அவர் மீளவும் பொறுத்த தெரியாமல் போய்விட வேண்டும் அல்லது கொஞ்ச நாட்கள் இந்த ரோபோவை மெக்கானிக் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட வேண்டும்“ என்றெல்லாம் எண்ணுகிறாள். அந்த புத்தகத்தில் உள்ள பழங்கால பள்ளியானது பிரத்தியேகமான இடத்தில் செயல்பட்டுள்ளது. ஊரில் உள்ள சமவயது சிறார்கள் ஒரே வகுப்பில் கும்பலாக அமர்ந்து படிக்கின்றனர். மனித ஆசிரியர் பாடம் நடத்துகிறார். சேர்ந்து விளையாடி மகிழ்கின்றனர். இந்த தகவல்கள் அவர்களுக்கு ஏக்கத்தையும் ஆச்சரியத்தையும் தருவதாக கூறி கதையை முடித்திருப்பார். இந்த கதையில் கல்வி சார்ந்து ஒரு மூன்று விஷயங்களை அசிமோவ் வழி நின்று புரிந்து கொண்டேன். குழந்தைகளின் புரிதல் நிலை அறிந்து பக்குவமாக பாடம் நடத்திட மனித ஆசிரியர்கள் தான் சரி. எத்தனை கேட்ஜெட்டுகள் வந்தாலும் ஒரு ஆசிரியரின் இடத்தை அவற்றால் நிரப்ப இயலாது. வயதொத்த குழந்தைகள் கூடி ஆடி களித்து மகிழ பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள தோதான இடம் பள்ளி மட்டுமே. எவ்வளவு கேட்ஜெட்களை வீட்டில் நிரப்பினாலும் வயதொத்த குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாடிடும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. எத்தனை யுகங்கள் கடந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் விடுமுறை ஏக்கம் என்பது மாறாத ஒன்று என்பதையும் கதைப் போக்கிலேயே அசிமோவ் உணர்த்திச் செல்கிறார். அசிமோவ் அவர்களின் கற்பனையில் பிறந்த ரோபோ ஆசிரியர் என்பவர் இன்று வரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் கணினியின் வளர்ச்சி குறித்த அவரது கற்பனையைத் தாண்டி பலமடங்கு வேகத்தில் கணினி யுகம் வளர்ந்து விட்டது. (அவரது ரோபோ ஆசிரியர் பஞ்ச்டு கார்ட் தான் ரீட் செய்கிறார். பிள்ளைகளும் வீட்டு பாடத்தை பஞ்ச்டு கார்டில் எழுதியே இன்புட் செய்கிறார்கள்) இறுதியாக ரோபோ எனப்படும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த எனது பார்வையை கூறிவிடுகிறேன். நானறிந்த வரையில் சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல இத்தனை ஆசிரியர்கள் தேவையில்லை என்று வெளியேற்றியுள்ளார்கள். மீதம் இருப்போருக்கும் பாதி சம்பளம் வழங்கியிருக்கிறார்கள். இது போலவே பல துறைகளில் ரோபோக்கள் நுழையும் போதெல்லாம் பல நூறு ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். எனவே ஆட்டோமேஷன் என்பது ஆபத்தானது. எனவே ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை வரவேற்கவேண்டாம். வேண்டுமானால் மனிதர்கள் செய்ய இயலாத ஆபத்தான பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, September 12, 2024

அணுக்கரு உலை - அமைப்பு

அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?! " டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!" "ஆமாம்பா, அணு உலைகள்ல எப்படி மின்சாரம் உற்பத்தி பண்றாங்க அப்படின்னு சொன்னீங்க?!" "இன்னைக்கு அந்த அணு உலை எப்படி இருக்கும் அதுல என்னென்ன உதிரி பாகங்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு பார்ப்போமா?!" "அது நானே சொல்றேன் பா, எங்களுக்கு இப்ப பாடத்திலேயே அது இருக்கு!!" " அது இருக்கட்டும் முதன்முதல்ல அணு உலை எப்ப கட்டினாங்க தெரியுமா?! முக்கியமா அணுகுண்டு போட்டதுக்கு பிறகா, அல்லது அணுகுண்டு போடுறதுக்கு முன்னாடியா?! அதை மட்டும் சொல்லு பாப்போம்!!" " எப்படி இருந்தாலும் அணுகுண்டு வெடிச்சதுக்கு பிறகு தானே அதை கட்டுப்படுத்தி ஒரு அறைக்குள் வெடிக்கிறது மூலமா மின்சாரம் தயார் பண்ணலாம் அப்படிங்கிறத கண்டுபிடிச்சி இருப்பாங்க" "அப்படி இல்ல, அணு உலைகள் அமெரிக்காவில் சிக்காகோல 1942-ல என்ரிக்கோ ஃபெர்மி அவர்களால் நிறுவப்பட்டது" " சரி அதுல என்னென்ன இருக்கு நீ சொல்லு பாக்கலாம்!!" " முதலில் அணு உலைக்கான எரிபொருள்" "அணு உலை எரிபொருள் யுரேனியம் தானே?!" "அப்படி பொசுக்குன்னுல்லாம் சொல்லக்கூடாது, யுரேனியத்திற்கு நிறைய ஐசோடோப் இருக்கு எல்லா வகை யுரேனியத்தையும் அணு உலைகள்ள பயன்படுத்த முடியாது,. அணு எடை 235 இருக்கிற யுரேனியம் மட்டும் தான் பயன்படும்" "ஆமா, U235" "ஆனால், இயற்கையா கிடைக்கிற யுரேனியத்துல 0.7% தான் U235 இருக்கும். ஆனா U238 நிறைய இருக்கும் அதை செறிவூட்டுவதன் மூலமா 4% அளவுக்கு U235வ பெற முடியும்" "அருண், ஒரு சந்தேகம்" "கேளுப்பா "
