Saturday, August 8, 2020

'மண்டையே வெடிச்சிடும் போல இருக்கே....” எனது ஐந்தாவது சிறுகதை

 


     “நானு, தீபா, லதா மூணு பேரும் காலேஜ் சேந்த புதுசு, தீபா மெயின் ஆஸ்டல்ல சேந்துட்டா, நானும் லதாவும் ஒரு கிரிஸ்டியன் லேடீஸ் ஆஸ்டல்ல தங்கி இருந்தோம்” என்று ஆரம்பித்தாள் புவனா.

     “ஓ ஃப்ளாஷ் பேக்கா?, சொல்லு சொல்லு” என்று நக்கலாக கேட்டான் புவனாவின் தம்பி தமிழரசன்.

     “கிண்டல் பண்ணாம கேளுடா, ஒரு நாள் நைட்டு மொட்ட மாடில எல்லோரும் படுத்துருந்தோம்“

     “அப்புறம்”

     “எல்லோரும் தூங்கிய பிறகு என் பக்கத்தில் படுத்திருந்த எங்க காலேஜ் பொண்ணுங்க ரெண்டு பேரு குசு குசுன்னு பேச ஆரம்பிச்சாளுங்க”

     “என்ன பேசினாங்க?“

     அப்படியே சொல்றேன் கேளு செம காமடி.

     “ஏய் புவனா என்ன கேஸ்ட் டி?“

     “முதலியார்டி”

     ”ஆனா, தீபா வன்னியர்னு சொன்னாளே”

     “அதுக்கு என்னவாம்?“

     “என்னடி புரியாம பேசுற, தீபா, புவனா, லதா மூணுபேரும் சித்தப்பா மக்க பெரியப்பா மக்க டி அப்புறம் எப்படி வேற வேற கேஸ்ட்?”

     “லதா எஸ்ஸி கேஸ்ட்னு, அவ சர்டிபிகேட்ல பாத்ததா ஞாபகம் சரியாத் தெரியல!!”

     “அதனாலதான் கேக்குறேன் புவனா உண்மையில என்ன கேஸ்ட்”

     “இப்படித்தான் பேசிக்கிட்டாளுக, எனக்கு வேற அப்ப பாத்து பாத்ரூம் அவசரம், எங்க ஏந்திரிச்சா கையும் களவுமா மாட்டிக்குவேனோன்னு பயந்துகிட்டு அடக்கிகிட்டே அவளுக தூங்குற வரைக்கும் வெய்ட் பண்ணினேன்டா”

     “ஆளுக்கு ஒரு கேஸ்ட்டா சொல்லுவீங்க? பொய் சொல்றதா இருந்தா பிளான் பண்ணி சொல்லணும். அப்புறம் எப்படித்தான் சமாளிச்ச?”

     “இதெல்லாம் நேரடியா கேக்க மாட்டாளுக. அதனால நீங்க என்ன வேணும்னா நெனச்சிக்கிட்டு போங்கடின்னு நான் பாட்டுக்கு இருந்துக்கிட்டேன்“ என்று கூறி அக்காளும் தம்பியும் சிரிச்சிக்கிட்டாங்க.

     “சரிடா, புது ஸ்கூல்ல என்னைக்கு ஜாயின் பண்ற?”

     “பழைய ஸ்கூல்ல இருந்து வெள்ளிக் கிழமை ஈவினிங் ரிலீவ் ஆயிட்டேன். திங்க கிழமை காலையில புது ஸ்கூல்ல ஜாயின் பண்ணப் போறேன்“

     திங்கள் கிழமை காலையில் வீட்டில் இருந்து சற்று சீக்கிரமாகவே கிளம்பினான் தமிழரசன். தமிழ் பாடப்புத்தகங்கள், ரிலிவிங் ஆர்டர் அப்புறம் லஞ்ச் எல்லாம் எடுத்துக் கொண்டான். முதல் நாள் சீக்கிரமாக போனால் நல்லது என்று வண்டியை உதைத்து கிளப்பிக் கொண்டு சென்றான்.

