Thursday, September 28, 2017

லால்குடி டேஸ் -8 லால்குடி பிருந்தாவனமும் பூவாளூர் காவேரியும் இரண்டாம் பாகம்




“அம்மா நேர்மைன்னா என்ன?”
”ம்ம்… நேர்மைன்னா நம்ம ஹமாம்”
இந்த விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள் இல்லையா?
லால்குடியில் இருந்போது என்னிடம் யாரேனும் இந்த கேள்வியை கேட்டிருந்தீர்கள் என்றால், ”நேர்மைன்னா நம்ம விஜயகாந்த்” என்றுதான் சொல்லியிருப்பேன்.
ஒருவாளி கஞ்சியில காக்கி யூனிஃபார்ம அலசிபுட்டு சொச்சத்த குடிச்சிருப்பார் போல அவரோட காக்கி உடையும் சரி குரலும் சரி அவ்வளவு விரைப்பாக இருக்கும். (பாவம், இப்போ அவர் பேச்சைக் கேட்டாலே பரிதாபமாக உள்ளது ஒரு காலத்தில் எப்படி முழங்கிய மனுசன்)
காவல் துறையில் அவர் வகிக்காத பதவியும் கிடையாது. அவர் பிடிக்காத தீவிரவாதிகளும் கிடையாது. அவரோட பேச்சுக்கு பயந்து பாவம் துப்பாக்கி குண்டே பரவால்லன்னு செத்துருவாங்க.
ஏன் வீரப்பனையே நம்ம காவல் துறை பிடிக்கறதுக்கு முன்னாடி அவர் பிடிச்சிட்டார்ப்பா.
நான் சுத்தமல்லியில் படித்த போது “கேப்டன் பிரபாகரனா“ அவதாரம் எடுத்து வீரப்பனை பிடித்தார். ஆனால் எனக்குத்தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை வெள்ளித்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
நாம் இந்த மாதிரி பல படங்களை பார்க்காமல் நழுவ விட்டு பல ஆண்டுகள் கடந்து போயிருக்கும்.
லால்குடி பூங்காவனம் தியேட்டர் இந்த மாதிரி நமது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இரண்டாவது வாய்ப்பினை வழங்கும். ஆம், அவர்கள் விநியோகஸ்தர்களின் வீட்டில் “அடச்சீ இடத்தை அடைத்துக் கொண்டுள்ளதே என்று சில திரைப்பட ரீல் பெட்டிகளை (இளைஞர்களே அப்போவெல்லாம் படச்சுருளில் தான் படம் வரும்) தூக்கி வெளியே போடுவார்கள். பதுங்கி நின்று அற்புதமாக “கேட்ச்“ செய்து கொண்டு வந்து பைசா செலவு இல்லாமல் பூங்காவனத்தில் ஓட்டி கல்லா கட்டி விடுவார் அந்த சாமர்த்தியமான முதலாளி.
ரொம்ப பழங்காலத் தியேட்டர். தியேட்டரில் படத்தோட ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காட்டுவார்கள். நமது சீட் அருகில் குளிருக்கு பயந்து வந்து ஆடு மாடு கூட படுத்து இருக்கும். நமது பார்வை கோணத்தில் தூண் எதுவும் குறுக்கிடாமல் பார்த்து அமர்வது எவ்வளவு சாமர்த்தியம் தெரியுமா?
அந்த திரையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சினிமா திரையை வெள்ளித்திரை என்பார்கள். அது வெள்ளித்திரையும் அல்ல வெள்ளைத்திரையும் அல்ல வெண்கலத் திரைதான். அவ்வளவு கண்றாவியான வண்ணத்தில் இருக்கும். போடும் படமும் பழைய படச்சுருள் என்பதால் பெருமழைக் காலத்தில் வீட்டின் கூரையில் இருந்து நீர்த் தாரைகள் விழுவது போல திரையில் இடையறாமல் கோடுகள் விழுந்த வண்ணம் இருக்கும்.
இந்த மாதிரியான ஒரு தியேட்டர் தான் எனது தலைவன் விஜயகாந்த் நடித்த வரலாற்றுச் சிறப்புக்குரிய “கேப்டன் பிரபாகரன்“ படம் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தது.
சக விடுதி நண்பர்கள் எல்லாம் அந்த படம் ரிலீஸ் ஆன வருடத்திலேயே “கர்ம காரிய“ வீடுகளில் கல் படைக்கும் அன்று இரவு படம் போடுவார்களே அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பல முறை பார்த்து சலித்துவிட்டார்கள். கூப்பிட்டா ஒரு பய வரமாட்டேங்கிறான். அப்புறம் ஒரு தம்பியிடம் “இடைவேளை முறுக்கு இலவச டிக்கெட்“ என்கிற ஆசைகாட்டி சற்று மிரட்டி துணைக்கு அழைத்துச் சென்றேன்.
ஒரு வழியாக கேப்டன் பிரபாகரன் வீரப்பனை கைது செய்த காட்சியை கண்ணாறக் கண்டாகி விட்டது. (நம்ம கேப்டனுக்கு கூட வீரப்பனை உயிரோடு பிடிப்பது தான் நோக்கமாக இருந்தது ஆனா நிஜ போலீஸ்?!)
பூங்காவனம் காரன் பல முறை தெலுங்கு டப்பிங் படங்கள் கூட போடுவான். ஆனால் அவற்றை ஒரேநாளில் தூக்கி விடுவான். (“ஆளே இல்லாத கடையில் அவனும் எத்தனை நாட்களுக்குத் தான் டீ ஆற்றுவான்?“) மின்னல் மாதிரி மறைந்து போகும் அந்த டப்பிங் படத்தை யாவது விட்டோமா என்றால் இல்லை.
“காரம் விளைஞ்ச மண்ணான” ஆந்திராவில் எடுக்கும் படங்கள் யாவுமே அந்த மாநிலத்தை ஒரு “வீரம் விளைஞ்ச மண்ணாக”( ஐ மறுபடியும் விஜயகாந்த் படம்) உலகிற்கு எடுத்து காட்டும். 
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ நான் முதலில் சந்தித்ததும் கூட பூங்காவனத்தில் தான்.
பூங்காவனத்தில் படம் பார்த்த கடைசி தலைமுறையான நாங்களும் படிப்பை முடிச்சுட்டு விடுதிய காலி பண்ணி விட்டதால் படம் பார்க்க ஆள் இல்லாமல் தியேட்டரை மூடிவிட்டார்கள்.
இப்போது ”அன்பு சினிமா“ என்கிற பெயரில் தியேட்டர் வந்திருக்கிறது. ஆனால் இவர்கள் பூங்காவனத்தின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக முற்றிலும் புதிய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்.
மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி பரிட்சை எழுதி முடித்தவடன் அன்று மதியக் காட்சியே ஒரு படம் பார்த்தாக வேண்டும் என்பதை எங்கள் தலைமுறையில் இருந்து இன்று வரை தொடர்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமிதமாக உள்ளது.
பரிட்சைக்கு இடையில் வரும் விடுமுறை நாட்களில் “காவேரி“ மற்றும் “பூங்காவனம்“ இரண்டையும் பார்த்தாயிற்று.
வேதியியல் பரீட்சை வினாத்தாள் “அவுட்“ ஆகி அந்த தேர்வினை இரண்டாம் முறை எழுதிய வரலாற்றுச் சிறப்புக்குறிய தலைமுறை நாங்கள். அது தான் எங்களுக்கு இறுதித் தேர்வு.
பரீட்சை முடியும் நாள் அன்று பார்த்தால் இரண்டு தியேட்டர்களிலும் பழைய படங்கள். திருச்சிக்கு பஸ் பிடித்து “பாரம்பரியத்தை“ காப்பாற்றலாம் என்றால் “பட்ஜெட்டில்“ துண்டு அல்ல வேஷ்டியே விழும் சாத்தியம் இருந்தது. எனவே புள்ளம்பாடி ”தங்கம்” தியேட்டர் போவது என்று திட்டமிட்டுக் கொண்டு தேர்வு அறையில் நுழைந்தோம்.
பரீட்சை எழுதி முடிந்தவுடன் வெளியே ஒன்று கூடி புள்ளம்பாடி செல்ல ஆயத்தமானோம். “டேய் புள்ளம் பாடிக்கு நடந்து போய்விடலாமாடா ரெண்டு ரூபா மிச்சம்” என்று விபரீதமான யோசனையை முன்வைத்த நண்பனிடம் அதற்கு நேரம் இல்லை என்பதை எடுத்துக் கூறி அந்த யோசனையை நிராகரித்து பேருந்தில் சென்றோம்.
“நூறாவது நாள்” படம் புள்ளம்பாடியில் போட்டிருந்தார்கள். (ஐ மறுபடியும் விஜயகாந்த் படம்). லால்குடி விடுதி அனுபவத்தின் இறுதி படமாக நூறாவது நாள் படத்தை பார்த்து விட்டு விடுதி திரும்பி அடுத்த நாள் அவரவர் ஊருக்கு பயணமானோம்.
இனிமே லால்குடி சினிமா அனுபவங்களே இல்லையா என மனது கிடந்து அடித்துக் கொண்டது.
கேப்டன் பிரபாகரன் படம் பார்க்க வாய்த்தது போல இதிலும் எனக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு கிட்டியது.
எனது சகோதரர் “சந்திரசேகர்“ ஆசிரிய பயிற்றுநராக பணியேற்றதே லால்குடியில் தான். அனேகமாக நான்கு ஆண்டுகள் அங்கே நான் படித்த பள்ளி வளாகத்தில் இருந்த அலுவலகத்தில் பணியாற்றினார்.
ஒருமுறை அவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை பூவாளூர் காவேரி தியேட்டருக்கு அழைத்துச் சென்றே ஆக வேண்டும் அடம் பிடித்தேன். அப்போது ஓடிய படம் “காதல் சுகமானது” என்கிற படம்.
படித்த காலத்திலும் வேலைக்குச் சென்று பேச்சிலராக இருந்த போதும் வாரத்திற்கு இரண்டு படமாவது பார்த்து விடுவது உண்டு.
ஆனால் இப்போது?! இரண்டு மாதத்திற்கு ஒரு முறை படம் பார்க்கப் போகலாம் என்றால் கூட “ஏன் பொழுதுக்கும் படத்துக்கு படத்துக்குன்னு அலையிரிங்க?” என்று மனைவி அன்பாக கடிந்து கொள்கிறார்.

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...