Thursday, August 20, 2020

அரசுப் பள்ளிகள் மீதான முற்றுகைத் தாக்குதல்கள்

      முற்றுகை 1.0


எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது, நான் உட்கோட்டைப் பள்ளியில் பணியில் சேர்ந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 74 சதவீதம். அப்போதைக்கு அந்த தேர்ச்சி விகிதம் உச்சபட்ச சாதனை. அனைவருமே சந்தோஷப்பட்டோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பாராட்டு விழா கூட நடத்தப் பட்டதாக நினைவு. இப்போது யோசித்துப் பார்க்கிறேன், இந்த தேர்ச்சி விழுக்காடு மட்டும் சென்ற ஆண்டு யாரேனும் வாங்கியிருந்தால் அந்தப் பள்ளிதான் மாவட்டத்தில் கடைசி இடத்தில் உள்ள பள்ளியாகும். அப்பப்பா!! எத்தனை மாற்றம். ஆனால் மாற்றம் என்னவோ எண்களில் தான்.

     தேர்ச்சி விழுக்காட்டை வெறிகொண்டு துரத்தும் பழக்கம் எப்போது துவங்கியது? 2002 க்கு பிறகான வருடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் “ரிங் மாஸ்டர் போல அனைவரிடமும் வேலை வாங்க வேண்டியுள்ளது” என்று அங்கலாய்த்த வருடம், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக அனைத்து அரசு ஊழியர்களும் போராடிய வருடம் (உங்க பாஷையில் சம்பள உயர்வுக்காக போராடிய வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பெரும்பாலான மேலதிகாரிகள் ஆண்டை மனநிலையில் ஆய்வுக் கூட்டங்களில் ”யோவ் சிவப்பு சட்ட நீ சொல்லு” என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசிக் கொண்டு இருந்தார்கள். ”ஆசிரியர்களின் திறமையை அளப்பதற்கான அளவுகோல் தேர்ச்சி விழுக்காட்டைத் தவிர வேறு ஏதேனும் உண்டா” எனக் கண்டறிந்து “யுரேகா” என கோஷம் போட்டார்கள்.

     ஊடகங்கள் ஆளுக்கு ஒரு தராசினைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு தட்டில் தனியார் பள்ளி, மற்றொரு தட்டில் அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து ஒப்பிட்டு தேர்ச்சி விழுக்காட்டுச் சரிவைக் ஆய்வு(?) செய்து கண்டறிந்து பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதித் தள்ளினார்கள். அவர்களது கண்டு பிடிப்பு இதுதான், ”அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை, அதுவே பாருங்க தனியார் பள்ளி எம்புட்டு அறிவா சொல்லித்தந்து மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கிறார்கள்?!” என்று நிறைவு செய்து கீழ் நடுத்தர வர்க்கத்தினரை கடனாளி ஆக்கி கல்வித் தந்தைகள் உருவாக காரணமானார்கள்.

     சரி அவர்களின் ஆராய்ச்சியில் எம்மாம் பெரிய ஓட்டை என்று நிறுவப்பட்ட தருணத்தை ஒரு ”தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவது எப்படி” என்கிற பயிலரங்கில் உணர்ந்தேன்.

     2004ம் ஆண்டு என நினைக்கிறேன், ”யோவ் என்னய்யா நீங்கள்ளாம் டி.ஆர்.பி பாஸ் பண்ணிட்டேன் என்கிறீர்கள், தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த தெரியவில்லையே” என்று எங்களை எல்லாம் அழைத்து “தேர்ச்சி ஸ்பெஷலிஸ்ட்” கொண்டு ஒரு பயிலரங்கு நடத்தினார்கள். அங்கே ”சென்டம்” என்கிற அடைமொழியோடு ஒருவர் தோன்றினார். ஆகா, அவர் சென்டம் எடுப்பதில் மட்டுமின்றி பேச்சிலும் கெட்டிக் காரர் தான். ”தேர்ச்சிக்கு தேவை 35 மார்க் தானே சார்? நான் ப்ளு பிரிண்ட் படி ஒரு நாற்பது மார்க்குக்கு உரிய பாடத்தினை ஜூன் மாதமே முடித்து விடுவேன் மிச்சம் உள்ள மாதங்களில் பொதுத்தேர்வு வரையில் அதே பாடத்தில் டெஸ்ட் வைத்துக் கொண்டே இருப்பேன்” என்று அவர் முடித்த போது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அவர் வகுப்பில் இருக்கும் மீத்திறன் வாய்ந்த மாணவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த மட்டுமே என்னால் முடிந்தது. ஆனால் அதையும் ஒரு டெக்னிக் என பல பேர் அதன் பிறகு கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

     யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக 2002 ல் இருந்து சென்ற ஆண்டு வரையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு இடை நிறுத்தம், ஒன்பதாம் வகுப்பில் டிசி வாங்கியவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் விவரங்களை கேட்டுப் பெறுங்கள். எத்தனைக் குழந்தைகளின் கனவுச் சமாதியில் நம்ம தேர்ச்சி விழுக்காடு நெடிதுயர்ந்து கம்பீரமாக நிற்கிறது என்பதை அறியலாம். அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய கல்விமுறை எவ்வாறு இரக்கமின்றி வலுவில்லாதவர்களை வெளித்தள்ளும் வேலையை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அரசுப் பள்ளிகளின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்குப் பின்னாலும் இந்தக் கதை உண்டு என்பது நிஜம்.