     பள்ளி வளாகம் சற்று பெரியதாகவே இருந்தது. ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. ஏற்கனவே சர்ப்ளஸ் என்பதால் தான் இவனைத் தூக்கி இந்தப் பள்ளியில் அடித்திருக்கிறார்கள். அரசுப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை குறைய குறைய இந்தப் பிரச்சனை பல ஆசிரியர்களை இடம் பெயர்த்துக் கொண்டு இருந்தது.

     தலைமையாசிரியர் அறை பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல் சற்று அழுக்கடைந்த மாதிரி தான் இருந்தது. வெளியில் மைதானத்தை அடைத்து பந்தல் போட்ட மாதிரி இரண்டு வாதாங்கொட்டை மரங்கள் இயற்கையாகவே அந்த கட்டிடத்திற்கு குளிர்சாதன வசதி செய்து கொண்டு இருந்தது. தமிழரசன் உள்ளே நுழைந்த போது பள்ளியின் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார். ஆசிரியர்கள் அறையில் ஒன்றிரண்டு பேர் வந்திருந்தார்கள். அறிமுகம் இன்றி அங்கே சென்று அமர்வது சற்று கூச்சமாக இருந்ததால் தலைமைஆசிரியர் சீட்டுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

     ”யோவ் அந்த சீட்ல இருக்குறவன் நம்மாளுதான். ஏற்கனவே பேசிட்டேன். ரெடியா வச்சிருக்கேன் மாமான்னு சொன்னான். இன்னைக்கு வாங்கி வந்தா தான் பில் போடமுடியும்” என்று சத்தமாக தொலைபேசியபடி வந்தார் தலைமையாசிரியர்.

    

           “யாருப்பா நீ என்ன வேணும்?” என்று சற்று சத்தமாக மிரட்டும் தோரணையில் கேட்டுக் கொண்டே தலைமையாசிரியர் சதாசிவம் உள்ளே நுழைந்தார்.

     “சார் குட்மார்னிங் சார், நான் சர்ப்ளஸ் டிரான்ஸ்ஃபர்ல புதுசா வந்த தமிழாசிரியர் சார்“ என்று அரக்கபரக்க எழுந்து நின்றான் தமிழரசன்.

     “அப்படியா? வெல்கம் டு அவர் ஸ்கூல். உங்க சொந்த ஊர் எது சார்?”

     “பக்கத்தில் உள்ள மகிழம்பந்தல் தான் சார்”

     “அடடே அப்படியா? அங்க மணியார் பையன் ராசேந்திரனத் தெரியுமா?” என்று முதல் அஸ்திரத்தை வீசினார்.

     “தெரியும் சார், ஆனா பேசினது கிடையாது அவ்வளவா அறிமுகம் இல்ல சார்“

     முதல் அஸ்திரம் பயனற்று போனதில் சற்றே ஏமாந்து போனார். சரி அடுத்த அம்ப விட்டு பாப்போம்.

     “ஆமா, உங்க வீடு மகிழம்பந்தல்ல எங்க இருக்கு?”

     “சார், அங்க இப்போ எங்க வீடு இல்ல சார் நாங்க டவுனுக்கு வந்துட்டோம்”

     இரண்டாவது அம்பும் இலக்கை தைக்காததால் தலைமையாசியரியர் சதாசிவம் சோர்ந்து போனார்.

     “சரி ஏ.ஹெச்.எம் கிட்ட டைம் டேபிள் வாங்கிக்கிட்டு கிளாஸ் போயிடுங்க” என்று அனுப்பி விட்டு அவரோட கேஸ்ட் பேர எப்படி கண்டுபிடிக்கறது என்று தலைவலி வரும் அளவு யோசித்தார்.

     போனவருஷம் கண்ணனும் தான் வந்தார், இவரு மாதிரியா? அவங்க ஊர்ல ஒரு ஆள சொல்லிக் கேட்ட உடனே ’அவரு என்னோட ஒண்ணுவிட்ட மாமாதான்’ என்று பட்டுன்னு சொல்லல?!

