Sunday, March 5, 2023

அயனிமம் - பருப்பொருட்களின் நான்காம் நிலை

 திட திரவ வாயு நிலைகளுக்கு.     அடுத்ததாக உள்ள பருப்பொருட்களின் நான்காம் நிலை எது?!!

 



பருப்பொருட்கள் திட,திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளன என்பது ஆறாங்கிளாஸ் பையனுக்கு கூட தெரியும். ஆனால் பருப்பொருட்களின் நான்காவது நிலை ஒன்று உள்ளது என்பது அறிவியல் புலத்தில் ஆழமாக மூழ்கி முத்தெடுத்தவர்களுக்கே தெரியும். ஆமாம், அந்த நாளாவது நிலை தான் பிளாஸ்மா ஸ்டேட் என்பதாகும்.


     திடப் பொருட்களை சூடாக்கினால் உருகி திரவமாகும், அதையே மேலும் சூடாக்கினால் வாயுவாகும் என்பதை நாம் கற்றறிந்து இருக்கிறோம். தற்போது வாயு நிலையை மீயுயர் வெப்ப நிலைக்கு சூடாக்கினால் (மீயுயர் வெப்ப நிலை என்றால் சூரியனின் மைய வெப்ப நிலையை விட அதிகம்) அது பிளாஸ்மா நிலையை அடையும்.


அது என்ன பிளாஸ்மா நிலை அங்கே என்ன நடக்குமாம்?


     திடப்பொருட்களில் மூலக்கூறுகளுக்கு இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். அதை வெப்ப படுத்தும் போது அந்த நெருக்கம் சற்றே நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்து மூலக்கூறுகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகும் போது திரவமாகிறது. அதையே இன்னும் சூடாக்கினால் மூலக்கூறுகளுக்கு இடையேயான இடைவெளி இன்னும் அதிகமாகும்.


     பிளாஸ்மா என்கிற நிலையில் அணு அளவிலேயே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம் பிளாஸ்மா நிலையில் அணுவில் இருக்கும் எலக்ட்ரான்கள் தனியாக கழன்று கொள்ளும். அதாவது இந்த நிலையில் அணுக்களில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவின் மையக் கவர்ச்சியில் இருந்து பிரிந்து மிதக்கின்றன. (Plasma is nothing but the Soup of Positvely charged particles (Ions) and Negatively charged Particles(Electrons)). உட்கருவில் இருக்கும் புரோட்டான்கள் தனியாக இருக்கும். அதாகப்பட்டது அணுவில் உள்ள புரோட்டான்கள் நேர்மின் அயனிகளாகவும் எலக்ட்ரான்கள் எதிர்மின் அயனிகளாகவும் மிதந்து கொண்டு இருக்கும். அதனால் தான் பிளாஸ்மாவை “அயனிமம்“ என்று தமிழ் படுத்தியுள்ளனர்


ஆய்வுக்கூடத்தில் பிளாஸ்மா உண்டாக்க முடியுமா?


ஆய்வகங்களில் இந்த பிளாஸ்மா ஸ்டேட்டை உருவாக்க படாத பாடு படுகிறோம். பிளாஸ்மா ஸ்டேட் என்றால் என்ன என்பதே உலகில் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 90 விழுக்காடு பருப்பொருட்கள் பிளாஸ்மா ஸ்டேட்டில் தான் உள்ளன என்பதே ஆச்சரியமான விந்தை. நமது சூரியனே பிளாஸ்மா நிலையில் உள்ள வாயுக்கோளம் தானே.


     செயற்கையாக பிளாஸ்மா ஸ்டேட்டை உருவாக்கும் வேலையை நாம் அறியாமலேயே நிறைய இடங்களில் செய்கிறோம்.


     அதிவெப்ப நிலையை உருவாக்கும் தீப்பொறி வழியாக சூடான வாயு கடந்து செல்லும் போது அந்த வாயு பிளாஸ்மா நிலையை அடைகிறது.


வேற எங்கெல்லாம் பிளாஸ்மா இருக்குமாம்?


     இயற்கையில் நாம் காணும் மின்னல் வெட்டு இதற்கு மிகச் சிறந்த உதாரணம். மேக உரசலில் உண்டாகும் அதிக அளவிலான மின்சாரத்தை எர்த் செய்ய வேண்டும். ஆனால் காற்று மின்சாரத்தை கடத்தாது. ஆகவே காற்றினை அயனியாக்கி மின்கடத்தல் நடைபெறுகிறது. மரமோ மனிதனோ அல்லது வேறு ஏதாவது மின்கடத்தும் பொருட்கள் இந்த மின்னலின் பாதையில் குறுக்காக வரும் போது அதற்கு காற்றினை அயனியாக்கும் வேலை மிச்சம். ஆமாம், மரம் வழியாகவோ மனிதன் வழியாகவோ மீதி தொலைவை கடந்து எர்த்தில் இறங்கிவிடுகிறது. அதையெல்லாம் கண்கொண்டு பார்க்க அந்த மனிதன் உயிரோடு இருக்க இயலாது என்பது கெடுவாய்ப்பு.


செயற்கையில் வெல்டிங் ஸ்பார்க்கும் பிளாஸ்மா நிலையை உருவாக்குகிறது.


 


     இந்த பிளாஸ்மா நிலை பற்றி தனிப் படிப்பே உள்ளது. ஆமாம் பிளாஸ்மா பிசிக்ஸ் என்கிற தனிப்பிரிவே உள்ளது. பிளாஸ்மா நிலை பற்றிய ஆய்வுகள் நமக்கு நிறைய பயனுள்ள விஷயங்களையும் தந்துள்ளது.


      முக்கியமாக அணுக்கரு இணைவு வினை  நடக்க ஊடகமாக பிளாஸ்மா ஸ்டேட் உள்ளது. 


     கணினி சிப் உருவாக்கம், ராக்கெட் உந்து விசை, சுற்றுச் சூழல் தூய்மை, உயிரி நச்சுக்களை அழிக்க, புண்களை ஆற்றுவதற்கு மற்றும் பல மருந்துகள் தயாரிப்பில் கூட இதன் பயன் இருப்பதாக கூறுகிறார்கள்.


பாத்தீங்களா பயாலஜி லயும் பிளாஸ்மா உள்ளது ஃபிசிக்ஸ் லயும் பிளாஸ்மா உள்ளது!!

Thursday, December 22, 2022

கணித ஆசிரியர்கள் என்ன வில்லன்களா?!!

 மு.ஜெயராஜ்,

கணித ஆசிரியர் (தற்போது தலைமையாசிரியராகவும் உள்ளார்)

அரசு உயர்நிலைப்பள்ளி,

நாகமங்கலம்.


கணித ஆசிரியர்கள் என்ன வில்லன்களா?!!



கணக்கு வாத்தியார் பி டி பீரியடை கடன் வாங்கி விடுகிறார்!!

கணக்கு வாத்தியார் எம் ஐ பீரியடை எடுத்துக் கொள்கிறார்!!

கணக்கு வாத்தியார் பசங்களை விளையாட அனுமதி இல்லை!!


இதெல்லாம் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் கணித ஆசிரியர்களை நோக்கி மீம்கள் வடிவில் எய்யப்படும் புகார் அம்புகள். சமீபத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூட கணித ஆசிரியர்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார் "விளையாட்டு பீரியட் விளையாட்டுக்காக மட்டுமே கணிதம் உட்பட யாரும் கடன் வாங்க கூடாது.


