Saturday, September 16, 2017

தரமணியும் தகழி சிவசங்கரன் பிள்ளையும்


அட இது என்னப்பா தலைப்பு மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி?“
தரமணி படத்தையும் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களின்பாப்பி அம்மாளும் குழந்தைகளும்“(மலையாளம் டு தமிழ் மொழிபெயர்ப்பு) என்கிற நாவலையும் சமீபத்தில் பார்த்ததால் இந்த பதிவு.
நீங்க மொட்டத்தலன்னு நினைத்தால் மொட்டத்தல இல்ல மொழங்காலுன்னு நினைத்தால் மொழங்கால்
தரமணி ஆண்ட்ரியாவின் கெரியர் கிராஃப்ல ஒரு குறிப்பிடத்தக்க படம். இயக்குநர் ராம் அவர்கள் வெகு நாட்கள் முன்னரே எடுத்து கூவி கூவி வித்தும் வியாபாரம் செய்ய முடியாமல் முக்கி முனகி இப்போ வெளி வந்து வெற்றிப் படமாக ஆகியிருக்கு.
ஐடி கம்பெனியில் கை நிறைய சம்ளம் வாங்கும் (ஐடி கம்பெனின்னாலே கைநிறைய சம்பளம் தானேப்பா மேல சொல்லுங்க) ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் ஆல்தியா (கலாச்சார காவலர்களின் பல்வேறு போராட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவே ஆல்தியாவை ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக  பிரசவித்திருக்கிறார் இயக்குநர் ராம்)
திருமணம் செய்துகொண்ட அன்புக் கணவன் ஓரினச் சேர்க்கை பிரியன் எனத் தெரிந்து அவரை Character assassination செய்து விடாமல் கவனமாக அவரைப் பிரிந்து வாழ்கிறார் தனது பையனுடன்.
அவருடைய வாழ்க்கையில் ஹீரோ என்ட்ரி ஆகிறார். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். ஹீரோவுடைய பொசசிவ்னஸ் சந்தேகத்தையும் சிக்கலையும் உண்டாக்க சண்டையிட்டு பிரிகிறார்கள்.
பின்பு பரஸ்பரம் வருந்தி சேர்கிறார்கள்.
ஆண்ட்ரியா சிகரெட் பிடிக்கிறார் தண்ணி அடிக்கிறார் சமயத்தில் வேற்று ஆண்களை கட்டிப் பிடிக்கிறார்.
தனுஷ் தண்ணி அடிக்கும் போதும் சிகெரெட் பிடிக்கும் போதும் இது தவறான விஷயமாச்சே!” என எவ்வளவு கோபப் பட்டேனோ அதே அளவு கோபம் தான் ஆண்ட்ரியா மீதும் ஏற்பட்டது. சற்றும் மிகையாக கோபப் பட வில்லை.
கலாச்சார சிலுவையை பெண்கள் மீது மட்டும் சுமத்தி விட்டு ஹாயாக நடந்து வரும் ஆண்களுக்கு மாபெரும் அறச்சீற்றமோ காட்சியை கண்டதும்அபிஷ்டு அபிஷ்டு லோகம் கெட்டுடுத்துடா, கலி முத்திடுத்துடாஎன்று ஒவ்வாமையும் ஏற்படலாம்.
மொத்தத்தில் ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கூட கொடுக்கலாம். அவ்வளவு அருமையான நடிப்பு.
யுவன் பாடல்கள் மட்டும் பிண்ணனியில் அசத்தி இருக்கிறார்.
வசனங்கள் அற்புதம்.
சமூக அக்கரையை தொனிக்கும் வாய்ஸ் ஓவர் என்றாலும் சற்று ஓவர்.
அடுத்ததாக “பாப்பி அம்மாளும் குழந்தைகளும்“ தகழி சிவசங்கரம் பிள்ளை அவர்கள் எழுதிய நாவல். ஏற்கனவே இவர் எழுதிய ஒரு நாவல் ஒன்றை ஓரளவு இதே ஜானர்ல படித்ததாக ஞாபகம்.
இப்போ தூர் வாருகிறேன் என்று சொல்லி மண்ணை வாரி விற்று விட்டதால் தண்ணீர் நிறைந்த எந்த ஏரியில் கால் வைத்தாலும் வைத்தவுடன் மூழ்க வேண்டியது தான். கரையிலேயே 10 அடி ஆழம் தோண்டியிருக்கிறார்கள். அது போல நாவலில் நுழைந்த உடனேயே கதையின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும் உத்தியில் கதை சொல்லி இருக்கிறார்.
