Monday, May 13, 2024

மலையாளக் கரையோரம் -3

மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது)
பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிறதா கேரள தேசம்? கேரளாவில் நாங்கள் பயிற்சிக்காக சென்றதே கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறித்து கண்டு வரத்தான். எனவே பயிற்சியின் இரண்டாம் நாள் புரோக்ராமே அதுதான். முதலில் நாங்கள் சென்றது ஒரு மேல்நிலைப் பள்ளி. ஆனால் கெடுவாய்ப்பாக அரசுப் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. நாங்கள் சென்றது ஒரு Aided School. தலைமையாசிரியரை பேட்டி காண வசதியாக முதல்வரிசை நாற்காலிகளில் நட்ட நடு நாற்காலியை பிடித்துக் கொண்டேன். ( தேனீர் கொண்டு வந்தவர் இரண்டு ஓரங்களில் இருந்து கொடுத்த போதும் என்னை விட்டுவிட்டார். எனது தவிப்பை கண்டு கொண்ட தலைமையாசிரியர் அவரிடம் கூறி எனது வயிற்றில் தேனீர் வார்த்தார்) நானே கேள்விகளை யோசித்து டைரியில் குறித்து எடுத்து வந்திருந்தேன். அருகில் இருந்த ஆசிரியரோ ஒரு கற்றை பேப்பர்களை வைத்திருந்தார். உடன் வந்திருந்த மற்றொரு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் அந்த பள்ளியின் துவக்க நிலை வகுப்பறைகளை பார்வையிட ஆர்வமாக சென்றுவிட்டார். கேரள மேல்நிலைப் பள்ளிகளில் இரட்டைத் தலைமை உள்ளது. ஆமாம், 6-10 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் தலைமையாசிரியர். நாங்கள் முதலில் அவரைத்தான் பார்த்தோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கேட்டாலும் தெளிவாக பொறுமையாக எளிமையாக ஆங்கிலத்தில் விளக்கங்கள் கூறினார். 11-12 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் பள்ளி முதல்வர். பள்ளி மேலாண்மையில் இருவருக்கும் வேலைகள் பிரித்து வழங்கப் பட்டுள்ளன. முதல்வரை சந்திக்க சற்று காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் தனது வரலாற்றுப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்திவிட்டு கைமுழுக்க சாக்பீஸ் கறையோடு வந்திருந்தார். மலையாள வாடை துளியும் இன்றி தமிழில் பேசினார். நமது மாநிலத்தில் டிகிரி மற்றும் பி.எட் படித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரையில் நமது பள்ளிகளைப் போல் தான் இயங்குகிறது. கல்வித் தரம் மாணவர் தேர்ச்சி விழுக்காடு போன்ற எந்த விஷயத்திலும் நமக்கும் அவர்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. நூறு விழுக்காடு தேர்ச்சிக்காக அவர்களும் புஜபல பராக்கிரமங்களையும் பயன்படுத்தித்தான் வருகிறார்கள் என்பதை முதல்வரிடம் அன்அஃபிஷயலாக பேசிய போது அறிய முடிந்தது. கேரள தேசம் கம்யூனிசம் வேர்விட்டு வளர்ந்து இன்னமும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று வரும் அளவுக்கு உள்ள மாநிலம். எனவே பெற்றோருக்கு தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே உள்ளது. எனவே பள்ளி நடவடிக்கைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. பள்ளிக்கு வர அவர்கள் தயங்குவதே கிடையாது. Adolescent kids issues இங்கே இருப்பது போல அங்கேயும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? எங்களோடு வந்திருந்த ஆசிரியர் ஒருவர் ஆர்வமிகுதியில் ”பதின்பருவ ஆண் பெண் பாலின ஈர்ப்பு சார்ந்த பிரச்சனைகளை எப்படி கையாளுவீர்கள்?” பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியை நாடுவீர்களா? என்றார். அவர்மேல் தவறு இல்லை கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்பு அபரிமிதமாக உள்ளது, அவர்கள் அனுமதி இன்றி அணுவும் அசையாது என்று பயிற்றுவிக்கப் பட்டிருந்தோம். அதற்கு தலைமையாசிரியர் கூறிய பதில் சிறப்பாக இருந்தது. “இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் எதற்கு அவர்கள்( இந்த இடத்தில் எரிச்சலுற்றார்) குட்டிகளோட பேரண்ட்ஸ் மட்டும் போதுமே. ரகசியமாக விசாரிக்க வேண்டிய விஷயத்தை மூன்றாவது நபருக்கு தெரிவதை பெற்றோர் விரும்பமாட்டார்கள் அல்லவா?“ என்றார். மாணவர்களின் டெக்ஸ்ட் புக் கொடுக்கச் சொல்லுங்கள் சார் கொஞ்சம் பார்க்கணும் என்று எங்களோடு வந்திருந்த ஒரு தலைமையாசிரியர் கேட்டார். “சார் இங்க முழுக்கவே NCERT books தான் ஃபாலோ பண்றோம். மேல்நிலைக் கல்வி முழுவதுமே சிபிஎஸ்இ தான். அவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார். வகுப்பறையில் பார்த்தபோது மாணவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சுருக்கப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்று புரிந்தது. அதுபோல மலையாளத்திற்கு பதிலாக பெரும்பான்மை மாணவர்கள் இந்தியை மொழிப்பாடமாக படிக்கிறார்கள். இங்கே நமது மாநிலத்தில் சேர்க்கையை அதிகரிக்க ஆங்கில வழி சில பள்ளிகளில் துவங்கப் படுகிறது அல்லவா? அதுபோல அங்கேயும் எல்லா வகை அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழியும் உள்ளது. பெற்றோரின் ஆர்வமிகுதியால் ஆங்கில வழி வகுப்புகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றனர். இந்த மாற்றம் ஆரோக்கியமான மாற்றமாக எனக்கு படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள். விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயார் ஆகலாம். பள்ளிகள் பார்வைக்கு பிறகான மீளாய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த கேரளக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசினார். அப்போது வாய்ப்பு வழங்கப் பட்ட போது கையை உயர்த்தி இந்த ஐயத்தை நான் எழுப்பினேன். “கேரளாவில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் புத்தகங்கள் எல்லாமே சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் உள்ளன. அப்படியானால் அந்த வகுப்புகளில் வரும் மொழிப் பாடம் மற்றும் கலைப் பிரிவுகளில் உங்கள் மாநிலம் சார்ந்த விஷயங்களை பயிற்று விக்க வாய்ப்பு இருக்காது தானே?“ என்றேன். “ குட்டிகள் நீட் ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் எழுத இது உதவியாக இருக்கும் அல்லவா?” என்றார். ”டாக்டர் ஆகணும்னா நீ படி மேன் ஒய் மீ” என்கிற சாமானிய மாணவனின் குரல் எனது காதுகளில் மட்டும் ஒலித்தது. ஆக, நீட், ஜேஇஇ ஆல் நம்ம பாடப் புத்தகங்கள் தான் பருத்துப் போனது ஆனால் அங்கே கேரளத்தில் பாடத்திட்டமே மத்திய அரசிடம் போய்விட்டது. அங்கே திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலுமே மாணவர்கள் வந்து போவதற்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப் பட்டு உள்ளன. சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி அல்லது பெருந்தனக் காரர்களின் அன்பளிப்பு என்று நிதி வசதி பெற்றுள்ளார்கள். டீசல் டிரைவர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு பிள்ளைகளிடம் வசூல் செய்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அனைத்து தொடக்க பள்ளிகளிலுமே மதியம் மூன்று மணிக்கு மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கப் படுகிறது. நாங்கள் சென்றிருந்த போது வழங்கப் பட்டது. தரமும் நன்றாகவே இருந்தது. நமது மாநிலத்தைக் காட்டிலும் கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அதிகமாக உள்ளன. துவக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் கிடையாது. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். நமது மாநிலம் போல ஒரு கீமீ சுற்றளவுக்குள் ஒரு துவக்கப் பள்ளி என்கிற அடர்த்தியில் துவக்கப் பள்ளிகள் உள்ளனவா என்று தெரியவில்லை. நமது மாநிலத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று உள்ளது. பெற்றோராக இல்லாதபோதிலும் கௌரவத்திற்காக தலைவர் பதவியில் நங்கூரமிட்டு வருடக்கணக்கில் இருக்கிறார்கள். சில ஊர்களில் “பெரிய குடும்பங்களின்“ வாரிசு வழிப் பதவியாக பல ஆண்டு காலம் சிக்கி சீரழிகிறது. பள்ளி மேலாண்மைக்குழுவின் கட்டமைப்பு அந்த விஷயங்களை இங்கே உடைத்துள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு பொறுப்புகளும் கடமைகளும் ஏராளம் வழங்கப் பட்டு பள்ளி கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டிற்கு சட்டரீதியான அனுமதி இங்கே உள்ளது. அங்கே பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்கனவே இதை எல்லாம் செய்து வருவதால் பள்ளி மேலாண்மைக்குழு மற்றுமொரு பாடியாகவே உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக் கூட்டம் வருடம் ஒரு முறையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கட்டாயமாக பருவம் தோறும் தேவை ஏற்பட்டால் கூடுதலாகவும் நடைபெறுகிறது. வகுப்பு வாரியான பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் பருவத்தேர்வுக்கு பிறகு கூட்டப் பட்டு மாணவர்களின் நிலை குறித்து விவாதிக்கப் படுகிறது. பாக்கெட் பிடிஏ என்று மாணவர்களின் இருப்பிடங்கள் வாரியாக கூட்டங்கள் நடத்தப் படுவதாகவும் கூறினார்கள். பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய பார்வையிடலுக்கு சென்றிருந்தாலும் அங்கே பள்ளியில் பேசிய அனைவருமே பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்தே பேசினார்கள். இவை அல்லாமல் விஜிலென்ஸ் கமிட்டி போன்ற ஒரு அமைப்பு ஆட்டோ ஓட்டுனர்கள், பொது ஜனங்கள், போலீஸ் போன்ற அந்த பகுதி மக்களைக் கொண்டு ஒரு அமைப்பு இயங்குவதாக தெரிவித்தனர். பொது இடங்களில் மாணவர்களின் செய்கைகள், ஒழுக்க கேடான விஷயங்களை கண்காணித்து ஆசிரியர்களுக்கோ தேவைப் பட்டால் பெற்றோர்களுக்கோ தகவல்கள் பகிரப் படுகின்றனவாம். வளையல், ஒற்றைக் காது கடுக்கண், பாதி மண்டையை கரண்டி வைத்தல், காதோரம் சுரண்டி வைத்தல் என்று ஸ்டைல் பாண்டி விஷயத்தில் இங்கே உள்ள மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று நிலைநாட்டினார்கள். எங்கேயும் எப்போதும் போல அங்கேயும் “பிரபல பள்ளி” மோகம் மிகுதியாகத்தான் உள்ளது. திருவனந்தபுரம் நகர் மத்தியில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏழாயிரத்து சொச்சம். நாங்கள் அந்த வழியாக மாலை வேளையில் சென்ற போது மாணவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் ஒரு கிமீ நீளத்திற்கு அணிவகுத்து நின்றன. கேரளப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு செயல்படும் விதம் கண்டு பயில சென்ற எங்களுக்கு திருவனந்தபுரம் நகரப் பள்ளிகளுக்கு செல்ல மட்டுமே வாய்ப்பு அமைந்தது. மீளாய்வுக் கூட்டத்தில் “குறைந்த பட்சம் திருவனந்தபுரம் சுற்றுவட்டார கிராமத்துப் பள்ளிகளையாவது காட்டி இருக்கலாம். நகரப் பள்ளிகளை மட்டுமே பார்ப்பதால் மாநில பள்ளிகளின் நிலமை குறித்த முழுமையான நீள்வெட்டுத் தோற்றம் கிடைக்காதே? “ என்று எங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டோம். அடுத்த பேட்ச் சென்று வந்தவர்களுக்கும் “அதே டைலர் அதே வாடகை“ கணக்குத்தான். தயவு செய்து இது போன்ற பயிற்சிகளை துறை முன்னெடுக்கும் போது பயிற்சிக்கு செல்வோரை குழுக்களாக பிரித்து முழு கேரளாவுக்கும் அனுப்ப வேண்டும். அப்போது தான் முழுமையாக ஒரு படம் கிடைக்கும். மற்றும் ஒரு முக்கியமான விஷயம், தமிழக அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளின் மாணவர்களின் அனைத்து விதமான விவரங்களும் எமிஸ் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு தகவலையும் நினைத்த இடத்தில் இருந்து அந்த தளத்திற்குள் நுழைந்து எடுத்து விட முடியும். அதுபோல அரசும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை தேவையான விதத்தில் அந்த தரவு தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்தி அவர்களின் திறன்களை பரிசோதிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. தலைமை ஆசிரியர்கள் வகுப்பறைகளை கண்காணிப்பு செய்வதை கூட இந்த தளத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆன்லைனில் அட்டெண்டன்ஸ் போடப்படுகிறது, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு இந்த தளம் வாயிலாக அவர்களின் பெற்றோருக்கு தங்களது பையன் பள்ளிக்கு வரவில்லை என்கிற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் வசதியும் உள்ளது. மேலும் கொரோனா விடுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளி வந்தபோது அவர்களது பாடி மாஸ் இன்டெக்ஸ் எமிஸ் தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த விவரங்களை வைத்து தான் தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத திட்டமான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி பலவிதமான பள்ளி சார் தகவல்களை தலைமை இடத்தில் இருந்து சுலபமாக பெற இந்த தரவு தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்றதொரு டிஜிட்டல் தரவு தளம் கேரள பள்ளிகளில் இருப்பதாக தெரியவில்லை. நான் சந்தித்த தலைமையாசிரியரிடம் கேட்டபோது அதுபோல எதுவும் இல்லை என்றே பதில் அளித்தார். எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றுவது பாட செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்தாலும் அந்த தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆன்லைன் டிசி, தமிழ் வழி படிப்புக்கான சான்று, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பு மற்றும் திருத்தங்கள் தேர்வு சார்ந்த அனைத்து விதமான கடினமான நடைமுறைகள் என பல வகை பயன்களை இந்த தரவுத்தளம் மூலமாக தமிழக பள்ளிகள் பெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களை மாணவர் நலன் சார்ந்து பொருத்தமான முறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான நன்மைகளை பெறுவதில் தமிழகம் கேரளாவை விட பல படிகள் முன்னே உள்ளது என்றால் அது மிகை இல்லை. பள்ளி மேலாண்மையில் பெற்றோர்களின் பங்களிப்பு என்கிற ஒரு விஷயத்தில் வேண்டுமானால் அவர்கள் சற்று முந்தி இருக்கலாம் ஆனால் ஏனைய பல கூறுகளில் கேரள மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தையும் விட தமிழகம் பல படிகள் முன்னே உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே இனிவரும் காலங்களில் மற்ற மாநில ஆசிரியர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று இங்கிருந்து பல நுட்பங்களை எடுத்துச் சென்று அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக மலையாள கரையோரம் சென்றபோது எந்த விதத்திலும் அந்தப் பள்ளிகளை பார்த்து பிரமிப்போ தாழ்வு மனப்பான்மையோ எங்களுக்கு நிச்சயமாக ஏற்படவில்லை. மாறாக நமது பள்ளிகள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்கிற பெருமிதம் தான் ஏற்பட்டது. கல்வியில் மாநில உரிமைகள் குறித்து உரக்க முழக்கம் இடும் மாநிலம் நாமாக தான் உள்ளோம். கேரளா எந்த வகையிலும் கல்வியில் சுய சார்போடு இயங்க முயற்சிக்கவில்லையோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ஏனெனில் மேல் நிலையில் முழுக்க முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது, அது போல மலையாளத்துக்கு பதிலாக இந்தியை படிக்க வாய்ப்பு வழங்குவது என்று அவர்கள் சற்றே வடமாநிலங்கள போல செயல்பட துவங்கியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. இவை அங்கே நான் பார்த்து கேட்டு அறிந்து கொள்ள விஷயங்களில் இருந்து எழுதியவை தான் ஒருவேளை இதில் ஏதேனும் முரண்பாடான கருத்துக்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Wednesday, May 8, 2024

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு எழுதியது. தினகரனில் வந்த எனது கட்டுரையின் மூலம் இதுதான். அவர்கள் சிறப்பாக பாலிஷ் செய்திருந்தார்கள். வளரிளம்பருவம் மிகவும் சிக்கலானது, பிரச்சனையை இழுத்துவரக் கூடியது, கவனமாக அணுகப் பட வேண்டியது. அதுவே இணையப் பருவமாக இருந்தால் சிக்கல்கள் அனைத்தும் இரட்டிப்பாகிவிடுகிறது. ஆசிரியரை மையத்தில் வைத்து சுற்றி வந்து கும்மியடிக்கும் மேல்நிலை வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியரை தகாத வார்த்தைகள் கொண்டு கோபத்தோடு திட்டும் மாணவன். ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுக்கும் வேளையில் கடைசி பெஞ்சில் நடனமாடும் மாணவன். வகுப்பறைக்குள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் மாணவர்கள். பள்ளி தளவாடங்களை உடைக்கும் மாணவர்கள். ஏறினால் ஜெயில் இறங்கினால் பெயில் என்று கூறும் உயர்நிலை வகுப்பு மாணவன். இன்னும் ஏராளமான காணொலிகள் இணைய வெளி எங்கும் கொட்டிக் கிடக்கின்றன, பார்க்கப் படுகின்றன பதற்றத்தோடு பகிரப்படுகின்றன. இந்த சம்பங்கள் எவ்வாறு காணொலிகளாக மாறின என்று சிந்தியுங்கள். கொரானா கற்றல் இடைவெளியை சரிசெய்ய கல்வித் தொலைக்காட்சியை வலுப்படுத்தியதோடு நில்லாமல் வாட்சாப் வகுப்புகளை கல்வித்துறையே ஊக்குவித்தது. பொருளாதார சமநிலை என்கிற ஒன்றே இல்லாத சமூகத்தில் தொடுதிரை போன், டேட்டா மற்றும் வாட்சாப் என்கிற செலவுபிடிக்கும் சமாச்சாரங்களை ஏழை மாணவன் உள்ளிட்ட அனைவரிடமும் திணித்திருக்கிறோம். கல்விக்கென்றே பிரத்தியேகமாக ஒற்றைச் செயலி தொடுதிரைக் கருவியை வடிவமைத்திருக்க வேண்டும். மாறாக, நல்லதும் கெட்டதும் கொட்டிக் கிடக்கும் இணையவெளிக்கு நல்லது எது கெட்டது எது என பிரித்தறிய இயலா வளரிளம் பருவத்தினரை கை பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறோம். வளரிளம் பருவ மாணவர்களுக்கு தினந்தோறும் இருபது ரூபாய் பாக்கெட் மணி கொடுத்துவாருங்கள். அவர்கள் தீனி வாங்கித் தின்னுவது என்பது அதிகபட்சம் ஒரு மாதம் வரை நடக்கலாம். அதன் பிறகு வேற என்ன வேற என்ன என்கிற பரவச தேடுதல் அவர்களை வேறு வேறு விஷயங்களை நோக்கி அழைத்துச் செல்லும். விளைவு, புகைபிடித்தல் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் என்று படிப்படியாக “முன்னேறுவார்கள்“. அதுபோலத் தான் இணையவெளியை பயன்படுத்தும் வளரிளம் பருவத்தினரும். மொபைலுடனான தங்களது தருணங்களை எப்படியெல்லாம் சுவாரசியமானதாகவும் பரவசமானதாகவும் மாற்றலாம் என்று தொடர் தேடுதலில் ஈடுபடுகிறார்கள். கெடுவாய்ப்பாக அவர்களைவிட வயதில் மூத்த கல்லூரி மாணவர்கள் தங்களை சாகசக்காரர்களாக காண்பிக்க எண்ணி புதிய புதிய விஷயங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். இந்த கட்டுரையில் ஏன் இதெல்லாம்? “ஒரு வைரல் வீடியோவில் தானே கதாநாயகனாக இருந்தால் என்ன?” என்கிற அடுத்த லெவல்தான் இந்த சேட்டைகள். இதெல்லாம் ஒழுக்க கேடு அல்லவா? இளம் தலைமுறையினர் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவதைக் கண்டும் வாளாவிருப்பதா என்று நமக்கு ரத்தம் கொதிப்பது இயல்புதான். ஆனால் சிந்தித்து பார்த்தால் இதுபோன்ற ஒழுக்க கேடு அங்கொன்றும் இங்கொன்றும் என காலந்தோறும் நடந்தே வந்துள்ளது. பிட் அடித்தவனை பிடித்துகொடுத்த ஆசிரியரை பஸ்டாப்பில் அடித்தது. பிரம்படி கொடுத்த ஆசிரியரின் கையை பிடித்தது. திட்டிய ஆசிரியரை நெட்டி தள்ளியது. தொலைவில் இருந்து கல்லெறிந்தது இங்க் அடித்தது, ஊரில் ஆள் திரட்டி அடிக்க வந்தது என எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளது. அதாகப் பட்டது ஆசிரியர்கள் கைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்துள்ளது. இணையத்தில் வைரல் ஆவதால் அனைவருடைய பாக்கெட்டுக்கும் இந்த காணொலிகள் வழிகேட்டு வந்தடைந்துள்ளன. எனவே 90 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் அரங்கேறுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இணையப் பரவலை தவிர்த்து விட்டு பார்த்தால் எப்போதும் போல அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தேறும் தகாத செயல்கள் தான் இவை. இந்த காணொலி பரவலில் ஒரு பேராபத்து ஒளிந்துள்ளது. பரவும் காணொலிகள் யாவுமே அரசுப் பள்ளிகளில் படம் பிடிக்கப் பட்டவை மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்கள் யாவரும் ரவுடித்தனம் செய்பவர்கள், முரட்டு சுபாவம் உள்ளவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்பது போன்ற தோற்றம் பொது சமூகத்தின் எண்ணத்தில் பதிய வைக்கப் படப் போகிறது. கௌதம் மேனன் தனது அடுத்த படத்தில் ஊதா நிற கட்டம் போட்ட சட்டை போட்டவனை வில்லனாக காட்டக்கூடும். விலையில்லா புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், ரோபோட்டிக் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயில வாய்ப்பளிக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பான காற்றோட்டம் மிக்க வகுப்பறைகள், கழிவறைகள் இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டு வென்ற திறன் மிக்க ஆசிரியர்கள் என சிறப்பான கட்டமைப்போடு சமீப காலமாக ஏராளமான மாணவர்களை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி திருப்பியுள்ளது. இவ்வளவு வலுவான கட்டமைப்பில் ஒரு ஓட்டையை போட்டு அனைத்தையும் பாழ்படுத்த இந்த வைரல் வீடியோக்கள் போதுமானதாக உள்ளது. அதற்குள்ளாகவே “நான் ஏன் எனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்கப் போகிறேன்“ என்றெல்லாம் முகநூலில் எழுதத் துவங்கிவிட்டார்கள். இந்த தோற்ற மயக்கத்தினால் ஏழை எளிய மக்களும் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு சமரசம் செய்தலாகாது என்றெண்ணி சக்திக்கு மீறி செலவை இழுத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு செல்லத் துவங்குவார்கள். நடனமாடுபவனோ, ஆசிரியரை அடிக்கப் பாய்பவனோ அல்லது தகாத வார்த்தைகளை ஆசிரியர்களை நோக்கி வீசுபவனோ ஒரே நாளில் இந்த செயலை அரங்கேற்றுவது கிடையாது. அவன் தனது அத்துமீறலை படிப்படியாக செய்து பார்த்து அடுத்தடுத்த நிலையை எட்டுகிறான். முதலில் தலையை கரண்டிக் கொண்டு வருவது, கைகளில் சாதி அடையாளக் கயிறு கட்டுவது, ஆசிரியர் கடந்து செல்லும் போது பொருட்படுத்தாமல் தங்களுக்குள் கெட்ட வார்த்தைகளை பேசிக் கொள்வது, ஆசிரியர்கள் பேசுவதை அலட்சியப் படுத்துவது, கண்டிக்கும் போது முறைப்பது அல்லது எதிர்த்து பேசுவது என்று படிப்படியாக உருவாகிறான். இத்தனைப் படிகளிலும் அவனை கேள்விகேட்காமல் நல்வழிப் படுத்த முனையாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து விட்டு நிலமை கைமீறிப் போகும் போது கைகளை பிசைந்து கொண்டு நிற்பது ஏன்? நான் அறிந்தவரை ஆசிரியர்களிடம் தான் கையாளும் வகுப்பினை தாண்டி ஒழுக்கம் சார்ந்து ஒரு மாணவனை கேள்வி கேட்க தயக்கம் உள்ளது. இரண்டு மாணவர்கள் தனது கண்முன்னால் அடித்துக் கொள்ளும் போது அந்த புழுதி தனது ஆடைகளை அழுக்காக்கிவிடக் கூடாதே என வேகமாக கடந்து செல்லும் ஆசிரியர்கள் உள்ளனர். வளரிளம் பருவ மாணவர்கள் காதுகளில் படுமாறு தான் முந்தைய நாள் மது அருந்திய அனுபவத்தை சிலாகித்து கூறும் ஆசிரியர்களைக் கண்டுள்ளேன். இவ்வளவு ஏன் மாணவனை அனுப்பி மது வாங்கிவரக் கூறும் ஆசிரியர்கள் கூட உண்டு. அடுத்து இந்த குழுக் கலாச்சாரம். பத்து ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் கூட ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஆசிரியர்கள் செயல்படுவது சாதாரணம். ஒரே ஆசிரியரே ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதுண்டு. இந்த குழுக்களுக்கு இடையே எப்போதும் வெடிக்கத் தயாராகும் எரிமலை கனன்று கொண்டே தான் இருக்கும். தலைமையாசிரியர்களும் ஏதாவது ஒரு வலிமையான குழுவில் ரகசியமாக தன்னை இணைத்துக் கொண்டு நிர்வாக ரீதியாக காரியங்களை எளிதாக்க எண்ணுவதுண்டு. இந்த குழுக் கலாச்சாரத்தில் மாணவர்களை உள்ளே இணைத்துக் கொண்டு செயல்படும் போது நிலவரம் கலவரமாகி பள்ளியின் வளர்ச்சியை முற்றிலும் முடக்கிப் போட்டுவிடுகிறது. பள்ளி மாணவனைப் பற்றிய செய்தி வந்து விட்டதா? ஆசிரியர்களிடம் விளக்கம் கேளுங்கள், மாணவனை சஸ்பென்ட் செய்யுங்கள் என சுருக்கமாக முடித்துவிட்டு கடந்து போகிற பிரச்சனையல்ல இது. இதனை இன்னும் விரிவாக ஆராய்ந்து அணுகி இனிமேல் எந்த பள்ளியிலும் இதுமாதிரி பிரச்சனை எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். சமீபத்தில் காணொலியில் வந்த பள்ளிகள், காணொலியில் வராவிட்டாலும் இதே போல சிக்கல்கள் நிறைந்த பள்ளிகள் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்த பள்ளிகளிடையே உள்ள ஒற்றுமையை (pattern) ஆராய வேண்டும். ஆசிரியர்களிடையே ஒற்றுமை உள்ளதா? இந்த செயலை யாரேனும் தூண்டிவிட்டுள்ளனரா? அனைத்து பள்ளிகளிலும் நடப்பில் இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு இது குறித்து என்ன செய்துள்ளது? பிரச்சனையானது பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வசம் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப் பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப் பட்டதா? வெளியில் இருந்து மாணவரல்லாத இளைஞர்கள் குழு மாணவர்களை தவறாக வழி நடத்துகிறதா என ஆய்வு செய்ய காவல் துறை உதவி கோரப் பட்டதா? மாணவர்கள் பிரச்சனைக்கு சாதிய பின்புலம் ஏதேனும் இருக்க முகாந்திரம் உள்ளதா? நெறிபிறழ் நடத்தை உடைய மாணவனிடம் ஆசிரியர்கள் எவரேனும் பேசி நல்வழிப் படுத்த முயன்றனரா? நெறிபிறழ் நடத்தையுடைய மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனரா? கற்றறிந்த கல்வியாளர்களைக் கேட்டால் இன்னும் ஏராளமான கேள்விகளை வைத்திருப்பார்கள். இவற்றை எல்லாம் ஆய்வு செய்து மாணவர்களைக் கையால்வது குறித்த சரியான நெறிமுறைகளை அரசே வகுத்துக் கொடுத்து இது மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அதற்குள்ளாக தம்பி படத்தில் வரும் மாதவன் போல “இப்போ நான் என்ன செய்ய?“ என்று பிரம்பினை கையில் கொடுங்கள் என்று கதற வேண்டாம். ஆசிரியர் மாணவனை நல்வழிப் படுத்தும் நோக்கில் அடிப்பது கூடாது என்று சட்டம் இருந்தாலும் அன்பும் அக்கரையும் மிகுந்த ஆசிரியர்கள் பிரச்சனை ஏதும் இன்றி லேசாக அடித்து திருத்தும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது. பள்ளி மற்றும் வகுப்புகளின் அமைப்பு முறைகளும் கல்விக் கொள்கைகளும் மாறி வந்து கொண்டே தான் உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் மட்டும் மாணவனை மேலே தொங்க விட்டு கீழே நெருப்பு மூட்டி பாதங்களில் பிரம்படி கொடுக்கும் அந்தக் காலமே பொற்காலம் என்று சிலாகிக்கிறார்கள். குடும்ப அமைப்புகள் மாறி வருகின்றன, ஆசிரியர்களைப் பற்றிய பொது சமூகத்தின் எண்ணம் மாறி வருகிறது, கல்விமுறைகள் மாறி வருகின்றன அதற்கேற்ப ஆசிரியர்கள் கண்டிக்கும் நடைமுறைகளும் மாற்றம் கண்டே தீரும். தனக்கு சாதகமான மாற்றங்கள் அனைத்தும் உடனே நடக்க வேண்டும் பாதகமான மாற்றங்களை ஒருகாலும் அனுமதியோம் என்பது சரியா என சிந்திக்க வேண்டும். ஆசிரியர் சமூகம் இந்த காணொலிகளைக் கண்டு அச்சம் கொள்ளவோ நம்பிக்கையிழக்கவோ தேவையில்லை. உங்களிடம் உள்ள குழந்தைகளை அன்போடும் அக்கரையோடும் எப்போதும் போல அனுகுங்கள். நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்களை கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி விட வேண்டும் என்று எண்ணாமல் கூட்டு முயற்சியோடு அனைவரும் கைகோர்த்தால் நிச்சயமாக மாற்றிவிடலாம். இந்தியாவின் வருங்காலத் தூண்களை செதுக்கும் சிற்பிகள் நாம் தான். வாருங்கள் நம்பிக்கையோடு உளிகளை கையில் எடுப்போம்.

Saturday, April 27, 2024

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை
ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்டும்" என்று தொண்டை நரம்பு புடைக்க சொல்வார்கள். ஆனால் சிஸ்டம் என்றால் என்ன என்கிற தெளிவு பெரும்பாலும் இருப்பதில்லை. முக்கியமாக "நாம் எவ்வளவு மோசமான கட்டமைப்பை வைத்திருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் ஒருவர் இருந்தால் அந்த மோசமான கட்டமைப்பிலும் மிகச்சிறந்த மாணவர்களை அவரால் உருவாக்கி காமிக்க முடியும் என்று ஏற்கனவே அறிந்த உண்மையை இந்த நூலின் வழியாக மீண்டும் கண்டு கொண்டேன். இந்த நூல் முக்கியமாக ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து மாணவ ஆசிரியர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும் . ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோமோ இல்லையோ அவர்களது டீச்சிங் ஆட்டிட்யூட் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல பல புத்தகங்களை பரிந்துரை செய்ய வேண்டும். அந்த புத்தகங்களை அவர்கள் நன்கு உள்வாங்கிக் கொண்டு உள்ளார்களா என்பதையும் சோதித்து அறிய வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் சிலர் பி எட் பட்டங்களை "வாங்கி" விடுகிறார்கள் கேட்டால் Irregular Mode என்கிறார்கள். இந்த நூலுக்கு முன்னுரை எழுதி இருப்பவர் சா மாடசாமி அவர்கள். தனது முன்னுரையில் மாடசாமி அவர்கள் "ஆசிரியர்களே தேவையில்லை என்று ரூசோ சொன்ன அதிரவைக்கும் வாக்கியத்தோடு நூல் தொடங்குகிறது ஆனால் ஆசிரியர் வகுப்பறையின் பிராணவாயு என்கிற இவனோவ் கருத்தை நோக்கி நூல் நகர்கிறது" என்கிறார். நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு பள்ளியின் கட்டட மற்றும் தளவாட வசதிகளையும் அப்பள்ளி அமைந்துள்ள சமூகப் பொருளாதாரச் சூழல்களையும் கடந்து தனிமனித ஆசிரியர் பங்களிப்பு கல்வித்தரத்தை பெருமளவு உயர்த்த முடியும் என்பது தான் இந்த நூலின் அச்சாணி. இந்த கருத்தை அனைவரும் அடிக்கோடிட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நூலில் நான் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மகரன்கோ என்பவர் தான் பள்ளிகளில் பிஇடி பீரியட் என்ற ஒன்று உருவாக காரணமானவர். ஆம், 1920 க்கு பிறகு தான் விளையாட்டு பாடவேளை பள்ளிக்குள் வந்தது. அவருடைய புகழ்பெற்ற வாசகம் "குழந்தைகளோடு விளையாடு ஒரு போதும் விளையாட்டை வழிநடத்தாதே" புத்தகத்தின் முதல் பகுதி முழுவதும் பல்வேறு நாடு மத இன குழு குழுக்களில் கல்வி என்பது எப்படி எல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக விரிவாக அலசுகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தான் நூலின் தலைப்பான இது யாருடைய வகுப்பறை தொடங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று அழைக்கப்படுகிறது அதில் டிபிஐ என்பது DEPARTMENT OF PUBLIC INSTRUCTIONS என்பதை குறிக்கும் அதாவது கல்வி என்பதை போதனை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆங்கிலேய அரசு கல்வியை போதனையாய் மாற்றி வெறும் கவனிப்பவராக அடிபணிபவராக மாணவர்களை வைத்தது என்கிறார். ஆங்கிலேயர்கள் வந்தது வந்தபின் கல்வி அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக விரிவுபடுத்தப்பட்டது என்று நாம் சிலாகித்தாலும் கூட அவர்கள் என்னவோ அவர்களுக்கு தேவையான எழுத்தர் போன்ற பணிகளுக்கு உகந்தவாறு மட்டுமே கல்வியை இங்கே கட்டமைத்து உள்ளனர். அதனால்தானோ என்னவோ இன்று வரை நாம் சேவகர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டுள்ளோம். ஒருபோதும் முதலாளிகளையோ பெரிய விஞ்ஞானிகளையோ அதிக அளவில் உருவாக்க வில்லை. மூன்றாவது அத்தியாயம் சற்று சுவாரசியமான தலைப்போடு "உங்களுக்கு அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?!" நான் கூட ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறேன் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தார்கள் என்றால் அந்த 50 மாணவர்களுக்கும் 50 விதமான முகங்களை ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும் அதாவது தனியாள் வேறுபாடு அறிந்து அனைவரையும் அரவணைத்தும் அனைவருக்கும் கல்வி சென்று சேரும் வகையிலும் ஆசிரியர் போதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை தான் ராமலிங்கத்திற்கு அறிவியல் நடத்த வேண்டிய ஆசிரியர் ராமலிங்கத்தின் சமூக பொருளாதார பின்னணி குறித்து தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்கிற பொருளில் எழுதியுள்ளார். மதிப்பீட்டு முறை என்பது மாணவர்கள் கல்வி கற்றுள்ள அளவினை அறிந்து கொள்ள உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை ஆனால் தற்போதைய நமது கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்த கல்வியும் அந்த தேர்வு என்ற ஒன்றையே சுற்றி சுற்றி ஓடி வருகிறது என்றால் அது மிகையாகாது. நூலாசிரியர் இதையே ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்விக்கு மூன்று பதில்களாக கொடுத்துள்ளார். 1. ஒன்று தேர்வுக்கு பயிற்றுவிற்பவர். 2. தேர்வு கண்காணிப்பாளர். 3. தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டாளர் ஆமாம், மேல்நிலை வகுப்புகளைப் பொறுத்த வரையில் பார்த்தோம் என்றால் மொத்த வேலை நாட்களில் ஜூன் முதல் நவம்பர் வரை மட்டுமே பாடங்களை போதிக்கிறோம். அதன்பிறகு டிசம்பர் துவங்கி மார்ச் வரையில் தொடர்ந்து தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி மீண்டும் தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி பொது தேர்வுக்கு மாணவர்களை கூர்மைப்படுத்துகிறோம் அதாவது மொத்த வேலை நாட்களில் 40 விழுக்காடு நாட்களை தேர்வை நோக்கி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி என்றால் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த நூல்களின் உள்ள பாடப்பொருளை வெறும் ஐந்து மாதங்களில் நடத்தி விட முடியுமா இந்த ஒரு விஷயம் போதும் நாம் எந்த அளவுக்கு தேர்வினை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள. நான்காவது தலைப்பு சற்றே அதிர்ச்சிகரமான தலைப்பு "வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது" கும்பகோணம் தீ விபத்து சம்பவங்களின் போது சம்பவத்தின் போது ஆசிரியர் வாயில் கை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்த அந்த நிலையிலும் மாணவர்கள் எழுந்து ஓட முயற்சிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்திருக்கிறார்கள் சில குழந்தைகள் வாயில் கை வைத்த வண்ணமே கருகி இருந்து இருக்கிறார்கள் என்றெல்லாம் கூட ஆசிரியர் கூறி இருக்கிறார். அதாவது நமது கல்வி முறையில் மாணவர்களை எந்த அளவுக்கு ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கி ஒடுக்குகிறோம் என்று சற்று காட்டமாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். பள்ளிகளில் பிரதானமாக நாம் கடைப்பிடி கடைபிடிக்கும் பல மரபுகளை விதிகள் என்கிற அடிப்படையில் இங்கிலாந்து சேர்ந்த கல்வியாளர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் வகுப்பறைகளையும் ஆய்வு செய்து பட்டியலிட்டு உள்ளனர் அதில் மொத்தம் 4,184 விதிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது இவற்றை தொகுத்த போது உலகத்தில் உள்ள மிக நீண்ட அரசியல் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில் கூட இத்தனை ஷருத்துகள் இல்லை என்று வியந்து போகிறார். நூலாசிரியர் பொருளாதாரம் பகூறி பல நுணுக்கமான வியக்க தக்க உண்மைகளை அங்கங்கே கூறியுள்ளார். ஆத்தர் ஜோன்ஸ் ஸ்டீபன் ஆல்பர்ட் போன்ற சமூக விஞ்ஞானிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் மீது நடத்திய ஆய்வுகளின் முடிவில் அதீத உற்பத்தி தொழில்துறையின் புதிய முகவரியாய் மாறியபோது ஒரு வீட்டிற்கு ஒரு டிவி எனும் நிலையை உடைத்து அதே நான்கு சிறு குடும்பங்களுக்கு ஒரு டிவி பிரிட்ஜ் என்று விற்க வேண்டிய சந்தை நிர்பந்தங்களுக்காக கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனி குடும்பங்களாக பிரிந்திருக்கும் நுணுக்கத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஒரு அசாதாரண வளர்ப்பு செல்லப்பிராணியாக பாவிக்கின்றனர். உதாரணமாக என் வீட்டு நாய் குட்டிக்கரணம் அடிக்கும் பூனை தலைகீழாய் நடக்கும் எங்கள் வீட்டு கிளி பேசும் என்பது போல ஒரு குழந்தையை பாட வைப்பது கராத்தே வீணை வகுப்பு ஹிந்தி கிளாஸ் என தொடங்கி கல்விக்கான நேரம் போக மீதியை குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் குதூகலமாய் விளையாட அனுமதிக்காமல் உருப்படியாய் எதையாவது கற்க பணம் செலவழித்து உற்றார் உறவினரிடம் என் குழந்தைக்கு இந்த விஷயங்கள் தெரியும் என பிரஸ்தாபிப்பது வெளிப்படையான சமூக அம்சமாக இன்று மாறி உள்ளது. தங்கள் குழந்தைகளை இன்று வீட்டின் ஆடம்பர அலங்கார அழகு சாதனமாக கருதுகிறார்கள். RTE சட்டம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளையும் அந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் ரொம்ப மிகவும் தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறை பற்றி மிகவும் காத்திரமாக நூலாசிரியர் கூறியுள்ளார் "குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறைகள் சவக்கிடங்கை விட உயிரற்றதாக போர்க்களத்தை விட வன்முறை மிக்கதாகவே இருக்க முடியும்" என்கிறார். "தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005" (NCF2005) ஆவணம் பற்றி எத்தனை ஆசிரியர்களுக்கு தெரியும் என்று நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார். யஷ்பால் கமிஷனின் ஐந்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையை பள்ளியறிவோடு தொடர்பு படுத்துவது. 2. கற்றலை பொருள் உணர மனப்பாட முறையில் இருந்து மாற்றுவதை உறுதி செய்வதோடு புரிந்து கற்றலை முன் வைப்பது 3. பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு படிக்கும் வகையில் கலைத்திட்டத்தை பெருமைப்படுத்துவது 4. தேர்வு முறைகளை மேலும் நெகிழ்வாக்குவதுடன் வகுப்பறையில் செயல்பாடுகளின் மூலம் புதிய வகை மதிப்பிடுதல் முறையை முன்மொழிவது. 5. நாட்டின் ஜனநாயக பன்முகத் தன்மைக்கு உட்பட்டு புறக்கணிக்கப்பட்ட தனித்துவங்களை அக்கறையோடு வளர்த்தெடுத்தல். இந்த ஐந்து விஷயங்கள் தான் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பின் மிக முக்கிய முதுகெலும்பாகும். உங்கள் வாழ்நாளில் நீங்கள் அறிந்த ஒரு நல்லவரை குறிப்பிடுங்கள் என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் கேட்டபோது 99% ஏதாவது ஒரு ஆசிரியரின் பெயரை எழுதினார்களாம். அப்படி என்றால் ஆசிரியர்களான நாம் எவ்வளவு சமூக பொறுப்புடன் கலந்து கொள்ள வேண்டும். நான் துவக்கத்தில் சொல்லியது போல கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவர்களை உருவாக்க இயலும் என்பதை கல்வியியல் வல்லுநர்கள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிய முக்கியமான மூன்று விஷயங்கள் 1. கற்பித்தலில் ஆசிரியர் காட்டும் முழுமையான ஈடுபாடு 2. குழந்தைகள் மீதான ஆசிரியரின் நேசம் பிணைப்பு விருப்பு. 3. தன் வேலை விஷயத்தை யாருடைய கண்காணிப்பும் இன்றி முக்கிய கடமையாக கொள்ளுதல். மேற்கண்ட இந்த மூன்று சிறப்பியல்புகளோடு கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள் பாடத்தில் வல்லமை ஆகியவை இணையும் போது ஆசிரியர்கள் மிகச்சிறந்த வகுப்பறையை கட்டமைக்கிறார்கள் என்று அவர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. அடுத்ததாக வாட்ஸ் அப் மூலமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் உலகத்திலேயே கல்வியில் தலைசிறந்த நாடாக இருப்பது பின்லாந்து என்பதாகும். அதை நூலாசிரியர் "கல்வியின் மெக்கா பின்லாந்து" என்கிறார். அந்த நாட்டின் கல்வி முறையை பற்றி நேரடியாக தெரிந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் கல்வியாளர்கள் அங்கே சுற்றுலா செல்கிறார்களாம் அந்த கல்வி சுற்றுலா மூலமாக 27 விழுக்காடு அந்நிய செலாவணி அந்த நாட்டிற்கு குவிகிறது என்றால் அந்த நாட்டு கல்வி முறை மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை உண்டாகிறது. அங்கே 13 வயது வரை குழந்தைகளில் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற தரப்படுத்துதல் என்கிற விஷயம் கிடையாது. நாம் அநேகமாக அனைத்து சிற்றூர்கள் வரை கல்வியில் கணினியின் பங்கினை ஐசிடி என்று பெருமிதமாக கொண்டு சென்றுள்ளோம். ஆனால் கல்வியில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ள பின்லாந்தில் வகுப்பறைகள் இன்று வரை கணினி மயமாக்கப்படவில்லை. எத்தனை கணினி மற்ற இன்னபிற தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஒரு வகுப்பறையில் அற்புதங்களை ஆசிரியர்தான் நிகழ்த்த முடியும் என்பதை நம்புவதால் தான் அந்த நாடு கல்வியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அங்கே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே தயாரிக்கின்றனர். இங்கே உள்ளது போல ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே நூல் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பாடத்தினை நடத்த வேண்டும் என்பன முதற்கொண்டு இப்போது உள்ள எமிஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல் இடத்திலிருந்து கட்டளைகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பின்லாந்துக்கு அடுத்தபடியாக கியூபாவும் கல்வியில் மிகச் சிறப்பான பணிகளை செய்து கொண்டுள்ளது. கியூபாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் படிப்புடன் சேர்ந்து பல்வேறு பணிகளை தெரிந்து வைத்துள்ளான். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் ஒலிப்பெருக்கி பழுது பட்ட போது அங்கு வந்திருந்த ஒரு கியூபா மாணவன் தன்னிடம் உள்ள டூல் கிட் ஐ எடுத்துக்கொண்டு சென்று உடனடியாக அதனை சரி செய்தானாம். இங்கே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் கூட வீட்டில் பியூஸ் போனால் அவர்கள் அதை சரி செய்ய இயலாத கையறு நிலையில் தான் உள்ளனர். நான் எங்கள் ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவார். அவர் ஒரு பாட வேளையில் அதிகபட்சமாக ஐந்து பாடங்களை முடித்து அசத்தினார். அப்படி என்ன செய்தார், வகுப்பில் தங்கு தடை இன்றி சரளமாக வாசிக்கக்கூடிய மாணவர்களை எழுப்பி பாடத்தை சத்தமாக வேகமாக வாசிக்க கூறுவார். அவர் இடையிடையே "அதான் பாரு அதான் பாரு" என்று கூறுவது தான் அந்த பாடம் குறித்து அவர் அளிக்கும் விளக்கம். இன்றைய நமது கல்விமுறையில் பெரும்பாலான இடங்களில் இந்த எடுத்துக் கூறுவது என்கிற நோய் தான் பிடித்துள்ளது. கல்வியின் கட்டமைப்பு அரசுத் திட்டங்கள் பாடத்திட்ட வடிவமைப்பு தேர்வு முறைகள் என்று என்னதான் பல வேறு விஷயங்கள் இருந்தாலும் ஒரு திறமை வாய்ந்த ஆசிரியர் தன்னைவிட திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கி விடுவார். என்பதுதான் இந்த நூலின் சாராம்சம் இதை புரிந்து கொண்டால் போதும் இது யாருடைய வகுப்பறை என்றால் இது மாணவர்களுடைய வகுப்பறை நல்லாசிரியர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த களம் அமைக்கும் வகுப்பறை என்பதை புரிந்து கொள்ள இயலும். ஆகவே இந்தியாவின் கல்வி குறித்த வரலாறை பல சான்றுகளோடு பல கல்வி குழுக்களின் சாரங்களோடு மற்றும் கல்வி உளவியல் குறித்த அறிந்து கொள்ள நிச்சயமாக இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி ஆகும்.