     இதற்கு பின்னால் இருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறமையை உரசிப்பார்க்கும் உரை கல்லாக தேர்ச்சி என்கிற ஒற்றைக் காரணியை மட்டும் குருட்டுத் தனமாக நம்பிக் கொண்டு இருப்பதன்றி வேறு இல்லை.

     பத்தாம் வகுப்பில் நூறு விழுக்காடு தேர்ச்சி என்கிற ஒன்றை ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தொலைநோக்குப் பார்வையோடு ஆசிரியர்கள் அணுக ஆரம்பிப்பதால் வகுப்பறைக் கற்றலின் சுவையும் உற்சாகமும் குன்றிப் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.

     கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வது அரசுப் பள்ளிகள் தான். நிச்சயமாக அவர்களால் தேர்ச்சி பெற இயலாது என்றாலும் கூட அவர்களுக்கும் வகுப்பறையில் இடம் இருந்தது. ஆனால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சென்டம் ரிசல்ட் வாங்கிய ஒரு ஆசிரியரின் வகுப்பிற்கு மேற்காண் வகை மாணவர்கள் வந்து சேர்ந்தால் என்ன ஆகும் தெரியுமா? வகுப்பறையில் மட்டுமல்ல ஆசிரியர்களின் இதயத்தில் கூட அவர்களுக்கு இடம் இருக்காது என்பது தான் நிதர்சனம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கலெக்டர் கையால் வாங்கிய மெடலை இந்த ஆண்டு எப்படி நழுவ விட முடியும்?

     தேர்ச்சி விழுக்காட்டைக் கொண்டு ஆசிரியர்களையும் பள்ளிகளின் தரத்தினையும் எடைபோட்ட கத்துக்குட்டி பத்திரிக்கையாளர்களின் செயல்களினால் நமது கல்வி நிலை எங்கே வந்து நிற்கிறது என்று எண்ணிப் பாருங்கள். “கடைசியில என்னையும் அரசியல் பண்ண வச்சிட்டிங்க இல்ல?” என விரக்தியாக அர்ஜூன் பேசும் டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

முற்றுகை 2.0

அடுத்ததாக ஆசிரியர்களின் ஊதியத்திற்கு வருவோம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவ்வளவு சம்பளம் வாங்கும் எந்த ஒரு அரிய வகை ஆசிரியரும் என் கண்ணில் படவே இல்லை. என்னவோ கஜானாவைத் திறந்து பை கொள்ளும் மட்டும் பணத்தை பிதுங்க பிதுங்க அள்ளி நிரப்பிக் கொண்டார்களா என்ன? நான் வேலைக்கு வந்த ஆண்டு எனது சம்பளத்தில் ஒன்றரைப் பவுன் எடுக்கலாம். சென்ற ஆண்டு வரையிலும் அதே ஒன்றரைப் பவுன் தான். (அப்ப இந்த ஆண்டு சம்பளம் ஏறிடுச்சா? இல்ல பவுன் விலை ஏறிடுச்சி) 2009 ல் ஆறாவது ஊதியக்குழு நாடு முழுவதும் ஒவ்வொரு பணி நிலை மற்றும் கல்வித் தகுதி என ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தான் ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன் இளம் மென் பொறியாளர்களின் சம்பளத்தை பார்த்து வாயைப் பொளந்து கொண்டு ஆச்சரியப் படுவோம்.

     கெடுவாய்ப்பாக அந்தக் காலகட்டத்தில் தான் பல தொழில்களில் கிடைத்த வருமானங்களை எல்லாம் முதலீடு செய்து புதிய பல கல்வித்தந்தைகள் கிராமங்கள் தோறும் உருவாக ஆரம்பித்தனர். முற்றுகை 1.0 வில் ஊடக ஆய்வுகள் கீழ்நடுத்தர மக்களை கடனாளிகளாக ஆக்கியதைப் போல இந்த அடுத்த தலைமுறைக் கல்வித் தந்தைகளின் இலக்கு ஏழைக் குழந்தைகள். அப்போ அவர்களிடம் ஃபீஸ் சொற்பமான அளவில் தான் பெயரும். மாணவர் எண்ணிக்கையும் ஒரு வகுப்புக்கு பத்துக்கு கீழ் என சொற்பமாகவே இருந்தது. இது அப்படியே இருக்கட்டும்.