ஆனால் கணித ஆசிரியர்களின் வேதனை யாருக்கும் புரிவதில்லை.

90 களில் இருந்த கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் இப்போது இருக்கும் கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் எவ்வளவு தூரம் உள்ளடக்கத்தை  திணித்து உள்ளோம் என்பது புரியும்.


நான் பள்ளி படித்த காலங்களில் பாட அறிமுகம் எடுத்துக்காட்டு இவற்றை படித்துவிட்டு பயிற்சியில் உள்ள கணக்குகளை தானாகவே முயன்று போடும் அளவுக்கு எளிமையாக இருந்தது. ஐந்து கணக்குகள் எடுத்துக்காட்டில் இருக்குமானால் அதே ஐந்து கணக்குகளின் அடியொட்டியே பயிற்சியிலும் இருக்கும் எனவே எடுத்துக்காட்டு கணக்குகள் போட்டோம் என்றால் பயிற்சி கணக்கு எளிதாக போட்டுவிடலாம்.


ஆனால் இப்போது பாட அறிமுகம் , ஒரு ஐந்து விதமான எடுத்துக்காட்டு கணக்குகள் இருக்கும் ஆனால் பயிற்சியில் உள்ள கணக்கு முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.


எனவே எடுத்துக்காட்டில் போட்ட அனுபவத்தை வைத்து பயிற்சி கணக்கை போட இயலாத சூழல். ஆக, எடுத்துக்காட்டு கணக்குகளையும்  பயிற்சியில் உள்ள கணக்குகளையும்  ஆசிரியரே மாணவர்களுக்கு நடத்தியாக வேண்டிய சூழல்.


கணித பாட புத்தக வடிவமைப்பின் அடிப்படை இரண்டு விஷயங்களை கணக்கில் கொண்டு உருவாக்கப்படும்.


தம் அன்றாட வாழ்வில் பயன்படும் விஷயங்களை தீர்க்க உதவும் கணக்குகள் மற்றும் மேல் வகுப்பில் வரக்கூடிய அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விஷயங்களுக்கான அடிப்படை கூறுகளை உள்ளடக்கிய கணக்குகள். இந்த அடிப்படையில் அமைந்தாலே புத்தகத்தின் உள்ளடக்கம் மாணவர்கள் ஆவலோடு முயலும் வகையில் அமையும்.


IIT JEE, NEET போன்ற தேசிய நுழைவு தேர்வுகளின் சிலபசை உள்ளடக்கும் விதமாக பாடங்களை கட்டமைக்க துவங்கிய பிறகு புத்தகங்களின் உள்ளடக்கம் மிக மிக அதிகமாக ஆகிவிட்டது.


இந்த விஷயம் 6 முதல் 12 வரை அனைத்து வகுப்பு பாடங்களில் பாடப் புத்தகங்களையும் பெருக்கச் செய்து விட்டது என்பது நிதர்சனம் அதில் மோசமான அளவு பாதிக்கப்பட்டது கணக்கு என்றே சொல்லலாம்.


ஆனால் பாடங்களை நடத்துவதற்கான வகுப்பு ஒதுக்கீடு என்பது ஒரு வாரத்திற்கு ஏழு பாட வேலைகள் மட்டுமே. இந்த ஏழும் ஒவ்வொரு வாரமும் முழுமையாக கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை.


 தற்போதைய காலகட்டங்களில் அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிக்கு இடையூறாக ஏராளமான காரணிகள் நுழைய துவங்கிவிட்டன. 


 விழிப்புணர்வு ஊர்வலங்கள், பயிற்சிகள், வினாடி வினா போட்டிகள், கலை பண்பாட்டு போட்டிகள் போன்ற பல விஷயங்கள் மாணவர்களின் பாட வேளைகளில் இருந்து தான் எடுத்து நடத்தப்படுகின்றன. 


 அது அல்லாமல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடந்த வண்ணமே உள்ளது. இதுவன்றி ஒவ்வொரு ஆசிரியரும் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளது.


 இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த மீதமுள்ள பாடவேளைகளில் சிலபஸை முடிக்க வேண்டிய கட்டாய சூழல்.


மற்ற பாடங்களை சூழலுக்கு தக்க வேகம் குறைவாக்கியோ அதிகமாக்கியோ நடத்தலாம். "சிலபஸ் முடிக்கணும் நான் ஓடப்போறேன்" என்றால் பசங்க படுத்துடுவாங்க


"அட ஏம்பா அவசரப்படுறீங்க, மெதுவாத்தான் நடத்துங்களேன்" என்றால் இயலாது. June to November உள்ள நாட்களில் காலாண்டு தேர்வு லீவு, பண்டிகைகள் மழை புயல் என எல்லாம் போக மீதமுள்ள நாட்களில் எல்லா பாடங்களையும் நவம்பருக்குள் முடித்தால் தான்கொஞ்சமாவது திருப்புதல் செய்து மெல்லக்கற்போரை குறைந்த பட்ச தேர்ச்சி இலக்கை நோக்கி "முடுக்க" முடியும். 


அதனால் தான் கிடைக்கும் எல்லா கேப்களிலும் கெடா வெட்ட முயல்கிறார்கள் கணித ஆசிரயர்கள்.


சாக்பீசோடு கைகோர்த்த நாள்முதல் பலருக்கு அலர்ஜி ஆஸ்துமாவாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் மாணவர் வளர்ச்சியை சமரசம் செய்து கொள்ள மனமில்லாமல் தான் மற்ற ஆசிரியர்களின் பீரியடை கேட்டு கையேந்துகிறார்கள். அதுவும் கிடைக்க வில்லை என்றால் சனிகிழமைகளில் சிறப்பு வகுப்பு வைக்கிறார்கள்.


நிச்சயமாக விளையாட்டு பாடவேளைகள் விளையாடுவதற்கே அதில் இருவேறு கருத்து இல்லை. அதே நேரம் புத்தகம் பிதுங்க பிதுங்க இருக்கும் உள்ளடக்கத்தை சற்று குறைத்தாலே நேரநிர்வாகம் வசப்படும். ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்கள் மீதான அழுத்தமும் குறையும்.


"அப்போ பசங்க ஐஐடி நீட்லாம் போக கூடாதா?!" நிச்சயமாக போக வேண்டும். அதற்கு முனைப்பு உள்ள குழந்தைகளுக்கு மட்டும் துணைப்பாட நூல் வழங்கி தற்போது பள்ளி தோறும் செயல்படும் அரசின் JEE/NEET / CA பயிற்சிகளில் பிரிவுக்கேற்ப படிக்கட்டுமே!!


அதற்காக சராசரி மற்றும் மெல்லக் கற்போரை பயமுறுத்தி வெளியேறச் செய்ய வேண்டாம் அல்லவா?!


குறைவான உள்ளடக்கம் அது சார்ந்து அனைத்து பரிமாணங்களிலும் ஏராளமான சிந்தனையை தூண்டும் கணக்குகளை மாணவர்கள் தாமாக போடும் வகையில் புத்தகங்களை உருவாக்கி கொடுங்கள் அப்புறம் பாருங்கள் கணிதம் கற்கண்டாகும்.