"அணு உலைகளில் யுரேனியம் நிலைமாறு நிறை அளவுக்கு (critical mass ) அளவுக்கு இருக்குமா என்ன?!" "இல்லையே" " அப்படி இருந்தா தானே அணுக்கரு பிளவு தானா நடக்கும்?!" " அப்படி இல்லப்பா, அணுக்கரு பிளவு தானா நடந்தால் அது அணுகுண்டு, கட்டுப்படுத்தி நடக்க வச்சாதான் அது அணு உலை!! அதனால கிரிட்டிக்கல் மாஸ் அளவுக்கு யுரேனியத்த வைக்க மாட்டாங்க, அதுக்கு மாறாக குட்டி குட்டி மாத்திரை வடிவத்தில் பெல்லட்டுகளா மாத்தி அதை உருளை வடிவ குழாய்கள்ல வச்சிருவாங்க அந்த உருளை வடிவ குழாய்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பு மேல செருகப்பட்டு இருக்கும், இதுக்கு பேரு எரிபொருள் தொகுப்பு ( fuel assembly)" "அப்படின்னா, அணுக்கரு பிளவை தொடங்க நியூட்ரான் வேணுமே என்ன செய்வாங்க?!" " அணுக்கரு பிளவு என்றாலே யுரேனிய அணுவை போட்டு பொளக்குறது தான் அது பொளக்குறதுக்கான கோடரி நியூட்ரான், பிளவுக்கு அப்புறம் மூன்று நியூட்ரான் தெறிச்சி ஓடிவரும், அது மீண்டும் மூன்று அணுக்கள போட்டு பொளக்கும், இந்த மாதிரி அந்த ரணகளம் தொடங்கும்" "சரி விஷயத்துக்கு வா நியூட்ரானுக்கு எங்க போவாங்க?!" "சொல்றேம்பா, அவசரப்படாதீங்க!! பெரிலியம் மற்றும் புளுட்டோனியம் கலவை இல்லன்னா பொலோனியம் வைப்பாங்க, இவை நியூட்ரான்கள உமிழும்" "சரி சரி, அணு உலை எரிபொருள் பற்றி விலாவாரியா பார்த்தாச்சு, அடுத்து என்ன ?!" "அடுத்ததா தணிப்பான் ஆங்கிலத்தில் moderators" " ஆமா, இது எதுக்கு, என்னத்த அப்படி தணிக்கப் போறாங்க?!" " அணுக்கரு பிளவு நடக்கும்போது யுரேனியம் அணுவில் இருந்து புறப்பட்டு வரும் 3 நியூட்ரான்களும் அதிவேக நியூட்ரான்கள் ஆகும் அவை அடுத்ததாக மூன்று அணுக்களை பிளப்பதற்கான சாத்தியம் குறைவு எனவே அந்த அதிவேக நியூட்ரான்களின் வேகத்தை தணிப்பதற்கு தணிப்பான்கள் தேவை?" " அது என்ன தொழில்நுட்பம் எப்படி தணிக்க முடியும்?!" " சற்றேறக் குறைய நியூட்ரான்களின் அளவே உடைய மிக மிக குறைவான எடையுள்ள அணுக்கருக்களை கொண்ட தனிமங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும், ஏனெனில் நியூட்ரானின் அளவே இருக்கும் அந்த உட்கருக்கள் உடன் மோதும் போது நியூட்டனின் வேகம் தணிக்கப்படும்"
" ஓ அப்படியா அப்படின்னா தணிப்பான்களா எதை பயன்படுத்துறாங்க?!" " கடின நீர் பயன்படுத்தப்படும்( H2O க்கு பதிலாக ஹைட்ரஜனின் இன்னொரு வகையான டியூட்ரியத்தை கொண்ட நீர் D2O) பெரும்பாலான அணு உலைகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் யுரேனியம் பெல்லட்டுகளுடன் கிராஃபைட்டை கலந்து வைத்து விடுவார்கள் அந்த கிராஃபைட் தணிப்பானாக பயன்படும்" " அணு உலைகளில் திடீர்னு வெப்ப அளவு உயர்ந்து இருக்கும்போது அதை கட்டுப்படுத்தவும் அல்லது பராமரிப்புக்காக சுத்தமாக நிறுத்தி வைக்கவும் ஸ்விட்ச் இருக்கா?!" " அடுத்த காம்பொனண்ட் அத பத்தி தான் சொல்ல வரேன் பா, Control Rods என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டுக் கழிகள் அணு உலைகளில் உண்டு அவைகள் நியூட்ரான்களை பிடித்து விழுங்க கூடியவை." " அதோடு மட்டுமின்றி பெரும்பாலான அணு உலைகளில் மேல் பகுதியில் கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே விழுவதற்கு தயார் நிலையில் பிரத்தியேக அமைப்புகள் மூலமாக வைக்கப்பட்டிருக்கும். சில அணு உலைகளில் கீழே இருந்து மேலே உயர்த்தும் வகையில் கூட வைக்கப்பட்டிருக்கும்" " ஆமா இதை எப்போது பயன்படுத்துவார்கள்?!" "அணுவுலைகளின் வெப்பம் தேவைக்கு அதிகமாக உயரும் போது கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கப்படும், அணு உலைகளின் வெப்பத்தை சரியான அளவில் பராமரிக்க ஏற்றவாறு இந்த கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கவோ அல்லது மேலே எடுக்கவோ செய்வார்கள்"
" அவசரகால நடவடிக்கைகளின் போது உடனடியாக நிறுத்துவதற்கு அணு உலைகளுக்கு மேலே இருக்கும் கட்டுப்பாட்டு கழிகள் முழுவதுமாக உள்ளே இறக்கப்படும் அப்போது நியூட்ரான்களின் வெளிப்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தி அடுத்தடுத்த அணுக்கரு பிளவு வினைகள் நடக்காமல் முடக்கி வைக்கப்படும்" "ஆமாம் இந்த கட்டுப்பாட்டு கழிகள் அதாவது நியூட்ரான் விழுங்கிகள் எந்த மெட்டீரியலில் செய்கிறார்கள்?!" " கட்டுப்பாட்டு கழிகள் என்பவை தகடு போன்றோ குழாய் போன்றோ செய்யப்பட்டிருக்கும், அவை போரான் அல்லது ஹாஃப்னியம் என்கிற தனிமத்தை பயன்படுத்தி செய்திருப்பார்கள்" " பொதுவா எத்தனை கழிகள் அப்படி இருக்கும்?" " ஒரு கொத்தில் 20 கழிகள் வரை இருக்கும் இதுபோன்று பொதுவாக எல்லா அணு உலைகளிலும் 50 கொத்து கழிகள் தயார் நிலையில் இருக்கும்" "எல்லாம் சரிப்பா அணுக்கரு உலையில் வெப்பம் உண்டாக்குறாங்க ரைட், அந்த வெப்பத்தை எப்படி எடுத்துட்டு வந்து டர்பைனை சுழற்றி மின்சாரத்தை உற்பத்தி பண்ணுவாங்க அதைச் சொல்லு?!" "அணுக்கரு உலையில் இறுதியா உள்ள ஒரு முக்கியமான பகுதி குளிர்விப்பான்!!" "இஞ்சின்ல ரேடியேட்டர் மாதிரியா?!"
