Sunday, September 4, 2016

ஒழுக்க நெறியோடு சேர்த்து உணர்வு நெறியையும் கற்பிப்போம்.


     அந்த மாணவி நன்றாக படிக்கக் கூடியவள், கட் ஆஃப் 200 எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதே இலட்சியம். ஆண்டுப் பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. கணிதத் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது. கட்டாய வினாவாக வந்திருந்த இரண்டு வினாக்களுக்கும் அவளுக்கு பதில் தெரியவில்லை. கட் ஆஃப் 200 அண்ணா பல்கலைக்கழக கனவு எல்லாமே அந்த ஒரு வினாவால் நொறுங்கிப் போனது. மூன்றாவது மாடியில் இருந்த தேர்வு அறைக்கு வெளியே ஓடிவந்து கீழே குதித்து விட்டாள்.
பெற்றோரின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்த பெற்றோருக்கு பொறியியல் படிப்பில் செலவு வைக்காமல் மதிப்பெண் குவிக்க வேண்டும். இரண்டாண்டு உழைப்பு. இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து புத்தியை பேதலிக்கச் செய்துவிட்டன. விளைவுகள் பற்றி யோசிக்க இயலாமல் போனது.
  அவன் சுமாராக படிக்கும் மாணவன்தான். ஆனால் ஆசிரியர்களிடம் பணிவு சக மாணவர்களிடம் நல்ல நட்பு என எல்லோருக்கும் பிடித்தமானவனாக வலம் வந்தான். திடீரென அவன் நடவடிக்கையில் மாற்றம். வேண்டுமென்றே தேர்வில் வெற்று காகிதத்தை கொடுத்துச் சென்றான். என்னவென்று கேட்ட ஆசிரியரை எதிர்த்துப் பேசிவிட்டான். அவனின் இந்த போக்கை பற்றி ஆசிரியர்கள் கூடி பேசினோம். ஒவ்வொருவரும் அவனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததாக கூறினார்கள்.
அவனை அழைத்து தனியே விசாரித்த போது, “---” என்ற பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். அதற்கு காரணம் காதலித்து பின் பாராமுகமாக இவன் நடந்து கொண்டது தான் என்றொரு வதந்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் உலாவியபடி இருந்துள்ளது. இந்த விஷயம் ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டான். அது தான் அவனின் மாற்றத்திற்கு காரணம். ”உன்னிடம் விரும்பத்தக்க எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கும் போது இந்த சின்ன விஷயத்திற்காக உன்னை தப்பாக நினைப்போமா? நீ எப்போதுமே எங்கள் செல்லப் பிள்ளை தான்டா!”என சமாதானம் கூறி சகஜ நிலைக்கு திருப்பினோம்.