பாப்பி அம்மாள் தனது மகன் பத்மநாபன் வருகைக்காக காத்திருக்கிறார். இரண்டு ஓணங்களுக்கு முன் சென்றவன் இந்த ஓணத்திற்கு வருவதாக சொல்லி கடுதாசி போட்டிருக்கிறான். தாய்க்கு ஒரே தர்மச் சங்கடமாக இருக்கிறது. பத்மநாபனின் தந்தை இறந்த பிறகு பாச்சுப் பிள்ளை என்பவருடனான ”நட்பில்” கார்த்தியாயினி பிறந்தாள். அப்போது அவனுக்கு 10 வயது. பாச்சுப் பிள்ளை குழந்தை தன்னுடையது அல்ல என்று கை விரிக்கிறார். புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்து கொள்கிறார்.  இப்போது வயிறு மேடிட்டு இருக்கிறது கேசவன் நாயரின் ”நட்பில்”
தமிழ்நாட்டில் டீ கடை வேலை செய்யும் பத்மநாபனுக்கு விஷயம் தெரியாது. இப்போது மேடிட்ட வயிற்றுக்கு காரணத்தை எப்படி 14 வயது இளைஞனிடம் விளக்குவது? கேசவன் நாயருடனான நட்பை அவன் எவ்வாறு புரிந்து கொள்வான் என்றெல்லாம் பலவாறு பயந்து கொண்டு இருக்கிறாள். ஆனால் அவனோ அந்த விஷயத்தை இயல்பாக ஏற்றுக் கொள்கிறான். தாய் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறான்.
சுற்றத்தார் வழக்கம் போல அவளின் “இந்த“ நட்புக்கள் குறித்து ஏசினாலும் பாப்பி அம்மாள் அனைவரிடமும் மிகுந்த அன்போடு நடந்து தனக்கு உதவிகள் பெற்றுக் கொள்கிறார். மேலும் அடுத்த பிரசவத்தில் நாராயணனை பெற்றெடுக் உதவியும் கிடைக்கப் பெறுகிறாள். அவர்களின் ஏச்சு மொழிகளுக்கு மௌனத்தை பதிலாக வைத்திருக்கிறாள். கேசவன் நாயரின் நட்பை உறுதியாக தொடர்கிறாள்.
குடும்பம் நல்ல நிலைமை அடைகிறது. பத்மநாபன் தமிழகத்தில் நல்ல ஓட்டல் நடத்தி நிறைய சம்பாதிக்கிறான். நல்ல வீடு கட்டி வாழ்கிறார்கள். கேசவன் நாயர் இறுதி வரை பாப்பியின் ”தோழனாகவே” உறுதுணையாக வருகிறார். குடும்ப நிர்வாகத்தை திறம்பட நடத்துகிறார். இந்நிலையில் பாச்சுப் பிள்ளை (கார்த்தியாயினியோட அப்பாங்க) நோய்வாய்ப்பட்டு போக்கிடம் இல்லாமல் வந்து நிற்க பாப்பி அம்மாள் அவரையும் அரவணைத்து சாகும் வரை அடைக்கலம் தந்து நல்லடக்கமும் செய்கிறாள்.
நானும் கூட சில வாழும் பாப்பி அம்மாள்களை கண்டிருக்கிறேன். ஊரோ சமூகமோ தூற்றினாலும் கூட அவர்கள் நெஞ்சுறுதியோடு தங்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பாப்பி அம்மாள்களிடம் நான் கண்ட பொதுவான அம்சம் அவர்கள் நிரம்ப கருணையோடு இருக்கிறார்கள்.
என்னதான் கலாச்சாரம் பண்பாடு என்று நம்மை நாமே விலங்கிட்டுக் கொண்டு சமுதாயச் சிறையில் வாழ்ந்தாலும் ஒரு சிலர் இந்த கலாச்சார விலங்கை எல்லாம் துணிவோடு தகர்த்து தனக்கு பிறருக்கு எந்த துன்பமும் தராத தனக்கு நன்மை பயக்கும் பாதையை தேர்ந்தெடுத்து நெஞ்சுரத்தோடு பயணிக்கிறார்கள்.
கலாச்சாரத்தை பெண்களின் உடைகளிலும் குடும்ப கவுரவத்தை பெண்களின் யோனியிலும் வைத்து பாதுகாக்கும் பண்பாட்டு பாது காவலர்களுக்கு தரமணியோ அல்லது தகழியின் நாவலோ குமட்டலான படைப்புதான்.
இப்போ புரிகிறதா தலைப்புக்காண காரணம். இரண்டு படைப்புகளும் “உனக்கு உகந்ததான வாழ்க்கையை யாரையும் புண்படுத்தாமல் பயமின்றி வாழ்வதில் தவறில்லை“ என்று கூறுவதில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சை இட்டுக் கொள்கின்றன.



No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...