Friday, March 7, 2025
மகளிர் தின சிறப்பு பதிவு
மகளிர் தின சிறப்பு பதிவு
சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.
இளம் வயது திருமணங்கள்- நகர்புரத்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு விசித்திரமான ஒன்றாக தோன்றலாம், ஆனால் முகத்தில் அறையும் எதார்த்தம் என்னவென்றால் இன்னமும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.அதுவும் அவர்களுடைய பெற்றோரின் முழு சம்மதத்தோடு.
"எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்பை பாஸ் பண்ணி விட்டேன் என்றால் எனக்கு நிச்சயமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்னை கணித பாடத்தில் தேர்ச்சி அடைய செய்யுங்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதை செய்து விடுகிறேன்" என்று கேட்ட மெல்ல கற்கும் மாணவி ஒருவருக்கு அந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் தேர்ச்சி அடைய தேவையான 70 மதிப்பெண்களை எடுக்க சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்தேன்.
மிக ஆர்வத்தோடு எல்லாவற்றையும் கற்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஓராண்டுக்கு பிறகு அந்த மாணவியை நிறைமாத கர்ப்பிணியாகத் தான் ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்த்தது.
அதுபோல 470 க்கு மேல் எடுத்த மிகப் பிரமாதமாக படிக்கக்கூடிய ஒரு மாணவி பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்த போது ஃபைலை வைத்து கழுத்தை மறைத்தவாறு நின்றார்.
உற்றுப் பார்த்தால் தாலி கயிறு!!
இன்னமும் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை நடுத்தர வர்க்க பெற்றோர் தங்களுடைய குடும்ப கவுரவம் தனது பெண்ணிடம் மட்டுமே இருப்பதாக கருதுகிறார்கள்.
எந்த காதல் பிரச்சினையும் இன்றி அவர்களை பாதுகாப்பாக திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்களது அனைத்து கடமைகளும் பாதுகாப்பாக கௌரவம் குறையாமல் நிறைவேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆண் குழந்தைகள் காதல் வயப்பட்டாலும் அல்லது அது போன்று சொல்லிக்கொண்டு ஏதேனும் கிறுக்குத்தனங்களை செய்து கொண்டிருந்தாலும் லேசாக கடிந்து கொண்டு கடந்து விடும் அதே பெற்றோர் தான் வதந்தியாக கூட காதல் என்கிற பெயரோடு பெண்ணின் பெயர் இணைத்து பேசப்படுமானால் உடனடியாக பள்ளி செல்வதை தடுத்து திருமணம் செய்து வைக்க முற்படுகிறார்கள்.
நிச்சயமாக இந்த மாதிரியான கொடுமையான இளம் வயது திருமணங்களுக்கு அந்த குழந்தையை சுற்றி இருக்கும் சமூகம் நூறு விழுக்காடு முற்றிலும் உடந்தை.
ஏனென்றால் தற்போது 1098 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தாலே போதும் இது போன்ற குழந்தை திருமணங்களை நிச்சயமாக தடுத்துவிடலாம். புகார் அளிப்பவர் பெயர் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
இதுபோல ஆசிரிய பெருமக்களும் தங்கள் பள்ளிக்கு நீண்ட காலம் வருகை தராத மேல்நிலை வகுப்பு மாணவிகள் இருந்தால் 'இவருக்கும் திருமணம் ஆகி இருக்குமோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் இருக்குமோ' என்று சந்தேகித்தால் கூட இந்த உதவி எண்ணை நாடலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை.
பதின்பருவத்தில் இயல்பாகவே வரும் எதிர் பாலின கவர்ச்சியை காதல் என்று விதந்தோதும் சினிமாக்களும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கலுக்கு நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டிய எதிர் பாலின நட்பினை காதல் என்று கற்பிதம் செய்து கொண்டு மாணவர்கள் பெண்களிடம் அத்து மீறுவது போன்று சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது .
இது போலான சமயங்களில் பெற்றோர்கள் மிகுந்த பதட்டத்திற்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.