" கிட்டத்தட்ட அப்படித்தான் அணுக்கரு பிளவு நடக்கக்கூடிய பகுதியில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும் அந்த வெப்பத்தை குளிர்விப்பதற்கு குளிர்விப்பான்கள் பயன்படுத்தப்படும் பொதுவாக நீர் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் கடின நீர் பயன்படுத்துக்கப்படுகிறது இன்னும் சில உலகில் திரவ சோடியமோ அல்லது ஹீலியமோ பயன்படுத்தப்படும் அதிக வெப்ப நிலை காரணமாக இந்த குளிர்விப்பான்கள் ஆவியாகி அந்த ஆவி அதிக அழுத்தத்தோடு குழாய்கள் வழியே வெளியே சென்று டர்பைன் சேம்பரில் உள்ள டர்பைன்களை சுழலச் செய்வது தான் இதில் உள்ள மெக்கானிசம்" " யுரேனியம் ரொம்ப ஆபத்தான கதிர்வீச்சுகளை வெளியிடும் அப்படின்னு சொல்றாங்க இவ்வளவு வேலையும் நடக்கக்கூடிய இடத்தை எப்படி பாதுகாப்பா பராமரிக்கிறாங்க?!"
"நான் மேலே கூறிய அனைத்து பாகங்களும் செயல்பாடுகளும் நடக்கக்கூடிய இடம் தான் அணுக்கரு உலை இருக்கும் இடம், அந்த மைய மண்டபமானது containment Vessel என்று சொல்லக்கூடிய ரேடியேஷனை வெளிவிடாத உலகத்தால் மூடப்பட்ட அமைப்பில் இருக்கும். அதற்கு மேலாக ஒரு மீட்டர் தடிமனுக்கு மேலான அளவுக்கு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அமைப்பு இருக்கும், எனவே ரேடியேஷன் அளவானது மிகவும் பாதுகாப்பான அளவிலேயே வெளியேறுமாறு பராமரிக்கிறார்கள்" " பரவாயில்லயே உங்க பாடத்தில் இருக்கிற இந்த பகுதியே தெளிவாத்தான் படிச்சு வச்சிருக்க!! சந்தோஷம், அடுத்தது அந்த அணுஉலைகளில் எரிபொருள் நிரப்புவது அது செயல்படும் விதம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாக்கும் அமைப்புகள் இதுபோன்று அணுஉலையின் அனைத்து செயல்பாடுகளையும் பற்றி பார்ப்போம்" "ஓகே ப்பா, அடுத்து உங்க டர்ன், நான் கேப்பேன் நீங்க சொல்லணும் சரியா?!" "டபுள் ஓக்கே"

Monday, August 5, 2024

*ஹிரோஷிமா பேரழிவு"

இன்று ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம். அணுகுண்டின் வரலாறு குறித்து நான் எழுதியுள்ள எனது நூலில் இருந்து ஒரு அத்தியாயம். ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட அன்றைய நிகழ்வு உங்கள் பார்வைக்கு. ***ஹிரோஷிமா பேரழிவு***
“அணுகுண்டை பயன்படுத்தித் தான் ஆக வேண்டுமா? தற்போது உள்ள முறையிலேயே குண்டுகள் தொடர்ந்து வீசி ஜப்பானை வழிக்கு கொண்டு வந்து விட முடியுமே” என்று அமெரிக்க ராணுவத்தில் ஒரு யோசனை முன்வைக்கப் பட்டது. “அமெரிக்க ராணுவம் ஏற்கனவே ஜப்பானால் ஏராளமான உயிர்ச் சேதத்தை கண்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய நவீன ஆயுதம் இருந்தும் பழைய முறையிலேயே சண்டையிட்டு நமது வீரர்களை சாகவிட்டுள்ளார்களே என்று நாளைய வரலாறு நம்மை தவறாக பேசக்கூடும், ஆக நோ செகண்ட் தாட், குண்டை வீசிவிட வேண்டியது தான்” என்று கூறிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ருமென். அமெரிக்காவின் சரணடைதல் குறித்த எச்சரிக்கையை முற்றிலும் ஜப்பான் நிராகரித்துவிட்டது. “ஆகஸ்ட் 3 க்கு பிறகு என்றைக்கு வேண்டுமானால் அணுகுண்டை வீசுங்கள், எனக்கு வெற்றிச் செய்தி மட்டும்தான் தேவை” என்று அமெரிக்க அதிபர் ராணுவத்திற்கு உத்தரவு போட்டுவிட்டார். “அது என்ன ஆகஸ்ட் 3 க்கு பிறகு?” என்று தானே கேட்குறீர்கள், ஆகஸ்ட் 2 வரைக்கும் பாட்ஸ்டேம் உச்சி மாநாடு நடந்து வருகிறது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்கிற வார் எதிக்ஸ் தான் காரணம். ஜப்பானிலிருந்து 1400 மைல் தொலைவில் உள்ள டினியன் தீவில் அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தான் இந்த அணுகுண்டு வீசும் நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டுக் கேந்திரம். ஜெனரல் ஃபெர்ரல் தான் தலைவர். ஆகஸ்ட் 4 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு “ஜப்பான் மீது 20000 டன் டி.என்.