     பிரகாஷ் இங்க மாற்றலாகி வந்தப்போ அவர்கிட்ட கேட்டபோது ’சார் நான் அம்பேத்கார் நகர், அவரைத் தெரியாது’ன்னு பட்டுன்னு தேங்கா உடைச்சமாதிரி சொல்லிட்டாரே. இந்த ஆளு ஒரு சின்ன க்ளு கூட குடுக்காம போறாரு.

     “சார், டீ வாங்கிட்டு வரட்டுமா?“ என்றார் வாட்ச்மேன்.

     “ஆமா, டீ ஒண்ணுதான் கொறச்சல். ஒண்ணும் வேண்டாம் நீ போ” என்று சுல்லென்று எரிந்து விழுந்தார்.

     மாலை இடைவேளையின் போது தலைமையாசிரியர் அறைக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. அடிச்சிக்கிட்ட பசங்க ரெண்டு பேரும் காலனித்தெரு. அதனால பிரகாஷ் சாரை அழைத்து விசாரிக்கச் சொல்லி நீதி பரிபாலனம் செய்தார். அவர் எப்போதும் சாதி விஷயத்தில் சற்று கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பார்.

     “புதுசார் இங்க கொஞ்சம் வாங்க, உங்க ஊர்ல சின்னதுரைய தெரியுமா? இ.பில வேல பாக்குறாரே”

     ’ஆகா, நம்ம மாமா பேரக் கேக்குறாரு. மாமான்னு சொன்னா உடனே தெரிஞ்சிக்குவாரு. என்ன ஆனாலும் ஒரு மாசத்துக்கு இவர சுத்தல்ல விட்டே ஆகணும். என்ன கேஸ்ட்டுன்னு தெரியாம தலைய பிச்சிக்கிணும்’

     ”சார் நான் ஆறாவதுலே இருந்து ஆஸ்டல்ல தங்கிப் படிச்சேன் சார். ஊருல எங்க அப்பா அம்மா தவிர யாரையும் தெரியாது சார்”

     ஏற்கனவே பி.பி பேஷண்டான சதாசிவத்திற்கு கொஞ்சம் அழுத்தம் ஏறி வேர்க்க ஆரம்பித்தது.

     செவ்வாய்க்கிழமை கையெழுத்து போடும் போதே தலைமையாசிரியர் சீட்டில் அமர்ந்து இருந்தார். சற்று சோர்வாக காணப்பட்டார்.

     “குட் மார்னிங் சார்”

     “ம்ம்..” என்று சலிப்போடு தலையாட்டினார்.

     “எங்க உங்க சர்வீஸ் ரெஜிஸ்டர் வரவே இல்லையே” என்று அடுத்த அம்பை எய்தார். எஸ்.ஆர் புக்ல மொதப் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் கேஸ்ட் பேரு இருக்குமே.

     “புரபேஷன் டிக்ளேர் பண்றதுக்காக சி.இ.ஓ ஆபீஸ்ல இருக்கு சார்” என்று அசால்டாக லெஃப்டில் டீல் பண்ணியதில் சதாசிவத்திற்கு காலையிலேயே வியர்க்க ஆரம்பித்து விட்டது.

     வேற வழியே இல்லை, இந்த காரியத்தில் பிறர் உதவியையும் நாட வேண்டியது தான். இதனால உடம்பு வேற கெட்டுப் போவும் போல இருக்கு.

     “யோவ் கண்ணன், இந்த தமிழரசன் மகிழம்பந்தல்ல எந்த தெருன்னு சொன்னாராய்யா?”

     “அவரு டவுன்ல இருக்கறதா தான் சார் சொன்னாரு. என்ன கேஸ்ட்டுன்னு தெரியல சார்” என்று அவரது நோக்கத்தை துள்ளியமாக கணித்தார் கண்ணன்.

