Monday, August 10, 2020

ஒரு “எளிய” மரத்தின் கதை

 

ஒரு “எளிய” மரத்தின் கதை


சென்ற ஆண்டு பசுமைப் படை அமைப்பின் மூலமாக ஐம்பது மரக்கன்றுகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் பாதாம் கன்றுகள் பத்துக்குமேல் இருந்தன. பள்ளி காலைகூடுகை மைதானத்தில் கொடிமரத்திற்கு அருகில் ஒன்று வைத்தோம். வைக்கப்பட்டவற்றில் ஒரு ஏழு பாதாம் மரங்கள் நன்றாக நீர்குடித்து வேர்பிடித்தன.

ஆனால் நாகமங்கலம் கிராமத்தைப் பற்றிய ஒரு விசித்திரமான ஒரு செய்தி உங்களுக்கு தெரியாது. ஆமாம், சாலையோரங்கள், பள்ளி, மற்றும் அலுவலகங்கள் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படாத இடங்களில் புங்க மரத்தை வைத்து வளர்ப்பார்கள். காரணம் இந்த ஆடு மாடுகள் அவற்றை சீந்திக்கூட பார்க்காது என்பதுதான். ஆனால் இங்கே தான் நாகமங்கலம் ஆடுகளை நாங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டோம்.

பில்டிங் பற்றாக்குறை இருந்தாலும் எங்களுக்கு இரண்டு வளாகங்கள் உண்டு. மாணவர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். எனவே பூட்டி வைக்க இயலாது. அதனால் சைக்கிள் கேப்பில் நுழையும் ஆடுகள் வேக வேகமாக வந்து புங்கங்கன்றுகளில் துளிர் விட்டிருக்கும் இலைகளை கூண்டுகளை தள்ளிக் கொண்டு மேய்ந்து விடும். என்னுடைய 43 வயது காலத்தில் “பிரித்து மேய்வது” என்பதை பார்த்து அறிந்து கொண்டது நாகமங்கலத்தில் தான்.

பாதாம் மர இலைகளையும் பெரும்பாலும் கால்நடைகள் சாப்பிடுவதில்லை. வறுமைக்கு வாக்கப்பட்ட நாகமங்கலம் ஆடுகள் இதிலும் விதிவிலக்கு.

பாதாம் மரம் இரண்டு வருடங்களில் நெடிதுயர்ந்து விடும்.

கிளைகள் பக்கவாட்டில் படரும்.

இலைகள் ஒரு ஆளே படுத்துறங்கும் அளவுக்கு பெரியது.

எனவே பந்தல் போட்ட மாதிரி இருக்கும்.

ஆக, காலைநேரக் கூடுகையின் போது வெயில் படாமல் நிற்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

அந்த கொடிமரத்தை ஒட்டிய பாதாம் மரத்தின் மீது ஆடுகளுக்கு என்ன “காண்டோ” தெரியல வேகமாக வந்து கூண்டை இடித்து தள்ளிவிட்டு மேய்ந்து தள்ளிவிட்டன.

“அவன் ஒரு

பட்டு வேட்டி பற்றிய

கனாவில் இருந்த போது

கட்டியிருந்த கோவணமும்

களவாடப்பட்டது” என்று இதைத்தான் சொன்னார்களோ?!! அடடா ஒரு செடி வேஸ்ட்டா போச்சே என்று வருந்தி விட்டு மறந்து போனேன்.

ஒரு பதினைந்து நாட்களில் மொட்டை குச்சிகளில் பச்சை எட்டிப்பார்த்தது. “ஏலேய், சம்முவம் எட்றா கூண்ட” என்று கூண்டு மாட்டி வைத்து விட்டு இனி இதை கண்ணுங்கருத்துமாய் காப்பது என்று சூளுரைத்தோம்.

மழைக் காலங்களில் எங்கள் பள்ளி வளாகம் “போட்டிங்“ விடும் அளவுக்கு மினி நீர்த்தேக்கம் ஆகிவிடும். எனவே ஊரில் ஏரி வெட்டு நடக்கும் போதெல்லாம் லாரிகளில் மண் கொண்டு வந்து கொட்டச் சொல்வோம்.

விடுமுறை நாளில் மண் அடித்த ஒரு பொறுப்பான லாரி  டிரைவரின் கைங்கர்யத்தில் கூண்டு இடித்து தள்ளப்பட்டது. அப்படி ஒரு அற்புத கணத்துக்காகவே காத்துக் கொண்டு இருந்த ஆடுகள் மின்னல் வேகத்தில் தோன்றி, இருந்த இலைகளை காலி செய்துவிட்டு ஓடி மறைந்தன.

அடுத்த நாள் டீ ஆத்த சென்ற போது, (ஆமாங்க, ஆளே இல்லாத பள்ளியில் தலைமையாசிரியர்கள் அவ்வப்போது சென்று டீ ஆற்றுவது கடமை) வெறும் குச்சி மட்டும் படுத்துக் கிடக்க அதில் பாதி மண் வேறு அழுத்திக் கொண்டு இருந்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு ஆடு அந்த இலைகள் அற்ற பாதாம் மரத் தண்டை வாயால் கவ்வி நாறை இழுத்து சாப்பிட்டது. இதைத்தான் தோல உறிச்சி தொங்க விட்டுடுவேன்னு சொல்வாங்களோ?!!

“அட அப்படி என்னதான் இருக்கு அந்த பாதாம் மரத்தண்டில்” என்கிற குறுகுறுப்பில் எனக்கு கூட நா ஊறி கரும்பு போல சுவைத்துப் பார்த்துவிடலாமா என்று டெம்ப்ட் ஆனேன் என்றால் பாருங்களேன்.

இதற்கு மேலும் இந்த பேஷண்ட் பிழைக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு ஜேசிபி கொண்டு மண் நிரவி விட்டோம். அழுத்திக் கிடந்த மண்ணை தள்ளியதால் அந்த குச்சி நிமிர்ந்து கொண்டது. அந்த குச்சி பாட்டுக்கு கிடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

ஒவ்வொரு நாள் டீ ஆற்ற செல்லும் போதும் அந்தக்குச்சிக்காக இரண்டு சொட்டு கண்ணீர் வார்ப்பேன்.

சென்ற வெள்ளிக் கிழமை போனபோது அந்த குச்சியின் கிளை முனைகளில் சிறு பழுப்பும் பச்சையும் சேர்ந்த வண்ணத்தில் மொட்டுகள் தோன்றின். நான் ஆச்சரியமாகவும் பாசத்தோடும் கண்கள் விரியப் பார்த்தேன்.

இன்று போனால், இலைகள் நன்றாகவே கிளம்பி இருந்தன. வசூல்ராஜா படத்தில் கோமா பேஷண்ட் பிழைத்த அதிசயம் போல எனக்கு மகிழ்ச்சியாக ஆகிவிட்டது. இந்த மரத்தோட ஜீவ மரணப் போராட்டத்தை கௌரவப்படுத்தியாக வேண்டும் என்று உடனடியாக செயலில் இறங்கி இனிவரும் காலங்களில் அதன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வரவிடக் கூடாது என்று வளர்ந்த மரத்தின் கூண்டினைப் பிரித்து இதற்கு வைத்து சற்று வலுவாக குச்சிகள் ஊன்றி கம்பிகள் வைத்து இறுக்கி கட்டி விட்டோம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த மரம் போராட்டகுணம் மற்றும் விடாமுயற்சியின் வாழும் அடையாளமாக எங்கள் பள்ளி வளாகத்தினுள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.

 

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...