Saturday, November 5, 2022

மாநிலக் கல்விக் கொள்கை- என்னுடைய ஆலோசனைகள்

 மாநிலக் கல்விக் கொள்கைகள்  வகுக்க அமைக்கப்பட்ட குழு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகளை கேட்டறிந்தது.


ஆசிரயராகவும், தலைமையாசிரியர் என்கிற வகையிலும் எனது அனுபவங்கள் வழி எனக்கு தோன்றியவற்றை  தொகுத்து மின்னஞ்சலில் ச. மாடசாமி அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.


 மாநிலக் கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்திலும் அரியலூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட குழுவில் சென்று நேரில் வழங்கிவிட்டு மைக் என்வசம் வந்தபோது எனது கருத்துகளில் இருந்து சில முக்கியமான விவரங்களை பேசினேன்.


நான் வழங்கிய கருத்துகள் இதோ:


மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்


கற்றல் கற்பித்தல்


பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையாக நடத்திக் கொண்டு செல்வோமானால் 700க்கு அதிகமாக பக்க அளவு கொண்ட பாடங்களை முடிப்பது சாத்தியமில்லை. 


மாறாக கற்றல் விளைவு ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களை பாடநூல் மற்றும் வெளியே இருந்தும் தகவல்களை திரட்டி கற்பித்தலை சுவாரசியமாகவும் உரையாடல் வடிவிலேயும் கொடுக்க வகைசெய்யும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 


 பாடம் சார் தேடலைத் தூண்டுவது மட்டுமே ஆசிரியரின் செயலாக இருக்க வேண்டும். மேலதிக விஷயங்களை பாடநூலின் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வழியாகவும் மாணவர்கள் கற்று தேற வேண்டும்.


கற்பித்தல் என்பது லெக்சர், செயல்திட்டம்,புதுமையான செயல்பாடுகள் (Novel activities) களப்பயணம், பாடப்பகுதியை கலையாக்கம் செய்து கற்பித்தல் என ஜனரஞ்சமாக மாற வழிவகை செய்ய வேண்டும்.


தன்சுத்தம், கழிவறைப் பயன்பாடு, பதின்பருவ உடல் வளர்ச்சி மாற்றங்கள் போன்றவை குறித்த நம்பகமான கருத்துகளை குழந்தைகள் அறிந்து கொள்ளல் வேண்டும். அதனை உரிய பாடத் திட்டங்கள் வாயிலாக உரிய வயது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடங்கள் திட்டமிடப் பட வேண்டும்.


மொழிப் பாடங்களில் நூலக வாசிப்பு, மேடைப் பேச்சு, பொதுத்தலைப்புகள், நடப்பு கால நிகழ்வுகள் குறித்த பேச்சு அல்லது கட்டுரை போன்றவைகளை இணைத்து அவற்றுக்கு மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.


தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே இணைய பயன்பாடு, Word, Excel, Power Point,  காணொலி உருவாக்கம், மின்னணு கருவிகள் கையாளுதல் போன்ற விஷயங்கள் அறிவியல் பாடத்திட்டங்களில் வயதுக்கேற்ற அளவில் அறிமுகம் செய்யப் பட்டு செய்முறை மதிப்பீடுகள் வழங்கப் பட வேண்டும்.


உள்ளூர் வரலாறு, உள்ளூர் விவசாயம், கலைப் பொருட்கள், வரலாற்று புகழ் வாய்ந்த தொன்மையான பகுதிகள், கலைகள், கைவினைப் பொருட்கள் என உள்ளூரை மையப் படுத்திய விஷயங்களை மாவட்ட அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்கும் வண்ணம் பாடத்திட்டங்களில் ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த வேண்டும்.


வகுப்பில் ஒரு குழந்தைகூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளின் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை திட்டமிட வேண்டும். பாடப் பொருளை விட அனைத்து குழந்தைகளின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.


    **************************


இணை மற்றும் துணை செயல்பாடுகள்


1. மாதம் ஒரு களப் பயணவழி கற்றல் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள் மாட்ட அளவில் போக்குவரத்து துறையோடு  இணைந்து  திட்டமிடப்பட வேண்டும்


2. தினந்தோறும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மாணவர்தம் ஆர்வத்திற்கேற்ப உள் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளை விளையாட வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.


3. வாரம் தோறும் பள்ளி அளவில் போட்டிகள்,  மன்றக் கூட்டங்கள், கருத்தாளர்கள் வருகை  இருக்குமாறு வாரத்தில் ஒரு நாளில் மதியம் கடைசி இரு பாடவேளைகளை திட்டமிட வேண்டும்.


4. கல்விச்சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்ல வழிவகை செய்தல் வேண்டும்.


5.  தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தோல்விகளை ஏற்றுக் கொண்டு கற்கப் பழகுதல், தற்கொலைக்கு எதிரான மனநிலை, நல்லொழுக்கம், வன்முறைக்கு எதிரான மனநிலை, சமூக நல்லிணக்கம், சமத்துவ எண்ணம், பாலின சமத்துவம் போன்றவைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வடிவமைத்து மதிப்புக் கல்வி (Value Education) வழங்கப் பட வேண்டும்.


6. பேசு- மாணவர் மனசு- மாணவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு வழிவகை செய்து ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு பாடவேளை திட்டமிடப் பட வேண்டும்.


7. பல்வகை மன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அளவில் திட்டமிடல் செய்து சிறப்பான பொது செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளும் பொதுவான கால அட்டவணைப்படி செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும்.


8. பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பல தரப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஒரு வழிகாட்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும்.


***********************************


மதிப்பீட்டு முறை


நமது மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் மதிப்பெண்களை துரத்துவதாகவே அமைந்துள்ளது.


 அந்த மதிப்பெண்களும் வாசித்து மனப்பாடம் செய்து எழுதும் ஒற்றை திறமை மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்பது வேதனை.


குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை விதைப்பதோடு மட்டுமின்றி சில குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிஞ்சு மனதில் அழுத்தத்தையும் வேதனையையும் இந்த மதிப்பீட்டு முறை ஏற்படுத்துகிறது.


பாகுபாடுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பு மதிப்பெண் மூலம் ஏற்படுத்தப் படும் படிநிலைகளை விரும்புகிறது. 


“உங்கள் பையன் சிறப்பாக இருக்கிறான்“ என்று கூறினால் பெற்றோருக்கு திருப்தி இல்லை. அதுவே ஒரு எண்ணை கூறி ” உங்கள் பையன் இவர்கள் அனைவரையும் விட மேலானவனாக உள்ளான் ” என்று கூறினால் பரம திருப்தி அடைய பழகிவிட்டார்கள். எனவே தான் CCE மதிப்பீட்டு முறை பரவலான வரவேற்பை பெற இயலாமல் போனது.


1. தேர்வு என்பது மனப்பாடம் செய்வது எழுதுவது என்ற ஒற்றைத் தன்மையில் இருந்து மாறவேண்டிய நேரம் இது. உரையாற்றுதல், செயல்திட்டம் சமர்ப்பித்தல், களப்பயண தகவல் சேகரிப்பு, கலையாக்க செயல்பாடு என இன்னும் பல கூறுகளை உள்ளடக்கிய வகையிலான மதிப்பீட்டு முறையை கண்டறிய வேண்டும். அனைத்து விதமான திறன்களையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த புதிய முறை இருக்க வேண்டும்.