ஆவேஷம் -மலையாளப்படம்

நான் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மேல்நிலை வகுப்புகள் 1992-1994 ல் படித்தேன். அருமையான ஆதிதிராவிடர் நல விடுதியில் இரண்டு ஆண்டுகள் வாசம். என்னை "லால்குடி டேஸ்" என்கிற நூல் எழுதுமளவுக்கு பாதித்த அனுபவங்கள். (அமேசான் கிண்டிலில் உள்ளது வாசியுங்கள்) 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையில் இரண்டு கோஷ்டிகள், அவர்களுக்குள் எப்போதும் ஒரு பகை புகைந்து கொண்டே இருந்தது. ஆண்டு இறுதித் தேர்வு முடியும் தருவாயில் அது சண்டையாக வெடித்தது. வலு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட மாணவர்கள் லோக்கல் ரவுடிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுவாக இருந்ததாக கருதப்பட்ட மாணவர்களை சாலைகளிலேயே நைய புடைத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம். அந்த காலகட்டத்தில் மீடியா வீடியோக்கள் இது மாதிரியான செட் அப் பரவலாக இல்லாத காரணத்தினால் அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த ஒரு அண்ணனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது அந்த அளவுக்கு இரத்தக் கலரியான ஒரு சண்டை. ஆவேசம் படத்தின் கதை சற்றேறக்குறைய இது போன்றது தான். கேரளாவில் இருந்து மூன்று மாணவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள். வழக்கம் போல சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். கல்லூரிக்கு வெளியே லேசாக ஆதிக்கம் செலுத்த முனையும் போது இந்த கேரள மாணவர்கள் "சீனியர் ஜூனியர் எல்லாம் காலேஜ்ல தான் வெளியில் எல்லாம் கம்முனு போங்க" என்று எதிர்த்து பேசி விடுகிறார்கள். அதனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து இவர்களை கடத்திக் கொண்டு போய் நான்கு நாட்கள் நன்கு வைத்து செய்கிறார்கள். அதனால் ஆவேசமடைந்த அந்த கேரள பையன்கள் எப்படியாவது இங்கே உள்ளூரில் உள்ள ஒரு ரவுடி உடன் சினேகம் கொண்டு சீனியர்களை பழிவாங்கி விட வேண்டும் என்று வெறிகொண்டு தேடுகிறார்கள். அப்படி சிக்குபவர் தான் நம்ம ஃபகத் ஃபாசில். அவரது துணைகொண்டு சீனியர்களை அடித்தார்களா ? திரும்ப ஃபகத் ஃபாசில் இடம் இருந்து விலகி தங்களது படிப்பை தொடர்ந்தார்களா இல்லை புலிவாலை பிடித்த கதை ஆனதா? என்கிற விஷயத்தை சிரிக்க சிரிக்க சொல்லும் படம் தான் இது. அவ்வளவு நகைச்சுவை. ஒரு பெரிய ரவுடிக்கான எந்த ஒரு புறத்தோற்றமும் இல்லாத ஃபகத் ஃபாசில் கழுத்து நிறைய செயின் கை நிறைய மோதிரம் மற்றும் மீசை உடல் மொழி இவற்றை வைத்து தெறிக்க விட்டிருப்பார். அவ்வளவு அசுரத்தனமான ஒரு நடிப்பு. அவருடன் இருக்கும் சக ரவுடிகளுக்கும் மிக அருமையான சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பார்கள். ஏனோ தெரியவில்லை அவர்களுடன் இருக்கும் அனைத்து ரவுடிகளும் Y=-x^2 என்கிற parabola வடிவ மீசையே வைத்துள்ளார்கள். படத்தில் ஒரு அம்மா கதாப்பாத்திரம் தவிர வேறு பெண் கதாப்பாத்திரமே இல்லை. கல்லூரியில் கும்பலோடு கும்பலாக சில பெண்கள் வருகிறார்கள் அவ்வளவுதான். ஃபகத் ஃபாசிலின் குடும்ப தயாரிப்பு. நன்றாகவே கல்லா கட்டுகிறது. தொடர்ந்து மலையாள படங்கள் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா என்பது தெரியவில்லை. ஏனெனில் போதுமான பல நல்ல படங்கள் தமிழில் வராத காரணத்தினால் அந்த வெற்றிடத்தை கச்சிதமாக மலையாளப் படங்கள் நிரப்புகின்றன என்று சொல்லலாம். மஞ்சு மேல் பாய்ஸ் படத்துக்கு பிறகு இந்த படத்துக்கும் நான் பார்த்த தியேட்டரில் இருக்கைகள் அநேகமாக நிரம்பி இருந்தன. பக்கா தியேட்டரிக்கல் மெட்டீரியல் நிச்சயமாக தியேட்டரில் குழந்தைகளோடு பார்த்து இந்த கோடை விடுமுறையை கொண்டாடலாம்.

Thursday, April 25, 2024

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!!
இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற்றும் செறுப்பு அளவு எடுப்பவர் என்று நாள் தோறும் புதுப் புதுப் பணிகள் அணிவகுத்து தான் வருகின்றன. “நானும் நல்லவன்னு சொல்லிட்டானே என்று எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது” என்ற வடிவேல் கதை ஆகிவிட்டது எங்க கதை. தேசிய அளவிலான பெரும் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமின்றி அனைத்து வகைத் தேர்தல் பணி என்று எல்லாமே எங்களை நம்பியே ஒப்படைக்கப் படுகின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் நாங்கள் பட்ட பாட்டினை சொல்லவே இந்த கட்டுரை. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பணியாளர் விவரங்களை சேகரித்து விடுவார்கள். ராசி நட்சத்திரம் தவிர அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட வேண்டும். தேர்தல் பணியில் இருந்து தப்பித்து விடலாம் என்று விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்துவிட இயலாது. விண்ணப்பங்களை பெற்று Pay roll ல் உள்ள பெயர் பட்டியலோடு அலுவலகம் வாரியாக ஒப்பிட்டு (என்னா ஒரு வில்லத்தனம்!) “ஓலை“ அனுப்பி தெறிக்க விட்டுவிடுவார்கள். எங்கள் பள்ளி தேர்தல் விண்ணப்பங்களில் என்னுடையதை மேலே வைத்து சற்று இறுக்கமாக தைத்து கொடுத்து விட்டேன். ஓவரா தைத்த காரணத்தினால் பேப்பர் கிழிந்து விண்ணப்பம் காணாமல் போய் விட்டது. கடைசிநேரத்தில் “பின்வரும் தலைமையாசிரியர்கள் விண்ணப்பம் வழங்கவில்லை“ என்று வேலைக்கே உலை வைக்கும் ஓலை வந்துவிட்டது. உடனே புதிதாக விண்ணப்பம் தயாரித்து மூச்சு வாங்க ஓடி அன்றைக்கே கொடுத்துவிட்டேன். கடைசியில் என்ன ஆகிவிட்டது என்றால் கடைசி ஆளாக விண்ணப்பம் வழங்கிய எனக்கு மட்டும் தேர்தல் பணி வந்துவிட்டது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் யாருக்கும் வரவில்லை. “உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே முதல் கட்ட பயிற்சிக்கு சென்று வந்தேன். இரண்டாம் கட்ட பயிற்சிக்கு முதல் நாள் எங்கோ பரண்மேல் இருந்த மீதி விண்ணப்பங்களை கண்டு பிடித்து மீதமுள்ள ஆசிரியர்களுக்கும் பணி வழங்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை மாலை செய்தித்தாளை பார்ப்பதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு எந்த ஊரில் தேர்தல் பணி வழங்கப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது தான். நிச்சயமாக மாவட்டத்திற்குள் இருக்கும் ஒரு கேள்விப் படாத ஊரில் தான் பணி வழங்குவார்கள். 20 விழுக்காடு பணியாளர்களை ரிசர்வ் என்று உட்கார வைத்திருப்பார்கள். பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரிசர்வில் உள்ளவர்களை கதறக் கதற இழுத்து வந்து பணி வழங்குவார்கள். என்னுடைய 22 ஆண்டு சர்வீஸில் எந்த தேர்தல் பணியிலும் எனக்கு ரிசர்வ் வந்ததே இல்லை. தேர்தல் ஆணையத்தில் Randomisation செய்யும் கணினி கூட “ஒரு திறமையான தேர்தல் அலுவலரை“ விட்டுவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு இந்த முறை பணி வழங்கப்பட்ட கிராமத்தின் பெயரை பாதுகாப்பு காரணங்களுக்காக ( ”யாருடைய பாதுகாப்பு?” ”என்னுடையது தான்”) ”எக்ஸ்” என்றே குறிப்பிட்டு விடுகிறேன். போற ஊருல இரவு உணவு ஏற்பாடு ஆகி இருக்கும். எனவே மதிய உணவை ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலாஜி பவனில் ஃபுல் கட்டு கட்டிக் கொண்டேன். முன்ன பின்ன ஆனால் தாங்கணுமே. பள்ளி வளாகத்தில் நுழைந்த உடன் ஷாமியானா பந்தல் பந்தாவாக வரவேற்றது. கிராம நிர்வாக அலுவலரும் வரவேற்றார். 100 டிகிரி வெயிலில் கொதிக்கும் தார் சாலையில் வந்த களைப்பு தீர பூத் உள்ள வகுப்பறையில் குப்புற அடித்து படுத்துவிடலாம் என்று ஓடோடி வந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கதவை திறந்த மாத்திரத்தில் மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவில் புறாக்கள் பறப்பது போல வௌவால்கள் பட பட வென பறந்து வெளியே வந்து திகிலை கிளப்பியது. சினிமாக்களில் ஹீரோ காலை வேகமாக தரையில் ஊன்றினால் புழுதி பறக்கும் அது சுத்தமான டைல்ஸ் போட்ட தரையாக இருந்தாலும் சரி பூங்காக்களில் இருக்கும் பேவர் பிளாக் தரையானாலும் சரி புழுதி பறந்தால் தான் சண்டையில் பொறி பறக்கும் எஃபக்ட் வரும் அல்லவா. ஆனா எந்த சண்டை சச்சரவும் இல்லாமலே நான் கால் வைத்த மாத்திரத்தில் புழுதி பறந்தது அந்த பூத் இருந்த அறையின் தரையில். வௌவால்களின் படபடப்பு புழுதி பறந்த எஃபக்ட் இதையெல்லாம் ஒரு சில பழைய திகில் படங்களில் மட்டுமே பார்த்திருந்த சக தேர்தல் அலுவலர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு முப்பது அடி தூரம் ஓடிவிட்டார்கள். அப்புறம் ஆள் பிடித்து அறையை தண்ணீர் தெளித்து கூட்டச் செய்து புழுதியின் கோபத்தினை தற்காலிகமாக தணித்தோம். ”ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கங்கப்பு!!” எங்கள் பள்ளி பூத் இருந்த அறையை நான்கைந்து முறை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கட்டிடத்தின் வெளிப்புறம் பெரிய லைட் உள்ளே இன்னும் இரண்டு லைட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். இப்படி தெரிந்திருந்தால் இருந்த ரெண்டு ஃபேன்களையும் நானே ஸ்டூல் போட்டு ஏறி கழட்டியாவது எக்ஸ்ட்ராவாக இரண்டு ஃபேன்களை வாங்கி இருக்கலாம். ஆனால் நான் போன அந்த ”எக்ஸ்” ஊரில் இந்த மாதிரி எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் சம்மந்தப் பட்ட அலுவலர்கள் ஆற்றவே இல்லை. அதிகாரிகள் கேட்ட போதெல்லாம் “ஐயா நம்ம ஏரியாவில் இருக்கும் பூத் எல்லாமே சும்மா தக தகன்னு கண்ணாடி மாதிரி ஜொலிக்குதுங்கய்யா” என்று கூறிவிட்டு வாளாவிருந்து விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. பில்டிங் ரூஃப் இரண்டு இடங்களில் பெயர்ந்து கொண்டு இருந்தது. ஃபேனை ஐந்தில் வைத்தால் ஒட்டு மொத்தமாக பெயர்ந்து கொண்டு தொபீர் என்று கபாலத்தில் விழுவது போல பயம் காட்டியது. ஆனால் சூழலோ “ஃபேனை பன்னெண்டுல வைடி மாலா” என்பது போல வியர்த்து கொட்டியது. என்னுடன் வந்த சக அலுவலர் என்னை பார்த்த பார்வையில் இருந்து அவர் மைண்ட் வாய்ஸை நான் கண்டுகொண்டேன். “நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது“ “டேய் புலிகேசி வெளியே வாடா“ என்பது போல ஒரு பிளிரல் பார்த்தால் கிராமத்தில் இருந்து ஒரு வயதானவர் தேனீர் எடுத்து வந்திருந்தார். “ஐயா ஒரு முப்பத்தாறு மணி நேரத்திற்கு உங்க சத்தத்தின் அளவை ஒரு ஐம்பது டெசிபல் குறைத்துக் கொள்ளுங்கள் ஐயா இல்லன்னா பில்டிங் இடிச்ச கேசுல உள்ள போய்டுவீங்க” என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். வெளியே போனால் எதிரே இருந்த சத்துணவு மையக் கட்டிடத்தின் அருகே “இடிக்கப் பட வேண்டிய கட்டிடம் அருகே செல்லாதீர்கள்“ என்கிற போர்டு கிடந்தது. “மேடம் ஆக்சுவலா இந்த போர்டு அந்த பூத் கட்டிடத்தில் தான் இருந்திருக்கணும்?