Wednesday, September 13, 2023

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

 


ஒரு நாள் மாலை நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழி எங்கும் வானத்தில் மேகக் கூட்டங்களின் வர்ணஜாலங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.

 எங்கே மழை வந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆங்காங்கே நிறுத்தி எனது மொபைலில் படம் எடுத்துக் கொண்டே வந்தேன்.

 வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வினாடி வானம் பொத்துக் கொண்டது. 

 வீட்டில் சென்று உடை மாற்றிய பின் மொட்டை மாடிக்கு வந்து மழையை ரசிப்பதும் மொட்டை மாடியில் தேங்கிய நீரில் காலால் செதுக்கி விளையாடுவதும் குட்டியாக பேப்பரில் கப்பல் செய்து விடுவதும் என்று ஜாலியாக விளையாண்டு கொண்டிருந்தேன்.

 இதற்கிடையே சூடான தேநீரும் தயாரித்து மிடறு மிடறாக ரசித்து ரசித்து தொண்டையில் இறக்கியபடியே வானத்தை & மழையை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன்!!


அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு பிளாஷ் பேக் போகிறோம்.

 ஜூன் மாதம் முதல் நாள் பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்று சேர வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு,  முதல் நாள் என்பதால் கூட்டம் பேருந்தில் அப்பிக்கொண்டிருக்கும் எனவே அரியலூர் இருந்து உடையார்பாளையம் பள்ளிக்கு செல்ல எனது டூவீலரை எடுத்துக் கொண்டு சென்றேன்.

 மாலை பள்ளி முடிந்து திரும்பும் போது விளாங்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளியது.

 தேநீர் கடையில் ஒண்டிக் கொண்டு நின்றேன் தலையைத் தவிர உடலின் அத்தனை பாகங்களும் மழை சாரலில் நனைந்து போயின. 

 ஈரமான உடை நசநசத்து கொண்டிருந்தது.

 வண்டியோ மழையில் குளித்தது. கை கால் எல்லாம் லேசான நடுக்கம். இன்னும் ஒரு 15 கிலோமீட்டர் தூரத்தை இந்த மழையில் கடக்க வேண்டுமே என்கிற கவலை.  சிமெண்ட் ஆலைகளுக்கு மண் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் சாலையில் செம்மண் குழம்பு தயாரித்து வைத்திருக்கும், அதில் சறுக்கியபடி கவனமுடன் செல்ல வேண்டுமே என்கிற கவலையோடு தேனீர் கடைக்காரர் கோபித்துக் கொள்ள கூடாது என்பதற்காக இரண்டு முறை தேநீரும் அருந்திய படி மழையை மனதுக்குள் வைதபடி நின்றிருந்தேன் .


அப்படியே கட் பண்ணி மற்றொரு ஃபிளாஷ்பேக் அரியலூரில்,  அரியலூர் முதல் முறை புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட ஆண்டு கண்காட்சி முடிந்த அடுத்த வாரத்தில் ஒரு மாலை நேரம் சுமார் 2 மணி நேரம் வானம் மழையை கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளி விட்டது. பேருந்திலிருந்து இறங்கி கலெக்டர் ஆபீஸ் நிழல் குடையில் தஞ்சமடைந்தேன்.


ஆனால் நிழல் குடையில் உள்ள அத்தனை பேரும் தொப்பலாக நனைந்திருந்தோம். தலை மட்டும் நனையவில்லை அவ்வளவுதான். சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது சார்ஜ் இல்லாமல் மொபைல் அணைந்து போயிருந்தது.

 ஏரியா முழுவதும் மின்சாரம் வேறு இல்லை நான் எங்கே இருக்கிறேன் வீட்டுக்கு எப்போது வருவேன் என்கிற தகவலை கூட சொல்ல முடியாத ஒரு சூழல்.

ஒரு பக்கம் பசி,  கூட்டம் வேறு நெருக்கி அடித்துக் கொண்டிருந்தது. இந்த மழை எப்போது விடும் எப்போது வீட்டுக்கு செல்வோம் வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் சுழித்து ஓடுமே சிறுவயதில் கற்றுக் கொள் நீச்சலை இப்போது அடிக்க வேண்டிய வேளை வந்துவிடும் போல தெரிகிறது என்றெல்லாம் சிந்தித்தபடி சோகமான முகத்தோடு இரண்டு மணி நேரமாக பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். 

ஆக மழையை ரசிக்கும் மனநிலை என்பது நாம் இருக்கும் இடத்தை பொறுத்தது தான்.

