Tuesday, August 22, 2017

அரசு ஊழியர்கள் போராட்டம் எதற்கு?


பீகாரில் துப்புரவு பணியாளர் வேலைக்கு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்று செய்தித் தாளில் படிக்க நேர்கிறது
பத்தாம் வகுப்பையும் பனிரெண்டாம் வகுப்பையும் கல்வித் தகுதியாக உடைய JUNIOU ASSISTANT,VAO AND LAB ASSISTANT போன்ற பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயின்றோரை மொத்தமாக தள்ளி விட்டு விட்டு பொறியியல் பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு படித்தோரும் வென்று பணிகளை கைப்பற்றி விட்டார்கள். இது தமிழகத்தில் தான்.
“கால் காசா இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும்”
“கழுத மேச்சாலும் கவர்ன்மெண்ட் கழுதையா மேக்கணும்” என்கிற சொலவடை இருப்பது நமது தமிழ்நாட்டில்தான்.
எட்டாம் வகுப்பு படித்தால் கூட எம்ப்ளாய்மெண்ட்டில் பதிந்து மூன்றாண்டுக் கொரு முறை நம்பிக்கையோடு பதிவை புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் 60 வயது வரை.
நாட்டில் அனைவருக்குமே ஏதானும் ஒரு வகையில் அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்பது லட்சியமாகவோ அல்லது வாழ்நாள் கனவாகவோ உள்ளது.
ஏன் அரசு வேலை அதில் அப்படி என்ன உள்ளது?
பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம். இந்த இரண்டு தானே அரசு வேலை மீது மக்களை நாட்டம் கொள்ள வைக்கிறது.
பிராமணியம் என்ன செய்கிறது. 3% உள்ள நாம் கிட்ட தட்ட 99% இடத்தில் அமர்ந்து இருந்தோம். ஆனால் இப்போ இட ஒதுக்கீடு என்கிற பேரில் எல்லா பயலுவலும் வந்துட்டான். நாமெல்லாம் பூரா தனியார் நிறுவனங்களிலும் உயர்பதவி வகித்தாலும் பணிப் பாதுகாப்போ ஓய்வூதியமோ கிடையாது. மெல்ல அரசு வேலையிலும் இதெல்லாம் கிடையாது என்று ஆக்கி விட்டால் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கி விடலாம். அல்லது DISINVESTMENT என்கிற பேரில் பூரா அரசு கம்பெனிகளையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டால் அரசு வேலையும் கிடையாது இட ஒதுக்கீடும் கிடையாது.
“கல்யாண வீடா இருந்தால் மாப்பிள்ளையா இருக்கணும் எழவு வீடா இருந்தா பொணமா இருக்கணும். மொத்த த்தில் மாலையும் மரியாதையும் எனக்கு மட்டும் தான் கிடைக்கணும். இல்லன்னா தொலைச்சுபுடுவேன் பாத்துக்கோ”
இந்த அடிப்படையில் தான் அரசு வேலைமீதான கவர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை காலி செய்ய படிப்படியாக அரசு முயற்சித்து வருகிறது.
அதன் முதல் படி “ஓய்வூதியத்தை நிறுத்து“ என்று சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது சட்டம் கொண்டு வந்து பங்களிப்பு ஓய்வூதியம் என்கிற மோசடி நாடகம் அரங்கேறியது. மத்திய அரசின் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் இணங்காத சிங்கமாக இருந்த ஜெயலலிதா அவர்கள் இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார். (இதில் முன்னவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இல்லாதவர் பின்னவர் பிராமணர்)
அரசாங்கம் காங்கிரஸா இருந்தாலும் பிஜேபி யாக இருந்தாலும் ஆள்வது என்னவோ பிராமணீயம் மட்டுமே. இவை தவிர்த்து இங்கே சமூக நீதி ஆட்சி  செய்தது இரண்டு வருடங்கள் மட்டுமே. அப்போது தான் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் செய்யப் பட்டு ஓபிஸி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பொறுக்குமா பிராமணீயம் தூக்கி எறிந்து விட்டார்கள்.
அடுத்தக் கட்டமாக பணிப் பாதுகாப்பில் கை வைக்கும் வேலையையும் பாஜக அரசு துவங்கி விட்டது. Performance based increment and firing policy என்றெல்லாம் கொண்டு வரப் போகிறார்கள். இப்படியே போனால் அரசு ஊழியர்கள் மேலதிகாரி முன்னால் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு “கும்புடறேன் சாமி” என்று சொல்லப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கூடியமட்டும் தனியார் மயம் அல்லது சலுகை பறிப்பு என அரசாங்கம் செயல் படும்போது அரசு ஊழியர்கள் வாலாவிருக்கலாமா? பின்னால் வேலைக்கு வரத் துடித்துக் கொண்டு இருக்கும் இளம் தலைமுறையினருக்கு நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளை பாதுகாத்து வைத்துச் செல்ல தானே இந்த போராட்டம்.
போராட்டம் என்றாலே சம்பள உயர்வு மட்டுமே என்று எண்ணாதீர்கள். எல்லா குடும்பத்தினரும் கனவு காணும் அரசு வேலை அதற்குறிய ஓய்வூதியமோ பணிப் பாதுகாப்போ இல்லை என்றால் இவ்வளவு மெனக்கெட்டு பரிட்சை எல்லாம் எழுத வேண்டியதில்லை. தனியார் கம்பெனிக்கு போய்விடலாம்.
அரசு ஊழியர்களின் உரிமைக்குரல் அவர்களுக்கு மட்டமானது அல்ல. ஏனென்றால் அவர்களது இடம் சாஸ்வதம் அல்ல. பின்னால் வரப்போகும் இளம் தலைமுறையினரும் அந்த உரிமைகளைப் பெற்று சுயமரியாதையோடு பணியாற்ற வேண்டும்.
பணியையே துறந்து பிள்ளை பெற்று பிறகு புதிதாக விண்ணப்பித்து புதிய பணியாளராக சேர வேண்டும் என்பது தான் ஒரு காலத்தில் பெண்களுக்கு விதிக்கப் பட்டதாக இருந்தது. ஒரு அம்பேத்கர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக வந்தபோது தானே மகப்பேறு விடுப்பு என்கிற பேரில் இந்த நிலை மாறியது. இப்போது தொழிலாளர் நலனைப் பேணும் அம்பேத்கர்கள் தொழில் துறை அமைச்சர்களாக இருப்பதில்லையே. அதனால் தான் எங்கள் போராட்டம்.




No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...