“ என்று விஏஓ விடம் காமெடியாக கூறினேன். “சார் அந்த போர்டு நேற்றுவரை அங்கதான் இருந்தது“ என்று பீதியை கிளப்பினார். அப்போது தான் அடுத்ததாக ஒரு நான்கு பேர் கொண்ட அடுத்த படை வந்தது. “என்ன மேடம் ரெண்டு பூத்தா?“ என்றேன். “ஆமா சார் அந்த ரூம் நடுவுல ஸ்கிரீன் போட்டுக்கோங்க” “ஆமா, இருக்குறது புறாக் கூண்டு அதுலு பார்ட்னர்ஷிப் வேற” என்று அரசு பட வடிவேல் போல அங்கலாய்த்தபடி தேனீர் அருந்தினோம். இவ்வளவு ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்னவென்றால் எங்க பூத்துக்கு 400 ஓட்டு பக்கத்து பூத்துக்கு 1000 ஓட்டு. எங்க பள்ளி வளாகத்தில் ஒரு பூத் மட்டுமே அதற்கே தேவையான மேசைகள், நாற்காலிகள், ஏஜெண்ட்டுகள் அமர இருக்கைகள், ஓட்டிங் கம்பார்மெண்ட் அடிக்க ஏதுவாக பெரிய பிளைவுட் டேபிள் என்று எடுத்து வைத்து இருந்தோம். இருபால் ஆசிரியர்களின் கழிவறைகளையும் சிறப்பாக சுத்தம் செய்து வைத்திருந்தோம். ஆனால் நமக்கு வாய்த்த தலைமையாசிரியர் மிக மிக திறமைசாலி மற்றும் சாமர்த்தியசாலி. ஆமாம், பாழடைந்த மண்டபத்தை கூட்டாமல் கூட கொடுக்கிறோமே என்கிற குற்ற உணர்வு கிஞ்சிற்றும் இல்லாதவர். அதே வேளையில் பூத் இடிந்து விழுந்தால் ஃபர்னிச்சர் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறதே என்கிற அக்கரையில் இரண்டு பழைய மேசைகள் தவிர எதையுமே விட்டு வைக்க வில்லை. ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை. அவர் திரும்பி வந்து எங்க மேல கேஸ் போட்டாலும் பரவாயில்லை என்று கிராம உதவியாளர் வசம் இருந்த பள்ளி சாவியை வாங்கி நாற்காலிகளை எடுத்துக் கொண்டோம். இதற்கிடையில் இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்ற சக அலுவலர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். “சார் பாத்ரூம்ல தவளை சார்” என்றார். ஆமாம் அந்த கழிவறை தவளைகளின் குடியிருந்த கோயில். இந்த பள்ளி ஜீவகாருண்யத்தின் மொத்த உருவமாக இருக்கிறதே. “என் ஆள அடிச்சது எவண்டா“ என்கிற தோரணையோடு கதவைத் தள்ளினேன். அங்கே ஜன்னல் மேலே இருந்த இரண்டு தவளைகள் என்னை உற்று நோக்கியபடி கிஞ்சிற்றும் பயப்படாமல் இருந்தன. “காலை மட்டும் உள்ளே வைத்து பாரடா, கபாலத்தை கவ்வுகிறேன்“ என்று அவை சூளுரைப்பது போல தெரிந்தது. “சார் நான் பக்கத்துல இருக்கிற ஏரிக்கே போய்ட்டு வந்து விடுகிறேன் சார்” என்று வேகமாக கிளம்பினார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதே என்று வருந்திய அந்த வேளை இருள் லேசாக கவ்வியிருந்தது. “சார் அங்க ஏரிபகுதியில் பாம்பு இழையுது சார்“ என்று ஈனஸ்வரத்தில் வருத்தத்தோடு கூறினார். அடுத்த நாள் கிளம்பும் வரை ஐம்புலன்களையும் அடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் பட்டார். நானெல்லாம் தவளையை மதிக்கறதே கிடையாது. பாம்பே வந்தாலும் பதறாம சிதறாம (கவனத்தை சொன்னேன்) போற ஆளு. அதனால் துணிந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். பார்த்தால் தாழ்ப்பால் கிடையாது. Necessity is the mother of Invention ஆமாம், புதியதொரு யோகா பொசிஷனை அந்த இக்கட்டான சூழல் எனக்கு பயிற்றுவித்தது. இரவு உணவு முடிந்த பிறகு தூங்குவதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடன் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்கள் பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் உறங்கினர். காவல்துறையினர் இருவரும் வராண்டாவில் படுத்திருந்தனர். எங்கள் பூத்ஆசிரிய நண்பர் பள்ளியின் மற்றொரு அறையை திறந்து படுத்துக் கொண்டார். பக்கத்து பூத்தின் தலைமை அதிகாரியாக வந்திருந்த மற்றுமொரு தலைமையாசிரிய நண்பர் “விழுந்தா நாட்டுக்கு விழாவிட்டால் வீட்டுக்கு“ என்று வீரவசனம் பேசியபடி பூத் அறையில் ஃபேனுக்கு அடியிலேயே படுத்துக் கொண்டார். ஏனென்றால் வாக்கு இயந்திரத்தை உயிரினும் மேலானதாக மதித்து இந்திய ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டும். ஆகவே அந்த பேய் பங்களாவில் வாக்கு இயந்திரத்தை கட்டியணைத்தபடி உறங்கியாக வேண்டும். ஆனால் உறக்கம் தான் வரவே இல்லை. நானும் சுற்றி சுற்றி வந்து பார்க்கிறேன் என்னை தவிர வளாகத்தில் அனைவருமே நிம்மதியாக உறங்கினார்கள். இரண்டு பேர் குட் நைட் மணிகண்டன் கணக்காக குறட்டை வேறு விட்டு வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள். இரண்டரை மணிக்கு லேசாக உறக்கம் தழுவியது. சரியாக மூன்றரைக்கெல்லாம் பக்கத்து பூத் சார் வந்து எழுப்பி விட்டார். சார் எந்திரிங்க நானெல்லாம் குளிச்சுட்டேன் பாருங்க என்றார். “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்” என்றபடி எழுந்தேன். வாக்குப் பதிவு செவ்வனே நடைபெற்றது. எங்களுக்கு நானூறு வாக்காளர்கள் தான் என்பதால் மதியத்திற்கு மேல் சும்மாவே தான் உட்கார்ந்திருந்தோம். ஆனால் பக்கத்து பூத் மாலை ஆறுமணி வரை பரபரப்பாகவே இருந்தது. வாக்கு பதிவை க்ளோஸ் செய்து மிஷின்களை அவற்றுக்குறிய பெட்டிகளில் வைத்து சீல் வைத்து விட்டு டாக்குமெண்ட்களை அதற்குறிய கவர்களில் வைத்து விட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…“ என்றபடி காத்திருந்தோம் காத்திருந்தோம் இரவு இரண்டு மணி வரை காத்திருந்தோம். முதல் நாள் வேறு ஒருமணி நேர போதா உறக்கம் ஆகையால் வாக்குபதிவு இயந்திரத்தை ஒட்டி பெஞ்சை போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். இரண்டரைக்கு மண்டல அதிகாரி பொட்டி எடுக்க வந்து எழுப்பினார். “ஆமா, நான் எங்க இருக்கேன், நீங்க எல்லாம் யாரு” என்று ஃப்ரண்ட்ஸ் பட சார்லி கணக்காக ஒரு பத்து நிமிடங்கள் தட்டு தடுமாறி பிறகு சமாளித்தேன். மூன்று மணிக்கு வண்டியை கிளப்பி, வழியில் இரண்டு நைட் கடைகளில் தேனீர் அருந்தி விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து படுத்தேன். காலை ஒன்பதரைக்குத்தான் எழுந்தேன். ஆக அரசு எங்களை நம்பி ஒப்படைத்த ஒரு மகத்தான பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தி மனதில் ஏற்பட்டது. பள்ளிக் கட்டிடம், கழிவறை, ஃபர்னிச்சர் வசதிகள் என ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரால் இயன்ற அளவில் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அது போல கிராமத்தினர் சிறப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகும் கூட இரவு உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து வழங்கினார்கள். ஏஜெண்டுகளும் சரி வாக்காளர்களும் சரி எந்த வித சிறு வாக்குவாதமோ விதிமீறலோ இன்றி நான் கூறிய சட்டதிட்டங்களை முறையாக அனுசரித்து வாக்குப் பதிவு மகிழ்ச்சியாக முடிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். அந்த வகையில் அந்த “எக்ஸ்“ கிராமத்தை நினைத்து மகிழ்ச்சி தான்.