டி க்கு நிகரான அழிவை ஏற்படுத்த வல்ல ஒரு சக்திவாய்ந்த குண்டை போடப் போகிறோம் மூணு மைல் சுற்றளவுக்கு அனைத்தும் சாம்பல் ஆகப் போகிறது” என்று தனது குழுவினருக்கு தெரிவிக்கிறார் ஜெனரல் ஃபெர்ரல். ஆகஸ்ட் 5 ம் தேதி காலை 8.47 க்கு கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வருகிறது. “அடுத்த 24 மணி நேரத்திற்கு ஜப்பான் வானிலை கிரிஸ்டல் கிளியர” என்கிறார் அமெரிக்க ராணுவ ரமணன் சார். ஆகஸட் 6 ம் தேதி அதிகாலை 2.45 க்கு டயர்ல எலுமிச்சம் பழம் வச்சி நசுக்கி அணுகுண்டோடு விமானம் பறக்கத் துவங்கலாம் என்று நாள் நட்சத்திரம் குறிக்கப் படுகிறது. குண்டு எடுத்துச் செல்லும் விமானம் எனோலா கே என்றும் விமானி டிப்பெட் என்பதையும் முடிவு செய்கின்றனர். ஆகஸ்ட் 5 அதிகாலை 2.00 மணிக்கு “லிட்டில் பாய்” அமெரிக்க போர் விமானமான “எனோலா கே” வில் ஏற்றப் படுகிறது. அப்போது குட்டிப் பையனுக்கு உயிரூட்டப் படவில்லை. ஆமாம், ராணுவக் கேந்திரத்தில் யுரேனியம் நிரப்பும் போது ஏதேனும் எசகு பிசகாக ஆகிவிட்டால் “டினியன்” தீவு பூமிப் பந்தில் இருந்து துடைத்து எறியப் பட்டுவிடும். எனவே யுரேனியம் நிரப்பும் வேலையை வானத்தில் பாத்துக்கலாம் என்று கூறி தொழில்நுட்ப வல்லுனர்களும் “எனோலா கே” வினுள் இழுத்துப் போடப்படுகின்றனர். நள்ளிரவு 02.31 க்கு டார்கெட் இறுதி செய்யப் படுகிறது. ஆமாம், ஏற்கனவே ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி இந்த மூன்று விரலில் ஒன்றைத் தொட்டு முடிவெடுக்கலாம் என்று வைத்திருந்தனர். இப்போதுதான் ஹிரோஷிமாவில் இருக்கும் ‘T” வடிவ பிரிட்ஜ் தான் டார்கெட் பாய்ண்ட் என்று ஸ்கெட்ச் போடுகின்றனர். பைலட் டிப்பெட் ரகசியமான ஒரு மாத்திரை குப்பியுடன் தனது கேபினுக்குள் நுழைந்து இக்னிஷனை ஸ்டார்ட் செய்கிறார். 02.45 க்கு எனோலா கே மேலே எழும்பி தனது டயர்களை வயிற்றுக்குள் போட்டு மூடிக்கொண்டது. கூடவே தி கிரேட் ஆர்டிஸ்ட் அப்புறம் ஒரு வெதர் ரிப்போர்ட் செய்யும் விமானம் என்று மூன்று விமானங்கள் மிஷனுக்குள் இறக்கிவிடப் பட்டன. வெதர் ரிப்போர்ட் விமானம் ஒரு மணிநேரம் முன்னதாக டார்கெட்டை அடைந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப் பட்டிருந்தது. ஆகஸ்ட் 6 காலை 06.27 எனோலா கே ஜப்பானிய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கிறது. குறுக்கே எந்த ஜப்பானிய விமானமும் வந்து வழி மறிக்க வில்லை. ஹிரோஷிமா 300 மைல் தொலைவில் இருந்தது. “லிட்டில் பாய்” ன் வயிற்றுக்குள் யுரேனியம் நிரப்பும் வேலையும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 07.30 வெதர் ரிப்போர்ட்டிங் விமானம் ஹிரோஷிமாவை அடைந்து எனோலா கே க்கு “ஆல் கிளியர்” வாங்க பாஸ் என்ற சிக்னல் கொடுக்கிறது. 08.15 க்கு எனோலா கே ஹிரோஷிமா எல்லைக்குள் நுழைந்தது. டிப்பெட் கீழே உற்று நோக்கி அந்த “T” வடிவ பிரிட்ஜை தேடிக் கண்டடைந்தார். பாம் விடுவிக்கும் ஸ்விட்சை அழுத்த லிட்டில் பாய் மெல்ல இறக்கப்படுகிறது. பாராசூட்டில் பறந்த படி கீழே இறங்குகிறது. எனோலா கே சர்ரென்று யு டர்ன் எடுத்து வேலையை முடித்து கிளம்புகிறது. தரையில் இருந்து 2000 அடி உயரத்தில் வெடிக்க வைக்கப் படுகிறது. வெடித்த அந்த நொடியில் ஐந்து லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வெளியாகிறது. நியுட்ரான் மற்றும் காமா கதிர்கள் போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு வெளியாகி வேலையை துவங்குகிறது. கிரௌண்ட் ஜீரோ வில் இருந்து அரை மைல் தொலைவில் இருந்த ஒட்டா ஆற்றங்கரைப் படிக்கட்டில் இருந்த பெண்மணி ஆவியாகி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூரையில் இருந்த ஓடுகள் உறுகி ஒட்டிக் கொண்டன. வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை உருகி விட்டிருக்கிறது. கிரானைட் கற்கள் கூட உருகியிருக்கிறது. மரக் கட்டைகளால் ஆன டெலிபோன் பூத் உடனடியாக கரிக்கட்டையாகி இருக்கிறது. சூரியன் தனது வெப்பமயமான ஒளியை ஐந்தரை மைல் தொலைவில் இருந்து பாய்ச்சினால் எவ்வளவு வெப்பமோ அதைவிட பத்து மடங்கு வெப்பம் உணரப் பட்டிருக்கிறது. காளான் போல மேலெழும்பி போன மேகம் போன்ற அமைப்பினால் கதிரியக்க மழை கறுப்பாக பொழிந்திருக்கிறது. ஏற்கனவே ஏற்பட்ட வெடிப்பில் தப்பியவர்களை அந்த மழையின் கதிரியக்கம் தாக்கியிருக்கிறது. மேலும் ஏகப்பட்ட நீடித்த உடல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (இதனை ஓபன்ஹைமர் குழுவினர் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் டிரினிடி டெஸ்ட் பாலைவனத்தில் நடந்த காரணத்தினால் கதிரியக்க மழை பெய்ய போதுமான ஈரப்பதம் இல்லையாம்) காளான் போன்ற மேகம் மேலெழும் போது அதனைப் பார்த்துக் கொண்டே விமானத்தை விரட்டிக் கொண்டு இருந்தார் டிப்பெட். அவர் வைத்திருந்த குப்பியில் இருக்கும் சயனைடு மாத்திரைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஆமாம், பின்ன லட்சக்கணக்கான மக்கள் சாவு ஆகையால் மிஷன் அக்கம்ப்ளிஷ்டு அல்லவா?!

Tuesday, July 9, 2024

கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!!

கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!! எனது மகன் அருணும் அவனது நண்பன் ஒருவனும் இயற்பியல் சம்பந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர் அவனது நண்பன் கணிதம் இல்லாத அறிவியல் பாடப்பிரிவில் படிப்பவர். "டேய் அருண் இந்த ஸ்டெப் எங்கேருந்துடா குதிச்சிது?" "டேய் அது பைனாமியல் தியரம் டா?!" " எது பைனமியலா?!" " ஆமாண்டா அது 11-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் வரும்" இதுக்கே இப்படி என்றால் Integral symbol எல்லாம் வரும் இடங்களில் 'என்னது கொட கம்பியை போட்டு வச்சிருக்காங்க?' என்றெல்லவா கேட்பான் மேல்நிலை வகுப்புகளில் ஃபர்ஸ்ட் குருப் செகண்ட் குருப் என்றெல்லாம் பாடவாரியாக பிரிவுகள் உண்டு. தேர்வு நோக்கங்களுக்காக குருப் கோட் எண்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கும். அந்த எண்கள் தான் தமிழகம் முழுவதும் யுனிக்காக இருக்கும். மற்றபடி குருப்புகளின் பெயர்கள் பள்ளிக்கு பள்ளி வேறுபட்டு இருக்கும். மொழிப்பாடங்களோடு சேர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என்கிற பிரிவு தான் காலங்காலமாக முதல் குருப் என்று அழைக்கப் பட்டு வந்தது. 90 களின் துவக்கத்தில் கணினிப் பிரிவு என்ற ஒன்று அறிமுகம் ஆகிய போது இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று மற்றுமொரு ஃபர்ஸ்ட் குருப் உதயமானது. இவையன்றி Pure Science Group என்ற ஒன்று இருக்கும். அங்கே இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் இருக்கும். அதாவது உயிரியல் பாடம் சற்று பல்க்காக தனித்தனியாக இருக்கும் அவ்வளவு தான். ”எனக்கு கணக்குன்னா தாங்க பயம் மற்றபடி எனக்கும் கனிணி அறிவியல் பிடிக்கும்” என்று கூறும் பசங்களுக்காக கணக்கு இல்லாத கனிணி அறிவியல் பிரிவொன்றும் உதயமானது. அதாவது அவர்களுக்கு இயற்பியல் வேதியியல், கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்கள் இருக்கும். பிரச்சனை என்னவென்றால் இயற்பிலிலும் சரி வேதியியலிலும் சரி ஏராளமான மேல்நிலை கணித கருத்துக்கள் அந்த பாடங்களை தூணாக இருந்து தாங்கி நிற்கும். மேல்நிலைக் கணிதம் பயிலாத மாணவர்கள் அதை அப்படியே விழுங்கித் தொலைக்க வேண்டியதுதான். ஒரு ஆனியனும் புரியாது. அறிவியலின் ராணி கணிதம் என்பார்கள். கணித அறிவு இல்லாத ஒருவர் இயற்பியலையோ வேதியியலையோ ஆழமாக புரிந்து கொள்ள இயலாது. அதுவும் போக கணிதப் பாடம் இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை 11 & 12 வகுப்புகளில் படிக்கலாம் ஆனால் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் சேர முடியாது. ஏனெனில் அங்கே அவர்களுக்கு கணிதப் பாடம் துணைப்பாடமாக வரும். கட்டாயமாக 3 பேப்பர்கள் கணிதம் உண்டு. கணித அடிப்படை அறிவு இல்லாத ஒருவர் கணினி நிரல்கள் எழுதுவதில் விற்பனர் ஆகமுடியுமா. இந்த Pure science படிக்கும் மாணவர்கள் அறிவியலை Impure ஆகத்தானே படிக்கிறார்கள். கணிதம் இல்லாமல் அவர்களுக்கு இயற்பியலோ அல்லது வேதியியலோ தெளிவாக புரியுமா. மேலும் அவர்களால் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியலையோ அல்லது வேதியியலையோ எடுத்து படிக்க இயலுமா? அதோடு மட்டுமல்லாமல் கணிதம் இல்லாத அறிவியல் பிரிவு மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை எழுத வேண்டிய சூழல் உள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியலில் உள்ள 50 ல் 38 வினாக்கள் கணிதக் கருத்துகளை ஒட்டியே இருந்தன. உயிரியல் பாடங்களை படித்து பி.எட் படித்து தேறியவர்கள் ஆசிரியப் பணிக்கான TET தேர்வினை எழுத வேண்டும். அவர்கள் கணிதப் பாடத்தை உள்ளடக்கிய TET தேர்வினைத் தான் எழுத வேண்டும். உயிரியல் பாடங்கள் படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு TET ல் கணிப் பாட வினாக்கள் சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன். நான் கணிதப் பாடம் தான் உசத்தி எல்லோரும் கணிதப் பாடத்தை படித்தே ஆகவேண்டும் என்று கூறவில்லை. அதே வேளையில் அறிவியல் பாடங்கள் படிப்போர் மட்டுமாவது கணிதப் பாடத்தை உள்ளடங்கிய குருப் எடுத்து படிப்பது பல வகைகளில் அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. முக்கியமாக நான் இந்த கட்டுரையை எழுத நேர்ந்த காரணம் இனிமேல் தான் வருகிறது. எங்கள் பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பெற்ற மாணவி அவர். தமிழகத்தில் முதலில் 11 மாவட்டங்களில் மட்டும் பைலட் ப்ராஜக்ட்டாக சிறப்பு மாதிரி பள்ளிகள் துவங்கப் பட்டபோது அரியலூரிலும் வந்தது. அந்த பள்ளியின் வசதி வாய்ப்புகள் பற்றி அறிந்த காரணத்தினால் அந்த மாணவிக்கு அங்கே இடம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி இருந்தேன். அந்தப் மாணவியின் தந்தையும் ஆர்வமாக இருந்தார். ஆகஸ்ட் மாத வாக்கில் அந்த மாணவிக்கு இடம் கிடைத்து இருப்பதாக மெயில் வந்தது. உடனடியாக அழைத்து தகவல் கூறினேன். அவர் பயின்று வந்த பள்ளியில் இருந்து இங்கே வந்து சேர வேண்டும். அடுத்த நாள் அவர் தந்தைக்கு பேசினேன். “சார் அங்க கணக்கு இல்லாத பயாலஜி குருப் தான் சார் இருக்கு. ஒரு வேளை மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங்கோ அல்லது இயற்பியல் வேதியியல் பாடங்களையோ படிக்க முடியாது, அதனால வேண்டாம் என்று வந்து விட்டோம் சார்” என்றார் இந்த ஆண்டும் ஒரு மாணவிக்கு இடம் கிடைத்தது. அவர் மருத்துவம் படிப்பதையே இலக்காக கொண்டு படிப்பவர். ஆனால் அவருக்கு உயிரியல் இல்லாத கணிதப் பிரிவுதான் கிடைத்தது. இரண்டு வார காத்திருப்புக்குப் பிறகு யாரோ ஒரு உயிரியல் பிரிவு மாணவி டிசி வாங்கியதால் இவருக்கு கிடைத்தது. கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு இருந்தால் அலைக்கழிப்பு இன்றி சேர்ந்திருப்பார். இன்று வரையில் சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் இருக்கும் நிலை இதுதான். அங்கே NEET க்கான பிள்ளைகள் தனியே மற்றும் IIT-JEE மற்றும் இதர பொறியியல் சார்ந்த படிப்புகள் தனியே என பிரித்து பயிற்றுவிக்கிறார்கள். முன்னவர்கள் இயற்பியல் வேதியியலோடு, உயிரியல் மற்றும் கணினி படிக்கிறார்கள். பின்னவர்கள் உயிரியலுக்குப் பதிலாக கணிதம் படிக்கிறார்கள். எல்லோரும் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு படிக்கட்டும், சிறப்பு வகுப்புகள் மற்றும் இணைய வழி கோச்சிங் மட்டும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப NEET OR IIT-JEE ல் சேர்ந்து படிக்கட்டுமே. மாவட்டம் முழுவதிலும் இருந்து படிப்பில் கெட்டிக்கார குழந்தைகளைத் தான் தேர்வு செய்து சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். நீட் எழுதும் குழந்தைகள் கூடுதலாக கணிதப் பாடத்தை பயில்வதால் என்ன ஆகிவிடப் போகிறது. மேலும் சேரும் அனைத்து குழந்தைகளையும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த உடன் நீட்டில் அரசுக் கல்லூரி கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற வைத்து விடமுடியுமா. 