Friday, December 12, 2025

எனது போராட்டம் -Mein Kampf

ரத்த கலப்பு தாண்டவம் ஆடி வரும் ஒரு சகாப்தத்தில் தங்கள் இனம் அதனால் அசுத்தம் அடையாது பாதுகாக்கும் கடமையில் தவறாது செல்லும் ஒரு அரசாங்கம் இந்த உலகையே ஆட்சி செய்யும் நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. இனவெறியில் உச்சம் தொட்ட ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு விஷயத்தை சிந்திக்க முடியும். அந்த நபரின் இதர பல தத்துவ முத்துக்கள்: மக்கள் தொகையை செயற்கையாக கட்டுப்படுத்த நினைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே கருத்தடை என்பது தவறு மாறாக இயற்கை சீற்றம் வறட்சி போன்ற நிகழ்வுகளால் அவ்வப்போது இயற்கையே தனது மக்கள் தொகையை சமன் செய்து கொள்ளும். ஒரு தேசத்தில் வலிமை என்பது தாக்குதல் திறனில் தான் உள்ளதேயன்றி தற்காப்பில் இல்லை. ஒரு கொள்கை பரவுவதை தடுக்க கலப்பற்ற பலாத்காரம் பயன்படும் என்றால் அதை இடைவிடாமல் பயன்படுத்த வேண்டும். ஒரு நாடு தன் வாழ்விற்காக போராடும்போது கருணை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே அதை அனுமதித்தால் போராட்டம் பலகீனமாகிவிடும். உறுதியுடனும் விடாமுயற்சியுடன் ஒருமைப்பாட்டு முறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் அதற்கு முதலில் அரசாங்க ஆட்சி மொழி ஒரே ஒரு பொது மொழியாக இருக்க வேண்டும். மத விஷயங்களில் தலையிட அரசியல் கட்சிகளுக்கு உரிமை இல்லை மத விஷயங்கள் தேசங்களுக்கு விரோதமாக இருந்தால் அதை ஆட்சேபிக்கலாமே தவிர மத விஷயங்களில் தலையிடுவது மக்களுக்கு பிடிக்காது. ஒரு நாடு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் உணவு தேவைக்காகவும் விவசாய நிலப் பரப்பை விஸ்தீரப்படுத்தவும் அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஒரு சொற்பொழிவில் மக்கள் பகுத்தறிவுக்கு திருப்தி உண்டாவதை காட்டிலும் அவர்கள் உணர்ச்சி வெள்ளம் பொங்க வேண்டும். அதாவது நோ லாஜிக் ஒன்லி மேஜிக். வலிமை உள்ளவர்கள் என்றென்றும் பலவீனமானவர்களின் எஜமான்களாக இருந்து வருவார்கள் இது யாராலும் மாற்ற தேவைப்படாத இயற்கை நியதி. எப்போதுமே பிரச்சாரமானது எதிரிகளின் அநீதியை மாத்திரமே இடைவிடாமல் வலியுறுத்தி கூறுவதாக இருக்க வேண்டும். எதிரிகளின் நல்ல அம்சம் ஏதேனும் இருந்தாலும் அதை கூறக்கூடாது. தங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும் உண்மைகளை மட்டுமே கூறி வர வேண்டும். உயர் வம்சத்தினர் தாழ்ந்த வம்சத்தினருடன் புணர்வதன் மூலம் காலப்போக்கில் உயர்ந்த வம்சம் சிறப்பியல்புகள் குன்றி நசிந்து விடும். பரம்பரை நோயாளிகளையும் புத்தி சுவாதீனம் அற்றவர்களையும் மலடாக்கிவிட வேண்டும். பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கலாம் வேலைக்கு செல்ல அனுமதிக்கலாம் ஆனால் கூட அவர்களின் இறுதி லட்சியம் குழந்தை பெற்றுக் கொள்வது தான். மனித குலத்தின் உயர்ந்த வம்சத்தினரான ஜெர்மானியருக்கு தான் உலகிற்கே எஜமானவர்களாக இருக்கும் உரிமை உண்டு. ஒரு வழியாக இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்தவர் யார் என்ற யூகத்திற்கு கடைசி வாக்கியமாவது உங்களை தள்ளி இருக்கும். ஆமாம் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் மெயின் காம்ஃப் என்ற தனது ஆட்டோ பயோகிராபியில் எழுதியுள்ள விஷயங்களில் சாராம்சம் தான் நான் மேலே கூறியுள்ளது. ஜெர்மனி ஆஸ்திரியா இரண்டுக்கும் நடுவில் இருக்கும் எல்லை கிராமமான இன் பிரானோவில் பிறந்துள்ளார். இரண்டு தேசமும் ஜெர்மனியர்களின் தேசம் என்பதால் இரண்டும் ஒன்று சேர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துள்ளது. (முதல் உலகப்போருக்கு பின் அதாவது 1918இல் ஜெர்மன் குடியரசுடன் தாம் இணைவதாக ஆஸ்திரியா பிரகடனம் செய்தது ஆனால் பிரிட்டன் முதலான நேச நாடுகள் அதை தடை செய்துவிட்டன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப் போர் துவங்கும் தருவாயில் ஜெர்மன் துருப்புகள் ஆஸ்திரியாவில் பிரவேசித்தன. இவ்வாறாக ஹிட்லர் ஆஸ்த்ரியாவை ஜெர்மனியுடன் இணைத்து தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார்) தனது இளமை பருவம் ஹிட்லர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தான் வளர்ந்துள்ளார். ஏராளமான புத்தகங்கள் வாசித்துள்ளார். புத்தகங்களை அவர் வாங்கி வாசித்துள்ளார். 