Thursday, April 11, 2024

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத்தினால் அந்த படம் மெகா ஹிட் அடித்ததோடு இன்றி கௌதம் குறிப்பிடத்தக்க ஸ்டைலிஷ் இயக்குனர் ஆனார். இன்று பார்த்த படம் விஜய் ஆண்டனி நடித்த "ரோமியோ". அருணும் அகிலாவும் ஒரு திருமண சடங்கிற்காக சென்னை சென்றிருந்தார்கள். லீவு நாள் வேறு. ஆகவே இந்த சுதந்திரப் பொன்னாளை அவசியம் கொண்டாடியே தீர வேண்டும். என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் கடைத்தெருவை கடந்தபோது ரோமியோ பட ரிலீஸ் போஸ்டர் கண்ணில் பட்டது. முதலிரவு அறையில் புதுமாப்பிள்ளை கையில் பால் செம்பு, பெண்ணோ ஒரு தேர்ந்த BAR TENDER ன் நேர்த்தியோடு சரக்கை குவலையில் குடைசாய்த்துக் கொண்டு இருந்தாள். ஆகா, ஏதோ சம்பவம் இருக்கு என்று எண்ணி டிக்கெட் புக் பண்ணினேன்.* (ஆனா, போஸ்டரில் இருந்த அந்த காட்சி படத்தில் இல்லை என்று படம் முடிந்தபோது ஆதங்கத்தோடு இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர்) தியேட்டர் போன பிறகு தான் புரிந்தது அவ்ளோ அவசரமாக ஆன்லைனில் புக் பண்ணி இருக்க வேண்டாம் என்று. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை. சரி படத்திற்கு வருவோம். நமது கலாச்சாரத்தில் பெற்றோர் தங்கள் பாசத்துக்குறிய குழந்தைகளுக்கு நடத்தும் ஆகச்சிறந்த வன்முறையான சூதாட்டம் என்பது ARRANGED MARRIAGE தான். (எனக்கெல்லாம் எனது விருப்பம் தான்) ஒவ்வொரு பையனுக்கும் பெண்ணுக்கும் பெற்றோரிடம் ஒரு முகமும் பர்சனலாக வேறுமுகமும் உண்டு. இது தெரியாமல் மடத்தனமாக "என் பையன் கழுதையை கட்டிக் கொள்ள சொன்னாலும் கட்டிக் கொள்வான்" என்று பெருமை பீத்தக் கலையம் வேறு!! நமது சமூக சூழலில் திருமணம் மிகவும் புனிதமாகவும், வாழ்க்கையின் அதிமுக்கிய படிநிலையாகவும் பார்க்கப் படுகிறது. எனவே தான் திருமண பந்தம் ஒவ்வாத சூழலிலும் வாழ்நாள் முழுவதும் சகித்துப் போக நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பொருந்தாத திருமண உறவை முறித்து வெளியேறி ஆசுவாசம் அடைவோரை பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயத்தையும் அவர்கள் குறித்த தவறான முன் அனுமானத்தையும் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது. இந்தப் படத்தின் கதைகூட மௌனராகம் படம் போன்றதுததான். ரேவதிக்கு கார்த்திக் என்பதற்கு பதிலாக அவளது லட்சியம். நாயகிக்கு சற்றும் நாயகன் மீது விருப்பம் இல்லை. ஆனாலும் அவளது லட்சியத்தை அடைய உதவுகிறான். இதன் காரணமாக நாயகி மனது மாறி இணைந்தார்களா என்பதுதான் கதை!! சுவாரசியமான தெளிவான திரைக்கதை. வசனங்களும் சிறப்பு. "சார், ஹீரோவை பார்த்து நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று ஹீரோயின் கேக்குறா சார், அதுக்கு ஹீரோ ஓங்கி அறையுறான் சார்?" "அறைஞ்சா?!, அறைஞ்சா ஆம்பளை ஆயிடுவானா?!, சார் என்ன சார் சீன் வைக்கிறீங்க கொஞ்சம் நல்லதா வைங்க சார். இத மாத்திடுங்க" கதையை நகைச்சுவையாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். எல்லோர் கேரக்டர்களிலும் காமடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் மொத்த நகைச்சுவையும் விஜய் ஆண்டனியால் காலி ஆகிவிடுகிறது. பாவம் அவருக்கு சுத்தமாக காமடி வரவில்லை. விஜய் ஆண்டனி இடத்தில் கார்த்தி இருந்தால் பிரித்து மேய்ந்திருப்பார். ஆனால் படம் தொய்வில்லாமல் நன்றாகவே செல்கிறது. நிச்சயமாக பார்க்கலாம்.