90 விழுக்காட்டுக்கு மேல் Repeaters தான் அரசுக் கல்லூரிகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டையும் பிடிக்கிறார்கள். மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங் என்பதே பெரும்பாலான பெற்றோரின் சிந்தனைப் போக்காக இருக்கிறது. மெடிக்கல் கிடைக்காத நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் அந்த குழந்தைகள் இஞ்சினியரிங் படிக்க எண்ணினால் அதற்கு வாய்ப்பு இல்லையே. நீட் தேர்வு வினாக்களிலேயே இயற்பியலில் கேட்கப்படும் வினாக்களில் பெரும்பகுதி கணக்கை அடிப்படையாக கொண்டவை என்பதால் மேல்நிலையில் கணக்கை கூடுதலாக படிப்பதால் என்ன நட்டமாகிவிடப் போகிறது. அரசுப் பள்ளியோ, சிறப்பு மாதிரிப் பள்ளியோ பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையோடு மாணவனை வெளியே அனுப்பி விடப் போகிறோம். அவன் ஒரு வேளை Repeater ஆக NEET தேர்வு எழுத எண்ணினாலும் அது அவனது சொந்தப் பொறுப்பில் தான். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் ஆனாலும் கூட 7.5% ஒதுக்கீட்டை பெற Repeater ஆக கோச்சிங் சேர்ந்து தேர்வு எழுதினால் தான் இடம் உண்டு. ஆகவே தனியார் கோச்சிங் செல்ல வசதி வாய்ப்பு உள்ள அரசுப் பள்ளி மாணவன்தான் NEET மூலமாக மெடிக்கல் சீட் பெறமுடியும் என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கும் போது மாவட்டத்திலேயே சிறப்பிடம் பெற்ற குழந்தைகளை பொறுக்கி எடுத்து கோச்சிங் கொடுத்து மெடிக்கல் இல்லை என்றால் இஞ்சினியரிங் என்கிற வாய்ப்பினை ஏன் அடைக்க வேண்டும். இறுதியாக கணக்கு இல்லாத அறிவியல் குருப் என்பது சுத்த மோசடியான விஷயம். அறிவியல் என்பது கணக்கோடு இணைந்தே பயணிக்க வேண்டிய ஒன்று. பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருக்க வேண்டுமானால் கணிதப் பாடம் அவசியம் வேண்டும். அவர்களுக்கான அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கட்டுமே!! கீழே படத்தில் இருப்பது 12 ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகம் பாருங்கள் எவ்வளவு கணக்குகள் இருக்கின்றன என்று நிச்சயமாக இந்த விஷயங்கள் கணிதம் சாராத அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு புரியாது

Monday, July 1, 2024

கறிவிருந்து!!

"அகிலா கறி எடுக்கட்டுமா உனக்கு சுவரொட்டி வாங்கிட்டு வரேன்" "ஞாயிற்றுக்கிழமை ஒரு பங்க்ஷன் திருச்சியில் இருக்கு அங்க மத்தியானம் நான் வெஜ்தான் கண்டிப்பா போடுவாங்க ஞாயிற்றுக்கிழமை ஃபங்ஷன் வேற!!" நம்முடைய தொடர் டயட்டை கரெக்டா ஃபாலோ பண்ணனும் என்கிற எண்ணத்தில் இரண்டு நாட்கள் முன்பில் இருந்தே ஞாயிற்றுக்கிழமை கறி விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை வேறு விஷயமாக தஞ்சாவூர் சென்றபோது வசந்த பவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை!! அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். அன்றைக்கு ஞாயித்துக் கிழமைன்னு கூட பாக்கலையே!! கொஞ்சம் கம்மியான சொந்தம் தான், வழக்கமாக ஒரு ஆள் போனா கூட போதும் தான். ஆனா இந்த ஃபங்ஷன் க்கு குடும்பத்தோடு தான் போவது என்று மூன்று காலில் நின்றோம். அதாவது மூவருமே ஒற்றைக் காலில் நின்றோம். "ஏங்க, நான் மட்டும் அக்கா கூட போயிட்டு வந்துடறேன், நீங்களும் அருணும் வீட்டிலேயே இருங்க!!" என்று ஒரு திடீர் குண்டை வீசினார். "ச்சேச்சே அப்படி செய்யறது மரியாத இல்ல, நம்மள மதிச்சி கூப்டாங்க, குடும்பத்தோட வாங்கன்னு வேற சொல்லி இருக்காங்க" அவ்வ்... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. காலை பத்து மணிக்கு ஒன் டு ஒன் பஸ், 200% உறுதியாக அகிலாவால் கிளம்ப முடியாது. அடுத்ததாக உள்ள பேருந்தை பிடித்தோம். 1-1 ஐ விட்டாலும் 1-5 ஐ பிடித்தோம். திருச்சியில் எந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொண்டு மேப்பில் பத்துமுறை சரி பார்த்துக் கொண்டேன். "அகிலா, எங்க வந்துட்டு இருக்க?!" அகிலா அக்காவிடம் இருந்து போன். "ஏன் பந்தி முடிய போவுதா?! என்று பதட்டமானேன். "உங்களுக்கு வழி தெரியுமான்னு கேட்டாங்க!!" "அகிலா, எங்க ஊரு சுத்தமல்லியை விட எனக்கு திருச்சியைத்தான் நல்லாத் தெரியும் நீ கவலைப் படாதே!!" மண்டபத்தில் இருந்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருந்தது. மடமடவென்று வேகமாக கிரவுண்ட் ஃபுளோர் உள்ளே நுழையப் போனேன். "ஏங்க மேலப் போயி மேடைல மொய் கொடுத்துவிட்டு வந்துடுவோம்" "சாப்டு தெம்பா மேல போலாமே!!" என்றதற்கு அகிலா கோபப் பார்வை வீசினார் அந்தப் பார்வையின் அர்த்தம் "அலையாதீங்க". லேசாக ஒருக்களித்து திறந்திருந்த கதவின் வழியே வரிசையாக பரப்பி வைத்த பீடா "சீக்கிரம் வாங்க பாஸ்" என்று கண் சிமிட்டியது. "மாப்ள, சாப்டு வந்துடுங்க தீர்ந்துடப் போவுது" என மாமா கேட்ட மாத்திரத்தில் திகீர் என்றது. போன உடனே மேடையேறி மொய் கொடுத்தோம். அடுத்த நொடியே கீழே நோக்கி பாயும் தோட்டாவாக மாறிய என்னை மீண்டும் தடுத்து நிறுத்தி, "ஏங்க, அக்காவ விசாரிச்சிட்டு போவோம் வாங்க" என்று முகமே மறந்து போன முன்னூறு கிமீ தூரத்து சொந்தம் ஒருவரை நோக்கி அழைத்துச் சென்றார் எனது மனைவி. அடுத்து ஒரு அண்ணன் அதற்கடுத்து சில அடையாளம் தெரியாத பந்தங்கள். "தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணம் நிகழும்" என்ற பாடலின் பொருள் விளங்கிய தருணம். ஒரு வழியாக கீழ்தளத்தில் இருந்த சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தோம். போகும்போதே இலைகளை ஸ்கேன் செய்தபடி சென்றேன். மட்டன் சுக்கா, சிக்கன் 65, மட்டன் பிரியாணி இத்யாதிகள் கண்களை குளிரச் செய்தன. அமர்ந்த உடனே "இது வெஜிட்டேரியன் வரிசை இல்லையே" என அருகில் இருந்த வயதான நபரிடம் வினவினேன். அவர் "என்னது வெஜிடேரியன் வரிசையா?!" வித்தியாசமாக நோக்கினார் அப்போது தான் அந்த பெருத்த ஏமாற்றமான துன்பியல் சம்பவம் நடந்தது. ஆக்சுவலாக அங்கே வெஜிடேரியன் விருந்து மட்டுமே ஏற்பாடு ஆகியிருந்தது. நான் கண்டதாக மேலே கூறியவை யாவும் தோற்றப்பிழையே!!