அனைவருக்கும் கல்வித் திட்ட நிதிகள் மற்றும் டி.ஆர்.பி மூலமாக ஏராளமான பேருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை கிடைத்த காரணமாக பி.எட் படிப்புக்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. அப்புறம் என்ன ஏராளமான பி.எட் கல்லூரிகள் முளைத்தன. பி.எட் முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் வெளியே வந்தனர். நான் 2002 ல் டி.ஆர்.பி எழுதிய போது மொத்தம் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் லட்சம் பேர் இருந்தால் அதிகம். ஆனால் சென்ற ஆண்டு முதுகலை டி.ஆர்.பிக்கு விண்ணப்பித்தோரே பதினோரு லட்சம். போட்டி எப்படி களைகட்டுது பாத்தீங்களா?

ஆக, பி.எட் முடித்த ஏராளமான பேருக்கு இந்த புதிதாக முளைத்த இரண்டாம் தலைமுறை கல்வித் தந்தைகள் வேலை வழங்க தயாராக இருந்தனர். ஆனா சம்பளம் 3000, 4000, 5000 என்று தான் இருக்கும். அதிகபட்சமாக பத்தாயிரம் இருக்கலாம். அதுவும் கூட மாதா மாதம் கொடுக்கப் படுவதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆக ரெண்டு பேருக்குமே வேறு வழியில்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பணம் வழங்கும் உண்மையான முதலாளிகளான பெற்றோர் ஏழை எளிய மக்கள்.

இப்போ வாங்க, இந்த பத்தாயிரத்திற்கு கீழான சம்பளம் வாங்குவோரின் சம்பளம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடப் படுகிறது. ”இந்தப் புதியப் பள்ளிகள் கூட தரமாக இருக்கிறதே. அந்த தரத்தை பராமரிப்பது அந்த பத்தாயிரத்திற்கு கீழாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தானே?”

“கொஞ்சம் ஷோல்டர எறக்குங்க பாஸ், நீங்க சொல்ற தரம் என்பது ரிசல்ட் தான் என்று தெரிகிறது. ஏற்கனவே சொன்ன அதே டைலர் அதே வாடகை தான் இங்கேயும். இவன் பத்தாவதுல தேறமாட்டான் என்றால், ஒன்பது வருடங்கள் ஒட்ட ஒட்ட கறந்த பணம் காய்ச்சி மரமான பிள்ளைகளையே ஈவு இரக்கமின்றி வெளியே தள்ளி கதவடைக்கின்றார்கள்”

அப்புறம் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன், 2002 போராட்டத்தின் சமயத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களது சம்பளத்தில் நாங்கள் நான்கு பேர் வேலை பார்ப்போம் என்று தொண்டை வறண்டு போக கோஷம் போட்டவர்கள் தான் 2017 ம் ஆண்டு போராட்டத்தில் முன்களப் போராளிகளாக உரிமை முழக்கம் இட்டார்கள் என்பது வரலாறு. (இரண்டுமே சம்பள உயர்வு போராட்டம் அல்ல என்பது வேறு கதை)

”அப்படி எதற்குத்தான் போராட்டம் பண்றீங்க பாஸ்? வட கொரியாவை அணு ஆயுதங்களை கைவிடச் சொல்லியா போராட்டம் பண்றீங்க?”

பலநூறு ஆண்டுகாலமாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர் வர்க்கம் ஒரு கட்டத்தில் போராடி கொஞ்சம் கொஞ்சமாக சில உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறது. தொழிலாளர் கடமைகள் பற்றி வாய்கிழிய பேசும் ஊடகங்களோ பொது மக்களோ தொழிலாளர்தம் உரிமைகள் என்று வரும் போது வாய் மூடி மௌன விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

2002 ல் இருந்தே அரசு தனது பணியாளர்களின் பல்வேறு உரிமைகளை பறித்தவண்ணம் வருகிறது. அரசுக்கு ஒரு துணிச்சல் என்னவென்றால் வேலை பார்க்கும் ஊழிர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் தகுதியுள்ள வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். எனவே இவர்களது நியாயமான உரிமைகளை பொறாமை கொள்ளத்தக்க ஒன்றாக ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெருக்கி மக்களின் ஆதரவோடு துணிச்சலாக செய்யலாம்.

2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது. 2004 ல் வெளியில் நின்று ஆமாம், சரிதானேப்பா என்றவர்கள் உள்ளே வந்த பிறகு போட்ட ”ஓய்வு ஊதியம் இல்லையா? அநியாயம் அக்கிரமம்” என்ற கோஷமே 2017 போராட்டம். இது தான் அரசு ஊழியர்கள் போராட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை பொதுஜன மனநிலை.