முதல் சம்பவத்தை Emotional Hijack என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உணர்வெழுச்சியால் கடத்தப்படுதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமா?
இது எப்போது எதனால் நடக்கிறது? உங்கள் சிந்தனையையும் செயலையும் உணர்வெழுச்சி வெற்றி கொள்ளும் போது நடக்கிறது. நம் விருப்பத்திற்கு மாறான சிந்தனையும் செயல்பாடும் அரங்கேறும். அடுத்தவர்களின் எண்ணவோட்டத்தை லட்சியம் செய்ய மாட்டோம். சரியான செயலையோ வார்த்தையையோ தேர்ந்தெடுக்க இயலாது. குமரப்பருவம்தான் என்றில்லை வயது வரம்பு பாராமல் நிறைய பேர் இந்த மாதிரி உணர்வெழுச்சியால் கடத்தப்படுவதை காண்கிறோம். இது மிகவும் ஆபத்தான சமூக விளைவை ஏற்படுத்தி விடும்.
இரண்டாவது சம்பவம் முதலாவதை விட சற்று மிதமானதுதான். தீவிர மனவெழுச்சி கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லையானாலும் சூழலுக்கு பொருத்தமான உணர்வை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்த தவறிவிட்டான்.
     நாம் எல்லோரும் மாணவர்களிடையே IQ வை அதாவது ”நுண்ணறிவு ஈவை”( intelligent quotient) பெரிய அளவில் வளர்த்து பெரிய பதவிகளில் அமர வைத்து அழகுபார்க்கவே ஆசைப் படுகிறோம். பாடம் சார்ந்த புலமையும் தொழில் நுட்ப அறிவு மட்டுமே வெற்றிகரமான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்பேர்பட்ட “வெற்றிகரமான“ பிள்ளைகள் அனைவருமே வாழ்வில் வெற்றிகரமாக வலம் வருகிறார்களா என்றால் இல்லை. மனவலிமையோடு இருக்க வேண்டிய காவல் துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடினமான தேர்வினை தங்களின் உயர்நிலை நுண்ணறிவால் வெற்றிகொண்ட IAS அதிகாரிகள் கூட தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளை நாளிதழ்களில் காண்கிறோம்.
காரணம் வளரிளம் பருவத்தே வளர்க்க வேண்டிய EQ வை வளர்க்காமல் போனது தான். “அப்படியா! அது என்ன?” என்ற அளவில் தான் EQ பிரபலமாகியுள்ளது. IQ க்கு இணையாக அத்தியாவசியமாக தேவை என்பதால் ரைமிங்குக்காக EQ என்று சொன்னாலும் அது “உணர்வு சார் நுண்ணறிவு“ என்னும் (Emotional Intelligence) என்பது தான். IQ வை அளக்க துள்ளியமான அளவுகோலாக நிறைய தேர்வுகள் இணையத்தில் கிடைக்கின்றன ஆனால் EQ வை வெளிப்படையாக அளந்து கூற அளவுகோல் எதுவும் இல்லாதது தான் பரிதாபம்.
     ”டேனியல் கோல்மேன்“ என்பவர் தான் முதன் முதலில் “உணர்வு சார் நுண்ணறிவு” என்ற கருத்தாக்கத்தை 90களில் அறிமுகப்படுத்தினார். “சரியான உணர்வுகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுக்கு வழிகோலுதல்“ என்பது தனிநபர் சார் EQ ஆகும். அதுவே “மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக இனங்கண்டு அவர்களுடன் ஆரோக்கியமான நேர்மறை உறவினை பராமரிக்கும் திறனே“ சமூகம் சார்ந்த EQ ஆகும்.
இதனைப் பற்றி இணையத்தில் தேடியபோது எனக்கு கிடைத்த அழகான சின்னஞ்சிறு விளக்கம் “ எண்ணங்களையும் உணர்வுகளையும் சரியான வகையில் இணைத்து விரும்பத்தக்க முடிவுகளை எடுக்கும் திறமை தான் உணர்வு சார் நுண்ணறிவு“.
மாணவர்களின் குமரப்பருவம்  இரண்டு விஷயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று சமூக வாழ்வு சார்ந்தது. மற்றொன்று உணர்வு ரீதியிலானது.
சமூக வாழ்வு சார்ந்து பின்வரும் மாற்றங்களை காணலாம். 1.அடையாளம் தேடிக்கொள்ளல். நான் யார்?, இந்த உலகில் எனக்கான இடம் எது? இவற்றுக்கான பதிலை பாலினம், வயதொத்த நண்பர்குழு, குடும்ப மற்றும் கலாச்சார பிண்ணனி போன்ற காரணிகள் சார்ந்து நிறுவிக் கொள்கிறார்கள்.
அதீத சுதந்திரமும் அதீத பொறுப்பும் தேவையென நினைக்கிறார்கள். மேலும் புதிய அனுபவங்களை செய்துணர துடிக்கிறார்கள்.
உணர்வு ரீதியிலான மாற்றங்கள்
     உணர்வு ரீதியிலான பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. சிரிப்பு, அழுகை, கோபம், மற்றும் கருணை எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ் தான்.
     அவர்களின் மனநிலை வானிலை அறிக்கை போல் ஆகிவிடுகிறது. அதாவது கணிக்க இயலாதது ஆகிவிடுகிறது.
     “இளங்கன்று பயமறியாது“ என்பதற்கேற்ப எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வகையில் செய்து வைத்துவிடுவார்கள்.


எனவே தான் குமரப்பருவத்தில் இருக்கும் மாணவர்களின் ”உணர்வு சார் நுண்ணறிவை” வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரிருக்கு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே பெருகிவரும் வன்முறைப் போக்கிற்கும் தற்கொலைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் ”உணர்வு சார் நுண்ணறிவு” குறைவே காரணம் என்று குற்றம் சாட்டினால் தவறாகாது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர் மத்தியில் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. 

2 comments:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...