பதின் பருவத்தில் இருக்கும் பையன்கள் மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற காணொளிகளை ஒரு லேசான கோபத்தோடு கடந்து போகிற அதே நபர்கள் தான் அது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண் குழந்தைகளின் காணொளிகளை கண்டதும் குய்யோ முறையோ என்று பொங்கி கொண்டு வேகமாக இணையத்தில் பரப்பி வைரலாக்கி அந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.
இது அந்த குழந்தைகளின் செயலை ஞாயப்படுத்துவதற்காக அல்ல ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கிரிமினல் குற்றங்களில் கூட பெயர்கள் வெளியிட கூடாது என்கிற சட்டம் இருக்கிறபோது இதுபோல காணொளிகளை பரப்புவது சட்டவிரோதமும் கூட.
பாலின சமத்துவம் என்கிற எண்ணம் சமூகத்தில் பரவலாக ஏற்படும் போதுதான் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் குற்றங்களும் குறையும்.
ஆனால் பாலின சமத்துவம் என்கிற இலக்கை அடைய நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி தான் உள்ளது.
எனது பணி அனுபவம் சார்ந்து பல விஷயங்களை பாலின பாகுபாடு ஆழமாக ஊறிப்போன சம்பவங்களை கண்டுள்ளேன்.
மாற்றுத்திறனாளி ஆண் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து ஒரு அரசு வேலைக்கு அனுப்பி வைத்து விடவேண்டும் என்கிற முனைப்பு உள்ள பெற்றோரை கண்டுள்ளேன். அதுபோல மிகச் சிறப்பான பணிக்கு அனுப்பியும் உள்ளார்கள்.
அதே வேளையில் மிகவும் நன்கு படிக்க கூடிய குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி அவர்களுக்கான கல்வி வாய்ப்பினை வழங்க எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்களுடைய திறமைகளை வீணாக்கிய பெற்றோரையும் கண்டுள்ளேன்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாண்டட் லேபர் ஆக வேலைக்கு சென்ற ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகம்.
அவர்களது திருமணத்திற்கு பணம் சேர்க்கிறேன் என்கிற பெயரில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இதுபோல வேலைக்குச் சென்ற ஒரு குழந்தையை மீட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத செய்தோம் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் , ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் "நான் முதல்வன் திட்ட" தேடலில் கூட அகப்படாமல் தன்னுடைய தம்பிகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்கிறார், அப்பா அம்மா இருவரும் வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்ப அமைப்புகள் மிக தகர்ந்து போனதற்கான காரணம் என்ன தெரியுமா?! அங்கே சாதாரணமாகவே அன்றாடம் குவியக் கூடிய வேலைகளில் நிலவிய பாலின பாகுபாடு தான்.
சமத்துவமற்ற எந்த ஒரு அமைப்பும் நிச்சயமாக நொறுங்கி விழுந்து மடியும். மிஞ்சி இருக்கும் தனி குடும்ப அமைப்பு நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இணையருக்கு இடையே பாலின சமத்துவ எண்ணம் நிலவ வேண்டும்
குழந்தைகளிடம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும் கூட பாலின சமத்துவத்தை கவனமாக பேணுவது என்பது அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மகளிர் தினத்தில் பெண்களை தேவதை என்றோ தெய்வம் என்றோ போற்றி புகழ வேண்டாம்.
மேலே கூறியுள்ள தகவல்களை சற்று மனதில் நிறுத்திக் கொண்டு பாலின சமத்துவத்தை நாம் இருக்கும் இடம்தோறும் பேணுவதோடு அல்லாமல் உடன் இருப்போரிடமும் வலியுறுத்தி வருவோமானால் அதுவே மகளிர் தினத்திற்கு நாம் அவர்களுக்கு கூறும் நல்ல வாழ்த்து செய்தியாக அமையும்.
" சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
Subscribe to:
Post Comments (Atom)
மகளிர் தின சிறப்பு பதிவு
மகளிர் தின சிறப்பு பதிவு சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சம...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
Thank You Sir.
ReplyDelete