(optical illusion) சேனைக்கிழங்கை பொறியல், காலிஃபிளவர் 65 மற்றும் மஷ்ரூம் பிரியாணி இவை தான் எனக்கு அப்படி காட்சியளித்தன. "என்னங்க, வெஜ்ஜூ" என்று அகிலா ஜ் ல் கொடுத்த அழுத்தம் தாளாமல் அந்த இடத்தில் பூமி அரையடி அழுந்தியது. "நீயும் அப்படித்தானே நெனச்ச?! அப்போ நான் நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்ற விவேக் டெம்ப்ளேட் தான் ஞாபகம் வந்தது. போட்டது வெஜ் பிரியாணி & மீல்ஸ் அதுக்கு பீடா ஒன்னுதான் கொறைச்சல் என்று ஐஸ் கிரீமில் கரையைக் கடந்தோம். "அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்த பொழுது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது!!" அட, இந்த கவிதை எல்லா இடங்களிலும் சிக்குன்னு பொருந்திப் போவுதே!!

Saturday, June 22, 2024

அவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுப்போம்!

"நாங்க Msc அ படிக்கப்போறோம் அப்புறம் எறும மாடு மேய்க்கப் போறோம்" என்கிற வரியோடு ஒரு கானா மாதிரியான பாடல் 90 களில் பிரபலம். நான் கல்லூரி படித்த காலத்தில் ஊருக்கு வரும் போதெல்லாம் விசேஷங்களில் இந்த பாடலை அலற விடுவார்கள். சரியாக இந்த வரியை பாடி என்னை வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு. ஊரில் வேலையின்றி இருந்த பட்டம் படித்த முந்தைய தலைமுறை மற்றும் இந்தமாதிரி தற்குறித்தனமான பாடல்கள் நிறைய பேரை கல்லூரி வாசல்களை மிதிக்க விடாமல் செய்துள்ளன. எப்படியோ உயர்கல்வி குறித்த எதிர்மறை சிந்தனைகள் கிராமங்களில் வேர்விட்டு விஷச் செடியாக வளர்ந்து தொலைத்துவிடுகிறது. தற்போது உயர்கல்வி குறித்த ஏராளமான informations and success stories உண்டு. அவைகளை உரியோரிடம் சேர்த்து எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டும். ஒரு சம்பவம். அவர் ஒரு பிரமாதமாக படிக்கும் மாணவி. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு நல்ல மதிப்பெண்ணோடு வெளியே செல்வார் தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார் என்று எண்ணியிருந்தோம், ஆனால் கொரோனா காரணமாக தேர்வு இன்றி பத்தாம் வகுப்பு தாண்டி சென்றுவிட்டார். தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளியில் பயின்றவருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நேரம் இந்த மாணவி ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு (aided school)சென்று விட்டார். நான் கூட அவர்களுடைய பெற்றோரை கடிந்து கொண்டேன். அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் படிக்க வைத்தால் அவர் நிச்சயமாக 7.5% ஒதுக்கீட்டில் நல்லதொரு மேற்படிப்பை தேர்வு செய்து விடுவார் என்று கூறினேன். சென்ற ஆண்டு அந்த மாணவியை பற்றி அவரது உறவினரிடம் விசாரித்த போது 550+ மதிப்பெண்ணோடு பன்னிரண்டாம் வகுப்பை தேறி இருந்தார். நிச்சயமாக பொறியியல் பிரிவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் அவர் NEET தேர்வுக்கு தயாராவதற்காக ஓராண்டு கோச்சிங் சேர்வதாக கூறியிருந்தார். எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது ஏனெனில் ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் சேரும் அனைவருமே அதற்கடுத்த ஆண்டில் நல்ல மதிப்பெண்ணோடு டாக்டர் சீட் பெறுவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. ஆனாலும் நீட் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது தான் தனது லட்சியம் என்று பிடிவாதமாக ஓராண்டு சிறப்பு பயிற்சிக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவரது அம்மாவுடன் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தார். அப்போது விசாரித்தால் இந்த ஆண்டு நீட்டில் மிகச்சிறப்பான ஒரு மதிப்பெண் பெற்றிருந்தார். உறுதியாக அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கென்று ஒரு லட்சியத்தை வரித்துக் கொண்டு விடாப்பிடியாக அதை நோக்கி பயணித்து வெற்றியும் பெற்றுவிட்டார். மற்றுமொரு சம்பவம்!! இன்று ஒரு மாணவனை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனது பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தனர் அவனுடைய அப்பா அம்மா வேறு ஊர் இவன் தனது பெரியம்மா வீட்டில் தங்கி படிக்க இருக்கிறான். ஏற்கனவே இது போல நிறைய மாணவர்கள் உறவினர் வீட்டில் தங்கி படிப்பதற்கு என்று வந்து விட்டு அடுத்த ஆண்டுகளிலேயே வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள். அதோடு மட்டுமின்றி வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கட்டுப்பாடு இன்றி இருப்பார்கள். படிப்பிலும் பின்தங்கி இருப்பார்கள் எனவே பள்ளியில் சேர்ப்பதற்கு நிச்சயமாக அவனுடைய பெற்றோர் வரவேண்டும் என்று கூறிவிட்டேன். இன்று மதியமே வந்தனர். "பள்ளியில் சேர்ப்பதற்காக நீங்கள் வர வேண்டாமா?! முழுவதுமாக அவர்களை நம்பி ஒப்படைத்து விடுவதா?! பள்ளியில் சேர்ப்பதுடன் மட்டுமே நின்றுவிடாமல் மாதம் ஒரு முறை வந்து ஆசிரியர்களிடம் அவனுடைய நடவடிக்கைகள் மற்றும் படிப்பு நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்" இன்று கறாராக கூறிவிட்டேன். எனது முன்னிலையில் தனது மகனுக்கு அறிவுரை கூறுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய அம்மா பேசினார். "எப்படியாவது ஒரு பத்தாவது வரைக்குமாவது படிச்சுக்கடா நல்லது" என்றார். நான் உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். "பிள்ளைகளை நல்லா படிக்க சொல்லணும் அப்படிங்கறது நல்ல விஷயம் தான், அதுக்காக பத்தாவது முடிச்சுக்கோ என்று சொல்வதா?! ஏன் ஒரு கலெக்டராகவோ டாக்டராகவோ இன்ஜினியராகவோ வரணும் அப்படின்னு பெரிய பெரிய படிப்பு பற்றி எல்லாம் சொல்ல மாட்டீங்களா?!" என்று கடிந்து கொண்டேன். குறிப்பாக அந்த அம்மாவிடம் இந்த விஷயத்தை கூறுவதற்கு காரணம் அவனுடைய ஊரில் இருந்து எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருமே 8 அல்லது 9 ஆம் வகுப்புகளோடு படிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். சென்ற ஆண்டில் கூட ஐந்து பேர் ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாள் கூட பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவர்கள் ஊரிலேயே சென்று பார்த்த போது ஒரு போன் நம்பர் கூட மிச்சம் வைக்காமல் வெளியூர் சென்று விட்டதாக அருகில் இருப்பவர்கள் கூறியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு முகநூல் பதிவு போட்டு இருந்தேன். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் நன்றாக படிப்பவன் அந்த ஊர் காரன் தான். இடையில் திடீரென்று காணாமல் போய்விட்டான். நான்காண்டுகள் கழித்து மாற்று சான்றிதழ் வாங்க வந்திருந்தான் அப்போது விசாரித்த போது தான் தெரிந்தது, பைனான்ஸ் காரர்கள் இடம் அவனது பெற்றோர் கடன் வாங்கி இருந்ததற்காக கடன்காரர்கள் இவனை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம். அடிக்கடி அவர்களின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் இவனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். குடும்பத்தோடு வேறு ஊர் சென்று விட்டார்கள். இது அங்கே வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் முதலில் கூறிய மாணவியும் சரி இந்த மாணவர்களும் சரி ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இருப்பிடம் வேறு வேறு. அந்த மாணவிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு விழிப்புணர்வு இருந்தது மருத்துவர் ஆவதற்கு நிச்சயமாக வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இந்த ஊரைச் சார்ந்த மாணவர்களுக்கு படிப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லை படிப்பு என்னென்ன விஷயங்களை எல்லாம் சாதிக்கும் என்கிற விழிப்புணர்வும் கிடையாது. உயர் கல்விக்கு வழிகாட்டி உதவி செய்ய அரசு எவ்வாறெல்லாம் முயல்கிறது என்கிற விஷயமும் தெரியவில்லை. சென்ற ஆண்டு கூட இதே ஊரில் இருந்து பிளஸ் டூ முடித்த மாணவி தனது தம்பிகளுக்கு தாயாக இருந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கல்லூரிக் கனவே இல்லை. தனது தம்பிகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வந்த போது அழைத்து கடிந்து கொண்டேன். மேலும் படிப்பதற்கு என்ன வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன, என்பதையும் நான் முதல்வன் திட்டம் பற்றியும் கூறி அனுப்பி ஏதாவது ஒரு வகையில் படிப்பை தொடர வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த "நான் முதல்வன் திட்டம்" என்பது சத்தம் இன்றி பல சாதனைகளுக்கான விதைகளை ஊன்றிக் கொண்டு உள்ளது இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் அந்த விதைகள் எல்லாம் பெரு விருச்சமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே வேளையில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு இல்லாத இது போல பின்தங்கிய மக்கள் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும் கல்வியால் உச்சம் தொட்ட சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அவர்களின் வாயாலயே இந்த பகுதிகளில் எல்லாம் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் . கனவுகளுக்கு கூட கடிவாளம் போட்டு இருக்கும் இந்த பரிதாபத்திற்குரிய மக்களின் கடிவாளங்களை எப்படியாவது தகர்க்க வேண்டும். தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சார்ந்த தகவல்கள் EMIS PORTAL ல் மிகச் சிறப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் அவுட் ஆப் ஸ்கூல் சில்ட்ரன் (OOSC) என்கிற தலைப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த டேட்டா பேஸை மாவட்ட ஆட்சியர்களும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல்களை எடுத்து ஆய்வு செய்தோமானால் எங்கள் பள்ளியை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பழங்குடி பிரிவை சார்ந்த மாணவர்கள் மட்டுமே நிரம்ப உள்ளனர். மற்ற பிரிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று இருக்கும். ஆனால் இந்த பிரிவு மாணவர்களில் 10 பேர் வந்தால் அதில் ஒரு நான்கு பேர் கூட பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து வருவதில்லை. எனவே பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்குகளை தெளிவாக பகுத்தாய்ந்தோமானால் எந்தெந்த பகுதிகளில் இருந்து இந்த மாணவர்கள் வருகிறார்கள் என்பதை கண்டறிய இயலும். அரசு அந்தப் பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து கல்வி சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்க முடியும். மேலும் அந்த குடும்பங்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்ல என்ன காரணம் என்பதை அறிந்து அவர்கள் அதே ஊரில் தொடர்ந்து இருக்க ஏற்பாடு செய்ய இயலும். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக நான் முதல்வன் திட்டம் அனைத்து மாணவர்களையும் மேற்படிப்புக்கு வாஞ்சையோடு கைபிடித்து அழைத்துச் செல்லும் வேளையில் இடை நின்ற மாணவர்களை எப்படியாவது இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முயல வேண்டும். இல்லை என்றால் சில குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். ஆகவே தகுதியானவருக்கு உதவிகள் வழங்குவது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வு இன்றி இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஒரு நல்ல அரசின் கடமை. எனவே தங்கள் கனவுகளுக்கு கூட கடிவாளம் இட்டுக் கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து வரும் அவர்களின் கடிவாளங்களை தகர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...