மேலே சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே இது போல பல விஷயங்கள் இல்லை என்றாகிவிட்டது.

அரசு வேலை பெற அனைவரும் பெருத்த முயற்சி எடுப்பது எதற்காக?

நிறைவான நியாயமான ஊதியம், பணிப் பாதுகாப்பு, ஓய்வு ஊதியம் இவ்வளவு தானே?

ஏற்கனவே ஓய்வு ஊதியம் என்கிற ஃபியூஸை பிடுங்கியாச்சி.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் பணிப் பாதுகாப்பு விஷயமும் கேள்விக்குறி ஆகிவிட்டது. இனி உயரதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே வருடாந்திர ஊதிய உயர்வு கிட்டும். அடுத்தது புதியக் கல்விக் கொள்கை வாயிலாக பீரியாடிக்கலான தகுதித் தேர்வு வாயிலாக மட்டுமே பணியில் நீடித்திருக்க இயலும். பணி மூப்பு என்பது பதவி உயர்வுக்கான தகுதி என்பதற்கும் சாவுமணி அடிச்சாச்சு.

இப்போது இருப்பது வெறும் சம்பளம் மட்டும் தான். இப்போ நியுஸ் பேப்பர்ல வருகிற ரைட்அப்லாம் பாத்தா அடுத்த கட்டமாக அதற்கும் ஆப்புதான்.

”இப்போ பாருங்க அரசுப் பணி தனியார் பணி ரெண்டும் சரியாப் போச்சா. கொஞ்சம் திரும்பி பாருங்க பாஸ் இந்த சண்டையில உங்க ரிசர்வேஷன் ஃபர்னிச்சரை சல்லி சல்லியா ஒடைச்சுட்டோம். எங்களால ரிசர்வேஷன வேணும்னா காலி பண்ண முடியாம இருக்கலாம். ஆனா எந்த ரிசர்வேஷன வச்சி நீ அரசுப் பணிக்கு வந்தியோ அந்தப் பணிய தனியார் பணிக்கும் கீழே எங்களால இறக்கிவிட முடியும்”

இவ்வளவு ரணகளத்திலயும் ஒரு விஷயத்த கவனிச்சிங்களா? கடைசி வரைக்கும் சொற்ப சம்பளம் கொடுத்து உழைப்பைச் சுரண்டும் தனியார் முதலாளிகள் மீது உங்களுக்கு கோவமே வரல. உங்க கோபம் எல்லாம் உங்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் மீதுதான்.

இந்த ஊடகங்கள் சாதிச்சது இதத்தான். முதலாளிகளுக்கு எதிரான மனநிலை எழாமல் மக்களின் கோபத்தை மடைமாற்றும் வேலையை கனக்கச்சிதமாக செய்பவர்கள் வேறு யாருமில்லை இந்த ஊடக சகுனிகள்தான்.

முகநூலில் ஒரு கொலாஜ் படம் என்னை வெகுவாக பாதித்தது. இது அரசுப் பள்ளி, இது அரசுப் பள்ளி ஆசிரியர் வீடு என ஒரு இத்துபோன கட்டிடத்தையும் ஒரு அழகான மாடி வீட்டையும் போட்டிருந்தார்கள். அடுத்து இது தனியார் பள்ளி, இது தனியார் பள்ளி ஆசிரியர் வீடு என்று ஒரு பெரிய பில்டிங் காம்பளக்ஸையும் ஒரு குடிசை வீட்டையும் போட்டிருந்தார்கள்.

இதைப் பார்க்கும் போது நியாயமாக யார் மீது உங்களுக்கு கோபம் வரவேண்டும்? உழைப்பைச் சுரண்டும் தனியார் முதலாளிகள் மீது தானே? ஆனால் உங்கள் கோபம் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடமே திரும்புவது ஏனோ? அரசின் ஊதிய நிர்ணயப் பட்டியல் ஒரு ஸ்டேண்டர்ட் மாடல். அதே சம்பளம் மற்றும் சலுகைகளை தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக தனது ஊழியர்களுக்கு வழங்கி அதன் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் கட்டளை இட முடியும்.

அப்படி செய்தால் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறையும். அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை  உயரும். அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிறைய தோற்றுவிக்கப் படும். புதியவர்கள் நிறைய பேருக்கு அரசுப் பணி கிடைக்கும். அதனால அரசுப் பள்ளி ஆசிரியர்களை திட்டும் நேரத்தில் தனியார் பள்ளி முதலாளிகளிடம் நியாயமான சம்பளம் வழங்க எப்படி கோரிக்கை வைக்கலாம் அரசு மூலமாக எவ்வாறு நெருக்கடி கொடுக்கலாம் என்றெல்லாம் யோசிங்க பாஸ்.

No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...