Saturday, March 30, 2024

கம்யூனல் ஜி.ஒ - பேராசிரியர் அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) புத்தகம்: வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) ஆசிரியர்:பேராசிரியர் க.அன்பழகன் புத்தகம் “கம்யுனல் ஜி.ஓ“ உச்ச நீதி மன்றத்தால் முடக்கப்பட்ட நேரத்தில் “அவால்“ எல்லாம் எப்படி குதூகலம் அடைந்திருப்பார்கள் என்கிற கற்பனை (நையாண்டி தொனிக்கும்) உரையாடலில் ஆரம்பித்து வகுப்புரிமைப் போராட்டம் உருவான விதம் வளர்ந்த வரலாறு அரசியல் அமைப்பின் முதலாவது சட்டத்திருத்தம் மூலமாக சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டதோடு முடிகிறது. ஆழமான ஆய்வு சமூக நீதி குறித்த மிகச்சரியான பார்வை ஆங்காங்கே எள்ளல் என அருமையாக எழுதியிருக்கிறார் பேராசிரியர். (ஒரு இடத்தில் “உலக உத்தமர்“ என்று காந்தியை விளித்திருப்பார்). ”வர்ணாசிரம (அ)தர்மத்தைத் தோற்றுவித்து, ஜாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, அதை ஒப்பாமல் மக்கள் புரட்சி எண்ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும், பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப்படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சி செய்தால் அடியோடு ஒழிக்க மனு (அ)நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்ற நடக்கச் செய்தல்” படிக்கும் போதே தலைசுற்றும் அளவுக்கு சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தை ஆழமாக சமூகத்தில் வேரூன்றும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு விஷ விருட்சமாக வளர்த்தெடுத்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரிக்கும் ஒரு அருமையான புத்தகம் தான் இது, பார்ப்பனரல்லாதோருக்கு கல்வி உரிமை கிஞ்சிற்றும் கிடையாது, படிப்பது பார்ப்பன மக்களின் ஏகபோக உரிமை என அனுபவித்து வந்த நிலையை மாற்ற1917 ல் நீதிக்கட்சி முயற்சித்து வெற்றி கொண்ட ஒரு அரசாணை தான் கம்யுனல் ஜி.ஓ. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்கிற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மத்தியில் 1920 களில் உதித்தது. என்னதான் பெரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள்ளே இருந்து வற்புறுத்தினாலும் பார்ப்பன சூழ்ச்சி அதற்கு செவிசாய்க்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமே வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததுதான். கம்யுனல் ஜி.ஓ என்ன சொல்கிறது? மொத்தம் உள்ள 12 இடங்களில் இந்து பார்ப்பனரல்லாதோருக்கு 5 பார்ப்பனருக்கு 2 முகம்மதியர்களுக்கு 2 கிருஸ்தவர்களுக்கு 2 (ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம்) மற்றவர்களுக்கு 1(ஆதிதிராவிடர்கள் அடக்கம்) அதாவது 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 100க்கு 17 உத்தியோகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆதிதிராவிடர்களுக்க 12 ல் ஒன்று அதுவும் ஏனையோர் என்கிற பிரிவில். இதை பார்த்தவுடன் பார்ப்பனர் நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் அவர்கள் எதையும் தான் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள் அல்லவா? அவர்கள் இன்று வரை வைத்துக் கொண்டு வரும் ஓயாத ஒப்பாரியான “தகுதி“ மற்றும் ”திறமை” குறித்த நீலிக்கண்ணீர் வடிக்கலாயினர். இந்த நூலில் “தகுதி மற்றும் திறமை” என்கிற வெற்றுக் கூச்சலையும் அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் ஒரு சேப்டரே ஒதுக்கி “வச்சு செஞ்சிருக்கார்” பேராசிரியர். என்னதான் அரசாணை போட்டாலும் கல்லூரி சேர்க்கையின் போதே பார்ப்பனிய “கைங்கர்யம்“ வேலை செய்துவிடும் என்பதால் கம்யுனல் ஜி.ஓ எந்த அளவில் பின்பற்றப் படுகிறது என்பதை கண்காணிக்க ”கல்லூரிக் குழு” என்கிற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது “கம்யுனல் ஜி.ஓ“ வை பின் வாசல் வழியாக வந்து எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் ஆட்சியாளர்கள் “கலி முத்திடுத்து லோகம் கெட்டுடுத்து” தகுதி திறமைக்கு லோகத்துல மதிப்பில்லாமல் போயிடுத்து என்று நீலிக்கண்ணீர் வடித்து மெரிட்டுக்கு என்று 20 விழுக்காடு பெறுகின்றனர். பார்ப்பனிய ஒதுக்கீடு மற்றும் மெரிட் என்று இரட்டை வாசலை திறந்து கொண்டு மேலிட பதவி வகிக்கும் பார்ப்பனிய துணை கொண்டு கல்லூரிகளில் மற்றவர்களுக்கு உரிய இடத்தையும் அபகரிக்கிறார்கள். மேலும் கல்லூரிக் குழு வையும் கலைத்து விடுகிறார்கள். இருந்தும் கூட அவர்களின் ஆசை தீரவில்லை. அனைத்து பிரிவு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் 100 விழுக்காடு பதவிகளையும் நாமே வகிக்க வேண்டும் என்கிற பேராசையால் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ( இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு) சட்ட நுணுக்கத்தை காட்டி வெற்றிகரமாக நீக்கி விடுகிறார்கள். சென்னை மாகாணம் (அப்போது அது தானே பெயர்) முழுவதும் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த காலத்தில் மக்கள் பணத்தில் கொழுத்த சூப்பர் ஸ்டார் ”சிஸ்டம்” இஞ்சினியர்கள் கூட போராட்டம் தவறு என்று கூறி இளைஞர் எழுச்சியை காயடித்து விட்டு திரும்ப எழுச்சி வரட்டும் அப்போ வரேன் என்று பிதற்றுகிறார்கள். மாணவர்கள் தங்களது படிப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் சட்டம் புனிதமானது. அந்த சட்ட திட்டங்களை நாம் தான் மதிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் மீது பார்ப்பனியம் கோமியம் தெளிக்க பார்க்கிறது. போராட்டக் காரர்களோ “மக்கள் நலனுக்காகத் தான் சட்டம், நலன் கெடும் என்றால் சட்டத்தை திருத்தலாம் தவறில்லை” என்று சட்ட திருத்தத்திற்கான வழிமுறையும் சட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டுகின்றார்கள். (உப்புக்கு பிரயோஜனம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எழுச்சியோடு போராடிவிட்டு ”நீட்“ டில் கோட்டை விட்டிருக்கிறோம் நாம்) வேறு வழியின்றி கல்வியில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் முதலாவது சட்டத்திருத்தமாக 1951 ல் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. ஆம், அரசியல் சட்டத்தையே மக்கள் நலனுக்காக முதல் முறை திருத்தம் செய்ய காரணமாக இருந்தது திராவிடம். அப்போது கோட்டை விட்டிருந்தோம் எனில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பலபேர் கல்லூரியை பார்த்திருக்க இயலாது. இடஒதுக்கீடு என்பது என்னவோ ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் “சலுகை“ என்கிற எண்ணம் பெரும்பாலான பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர்களே தகுதி திறமை பற்றி பேசி சக ஆதிதிராவிட மாணவர்களை சிறுமை படுத்த முயல்வதையும் கண்ணுற்றிருக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை என்பதோ அதன் அடிப்படையோ தெரியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலபேர், அமர்ந்திருக்கும் கிளை மீதே கோடரி வீசும் போதெல்லாம் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டு “சலுகை“க்காக சிலுவை சுமந்திருக்கிறார்கள். தற்போது 28 மதிப்பெண் எடுத்துவிட்டு EWS என்கிற ஒதுக்கீட்டில் வங்கிப் பணியாளர் பணியினை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்களேன் “தகுதி திறமை“ என்னவாயிற்று என்று, அவா எல்லோரும் “செலக்டிவ்“ செவிடர்களாகி விடுவார்கள். 80 மதிப்பெண் எடுத்த எஸ்.ஸி, ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்காத பணி 28 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பில் பிறந்த வருடம் 8 லட்சம் வருமானம் ஈட்டும் ”ஏழை”களுக்கு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்கிற புரிதலாவது குறைந்தபட்சம் தேவை.

மலையாளக் கரையோரம் -3

மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது) பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிற...