Thursday, December 25, 2025
இடைநிறுத்தமும் இடைமுடுக்கமும்
இடை நிறுத்தம்
"சார் இவன் கடைசியா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் பள்ளிக்கூடம் வந்திருக்கான் அதுக்கப்புறம் வரவே இல்ல இப்ப அவன் பெயர் ஐந்தாம் வகுப்பு வந்தாச்சு டிசி வாங்கவும் இல்லை" என்று பள்ளிக்கு சென்ற உடனே எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிறுவனை அறிமுகம் செய்தார்கள்
பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்கள் பட்டியல் (OOSC - OUT OF SCHOOL CHILDREN)என்ற ஒன்று எமிஸ் தளத்தில் உள்ளது அது மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து நிலை கல்வித்துறை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
எனவே நெருக்குதல் காரணமாக அவனை அரையாண்டு பரிச்சை தொடங்கிய அன்று அட்மிஷனுக்கு அழைத்து வந்தார்கள்
உடை கலைந்து முடி எல்லாம் வளர்ந்து பள்ளிக்கூடத்திற்கு எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றான்.
அவனிடம் காமெடியாக பேசி ஆசுவாசப்படுத்தி அட்மிஷன் போட்டு உடனடியாக பாட புத்தகங்கள், மூன்று செட் சீருடைகள் விலையில்லா புத்தகப் பை விலையில்லா ஷூ ஜாமென்ட்ரி பாக்ஸ் என கைநிறைய பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பினோம்.
பரீட்சை முடியும் வரை தொடர்ச்சியாக தொய்வில்லாமல் வந்ததோடு தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க அவன் தேர்வு தாளில் வினாத்தாளிலிருந்து எழுத்துக்களை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தான்.
சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அவ்வப்போது கண்ணில் படும் போதெல்லாம் அவனை விசாரித்துக் கொண்டே இருக்கிறேன் அவன் தொடர்ச்சியாக வருவானா இல்லை மீண்டும் நின்று விடுவானா என்பது ஜனவரி மாதம் தெரியும்.
சரியாக இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு முன்னால் அதாவது நவம்பர் துவக்கத்தில் ஒரு பாட்டி தனது பேரனை அழைத்துக் கொண்டு வந்தார்.
"சார் இவன் என்னோட பேரன் இவங்க அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் கிரக வாட்டம் சரியில்ல அப்படின்னு ஜோசியக்காரர் சொல்லிட்டார்"
"ஓ ஜோசியக்காரரே சொல்லிட்டாரா அப்போ சரியா தான் இருக்கும்"
"ஆமா சார், அதனால அவனை என் கூடவே வச்சுக்கிட்டேன்"
"அவங்க அப்பா அம்மா எங்க பதுங்கி இருக்காங்க?!"
"அவங்க அப்பா அம்மா மெட்ராஸ்ல இருக்காங்க இவன் மெட்ராஸ்ல ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கான் சார் இந்த வருஷம் ஸ்கூலுக்கு போகல இங்கே சேர்த்துக்க முடியுமா சார்?!"என்று கேட்டார்
இப்படித்தான் ஜோசியக்காரனுங்க பல குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிட்டு பணத்த வசூல் பண்ணிக்கிட்டு போயிட்டே இருக்கானுங்க!!
அவனை அழைத்து தமிழ் ஆங்கிலம் இரண்டையும் வாசிக்க செய்து பார்த்தால் இரண்டையும் எந்த தொய்வு இன்றி கடகடவென்று வாசிக்கிறான் வாய்ப்பாடும் தெள்ளத்தெளிவாக சொல்கிறான். 'அடப்பாவிகளா ஒரு நல்லா படிக்கிற பிள்ளையை இப்படி வீணடிச்சு வச்சிருக்கானுவ' என்று நொந்து கொண்டு அட்மிஷன் போட்டேன்.
"இந்த வாரம் சென்னைக்கு போயி டிசி எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விடனும் சரியா?!"
"சரிங்க சார்!!" என்றார் பாட்டி.
"சார்.."
"என்னடா?!"
"எங்க அக்காவும் அங்க ஒன்பதாம் வகுப்பு படிச்சிது சார்" என்று தயங்கியபடி கூறினான்.