2. வருடம் முழுவதும் படித்து வருட இறுதியில் தேர்வு என்பதை விட “கற்றல் விளைவுகள்“ வாரியான செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 50  விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள 50 விழுக்காடு வருட இறுதியில் மேலே சொன்னவாறு புதிய முறையில் தேர்வு வைத்து வழங்கப் பட வேண்டும்.


3. பல்வகை திறன்களை பாடத்தோடு இணைத்து வெளிப்படுத்தும் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படாது மாறாக தேர்வினை ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.


4. கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த பாடத்திறன்களையும் ஒற்றைத் தேர்வுத்தாளில் கொட்டி மதிப்பெண் எதிர்நோக்கி காத்திருக்கும் முறையை குறைத்துக் கொள்ள வேண்டும்.


5.  தேர்வு முறைக்குள் அனைத்து மாணவர்களின் துடிப்பான பங்கேற்பும் இடம் பெறும் வண்ணம் கடினப் பட்டு போய் கிடக்கும் இந்த வழக்கமான தேர்வு முறையை மாற்றி பன்முகத்தன்மை உடையதாக மாற்றி அமைக்க வேண்டும்.


மு.செயராசு

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

நாகமங்கலம்

அரியலூர் மாவட்டம்

9790225620

jayarajsir@gmail.com


Thursday, November 3, 2022

Stop not your struggle till last breath

 "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் " யாருக்கு?! யாருக்கோ!!




ஆமாம் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இந்த மரத்தின் நுனிக்கொம்பில் உள்ள தழையை உண்ண ஆசைப்பட்டு முன்னங்காலை தூக்கி வைத்து ஊன்றி இழுத்து வளைத்து இந்த மரத்தை குற்றியிலும் கொலையுயிருமாக  போட்டுவிட்டு ஓடிவிட்டன வழக்கமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாகமங்கலம் ஆடுகள்!!

வளாகத்தில் மேய்வதற்கு வாகாக எவ்வளவு தான் புதர்களும் புல்லும் மண்டி கிடந்தாலும் இந்த ஆடுகளுக்கு நுனிக்கொம்பில் உள்ள ருசியான இலைகள் தான் இலக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மரம் வளர்ந்த போது விறுவிறு என வளர்ந்து பூமியோடு 90 டிகிரி கோணத்தில் கணகம்பீரமாக காட்சியளித்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் அதனை வளைத்த காரணத்தால் கூன் விழுந்து  முப்பது டிகிரிக்கு சாய்ந்து விட்டது.

அந்த மரத்தின் இடுக்கண் கலைவதற்காக ஒரு கோலினை ஊன்றி அதை ஒரு 80 டிகிரி அளவிற்கு நிமிர்த்தினோம் ஆனாலும் அந்த ஊன்றுகோலை அடுத்த சில வாரங்களிலேயே தட்டி விட்டன அந்த அடங்காத ஆடுகள்.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஓரளவு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைந்துவிட்டது. ஆடுகளின் தொல்லை வெகுவாக குறைந்து போய்விட்டது. ஆனால் கூன் விழுந்து போன அந்த மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவே இயலவில்லை ஏனென்றால் 30 லிருந்து 80க்கு மீண்டும் நிமிர்த்தி கட்டினால் அந்த மரம் முறிந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
அதனால் அதை எதுவுமே செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள், முடிந்தால் பிழைக்கட்டும் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

இங்கேதான் அந்த மரத்தின் தற்காப்பு உத்தி (struggle for survival) வேலை செய்யத் தொடங்கியது.

ஆமாம், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்திய பௌதிகம் மாணவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அந்த மரத்துக்கு புரிந்து போனது என்று நினைக்கிறேன்.

ஆமாம் கிழக்கு பக்கமாக முப்பது டிகிரி சாய்ந்து இருக்கும் மரத்தை நிமிர்த்துவதற்காக மேற்கு பக்கம் நிமிர்த்தும் வகையில் மரத்தண்டில்   இடையில் இருந்து அங்கங்கே கிளைகள் தோன்றி செங்குத்தாக வளர துவங்கியது சிறிது நாட்களில் மரமும் மெல்ல மெல்ல எழும்பி தற்போது இந்த அளவில் உள்ளது.

தற்காப்பு உத்தி சூழலுக்கு தக்கவாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள மரங்கள் எந்த அளவுக்கு பௌதிகத்தை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பப்பா இயற்கையில் தான் எவ்வளவு விந்தைகள்?!

இதற்கு பின்புலத்தில் உள்ள அறிவியல் ஏதேனும் இருந்தால் விஷயம் அறிந்தவர்கள் விளக்கிக் கூறுங்கள்.





Saturday, October 15, 2022

மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்

 மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்


கற்றல் கற்பித்தல்


பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையாக நடத்திக் கொண்டு செல்வோமானால் 700க்கு அதிகமாக பக்க அளவு கொண்ட பாடங்களை முடிப்பது சாத்தியமில்லை. மாறாக கற்றல் விளைவு ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களை பாடநூல் மற்றும் வெளியே இருந்தும் தகவல்களை திரட்டி கற்பித்தலை சுவாரசியமாகவும் உரையாடல் வடிவிலேயும் கொடுக்க வகைசெய்யும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 

 ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு பாடம் சார் தேடலைத் தூண்டுவது மட்டுமே ஆசிரியரின் செயலாக இருக்க வேண்டும். மேலதிக விஷயங்களை பாடநூலின் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வழியாகவும் மாணவர்கள் கற்று தேற வேண்டும்.

கற்பித்தல் என்பது லெக்சர், செயல்திட்டம்,புதுமையான செயல்பாடுகள் (Novel activities) களப்பயணம், பாடப்பகுதியை கலையாக்கம் செய்து கற்பித்தல் என ஜனரஞ்சமாக மாற வழிவகை செய்ய வேண்டும்.

தன்சுத்தம், கழிவறைப் பயன்பாடு, பதின்பருவ உடல் வளர்ச்சி மாற்றங்கள் போன்றவை குறித்த நம்பகமான கருத்துகளை குழந்தைகள் அறிந்து கொள்ளல் வேண்டும். அதனை உரிய பாடத் திட்டங்கள் வாயிலாக உரிய வயது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடங்கள் திட்டமிடப் பட வேண்டும்.

மொழிப் பாடங்களில் நூலக வாசிப்பு, மேடைப் பேச்சு, பொதுத்தலைப்புகள், நடப்பு கால நிகழ்வுகள் குறித்த பேச்சு அல்லது கட்டுரை போன்றவைகளை இணைத்து அவற்றுக்கு மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே இணைய பயன்பாடு, Word, Excel, Power Point,  காணொலி உருவாக்கம், மின்னணு கருவிகள் கையாளுதல் போன்ற விஷயங்கள் அறிவியல் பாடத்திட்டங்களில் வயதுக்கேற்ற அளவில் அறிமுகம் செய்யப் பட்டு செய்முறை மதிப்பீடுகள் வழங்கப் பட வேண்டும்.

உள்ளூர் வரலாறு, உள்ளூர் விவசாயம், கலைப் பொருட்கள், வரலாற்று புகழ் வாய்ந்த தொன்மையான பகுதிகள், கலைகள், கைவினைப் பொருட்கள் என உள்ளூரை மையப் படுத்திய விஷயங்களை மாவட்ட அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்கும் வண்ணம் பாடத்திட்டங்களில் ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

வகுப்பில் ஒரு குழந்தைகூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளின் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை திட்டமிட வேண்டும். பாடப் பொருளை விட அனைத்து குழந்தைகளின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து இல்லாமல் அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான அனுகுமுறை சார்ந்து பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும்.