மழை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை விவசாயிகள் வேண்டும்போது மழை பொழிவதில்லை மழை பெய்து விடுமோ என்று அஞ்சி கொண்டிருக்கும் போது சரியாக வந்து பெய்து கெடுத்து விடும். ஆகவே வானத்திலிருந்து கிடைக்கும் மழை எல்லோருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவதில்லை.

 சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தால் சிலருக்கு நெருக்கடியாக இருக்கலாம் சிலருக்கு துன்பத்தை கூட தரலாம்.

 ஆகவே மழை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரத்தை வழங்குவது கிடையாது.


 சாய்ரத் மற்றும் ஃபன்றி (FANRY)  (இரண்டு படங்களையும் கொரோனா சமயத்தில் பார்த்து முடித்து விட்டேன்😀) ஆகிய படங்களின் மூலமாக பிரபலம் அடைந்த நாகராஜ் மஞ்சுலே என்கிற மராத்திய பட இயக்குனர் இயக்கிய ஒரு அரை மணி நேர குறும்படம் Essay On the rain என்பதாகும் அந்த படத்தில் படம் துவங்கும் போது அடிக்கும் மழை படம் முடியும் வரை விடவே விடாது.

ஒரு நிஜ மழை காலத்தில் மழை பிரவாகமாய் அடித்து பெய்யும் ஒரு மலையடிவார பசுமை நிறைந்த கிராமத்தில் முழு படத்தையும் நிஜமான மழையிலேயே எடுத்திருப்பார்.

படத்தின் துவக்கத்தில் ஒரு ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருப்பார் அது மழையை பற்றி ஒரு கவிஞர் எழுதிய ஒரு செய்யுள் பகுதியை நடத்துவார். நீங்கள் எல்லோரும் இப்போது பெய்து கொண்டிருக்கும் மழையை பற்றி ஒரு கட்டுரை எழுதி வாருங்கள் என்று வீட்டுப்பாடம் கொடுப்பார்.

 நீங்கள் இந்த மழையை ரசித்து கட்டுரை எழுதவில்லை என்றால் அது இந்த கவிஞருக்கு நாம் இழைக்கும் பெரிய துரோகம் என்றெல்லாம் வேற பில்டப் கொடுப்பார்.


 படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் சிறுவன் பள்ளி முடிந்து வீடு செல்லும் போது அவனது தங்கை அவனை வேகமாக அழைப்பாள் அவளோடு போய் பார்த்தால் அவர்களுடைய தந்தை குடித்து மட்டையாகி சாலையோரத்தில் சுழித்தோடும் வெள்ளத்தில் கிடைப்பார் அவரை தூக்கி அழைத்துச் செல்லும் அளவுக்கு அவருக்கு அவர்களுக்கு தெம்பு இருக்காது.

 அப்படியே விட்டு விட்டு போகவும் மனசு இருக்காது. எனவே தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மாவை அழைத்து வருமாறு தங்கை அவனை அனுப்பி வைப்பாள்.

 அவன் தன் தாயை அழைக்க அவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடம் நோக்கி செல்வான்.

 வீதி எங்கும் வெள்ளம் சுழித்து ஓடிக் கொண்டிருக்கும். 


மாலை மற்றும்  இரவு முழுவதும் மழையோடு ஒழுகும் வீட்டில்  போராட்டத்திலேயே கழிந்து விடும். ஆனால் கட்டுரை எழுதிச் சொல்ல முடியாது.


 வகுப்புக்கு போனால் ஒவ்வொருவரும் மழையை பற்றிய கட்டுரையை வாசிப்பார்கள். அதில் முந்தைய தினம் அந்த சிறுவன் சிறுமி அவனுடைய அம்மா தந்தை இவர்கள் வீதி வழி சென்றதும் விழுந்ததும் மாடுகளை மேய்த்துக் கொண்டு சென்றதும் போன்ற அனைத்து விஷயங்களும் காட்சிகளாக ஒவ்வொரு மாணவர்களும் சொல்லிக் கொண்டு வருவார்கள்.

இவன் மட்டும் எழுதி இருக்க மாட்டான். மழை பற்றி கட்டுரை எழுதாதற்காக அவனை வெளியில் முட்டி போட வைப்பார் என்பதோடு படம் முடியும்.


 கண்களுக்கு விருந்தாகவும் அதே நேரத்தில் மழையால் அந்த குடும்பம் படும் பாட்டையும் மிகச் சிறப்பாக செதுக்கியிருப்பார் இயக்குனர். இந்தப் படத்தை எங்களுக்கு தலைமையாசிரியருக்கான தலைமை பண்பு பயிற்சியில்  எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள்   திரையிட்டு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்!!

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...