"ஏம்மா ஆம்பள பிள்ளைங்கறதுக்காக இவன மட்டும் நைசா கொண்டு வந்து அட்மிஷன் போட்டுட்டீங்க பாப்பா வீட்ல இருக்குறத என்கிட்ட சொல்ல கூட இல்லையே, அதையும் அழைச்சிட்டு வாங்கம்மா அட்மிஷன் போட்டறலாம்" என்று கடிந்து கொண்டேன்.
தம்பி அளவிற்கு இல்லை என்றாலும் அந்த பெண்ணும் சுமாராக படித்தார்.
சில நாட்கள் கழித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, "சார் அந்த பையன் சூப்பரா படிக்கிறான் சார் ரொம்ப ஆர்வமா இருக்கா அந்த பாப்பா கொஞ்சம் சுமாரா படிக்கிறா ஆனா கொண்டு வந்துடலாம் சார்"
இதுதான் எங்கள் ஆசிரியர்கள்!!
நவம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் டிசம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் என்றெல்லாம் என் மீது கோபித்துக் கொள்வதில்லை.
எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அரவணைத்து அவர்களால் இயன்ற அளவுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கொண்டு வந்து விடுகிறார்கள்.
மேலும் எந்த தருணத்தில் யாரைப் பற்றி கேட்டாலும் அவனுடைய ஜாதகத்தை எடுத்து வைக்கும் அளவுக்கு மனதிலேயே தகவல்களை பொதித்து வைத்துள்ளார்கள்.
இடை முடுக்கம்!!
இடைநிறுத்தம் மாணவர்கள் செய்யும் நமக்கு நாமே திட்டம் என்றால் இடைமுடுக்கம் என்பது பொதுத் தேர்வுகள் நடக்க இருக்கும் வகுப்புகளில் படிக்கும் மெல்ல கற்போருக்கு ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் செய்யும் "செய்வினை" ஆகும்.
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி என்கிற ஒரு மோசமான புகழ் மயக்கம் தான் இதற்கு எல்லாம் அடிப்படை!!
எல்லா பாடங்களிலும் 100% தேர்ச்சி கிடைக்கணும்!!
அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் உடைக்கணும்!!
என்பது பல பள்ளிகளின் தாரக மந்திரம்.
அதுபோன்ற ஒரு இடைமுடுக்கம் செய்யப்பட்ட மாணவி காலாண்டு பரீட்சை துவங்க ஒரு பத்து நாட்கள் இருக்கும் போது வந்தார்.
அந்த மாணவி எங்களிடம் ஏற்கனவே எட்டாம் வகுப்பில் படித்தவர். அந்த ஆண்டே ஒரு தனியார் பள்ளிக்கு சென்று விட்டு அதற்கு அடுத்த ஆண்டு ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு சென்று சேர்ந்தார்.
இதுபோல ஆண்டுக்கு ஒரு முறை பள்ளிகளை மாற்றுவது மாணவர்களின் படிப்பில் எந்த விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக அந்த மாணவர் ஒவ்வொரு புது பள்ளிக்கு செல்லும் போது தன்னை அங்கே நிலை நிறுத்திக் கொள்வது சக மாணவர்களில் இருந்து நண்பர்களை கண்டடைவது ஆசிரியர்களின் மனதை கவர்வது என்று பல விஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கும்.
அவ்வாறு செட்டில் ஆகும் தருணத்தில் மறுபடியும் பள்ளியை மாற்றுவது என்பது அவர்களை கடுமையான ஆளுமை சிக்கலுக்கு உள்ளாக்கும். அவரது படிப்பும் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
மறுபடியும் அந்த மாணவி பிரச்சனைக்கு வருவோம் அந்த மாணவி முதல் இடைப்பருவத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளார்.
அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர் அதிகாலை சிறப்பு வகுப்புகளுக்கு வர கோரியிருந்தனர் ஆனால் அந்த மாணவி தினமும் பேருந்தில் சென்று வருபவர் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று அவரது தந்தை கூறி இருக்கிறார்.
இந்த சூழலில் எங்கள் பள்ளிக்கு சேர்க்கை கோரி அந்த மாணவியின் தந்தை வந்திருந்தார்.
"ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி விட்டது. இது நிர்வாக ரீதியான சிக்கல் அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளிகள் வாரியாக வெவ்வேறு வேகங்களில் படங்கள் நடத்தி இருப்பார்கள். அதனால் அவர் இங்கே வந்து பொருந்துவது சிரமமாக இருக்கும்"
"இப்போ என்ன சார் பண்றது அங்கேயும் அழைச்சிட்டு போக சொல்லி சொல்றாங்களே?!"
"பள்ளியில் கொஞ்சம் பேசி பாருங்க அப்படி இல்லன்னா முதன்மை கல்வி அலுவலர் இடத்தில் சென்று முறையிட்டு பாருங்கள் என்றேன்"
"ஏழை மாணவர்களுக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் நம்மை விட்டால் வேறு எங்கே சார் போவார்கள் நாம தான் சார் அவர்களை அரவணைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்!!" இது முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய வார்த்தைகள்.
அந்த பள்ளி நிர்வாகத்தை பேசி உடன்பட செய்வதை விட என்னிடம் பேசி விடுவது இலகுவாக இருக்கும் என்று சார் நினைத்து இருப்பார் போலும்.
அன்று மாலையே மாணவியை பள்ளியில் சேர்த்துக்கொண்டு சில அறிவுரைகள் வழங்கி ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி வகுப்பில் அமர வைத்தோம்.
காலை நேர மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள்& பள்ளியில் நடைபெறும் அலகுத் தேர்வுகள் என எல்லாவற்றிலும் அந்த மாணவிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அவரும் உள்ளூரில் இருந்து பள்ளி வந்து சென்றதால் எல்லாவற்றையும் சிரமம் இன்றி கேட்டுக் கொண்டார்.
காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று விட்டார். அழைத்து பேசியபோது மிகவும் நம்பிக்கையோடு நல்ல மதிப்பெண்கள் பெறுவதாக என்னிடம் உறுதியளித்துள்ளார்.
தேர்ச்சி விழுக்காட்டினை வைத்து ஆசிரியர்களை எடை போடுவது என்பது ஆசிரியர்களை பதட்டத்துக்கு உள்ளாக்குவதோடு பாடங்களை அதற்குரிய வழிமுறைகளைக் கொண்டு அனுபவித்து நடத்தும் முறையை கைவிட்டு தேர்வு & மதிப்பெண்கள் நோக்கிய வழிமுறைகளை கை கொள்கிறார்கள்.
இது என்ன ஆகிறது என்றால் மெல்ல மெல்ல மற்ற வகுப்புகளையும் இது வழிமுறை ஆட்கொள்கிறது.
அதனால் மாணவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஆமாம் அவர்களுக்கு மதிப்பெண்கள் எடுக்கும் வழிமுறைகள் தெரியும் ஆனால் பாடங்களில் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது. புரிந்து கொண்டு மதிப்பெண்கள் எடுப்பவர் என்பது பாதி பேர்தான்.
அதனால்தான் மெல்லக் கற்கும் மாணவர்களை பார்க்கும் போதெல்லாம் மிகுந்த கோபம் கொள்வதோடு பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்கள் கற்ற உளவியல் வழிமுறைகள் எல்லாம் கோபத்தில் கரைந்து போகிறது.
Curiosity kills the cat என்பது போல பொது தேர்வுகளுக்கு என்றுள்ள மதிப்பீட்டு வழி முறைகள் மாணவர்கள் பாடங்களை ஒழுங்காக புரிந்து கொண்டு படிக்காமல் இருப்பதற்கு காரணமாக அமைவது வேதனை.
இடைமுடுக்கங்களும் இடைநிறுத்தங்களும் ஒன்பதாம் வகுப்பில் ஏற்படுவதற்கு பொதுத் தேர்வு தேர்ச்சி விழுக்காடு பயம் மட்டுமே காரணம்.
எனவே இனிவரும் காலங்களில் கல்வி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது முக்கியமாக மதிப்பீட்டு முறையிலும் இருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறை - பட விமர்சனம்
சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...

No comments:
Post a Comment