Tuesday, March 19, 2024
விலக்கி வைக்கப்பட்டவர்கள் சாதித்த வரலாறு!!
விலக்கி வைக்கப் பட்டவர்கள் சாதித்த வரலாறு!!
நான் பி.எட் முடித்த அடுத்த வருடம் (2000-2001) ஒரு தனியார் பள்ளியில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக பணியாற்றினேன்.
என்னை பத்தாம் வகுப்பு “பி“பிரிவிற்கு வகுப்பாசிரியராக நியமித்தார்கள். எனக்கோ பெருமை பிடிபடவில்லை. வந்த உடனே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா?!
வகுப்பில் பிரபல நகைக் கடை ஓனர் பையன் முதல் இனிப்புக்கடை ஓனர் பையன் வரையில் அடக்கம். ஒரு பேருந்து முதலாளி பெண்கூட படித்தார்.
வீட்டுப் பாடம் செய்வதில் சற்று முன்ன பின்ன இருந்தாலும் ஆசிரியரிடம் அவ்வளவு அன்பாகவும் பணிவாகவும் இருப்பார்கள். நானும் கஷ்டமான கணக்குகளை நான் போட்டுவிட்டு ரொம்ப சப்பையான கணக்குகளை அவர்களுக்கு வீட்டுப் பாடமாக தருவேன். அவர்களும் போட்டு வந்துவிடுவார்கள்.
பள்ளி தாளாளர் மற்ற வகுப்புகளுக்கு கொடுக்கும் எந்த நெருக்கடியும் எனது வகுப்பிற்கு தரமாட்டார். இவர்கள் மாநிலப் பாடத்திட்டம் படிப்பவர்கள் (அப்போது மெட்ரிக் பாடத்திட்டமும் அமலில் இருந்தது) மேலும் “மொதலாளி நம்மை முழுதாக நம்புகிறார்“ என்று பெருமை பொங்க எண்ணிக் கொண்டு கம்பீரமாக வலம் வருவேன்.
டிசம்பர் மாதவாக்கில் பத்தாம் வகுப்பு பிரைவேட் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் தருணம் (அப்போதெல்லாம் ஆன்லைன் எல்லாம் இல்லை ஒன்லி “பென்“லைன் தான்) வந்த போது எனது வகுப்பு மாணவர்கள் 25 பேரையும் கொத்தாக விண்ணப்பிக்க அழைத்துச் செல்லுமாறு பிரின்சிபல் என்னை பணித்த போது தான் அவர்கள் எல்லாம் பள்ளி பெயரில் எழுதவில்லை பிரைவேட்டாக எழுத உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன்.
அதாகப் பட்டது என்னுடைய வகுப்பு என்று நான் பெருமையாக பீற்றிக் கொண்டது ஒரு டுடோரியல் கிளாஸ்.
எங்க பள்ளியை தப்பா நினைக்காதீங்க, அந்த 25 மாணவர்களும் அந்த நகரத்தின் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆண்டு இறுதியில் “உங்க பிள்ளை ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி அடைய வாய்ப்பில்லை, அதனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம், அவன் பெயிலாகி எங்க பள்ளியில் இரண்டாம் வருடம் படிக்கலாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு பாஸ் என்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு இடம் பெயரலாம்” என்று “டீல்“ பேசியுள்ளனர். இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து வெளியேறியவர்களை அரவணைத்து இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அதே வேளை தனது பள்ளி தேர்ச்சி விழுக்காட்டிற்கும் பங்கம் வராமல் பிரைவேட்டாக எழுத வைப்பது தான் எங்க பள்ளியின் செயல் திட்டம்.
ஆண்டு விழாவின் போது எல்லா வகுப்பு மாணவர்களும் அவரவர் வகுப்பு சார்பாக ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தனர். எனக்கு அந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமோ முன் அனுபவமோ கிடையாது. ஆனாலும் கூட பசங்க “ஈஸ்வரா வானும் மண்ணும் பிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…” என்ற பாடலை தேர்வு செய்து அவர்களே பிராக்டீஸ் செய்து வந்தனர். எங்க வகுப்பு ரிகர்சலை பார்வையிட முதல்வரை அழைத்த போது “சார் உங்க வகுப்பு வேண்டாம் சார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். இது அன் அபிஷியல் வகுப்பு என்பதால் மேடையேற்ற பயந்திருக்கிறார் என்று பின்னர் உணர்ந்தேன்.
மெட்ரிக் மாணவர்கள் எல்லோரும் ஒரே சென்டரில் தேர்வினை எழுத எனது வகுப்பு மாணவர்கள் அந்த நகரத்தின் பிரைவேட் சென்டரில் அகரவரிசைப் படி அமர்வதால் 25 பேரும் 15 வெவ்வேறு அறைகளில் எழுதினார்கள். அவர்களோடு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தனியார் பள்ளி சீருடையில் வருவதை வித்தியாசமாக பார்ப்பார்கள். அவர்களை நானே தேர்விற்கு அழைத்துச் சென்று எழுதச் செய்து அழைத்து வருவேன்.
இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆமாம், 25 பேரில் 23 பேர் தேர்ச்சி பெற்று விட்டனர். ஏற்கனவே பயின்ற பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட அந்த மாணவர்களில் ஒருவன் 443 மதிப்பெண் எடுத்தான். கணிதப் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு இரண்டு பேர் 90க்கு மேல் முக்கால் வாசி மாணவர்கள் 60 விழுக்காட்டிற்கு மேல் பெற்றிருந்தார்கள். எனது மாணவர்களின் பழைய பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு இவர்களின் திறமையை கணித்து உள்ளது பார்த்தீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!
சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
Yes Sir, அந்த மாணவர்களின் பழைய பள்ளி அவர்களை சரியாக புரிந்திருக்கவில்லை. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete