Tuesday, March 4, 2025

தலைநகரம் -2

*FIRST FLIGHT EXPERIENCE*
முதல் வானூர்தி பயணம்
முன்ன பின்ன விமான பயணம் செய்ததும் இல்லை. அதற்கு டிக்கெட் எடுக்கும் நடைமுறைகளும் தெரியாது. ஆனாலும் எப்போதும் போல தைரியமாக டிரையல் அண்ட் எரர் மெத்தடில் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன். விமானத்தில் டெல்லி போய் வருவதற்கு பயணப்படி கிடைக்கும் என்று கூறினார்கள். சரி ஓசியில ஒரு விமான பயணம் என்று ஆர்வத்தோடு இருந்தேன் நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்காக கூகுள் மீட் போட்டார்கள். NIEPA நிர்வாகத்தினர் மாநாட்டுக்கு வருகை தரும் அனைத்து தலைமை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு whatsapp குழுவை உருவாக்கி தொடர்ந்து 5 நாட்கள் கூகுள் மீட் மூலமாக அனைவரிடமும் பேசி நிகழ்ச்சிக்கு வந்து செல்வது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவு படுத்தினார்கள் . விமான பயணத்திற்கு பயணப்படி உண்டுதான் ஆனால் எல்லோருக்கும் அல்ல. "ஏங்கண்ணு, உன்னோட கிரேட் பே என்ன வருது?!" "4800 ங்க" "செல்லாது செல்லாது உனக்கு விமானத்தில் பயணத்துக்கு பயணப்படி இல்லை" "ஆமா ஆருக்குங்க குடுப்பீங்க?!" "5400க்குத்தான்" "நான் விமானத்தில் வந்தா எனக்கு என்ன கொடுப்பீங்க?" "செகண்ட் ஏசி ஃபேர் தான்" "2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 36 மணி நேரம் லோல் பட முடியாது, நான் விமானத்திலேயே வந்துடுறேன் நீங்க குடுக்குற காச குடுங்க போதும்" ஆமாம் நான் புக் செய்த அன்று செகண்ட் ஏசி ட்ரெயின் கட்டணமும் வானூர்தி கட்டணமும் 2000 இடைவெளியில் தான் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று விமானத்திலேயே புக் செய்யலாம் என்று ஒரு விமான பயண சீட்டு வழங்கும் ஏஜென்ட் ஆப்பை அணுகினேன் அத்தனை விமானங்களும் இண்டிகோவாகவே இருந்தன. பயணச்சீட்டு போக வர என்று இரு பக்கத்துக்கும் புக் செய்துவிட்டு பணத்தை எல்லாம் கட்டி முடித்த பிறகு இண்டிகோ காரன் ஏம்பா என்கிட்ட நேரடியா வந்து இருந்தா இன்னும் கொஞ்சம் சல்லிசா முடித்து இருக்கலாமே என்று வெறுப்பேற்றினான். மாலை 4. 30க்கு தான் விமானம் புறப்படும் நேரம். ஆனால் நான் அரியலூரில் காலை எட்டு மணி பல்லவனை பிடித்து விட்டேன். ஏனென்றால் எந்த காரணத்தினாலும் விமானத்தை தவற விட்டு விடக்கூடாது என்கிற அதிகபட்ச உஷார் நிலையில் இருந்தேன் . தவறவிட்டால் 7 ஆயிரம் ரூபாய் போச்சே!! முதல் விமான பயணம் என்பதால் எனது நட்பு மற்றும் உறவினர் வட்டங்களில் உள்ள அனைவரும் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வீசி விட்டனர். அதில் அரிதிற் பெரும்பான்மை பெற்ற ஒரு முக்கியமான அறிவுரை என்னவென்றால் விமான நிலையத்தில் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று கனவு கூட கண்டு விட வேண்டாம் உன்னுடைய மொத்த பேங்க் பேலன்ஸும் போய்விடும் என்பதுதான். எதிராளி வீட்டுல விருந்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே ஒழிய இந்த பயலுக விமான நிலையத்தில் பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று ஏர்போர்ட் வாசலை மிதிக்கும் முன்பாக சங்கல்பம் செய்து கொண்டேன். நான்கரை மணிக்கு புறப்படும் விமானத்திற்கு மதியம் ஒரு மணிக்கு எல்லாம் கதவை பிராண்டியவன் நானாகத்தான் இருப்பேன். இந்தியாவில் உள்ள 95 விழுக்காடு விமான சேவைகளை இண்டிகோவே மேற்கொள்கிறது போல உள்ளது எங்கே பார்த்தாலும் அவர்களின் விமானம் தான். அனைத்து ஸ்டால்களிலும் அவர்களுடைய ஊதா உடை சிப்பந்திகள் தான். அதில் ஒரு நீலக்குயில் இடம் சென்று. "ஏந்தாயி இது எனது முதல் விமானப் பயணம். அதனால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஒன்னும் தெரியாது செத்த கோவிச்சிக்காம இதப் பாரு தாயி" என்று ஆங்கிலத்தில் கெஞ்சியபடி எனது பயணச்சீட்டின் சாஃப்ட் காப்பியை நீட்டினேன். "டிக்கெட் ஹார்ட் காப்பி வேணுமா?!" என்று இனிய குரலில் செவிகளுக்கு ஆங்கில ஒத்தடம் கொடுத்தார். "ஆமா நிச்சயமாக, reimbursement க்கு வேண்டுமே" என்று நீலக்குயில் தந்த நீல நிற இன்டிகோ விமான டிக்கெட்டை வாங்கி பத்திரப்படுத்தினேன். "அப்புறம் எனக்கு விமான புறப்பாடு நான்கு முப்பதுக்கு தான் நான் இப்போதே செக்யூரிட்டி செக் செய்து புறப்பாடு வாசல் அருகே அமர்வதற்கு தடை ஏதும் இல்லையே?!" என்று எனது சந்தேகத்தை கேட்டுக்கொண்டேன். "சரி உங்க சூட்கேஸ் கொடுங்க"என்று வாங்கி அதில் எதையோ அச்சிட்டு ஒட்டி ஒரு கன்வேயரில் போட அது துள்ளி குதித்து எனக்கு முன்னால் குஷியாக ஓடியது. அதற்கடுத்து செக்கின் கவுண்டருக்கு சென்றால் அங்கே எல்லோரும் ஷூ பெல்ட் என சகலத்தையும் அவிழ்த்து சீர்வரிசை வைத்திருப்பது போல கையில் ஏந்தியபடி சட்டை பேண்டோடு நின்று கொண்டு இருக்கிறார்கள். கையில் கைப்பை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தையும் தட்டில் வைத்து ஒரு நகரும் தளத்தில் வைக்க அது நகர்ந்து உள்ளே செல்கிறது. அங்கிருந்து ஸ்கேனர் மூலமாக உள்ளிருக்கும் அனைத்தையும் சோதிக்கிறார்கள். அதே நேரத்தில் விமான நிலைய காவலர்கள் நமது உடலை, உடையை பரிசோதிக்கிறார்கள். ஏதோ அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க போவது போல எனக்கு முன்னால் சோதனைக்கு நின்றவரின் முதுகை இடித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தேன், அங்கிருந்த செக்யூரிட்டி என்னை அன்பாக முறைத்தார். நான் "ஃபர்ஸ்ட் டைம் பாஸ்" என்று சிரித்தபடி பின் வாங்கினேன். ஏதோ "தொப்பை வளர்த்து" எல்லா பேண்ட்டையும் "இறுகப்பற்று" என்று வைத்திருப்பதால் தப்பினேன். இல்லையென்றால் பெல்டை கழட்டிய பிறகு பேண்ட்டை கையில் கோர்த்தபடி அல்லவா நின்று கொண்டிருக்க வேண்டி இருந்திக்கும். உள்ளே போனால் ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கானோர் சேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தனர் நானும் அசால்டாக ஒரு சேரில் விழுந்தேன் அந்த சமயம் பார்த்து எங்களுடன் வரக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைமை ஆசிரியர் ஆம்பூர் ஶ்ரீனிவாசன் சார் என்னை பார்த்துவிட்டு அழைத்தார். அவர் இரண்டரை மணி விமானத்திற்கு செல்ல வேண்டியவர் அவரே காத்துக் கொண்டு நின்றார் அவர் மிகவும் விவரமாக செல்போன் சார்ஜிங் பாயின்ட் அருகே உள்ள நாற்காலியை வசப்படுத்திக் கொண்டு போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டார். நானும் அங்கே சமீபத்தில் காலியான சேரை பிடித்து அமர்ந்தபடி அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது கேட் ஒன்றிலிருந்து யாரோ கை அசைப்பது போல தெரிந்தது பார்த்தால் புதுச்சேரி மேடம் இருந்தார்கள். அவரும் ஸ்ரீனிவாசன் சாருடன் விமானம் ஏற உள்ளார். " சரி நீங்க போங்க நான் பின்னாடியே வரேன்" என்று அவர்களை அனுப்பிவிட்டு மொபைலில் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த ஒரு படத்தில் மூழ்கினேன். விமான நிலைய கழிவறை பற்றி சொல்லியே ஆக வேண்டும் சென்னை விமான நிலையம் வருவதற்கு முன்பு நான் தூய்மையான கழிவறை என்றால் சத்யம் சினிமாஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் இருக்கும் கழிவறை தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் இங்கே அதைவிட சிறப்பாக பராமரித்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப லென்த்தா போவுது இத்தோட முடிச்சுக்குறேன். விமானத்தின் உள்ளே நடந்த களேபரம் ஒன்றைப் பற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்!!

1 comment:

மகளிர் தின சிறப்பு பதிவு

மகளிர் தின சிறப்பு பதிவு சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சம...