17 வயதில் காரல் மார்க்ஸ் ன் கொள்கை அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளது. கம்யூனிச அமைப்பிலும் ஈடுபாடு காட்டியுள்ளார் . ஆனாலும் அவர் நூலில் குறிப்பிடாத ஏதோ ஒரு காரணத்தினால் அங்கிருந்து விலகி உள்ளார். (விதியின் முரட்டு கரங்களால் திடீரென ஓங்கி ஒரு அடி வாங்கிய பின்னர் விதியினீ கரங்களால் எனது கண்கள் திறக்கப்பட்டன என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்) அதன் பிறகு பொதுமக்களை வஞ்சிப்பதற்கான இறையற்ற தன்மை என்று கம்யூனிசத்தை குறிப்பிடுகிறார். மார்க்ஸ் கொள்கை மனித குலத்தின் அழிவுக்கான ஒரு தத்துவம் என்று கடுமையாக சாடுகிறார். மார்க்ஸ் கொள்கையின் இறுதி நோக்கம் யூதர் அல்லாத தேசிய அரசுகளை அழிப்பது தான் என்றெல்லாம் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு இணையாக கம்யூனிசம் என்றாலே கதறி துடிக்கும் ஆளாக ஹிட்லர் இருந்துள்ளார். தனது பதின் பருவங்களில் அவருக்கு பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. யூதர்கள் நடத்திய பத்திரிகைகளை விரும்பி வாசித்துள்ளார் "அவர்கள் வேற்று மதத்தவர் என்பதால் துவேஷம் கொள்ளக்கூடாது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூட எண்ணி உள்ளார். நமது தினத்தந்தி போல யூதர்கள் நடத்திய பத்திரிக்கையும் அரசாங்கத்தை காக்காய் பிடிப்பது அவருக்கு சற்று நெறுடலாக இருந்தது. அதோடல்லாமல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெர்மனியின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது போலவும் வீரர்களின் உற்சாகத்தை குன்றச் செய்வது போலவும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்துள்ளதால் முற்றிலும் யூதர்களையும் அவர்கள் நடத்தி வந்த பத்திரிக்கைகளையும் வெறுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி யூதர்களை சதிகாரர்கள் சகுனிகள் என்கிற அளவுக்கு கடும் ஒவ்வாமையோடு பார்த்து வந்துள்ளார். முதலாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் மன்னருக்கு விண்ணப்பம் செய்து பவேரிய ராணுவத்தில் சேர அனுமதி கோரியுள்ளார். வடிவேல் போல வான்டனாக வண்டியில் ஏறி யுள்ளார். முதலாம் உலகப் போரில் கடைநிலைப் போராளியாக இருந்த ஒருவர் இரண்டாம் உலகப்போரை முன் நின்று வழி நடத்தியுள்ளார் என்பதும் ஒரு துயர சாதனை வரலாறு. முதலாம் உலகப் போர் முடிந்து வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி மாபெரும் அவமானத்தையும் பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்த பிறகு தான் ஹிட்லர் அரசியலில் நுழைவது என்று முடிவு செய்வது படிப்படியாக காய்களை வெகு நேர்த்தியாக நகர்த்துகிறார். சொற்பொழிவு ஒன்றை மட்டுமே ஆயுதமாக கொண்டு ஜெர்மனியையே கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இதுகுறித்து மேலே கூறியுள்ளேன். மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொண்ட கலந்துரையாடல் துவங்கி 50,60,100 ,150 என்று வளர்ந்து 60 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் பேசியது வரை வளர்ந்துள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூட்டத்துக்கு இடையூறு செய்யும் எதிரிகளை பந்தாடவும் பவுன்சர்களை நியமித்ததில் நமது இளைய தளபதிக்கு முன்னோடி ஹிட்லர். ஒரு கூட்டத்தின் போது நூற்றுக்கு குறைவான எண்ணிக்கையிலான பவுன்சர்களை கொண்டு ஆயிரக்கணக்கான எதிரிகளை பந்தாடியதை பதிவு செய்துள்ளார். சற்றும் சுவையில்லாத எழுத்து நடை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது என்று வாசிக்கவே அயர்ச்சியான ஒரு நூலாக தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லரின் இந்த நூலில் நாம் எடுத்துச் செல்ல (take away) என்று எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லை. எவர் ஒருவர் மோசமான தலைவர் என்பதை அடையாளம் காண உதவும் பண்பு நலன்களை வேண்டுமானால் இங்கிருந்து கற்றுக்கொள்ள இயலும். (நீங்க யாரையாவது அடையாளம் கண்டுகினீங்களா). நூல்: எனது போராட்டம் (Mein Kamph )- ஹிட்லர்

No comments:

Post a Comment

எனது போராட்டம் -Mein Kampf

ரத்த கலப்பு தாண்டவம் ஆடி வரும் ஒரு சகாப்தத்தில் தங்கள் இனம் அதனால் அசுத்தம் அடையாது பாதுகாக்கும் கடமையில் தவறாது செல்லும் ஒரு அரசாங்கம் இந்...