பி.எட் கல்லூரிகளில் வழங்கப் படும் பாடத்திட்டத்தில் கல்வி சார் ஆளுமைகள் மற்றும் புதுமையான உத்திகளை கண்டறிந்து பயன்படுத்தும் ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலில் இருந்து மாணவர்கள் கற்றுக் கொண்ட செய்திகளை மதிப்பீடு செய்யலாம்.







இணை மற்றும் துணை செயல்பாடுகள்

1. மாதம் ஒரு களப் பயணவழி கற்றல் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள் மாட்ட அளவில் போக்குவரத்து துறையோடு  இணைந்து  திட்டமிடப்பட வேண்டும்

2. தினந்தோறும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மாணவர்தம் ஆர்வத்திற்கேற்ப உள் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளை விளையாட வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.

3. வாரம் தோறும் பள்ளி அளவில் போட்டிகள்,  மன்றக் கூட்டங்கள், கருத்தாளர்கள் வருகை  இருக்குமாறு வாரத்தில் ஒரு நாளில் மதியம் கடைசி இரு பாடவேளைகளை திட்டமிட வேண்டும்.

4. கல்விச்சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்ல வழிவகை செய்தல் வேண்டும்.

5. தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தோல்விகளை ஏற்றுக் கொண்டு கற்கப் பழகுதல், தற்கொலைக்கு எதிரான மனநிலை, நல்லொழுக்கம், வன்முறைக்கு எதிரான மனநிலை, சமூக நல்லிணக்கம், சமத்துவ எண்ணம், பாலின சமத்துவம் போன்றவைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வடிவமைத்து மதிப்புக் கல்வி (Value Education) வழங்கப் பட வேண்டும்.

6. பேசு- மாணவர் மனசு- மாணவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு வழிவகை செய்து ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு பாடவேளை திட்டமிடப் பட வேண்டும்.

7. பல்வகை மன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அளவில் திட்டமிடல் செய்து சிறப்பான பொது செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளும் பொதுவான கால அட்டவணைப்படி செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும்.

8. பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பல தரப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஒரு வழிகாட்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும்.


மதிப்பீட்டு முறை

நமது மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் மதிப்பெண்களை துரத்துவதாகவே அமைந்துள்ளது. அந்த மதிப்பெண்களும் வாசித்து மனப்பாடம் செய்து எழுதும் ஒற்றை திறமை மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்பது வேதனை.

குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை விதைப்பதோடு மட்டுமின்றி சில குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிஞ்சு மனதில் அழுத்தத்தையும் வேதனையையும் இந்த மதிப்பீட்டு முறை ஏற்படுத்துகிறது.

பாகுபாடுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பு மதிப்பெண் மூலம் ஏற்படுத்தப் படும் படிநிலைகளை விரும்புகிறது. “உங்கள் பையன் சிறப்பாக இருக்கிறான்“ என்று கூறினால் பெற்றோருக்கு திருப்தி இல்லை. அதுவே ஒரு எண்ணை கூறி ” உங்கள் பையன் இவர்கள் அனைவரையும் விட மேலானவனாக உள்ளான் ” என்று கூறினால் பரம திருப்தி அடைய பழகிவிட்டார்கள். எனவே தான் CCE மதிப்பீட்டு முறை பரவலான வரவேற்பை பெற இயலாமல் போனது.

1. தேர்வு என்பது மனப்பாடம் செய்வது எழுதுவது என்ற ஒற்றைத் தன்மையில் இருந்து மாறவேண்டிய நேரம் இது. உரையாற்றுதல், செயல்திட்டம் சமர்ப்பித்தல், களப்பயண தகவல் சேகரிப்பு, கலையாக்க செயல்பாடு என இன்னும் பல கூறுகளை உள்ளடக்கிய வகையிலான மதிப்பீட்டு முறையை கண்டறிய வேண்டும். அனைத்து விதமான திறன்களையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த புதிய முறை இருக்க வேண்டும்.

2. வருடம் முழுவதும் படித்து வருட இறுதியில் தேர்வு என்பதை விட “கற்றல் விளைவுகள்“ வாரியான செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 50  விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள 50 விழுக்காடு வருட இறுதியில் மேலே சொன்னவாறு புதிய முறையில் தேர்வு வைத்து வழங்கப் பட வேண்டும்.

3. பல்வகை திறன்களை பாடத்தோடு இணைத்து வெளிப்படுத்தும் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படாது மாறாக தேர்வினை ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

4. கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த பாடத்திறன்களையும் ஒற்றைத் தேர்வுத்தாளில் கொட்டி மதிப்பெண் எதிர்நோக்கி காத்திருக்கும் முறையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

5. தேர்வு முறைக்குள் அனைத்து மாணவர்களின் துடிப்பான பங்கேற்பும் இடம் பெறும் வண்ணம் கடினப் பட்டு போய் கிடக்கும் இந்த வழக்கமான தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.


மு.செயராசு

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

நாகமங்கலம்

அரியலூர் மாவட்டம்

9790225620

jayarajsir@gmail.com 


Tuesday, May 31, 2022

பாம்பாயணம்

 பாம்பாயணம்



டிவி யில் நீயா படத்தில் இருந்து “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா, ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா…” என்ற பாடலுக்கு ஸ்ரீபிரியா வளைந்து நெளிந்து பாம்பு போல ஆடியபடி சக பாம்பு காதலனை குஷியோடு அழைத்தார். இந்த பாடல் பார்த்து பாம்புகள் பரவசம் அடைவதில்லை. ஆனால் இமைக்கா விழிகளில் நீர் வடிய இந்த பாடல்களை நம்ம பசங்க பார்த்து பரவசம் அடைகின்றனர். 

சரி, விஷயத்திற்கு வருவோம். இச்சாதிரி நாகப் பாம்புகள் நூறு ஆண்டுகள் தங்களது விஷத்தை விரயம் செய்யாமல் காத்துவந்தால் (என்னப்பா இது சிவராஜ் சித்த வைத்தியசாலை வைத்தியர் மாதிரி பேசுறீங்க) அது மாணிக்க கல்லாக மாறும். அந்த கல்லை கக்கி வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் அது இரை தேடும் அல்லது இணையோடு கூடும் என்று கலர் கலரா ரீல் விட்ருக்காங்க.

என்னப்பா, இல்லங்குறியா?

அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. பாம்பின் விஷத்தில் வெவ்வேறு வகை புரோட்டீன்களும் என்சைம்களும் இன்னபிற மினரல்களும் உள்ளன. அவை எப்போதும் திரண்டு நாகரத்தினமாக மாறி ஜொலிக்காது என்ற வருத்தமான உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

பாம்போட விஷம் கொல்லுமா கொல்லாதா?

சில கடுமையான விஷப் பாம்புகள் (இந்திய வகை பாம்புகளில் 10 விழுக்காடுதான் மரணத்தை ஏற்படுத்தவல்ல விஷத்தன்மை வாய்ந்தவை மற்றவை எல்லாம் ரொம்ப சாது தான்) இரண்டு வகைகளில் மரணத்தை ஏற்படுத்துகின்றன.

முதல் வகை ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுத்தி கொல்லுதல். ஆமாம், இந்த வகை விஷம் ரத்த நாளங்களில் உள்ளே நுழைந்தவுடன் ரத்தங்களை சிறு சிறு கட்டிகளாக உறையச் செய்துவிடும். இதனால் ரத்த நாளங்களில் துவாரங்கள் விழுந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடும். அப்புறம் என்ன ரத்த ஓட்டம் இல்லன்னா மர்கயா தான்.

இரண்டாம் வகை நரம்பு மண்டலங்களை பாதிப்பது. ஆமாம் இந்த வகை மூளையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கும். மூளையில் இருந்து தசைகளுக்கு கிடைக்கும் சமிக்கைகளை (signals) இடைமறித்து தடுத்து விடும். எனவே தசைகள் விரைத்துக் கொள்ளும். அப்படியே கீழே இறங்குகையில் உதரவிதானம் சுருங்கி விரிவது நின்று விரைத்து விடும். (பத்தாவது பயாலஜி புக்ல படிச்சிருக்கலாம், உதர விதானம் இறங்கி ஏறுவதால் தான் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசித்தல் சாத்தியமாகிறது) ஆக, நுரையீரல் செயலிழக்கும். அப்புறம் என்ன இறுதி நித்திரை தான்.

நாங்கதான் வெள்ளி செவ்வாயில் பாம்புக்கு பாலும் முட்டையும் வைப்போம் இல்ல, நாகராஜா எங்கள ஒண்ணும் செய்யாது!!

ஐயாம் வெரி சாரி கைஸ். நீங்க நினைப்பது போல பாம்பு உறிஞ்சி குடிக்கும் வகையில் வாயின் அமைப்பு கிடையாது. ’இரண்டாக பிளந்து கிடக்கும் நாக்கு என்னதான் செய்யுது’ ன்னு கேட்டா அது நாக்கே இல்லப்பு வெறும் ஆன்டெனா. 

அப்புறம் எதுக்கு பல்லு? இரையை கவ்வி உடலை முன்னிழுத்து குடலுக்குள் அனுப்பி விடும் பிறகு ஜீரண மண்டலம் ஜெலுசில் இன்றி வேலையை கனக்கச்சிதமா முடிச்சிடும். சாப்டது தேனா வேப்பங்காயா என்றெல்லாம் தெரியாது. “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே…“ என்கிற குறுந்தொகைப் பாடல் எல்லாம் பாம்புகளிடம் வேலைக்காகாது.

பாம்பு பாம்பாட்டி மகுடி ஊதும் போது அதுக்கு ஏற்றாற் போல் ஆடும் தானே? இதை நீங்க மறுக்க முடியாது.

ஒன்ஸ் எகெய்ன் சாரி பாஸ், பாம்புகளுக்கு காது என்கிற ஒன்றே கிடையாது. அதற்கு உடலே காது போல செயல்படும். மொழி படத்தில் ஸ்பீக்கர் அதிரும் அதிர்வை விரல்களால் ஜோதிகா உணர்வார் அல்லவா. அது போல தரையில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு தான் செயல்படும். பாம்பாட்டி மகுடியை ஊதும் போது கால்களை அசைக்கும் அதிர்வுக்கு பாம்பு ரியாக்ட் பண்ணி இருக்கலாம்.

இரண்டு தலை பாம்பு?

தலையும் வாலும் ஒண்ணு போல உள்ள பாம்புகள் உள்ளன. மற்றபடி இரண்டு தலைகள் எல்லாம் கிடையாது.

உடனடியா இருபது பேருக்கு ஷேர் பண்ணினா நல்லது நடக்கும் னுட்டு நான் வாட்சாப்பில் ஷேர் செய்த ஐந்து தலை நாகம் கூட வா பொய்?

அந்த படத்தை உங்களையே முட்டாளாக்கும் விதமாக வரைந்த ஓவியரை அல்லது கிராஃபிக் டிசைனரை நான் மனமாற பாராட்டுகிறேன்.  ஒட்டிப் பிறக்கும் இரட்டையர் போன்று கருவில் ஏற்பட்ட கோலாறு காரணமாக ஏதேனும் இரண்டு தலைகள் கூட சாத்தியமாகலாம் ஆனால் ஐந்து தலை சத்தியமா சாத்தியமில்லை.

பாம்பை அடிச்சி பாதியில விட்டோம்னா வந்து பழி வாங்கும் தெரியுமா? அடிச்ச இடத்தை அதோட ஜோடி வந்து பார்க்கும்.

அடேங்கப்பா, ஆதார் கார்ட போட்டோ எடுத்துக் கிட்டு வீடு தேடி வரும் என்று கூட சொல்லுங்களேன். பாம்பு தனது இணையை கவர வெளிப்படுத்தும் ஒரு வகை ஹார்மோன் வாசனை அந்த இடத்தில் வெளிப்பட்டிருந்தால் வேண்டுமானால் வர வாய்ப்பு உண்டு மற்றபடி பழிவாங்க விலாசம் தேடி வராது பயப்படாதீங்க.

சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் ”பிணையல்” போடுமா?

அதுங்க ரெண்டும் எல்லை தகராறு காரணமாக சண்டை வேண்டுமானால் போட்டிருக்கும் பிணையல் (புணர்வதற்கு) போட வாய்ப்பில்லை. கோழி வாத்தை புணரும் என்று நீங்க நம்புவதற்கு தயார் என்றால் இதையும் நம்பிக்கோங்க.

சாரைப் பாம்பு கண்ணைப் பார்த்து கொத்தும், வாலில் விஷம் இருக்கும். வாலால் அடிச்சா போச்சு அவ்ளோ தான்!!

அது முற்றிலும் விஷம் இல்லாத பாம்பு பாஸ். எலிகளைப் பிடித்து பயிர்களைக் காப்பதால் அது விவசாயிகளின் நண்பன் என்பார்கள். 

பச்சைப் பாம்பு கண்களைப் பார்த்து கொத்துமாமே!!

பச்சை பாம்பின் கூர்முனை உள்ளபடியே மிகவும் மென்மையானது. அதனால் அப்படி குத்திக் கிழித்து விடாது.

பாம்பும் கீரியும் சண்டை போடும். கீரியை பாம்பு கடித்தால் சாகாது தானே?!

பாம்பின் விஷத்தை பாம்பின் ரத்தத்தில்  நேரடியாக செலுத்தினால் அந்த பாம்பு இறந்து போகும் என்பது திண்ணம். அப்படி இருக்கும் போது கீரியை பாம்பு கடித்தால் இறக்காதா என்ன?

கவலைப் படாதீங்க இந்த பாம்பு பல்லு பிடுங்குனது தான்!!

ஆமாம், நல்லப் பாம்பின் விஷப் பல்லை வேண்டுமானால் பிடுங்கலாம். ஆனால் கட்டு விரியன், கண்ணாடி விரியன் சுருட்டை போன்ற பாம்புகளின் விஷப் பல்லை பிடுங்கினால் அவை இறந்து போகும். ஆக்சுவலா பாம்புகளின் விஷப் பல்லின் மேலே விஷம் ஒரு பை போன்ற அமைப்பில்  இருக்கும். அந்த பல்லின் முனையில் உள்ள துவாரத்தின் வழியாக அதிக அழுத்த த்தில் இஞ்செக்ஷன் போடுவது போல தோலை துளைத்து ரத்தத்தில் ஏற்றிவிடும்.

இந்தியாவில் 270 வகை பாம்புகள் உண்டு அவற்றில் ஒரு 27 வகை மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவை. அதுவே தமிழகத்தில் உள்ள 206 வகைகளில் நல்ல பாம்பு, சுருட்டை, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் கடல் பாம்புகளில் சில வகை மட்டுமே விஷம் உடையவை.

நல்ல பாம்பின் விஷம் தான் நரம்பு மண்டலத்தை பாதிப்படையும் வகை விஷம். விரியன் வகை பாம்புகளின் விஷம் ரத்த ஓட்ட மண்டலத்தை பாதிக்கும். 

இரண்டு வகை விஷங்களுமே ஜீரண மண்டலத்தை பாதிக்காது. ஒரு டம்ளர் கடுமையான விஷத்தை அப்படியே அருந்தினால் கூட எதுவும் ஆகாது என்கிறார்கள். என்ன ஒன்று உங்க ஜீரண மண்டலத்தில் எந்த ஒரு இடத்திலும் சிறு கீரல் கூட இருக்கக்கூடாது ஜாக்கிரதை.

அதனால் பச்சிலைத் தரேன் விளக்குமாற்றால் மந்திரிக்கிறேன் என்று எவராது குணப்படுத்தினேன் என்று கூறினால் நிச்சயமாக அது உண்மையல்ல. இருட்டில் விட்ட அம்பு எதேச்சையாக இலக்கை தைத்தது போல ஏதேனும் 90 விழுக்காடு விஷம் இல்லா பாம்பு கடித்து பிழைத்திருக்கலாம்.

மற்றபடி விஷப் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து மட்டுமே ஒரே தீர்வு. பயமும் பதட்டமும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விஷத்தின் வேலை துரிதமாகிவிடும். எனவே பதட்டம் இன்றி எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனை சென்று விடவேண்டும்.

இது போல இன்னும் ஏராளமான கட்டவிழ்த்துவிடப் பட்ட புரளிகள் பாம்புகளைப் பற்றி உண்டு. எதையும் தேடித் துருவி உண்மையைக் கண்டறிவோம். 

உள்ளபடியே பாம்பு கூச்ச சுபாவம் உள்ள பிராணி. ஆட்கள் வருவதை தரை அதிர்வுகள் மூலமாக உணரும் பட்சத்தில் விரைந்து அவ்விடத்தில் இருந்து வெளியேறவே விரும்பும். சில அசந்தர்ப்ப வேளைகளில் அதனை மிதித்தோம் என்றாலோ அல்லது அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நாம் அசைவோமானால் அவை நம்மை கடிக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 90 விழுக்காடு பாம்புகள் விஷம் இல்லாதவை. ஆனாலும் பாம்புகள் கடித்துவிட்டு ஆட்டோகிராஃப் எதுவும் போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லாது எனவே எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனை சென்று ”உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே” என்பதை உறுதி செய்து கொள்வது புத்திசாலித்தனம்.

முக்கியமாக பாம்புகளை கண்ட உடனே அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். விரட்டி விடுங்கள் போதும்.

(தலைப்பு Gomathisankar Gosar அவர்கள் ஒரு கமெண்டில் போட்ட வார்த்தை. பொருத்தமாக இருந்ததால் எடுத்தாண்டு கொண்டேன் நன்றி சார்.)


Friday, May 6, 2022

கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்

 மீள்பதிவு


கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்!!


 // பொறுப்புத் துறப்பு – ஹோமியோபதி சித்தா போன்ற மருத்துவ முறைகளின் பால் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. ஆனால் எல்லாவிதமான வியாதிகளுக்கும் அங்கே மருந்து உண்டு என்று நம்பி அலோபதியை புறந்தள்ளுவது நல்லதல்ல. 

சில உடல் சார்ந்த அவசரகால உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் என்று வந்தால் நாம் அலோபதியைத் தானே நாட வேண்டும். கழுத்து அறுபட்டு ரத்தம் ஊற்றிக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு கசாயத்த பிழிந்து கொண்டு வருவது பொருத்தமான வைத்திய முறையா?

எனவே சில சிற்சிறு உடல் உபாதைகளுக்கு இங்கேயும் மற்றவற்றுக்கு அங்கேயும் என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.  ஆனால் இந்தக் கட்டுரையில் நான் கூற வருவது ஏடாகூட ஸ்டேட்மெண்ட்களால் தெறிக்க விடும் ஹீலர்கள் பற்றி//

 எனது உறவினர் ஒருவர் பார்வைக் குறைபாட்டிற்காக கண்ணாடி  அணிந்திருந்தார். எங்கோ திருநெல்வேலிப் பக்கம் ஒரு வைத்தியர் ஒரு பல் பொடி கொடுக்கிறார் பார்வைக் குறைபாடு உடனே நீங்கி விடுகிறது என்ற கூறி அழைத்துச் சென்று பல்பொடி வாங்கி பல் தேய்த்த மாத்திரத்தில் அவரது கண்ணாடியை வாங்கி கீழே போட்டு உடைத்து விட்டார் அழைத்துச் சென்றவர். சமீபத்தில் பார்த்த போது புதிய கண்ணாடி அணிந்திருந்தார்.

 2000 த்தின் ஆரம்ப காலத்தில் எனது உறவினர் தனது நீண்டகால முழங்கால் வலிக்காக செய்தித்தாள் விளம்பர பிரபல பரம்பரை வைத்தியரிடம் சென்றார். ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்டு நம்புகிறது போல பேசி பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படுத்தி மருந்துகள் கொடுத்து அப்போதே 2000 தீட்டியிருக்கிறார். புதிய மருத்துவம் தரும் நம்பிக்கை உளவியல் கொஞ்சநாள் சிறு ஆசுவாசத்தை தந்திருக்கிறது. அடுத்த முறையும் சென்றார். அதற்கடுத்த முறை செல்லவில்லை. ஒவ்வொரு மாதமும் 2000 கொடுத்தும் உபாதையில் பெரிய மாற்றம் இல்லை.

உடல் சார்ந்த சில பிரச்சனைகளில் நீண்ட கால மருந்துகள் சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், அலர்ஜி மற்றும் வயது முதிர்ந்தோர் சந்திக்கும் பல பிரச்சனைகள் இவை அனைத்துக்குமே அலோபதியில் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வர வேண்டிய தேவை உள்ளது. நீண்டகாலம் மருந்து சாப்பிட்டு உளவியல் ரீதியாக சலிப்படைந்து இருக்கும் எவருக்குமே ஒரு சுலபமான மாற்று இருந்தால் “லபக்“ என்று பிடித்துக் கொள்ள தயாராகவே இருப்பார்கள். இவர்கள் தான் இப்போது பெரிதாக தலையெடுத்திருக்கும் ஹீலர்களின் இலக்கு.

 “எனக்குத் தெரிந்த ஒரு ஹீலர் இருக்கார், சுகர் பேஷண்ட் வந்த உடனே கால்கிலோ சுவீட் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து தான் ட்ரீட்மெண்டே ஆரம்பிப்பார்”

 “சுகர் எல்லாம் ஒரு வியாதியே கிடையாதுங்க!!” என்று அதிரடிப்பார் அந்த ஹீலர்.

 மேலே சொல்லுப்படும் செவி வழிச் செய்தி மார்க்கெட்டிங் அடுத்து ஹீலரே கூறுவது உங்களுக்கான பாசவலை போன்று தெரியும் மோசவலை.

 துவக்கத்தில் குணமாவது போல இருந்தாலும் நாளாக நாளாக ஒரு மாற்றமும் தெரியாது. அதற்குள்ளாக ஐந்து கிலோ தார் உருண்டையை விழுங்கித் தொலைத்திருப்போம். எப்போதுமே ஏமாந்த கதையை வெளியே சொல்ல எவருடைய ஈகோவும் முன்வருவதில்லை. ஆகவே யார் விசாரித்தாலும் பரவாயில்லைப்பா என்று கூறிக் கொண்டு கமுக்கமாக அலோபதிக்கு திரும்பியிருப்பார்கள்.

 கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாற்று மருத்துவர்களின் பால் எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அவர்களில் ஏராளமானோர் கிராஸ் பிளாட்ஃபாரம் ரிசர்ச் மூலம் மாற்று மருத்துவத்தை நம்பிக்கை தரும் பாதைகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. 

ஆனால் இந்த ஹீலர் எனக் கூறிக் கொள்பவர்கள் ஏதாவது டப்பா கோர்சை முடித்து பெயருக்கு பின்னால் எம்.டி என்றெல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஆசிரியர் நண்பர் ஒருவர் எம்.டி அக்குப்பஞ்சர் முடித்துள்ளார். யாராவது தலை வலிக்கிறது என்றால் கூட சில ஊசிகளை அங்கங்கே குத்தி வைத்து எதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆர்வத்தோடு விசாரிப்பார். அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் சரியாகிவிட்டது என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவருவோர் ஏராளம்.

”சுகர் எல்லாம் வியாதியே கிடையாதுங்க. எதை வேண்டுமோ சாப்பிடுங்க. அட கொழுப்பெல்லாம் ஒன்றும் இல்லைங்க. அந்த டாக்டருங்க அப்படித்தான் சொல்லி காச கறப்பாங்க. நீங்க சாப்பிடுங்க”என்று வாஞ்சையாக சொல்லும் சக சீனியர் எம்.டியும் கூட அதே பள்ளியில் இருந்தார். அவர் இப்போது கொரோனா எல்லாம் ஒன்றும் இல்லைங்க என்று அனைவரின் மாஸ்க்கையும் கழட்டச் சொல்லி வருவதாக கேள்வி.

இப்போ பாய்ண்ட்டுக்கு வருவோம், இந்த ஹீலர் பாஸ்கர் தெரியுமா??

மருத்துவத்தில் சொல்லப்படும் அனைத்து விஷயங்களையும் ஏடாகூடமாக மறுத்து பேசுவது இவரது வாடிக்கை.

உலகமே கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க சிலிண்டர் மூலமாக ஆக்சிஜன் ஏற்றி நோயாளிகளை காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அகில  உலக ஆக்சிஜன் பிரச்சனைக்கு அசால்டாக ஒரு தீர்வினை சொல்கிறார் ஹீலர் பாஸ்கர்.

“ரூமு மூடியிருக்கு, ஏசியில் ஆக்சிஜன் வராது மாஸ்க் போட்டு மூக்க மூடியாச்சு, அப்புறம் எப்படிங்க ஆக்சிஜன் கிடைக்கும். கொஞ்சமாவது அறிவக் கொண்டு யோசிங்க. மாஸ்க்க கழட்டி வீசிட்டு டேபிள் ஃபேன் அல்லது குட்டி மேக்கப் ஃபேன மூக்கு பக்கத்துல வச்சிப் பாருங்க ஆக்சிஜன் அளவு கூடலன்னா அப்புறம் ஏன்னு கேளுங்க”

மக்களே ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றி உடல்முழுவதும் அனுப்ப வேண்டிய நுரையீரலின் வேலை கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே அதிக அழுத்தத்தில் பிராண வாயுவை நுரையீரலுக்குள் செலுத்துகிறார்கள். 

அடுத்து ரத்த தானம் செய்வது ரத்தம் பெறுபவருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம் ஆனால் கொடுப்பவருக்கு அது கெடுதல் என்று ஒரே போடாக போடுகிறார். இந்த ஆள் பேசுவதைக் கேட்டால் குருதிக் கொடையாளர்களிடம் பெறும் ரத்தத்தை அப்படியே வைத்திருந்து தேவையுள்ளோருக்கு ஏற்றுவதாக எண்ணிக் கொண்டுள்ளார் என தெரிகிறது. நானும் கூட இளம்பிராயத்தில் சினிமாக்கள் பார்த்து குழாயின் ஒரு முனையை கொடையாளரிடமும் மறுமுனையை பெறுபவரிடமும் சொறுகி ரத்தம் ஏற்றி விடுவார்கள் என நம்பியிருக்கிறேன்.

அப்புறம் சுகப் பிரசவ உடற்பயிற்சி, வாழை இலைக் குளியல் என்று ஏகப் பட்ட ஐட்டம் வைத்திருக்கிறார் அவரது முகநூல் பக்கத்தில். எதையும் உரத்த குரலில் அடித்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யும் பல நண்பர்களை நான் பார்த்துள்ளேன். இவர் அந்த ரகம். அந்த பேச்சைக் கொண்டே கல்யாண மண்டபங்களில் பயிலரங்குகள் நடத்தி நன்றாக கல்லாக் கட்டியும் வருகிறார்.

இவரது நன்றாக மாவு போல மென்று சாப்பிடும் முறையான சர்வரோக நிவாரணியை பெரிதாக நம்பிய எனது நண்பர் ஒருவர் அதான் மென்று சாப்பிடுகிறோமே எதற்கு இந்த சுகர் மாத்திரை என்று தூக்கி கிடாசிவிட்டார். அப்புறம் ஏடாகூடமாகிப் போய் இன்சுலின் மாத்திரையில் இருந்து இன்சுலின் ஊசிக்கு புரமோட் ஆகியுள்ளார்.

ஆங்கில மருத்துவம் வணிகமயம் ஆகிவிட்ட காரணத்தினால் பேராசை காரணமாக தேவையற்ற சோதனைகள் மருந்துகள் பரிந்துரை என்று பல தவறுகள் நடக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக அதை ஒரேயடியாக தலைமுழுகிவிட்டு ஹீலர்களிடமும் இரண்டுமாத எம்.டி மருத்துவர்களிடமும் சரணாகதி அடைவது பேராபத்தாய் முடியும்.

ஹீலரின் ஆக்சிஜன் வீடியோ பார்த்து தம்கட்டி இதை டைப் பண்ணும் இந்த வேளையில் கண்ணில் பட்டு தொலைத்த செய்தி 

“காயத்திரி மந்திரம் கொரானாவை குணப்படுத்துகிறதா?” என்கிற ஆராய்ச்சிக்கு மத்திய அரசு பதினைந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு.

”டேய் காயத்திரிக்கும் ஹீலருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கடா கொரோனா மூன்றாவது அலை என்ன முந்நூறாவது அலை கூட வரும்”  இவனுங்களுக்கு மத்தியில உசரோட இருக்கறதே பெரிய சாதனைதான் போல!!

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...