Saturday, August 29, 2020

எனக்கு ஒரு கனவு உண்டு...- மார்ட்டின் லூதர் கிங்

 



புத்தகம் – கறுப்பு வெள்ளை

ஆசிரியர் – பாலுசத்யா (பத்திரிக்கையாளர்)

“எனக்கு ஒரு கனவு உள்ளது….” – என்ற இந்த வாசகத்தை யாராவது மறக்க இயலுமா? நம் எல்லோருக்குமே கனவு உண்டு. அது நமது நலன், குடும்பநலன் போன்றவை சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர் கண்ட கனவு இன விடுதலைக்கான கனவு, சமத்துவத்திற்கான கனவு, அடிமைச் சங்கிலியை அறுத்து கிடாசுவதற்கான கனவு. அந்தக் கனவுக்கு சொந்தக்காரர் “மார்ட்டின் லூதர் கிங்” ஆவார்.

வடிவேலு படத்தில் வரும் வசனம் “சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்டா” என்பது உண்மையோ இல்லையோ “வெள்ளையா இருக்குறவன் தப்பு செஞ்சிருக்க மாட்டான் ஆனா கறுப்பினத்தவன் நிச்சயமா தப்பு செஞ்சிருப்பான்” என்கிற எண்ணம் அமெரிக்க வெள்ளை இன மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி கிடப்பதை நாம் அறிவோம்.

“என்னால் மூச்சு விட முடியவில்லை…” என்கிற ஜார்ஜ் ப்ளாய்டின் வார்த்தைகள் இன்னமும் நமது தூக்கத்தை கெடுக்கத்தானே செய்கின்றன. கறுப்பினத்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டாலே அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முன்முடிவோடு காவல்துறையில் இருந்து நீதித்துறை வரையிலும் அனுகும் போக்கு இன்றளவும் உள்ளது என்பதை பல செய்திகளில் படித்து அறிந்து இருக்கிறேன்.

கிரீன் புக் என்கிற ஆஸ்கர் விருது பெற்ற ஆங்கிலப் படத்தில் “ஒரு பெரும் பணக்காரர், அமெரிக்க மக்கள் அனைவரையும் தனது இசையால் மயக்கி வைத்திருப்பவர், ஆனாலும் நிறவெறி உச்சத்தில் இருக்கும் தெற்கு மாகாணங்களில் சுற்றுப் பயணம் செய்யும் போது சொல்லொனா அவமானத்திற்கு ஆளாகிறார். கறுப்பினத்தவர்கள் தங்கும் விடுதிகளைக் கொண்ட கையடக்க புத்தகமான கிரீன் புக் உதவியோடு தான் அங்கே கறுப்பர்கள் சுற்றுப் பயணம் செய்ய இயலும்.

நிற வெறி அன்றிலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் பிறந்து கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய முக்கியமான தலைவர் தான் மார்டின் லூதர் கிங் அவர்கள். மகாத்மா காந்தியை தனது போராட்ட முறை வழிகாட்டியாக வரித்துக் கொண்டவர்.  தனது போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியிலேயே இருக்கும் படி கவனமாக பார்த்துக் கொண்டவர். அதனால் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவர்.

புத்தகத்தின் முதல் அத்தியாயம் அமெரிக்க வரலாறில் ஆரம்பிக்கிறது. இந்த ஆட்டம் ஆடுற வெள்ளைக் காரனுங்களே அமெரிக்காவின் வந்தேறிகள் தான். ஆமாம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டடைந்தவுடன் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள் தானே அவர்கள். வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள் கப்பல் கப்பலாக தங்களுக்கு சேவகம் செய்வதற்கான ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாக விலங்கிட்டு அழைத்து அல்லவா வந்தார்கள்.

1860 ல் கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வழங்கும் சட்டத்தை லிங்கன் அவர்கள் கொண்டு வந்தார். அதிதீவிர நிற வெறியர்களான தெற்கு மாகாணங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் உள்நாட்டு யுத்தத்தில் குதித்தனர். 1861-1865 வரையில் உள்நாட்டு யுத்தம் நீடித்தது. கறுப்பின மக்களுக்கான சுதந்திர பிரகடனம் 13வது சட்டத்திருத்தத்தின் வாயிலாக சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் சட்டத்தில் இருப்பதோடு சரி. இந்தியாவில் எப்படி என்னதான் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் நடைமுறையில் ஒரு தலித் இன கிராம பஞ்சாயத்து தலைவர் சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்ற இயலாத நிலை உள்ளதோ அதே போல 13 வது சட்டத்திருத்தத்திற்கு பிறகும் அமெரிக்க கறுப்பின மக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை.

கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி உக்கிரமாக இருந்த காலத்தில் 1929 ல் ஜனவரி மாதம் 15 நாள் இங்கே தை பிறந்த போது அமெரிக்க கறுப்பின மக்களுக்கு வழி பிறந்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்று அவர் அழைக்கப் பட்டதற்கு காரணம் அவரது தந்தை பெயரும் அதுவே.

அவரது இளம் பிராயத்தில் கறுப்பின மக்கள் விடுதலைக் கேட்டு மூச்சு விட்டால் அவர்களை கண்டறிந்து கருவறுக்க கூ க்ளக்ஸ் க்ளான் என்கிற ஒரு வெள்ளை இன தீவிரவாத அமைப்பு இயங்கி இருந்திருக்கிறது.

ப்ரௌன் வெர்சஸ் போர்ட் ஆப் எஜூகேஷன் என்கிற ஒரு பிரபலமான வழக்கு மூலமாகவே லூதர் கிங் சிறுவனாக இருந்த காலத்தில் பள்ளிகளில் சம உரிமை நிலை நாட்டப் பட்டது. அதற்கு முன்பு வரையில் கறுப்பின குழந்தைகளுக்கு தனிப் பள்ளி முறை நடைமுறையில் இருந்துள்ளது.

இதே போல ப்ளஸ்ஸி வெர்சஸ் ஃபெர்குசன் என்கிற ஒரு வழக்கு பற்றியும் புத்தகத்தில் உள்ளது. ப்ளெஸ்சி என்கிற பெண்மணி ரயிலில் வெள்ளையர்களுக்கான பெட்டியில் ஏறியதற்காக தண்டிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் கூட தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்தது. இனவெறி இருக்கணும் ஆனா தெரியபடாது அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது போல “கறுப்பினர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனாலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் அந்தப் பெட்டியில் ஏற அனுமதிக்கப் படவில்லை“ என்று தீர்ப்பெழுதி தனது இனவெறியை காண்பித்துக் கொண்டது உச்ச நீதி மன்றம்.

இதற்கிடையில் மார்டின் லூதர் கிங் படித்து ஒரு சர்ச் ஃபாதர் ஆகிவிட்டார். பிரசங்கங்களிலும் நல்ல மேதைமை கொண்டு புகழடைந்தார். அதுவே அவரது அரசியல் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.

அமெரிக்க வரலாற்றில் 1955, டிசம்பர் 1 ஒரு கறுப்பு நாள். ஆமாம் அன்று தான் ரோசா பார்க்ஸ் என்கிற கறுப்பின பெண்மணி வெள்ளை இனத்தவருக்காக எழுந்து கொண்டு தனது சீட்டை தரவில்லை என்ற பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டார். அந்த தீ மள மள வென அமெரிக்கா முழுவதும் வியாபித்து அரசை மண்டியிடச் செய்யப்போகிறது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சம உரிமைத் தீயை மனதில் வளர்த்து காய்ந்து கிடந்த கறுப்பின மக்கள் மத்தியில் ரோசாப் பார்க்ஸ் சம்பவம் குப்பென்று பற்றிக் கொண்டது. கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்டோர் ஆரம்பித்த அமைப்பான NAACP இந்த பிரச்சனையை கைப்பற்றிக் கொண்டது. கறுப்பின மக்கள் அனைவரும் பேருந்துகளை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. மார்ட்டின் லூதர் கிங் அவர்களே எதிர்பார்க்காத வண்ணம் மக்கள் ஒத்துழைப்பு தந்தார்கள். சுமார் 381 நாட்கள் பேருந்துகளை புறக்கணித்து நடந்தார்கள். இந்த நடை தான் பின்னால் வரும் நம் சந்ததியினர் கம்பீர நடை போட உதவப் போகிறது என்று திடமாக கடைசி வரை களத்தில் நின்றார்கள் வென்றார்கள். பேருந்தில் கருப்பின மக்களுக்கான தனி இருக்கை முறை கை விடப்ப பட்டது.

இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு என்னனென்னவோ செய்து பார்த்தது. கிங் தாக்கப்பட்டார், சகாக்கள் சிறை பட்டனர், போராட்டக் காரர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. ஆனாலும் கூட கோரிக்கை வென்றெடுக்கப் படும் வரை அகிம்சை வழியில் ஒழுக்கத்தோடு போராடினார்கள். உலக வரலாற்றில் விடுதலைக்கான முக்கியப் போராட்டங்களில் ஒன்றாக இந்த போராட்டம் வரலாற்று ஆசிரியர்களால் சிலாகிக்கப் படுகிறது. அதே நேரம் உலக நாட்டாமை மீது உலக மக்கள் காரி உமிழவும் இதே போராட்டம் காரணமாக அமைந்தது.

மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மகத்தான வாசகமான “I have a dream…” ஐ உள்ளடக்கிய உரை 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் 28  அன்று அபிரஹாம் லிங்கனின் நினைவகத்திற்கு முன்பாக நிகழ்த்தப் பட்டது. வெள்ளை இன மக்களுக்கு நிகராக அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கோரி நடத்தப் பட்ட பேரணியில் நடத்தப் பட்ட உரை தான் அது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்கும் மசோதா தயார் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நிலையில் படுகொலை செய்யப் பட்டார். (லிங்கனோ கென்னடியோ சம உரிமை பேசினா வெட்டுவோம் என்பது தான் அமெரிக்க சங்கி குருப்)

1968 ஏப்ரல் 4ம் நாள் ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவனால் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.

அகிம்சை வழியில் கறுப்பின மக்கள் விடுதலை மற்றும் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க கறுப்பின மக்களுக்கான உரிமைகளை பெரிய அளவில் வென்றுடுத்து அவர்கள் கைகளில் வழங்கி விட்டுத்தான் இறந்து போனார்.

சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் சமூக நீதி என்பன இன்றுவரையிலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சொற்களாகவே இருந்து வருகிறது.

130 பக்கங்களே உள்ள நூல் இது. பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பாலு சத்யா அவர்கள் சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார். சிங்கிள் சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம். கிழக்கு பதிப்பக வெளியீடு.   

1 comment:

  1. புத்தக அறிமுகம் அருமை ... சொல்லப்போனால் எனக்கும் ஒரு கனவு உள்ளது – விரைவில் கனவு மெய்படும் ...

    ReplyDelete

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...