Thursday, March 6, 2025

தலைநகரம் – 3 *நிராயுதபாணி*

எப்போதுமே பயணங்களில் எனக்கு லக்கேஜ் தான் அலர்ஜி. எப்போது பயணம் மேற்கொண்டாலும் முடிந்தவரை லக்கேஜ் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்வேன். டெல்லிக்கு டிக்கெட் போட்ட அன்றைக்கு இரவே அரியலூர் ஏபிஎன் ல் குளிருக்கு இதம் அளிக்க ஏதுவாக ஜெர்கின் வாங்கிவிட்டேன். எடை குறைவுதான் என்றாலும் பல்க்காக இருந்தது. என்ன சுருட்டினாலும் ஷோல்டர் பேகை அடைத்துக் கொண்டு உப்ப வைத்துவிட்டது. “சரி இவனத் தூக்கி பொட்டில போடு“ என்று போட்டு அதற்கு மேல் மூன்று செட் பேண்ட் சர்ட் எல்லாம் போட்டு அமுக்கி விட்டேன். அப்புறம் ஷோல்டர் பேக்ல வாட்டர் பாட்டில் சால்வை மற்றும் சில குட்டி ஐட்டங்கள் தான். நான் விரும்பிய வண்ணம் லேசான லக்கேஜ். மனசே லேசான மாதிரி ஒரு ஃபீல். மூன்று மணி சுமாருக்கெல்லாம் தாறுமாறாக போர் அடித்து துவைக்க தொடங்கிவிட்டது. சரி என்று அங்கே இருக்கும் கடைகளில் நுழைந்து விலைகளை விசாரித்துக் கொண்டே வந்தேன். அப்புறம் விமானம் ஏறுவதற்கான கேட் திறக்கப் பட்ட உடன் என்ன செய்கிறார்கள் என்று கவனமாக பார்த்து வைத்துக் கொண்டேன். காத்திருக்கும் இடத்தின் வாயிலில் ஒரு டன்னலை கொண்டு வந்து சொருகுகிறார்கள். அதில் இறங்கி நடந்தால் அது விமானத்தின் உள்ளே கொண்டுபோய் விடுகிறது. ஆகா, நாமும் அந்த டன்னலில் நடக்கப் போகிறோம் என்று ஆவலோடு கேட் நம்பர் 1 ல் காத்திருந்தேன். ஓட்டப் பந்தயத்தில் சீறிப் பாய காத்திருக்கும் வீரனைப் போல தயார் நிலையில் இருந்தேன். நான்கு மணிக்கு வாயில் திறக்கும் என்று காத்திருந்த எங்களுக்கு அந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கான விமானத்தை அடைய கேட் நம்பர் 18க்கு போகவேண்டும் என்று கூறிவிட்டார்கள். கடைசி நேரத்தில் மாற்றி இருந்தார்கள். அது தரைதளத்தில் இருப்பதை விசாரித்து அறிந்து கொண்டேன். “லே பேதில போவான் யாம்லே இப்பிடி பண்ணுதிய?!“என ஜெபி முத்துவை மைண்ட் வாய்சில் வைத்து விட்டு எஸ்கலேட்டரில் இறங்கிய வண்ணம் படி இறங்கினேன். அங்கிருந்து பேருந்து வைத்து விமானத்தின் அருகே கூட்டிப் போனார்கள். விமானத்தில் ஏற ரேம்ப் இருந்தது. லக்கேஜை மேலே தூக்கிப் போட்டு மூடினேன். ஜன்னல் சீட்டை தேர்வு செய்ய தனியே காசு கட்டி இருக்கலாம். எனது அண்டை சீட்டில் ஜன்னலருகே அமர்ந்திருந்தவர் என்னை விட புத்தம் புது ஆள் போல. விமானத்தில் நுழைந்தது முதற்கொண்டு ஒவ்வொரு தருணத்தையும் படமாக பதிவு செய்து கொண்டிருந்தார். அதில் இரண்டு ஏர்ஹோஸ்டஸ்களை சூம்செய்து எடுத்த வைகளும் அடங்கும். ச்சுடச்சுட வாட்சப் ஸ்டேட்டஸ் வேறு போட்டார். நானோ விமானத்தில் நுழைந்த மாத்திரத்தில் ஏரோப்ளேன் மோடில் போட்டு விட்டேன். மேலே போகும் போது (அடச்சே விமானம் மேலே போவதைச் சொன்னேங்க!!) மேகங்களை படமெடுத்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன். எத்தனை தடவை கூகுள் செய்திருந்தாலும் பிராக்டிக்கலாக சந்திக்கும் போது சற்று சிரமமாகத்தான் உள்ளது. “Hi Bro, (இல்லன்னா youth ன்னு நம்ப மாட்டாங்க) will you please help me to fasten the belt?” அவரே போட்டு விட்டார். கழட்டும் முறையையும் சொல்லிக் கொடுத்துவிட்டார். ரன்வேயில் லேசாக ஊர்ந்த விமானம் திடீரென்று வேகமெடுத்தது. விமானம் குலுங்கியபடி விரைந்தது. ஸ்ரீனிவாசன் சாரிடம் வாங்கி லோட் செய்திருந்த பஞ்சுப் பொதி பத்திரமா என்று காதை தடவிப் பார்த்துக் கொண்டேன். சட்டென்று எல்லாம் சரியாகி “இறகைப் போலே அலைகிறேனே“ என்று லேசாகி பறந்து கொண்டிருந்தது. அவ்வளவு பஞ்சையும் தாண்டி காது அடைப்பதும் நான் வாயை ஒரு மாதிரி கோணலாக ஆட்டி எடுத்துவிடுவதும் என்று சில நிமிட நேரம் நீடித்தது. அடுத்த விமானப் பயண "பக்கெட் லிஸ்ட்"டில் இருக்கும் விஷயத்தை நிறைவேற்ற தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தேன். அன்றைய தின வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் பஞ்சு பரப்பி வைத்த திடலுக்கு மேலே விமானம் பறப்பது போன்று இருந்தது. கழிவறை சைன் போர்டு பச்சைக்கு மாறிய உடனே பட்டென்று எழுந்தேன். ஆகா, எவ்வளவு குட்டி ஸ்பேஸ்?! என்று வியந்து கொண்டே சிறு கடனை நிறைவேற்றி வெளியேறினேன். ஸ்ரீனிவாசன் சாரை பார்த்த போது, “இவர் என்ன இந்த வெயில் நேரத்தில் ஜெர்கினோடு இருக்கிறாரே?“ என நினைத்தேன். ஆனால் விமானத்தினுள் செம்ம குளிராக இருந்தது. ஜெர்கினை பெட்டியில் அமுக்கி வைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்று புரிந்து கொண்டேன். திடீரென்று விமானம் பரபரப்பானது. ஏர்ஹோஸ்டஸ் மூன்று பேர் டிஸ்யு பேப்பரை கொத்தாக அள்ளிக் கொண்டு ஓடினர். ஆகா என்னடா இது என்று ஆரம்பத்தில் சொன்ன ஆக்சிஜன் மாஸ்க் இருக்கும் இடத்தை துழாவத் தொடங்கினேன். பெரிதாக ஒன்றும் இல்லை மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்து தண்ணீர் தாரை கொட்டியதில் ஒரு பெண் தலையும் உடையும் நனைந்து விட்டது அவருக்கு. ஏர்ஹோஸ்டஸ் துடைத்துவிட்டு வேறு இடமும் கொடுத்தனர். “யே, யாருப்பா தண்ணி பாட்டிலை சரியா மூடாமல் வைத்தது?!” என்று எனக்கு கூட கேட்கா வண்ணம் நன்றாக திட்டிவிட்டேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, என்னுடைய மெட்டாலிக் வாட்டர் பாட்டிலின் மூடியை சில சமயங்களில் இறுக மூடினால் கோபித்துக் கொள்ளும். ஆனாலும் அதனை சோதித்து அறிய இது சரியான நேரம் அல்ல. அந்தப் பெண் தலை ஈரம் கூட சரியாக காயவில்லை. பிரச்சனை ஆறிய பிறகு பூனைக்குட்டியை வெளியே விடலாம் என்று காத்திருந்தேன். சற்று நேரம் கழித்து மெதுவாக எழுந்து யாரும் அறியா வண்ணம் தண்ணீர் பாட்டிலை எடுத்து எனது சீட்டின் முன்னால் இருந்த பை போன்ற அமைப்பில் போட்டு விட்டேன். பார்த்தால் முக்கா லிட்டரில் முன்னூறு மில்லி கூட மீதம் இல்லை. இவ்வளவு ரகசிய நடவடிக்கையிலும் பெல்ட் போட்டு விட்ட பக்கத்து சீட் தம்பி ரகசியமாய் சிரித்தார். பயபுள்ள சிபிஐ இன்டர்வியு போவான் போல!! அதற்குள்ளாக விமானம் வானத்தின் ஆரஞ்சு வளையத்திற்குள் வந்தது போல ஒரு ரம்மியமான காட்சி. மேகப் பொதிக்குள் அமிழும் சூரியன் ஏற்படுத்திய வானியல் அற்புதம் தான் அது. அனேகமாக ஜன்னல் சீட்டில் இருந்தோர் அனைவரும் ஆவலோடு படமெடுத்தார்கள். பிறகு இருள் கவ்வியது. சற்று நேரத்திற்கெல்லாம் டெல்லி நகர விளக்குகள் தெரியத் துவங்கின. விமானம் தாழப் பறந்தபடி “டச் டவுனுக்கு” தயாரானது. ஏதோ சடன் பிரேக் போடும் போது லேசாக ஜெர்க் அடித்தது போல இருந்தது அவ்வளவுதான் விமானம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. வெளியில் பார்த்தால் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டு இருந்தது. ”எலேய் யார்ரா நீ” என்பது போல ஆளே மாறி இருந்தார் நம்ம பக்கத்து சீட்டு தம்பி. ஜெர்கின், கழுத்தைச் சுற்றி சால்வை, தலைக்கு பனி குல்லா என குளிரை எதிர்த்து போராட அனைத்து ஆயுதங்களையும் தரித்து இருந்தார். நானோ நிராயுதபாணியாய்!! என்னாச்சின்னு அடுத்த பகுதியில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

மகளிர் தின சிறப்பு பதிவு

மகளிர் தின சிறப்பு பதிவு சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சம...