     “அவரோட பழைய ஸ்கூல்ல தெரிஞ்ச ஸ்டாஃப் யாராவது இருந்தா விசாரிச்சிப் பாரேன்”

     “சரிங்க சார்“

     செவ்வாய் கிழமை முழுவதும் மனசு ஒரு நிலையில் இல்லை. எப்படித்தான் அந்த ஆளோட கேஸ்ட்ட கண்டு பிடிக்கறது? என்று யோசித்ததில் தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மதியம் சாப்பாடு வேறு இறங்காத காரணத்தால் மயக்கம் வருகிற மாதிரி இருக்கவே வீட்டுக்கு கிளம்பினார்.

     “பிசிக்ஸ் சார், நீங்க பாத்துக்குங்க, உடம்பு ஒரு மாதிரியா இருக்கு, நான் வீட்டுக்கு கௌம்புறேன்“

     “ஓகே சார் போயிட்டு வாங்க”

     புதன் கிழமை அடுத்ததாக ஒரு அஸ்திரத்தை தயாராக கொண்டு வந்திருந்தார். இந்த அஸ்திரத்தில் அந்த ஆளு தப்பிக்கவே முடியாது. சொல்லித் தானே ஆகணும். கொஞ்சம் பரபரப்பாகவும் பதட்டமாகவும் உணர்ந்தார்.

     “தமிழரசன் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?“

     “இல்லைங்க சார்”

     “என்ன சொல்றீங்க, அதான் சின்ன வயசுலயே வேலைக்கு வந்துட்டீங்க, காலா காலத்துல பண்ண வேண்டியது தானே?”

     “சரிங்க சார்“

     “நம்ம தம்பி ஒருத்தன் கல்யாண ஏற்பாடுகள் பண்ற வேலை தான் பார்க்குறான். என்ன கேஸ்ட்டுன்னு சொல்லுங்க, வரன் பாத்துடுவோம்”

     ’ஆகா, இதுக்குத்தானா? என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தேன்’

     “சார்…. அது வந்து….!!”

     “இதுல என்ன சார் கூச்சம்? ம்ம்….ம்ம்…சொல்லுங்க” என்று சதாசிவம் அடைந்த பரபரப்பில் அவரது அழுத்தம் 200ஐத்தாண்டி இருக்கும்.

     “சார், நான் என்கூடப் படிச்ச பொண்ண லவ் பண்றேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வீட்ல பேசிக்கிட்டு இருக்கோம் சார்“

     சதாசிவத்திற்கு தரை நழுவியது. சுழல் நாற்காலியில் சரிந்து விழுந்தார்.

     “சார், என்ன உடம்பு எதுவும் சரியில்லையா? டாக்டர்கிட்ட போலாமா சார்?” என்று பதறியது போல காட்டிக்கொண்டான் தமிழரசன்.

     ’பேத்து எடுத்துப் புட்டு பேத்தாசா’ என்று கூறும் விவேக் போல இயலாமையோடு தமிழரசனை முறைத்தார்.

     கண்ணன் மதிய உணவு இடைவேளையில் பதட்டத்தோடு ஓடிவந்தார். “சார் கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்”

     “யோவ் என்னத்தய்யா கண்டுபிடிச்ச?”

     “தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு கண்டு பிடிச்சிட்டேன்”

     “சொன்னாராய்யா?”

     “சொல்லித்தான் தெரியணுமா? ஸ்கூல் வாட்சாப் குருப்ல பாரதிக் கண்ணம்மா படத்தில் ”எவன்டா தேவன்”னு தேவனுக்கு டெஃபனிஷன் கொடுக்கற டயலாக்க ஷேர் பண்ணி இருந்தார் சார். அதனால அவரு தேவர் தான் சார்”

     முகத்தில் நிம்மதி படர நிமிர்ந்து உட்கார்ந்தார் சதாசிவம். மொபைலில் பீப் ஒலி கேட்டது. எடுத்து வாட்சாப் ஓப்பன் பண்ணினால் ”கற்றவை பற்றவை” என்கிற காலா பட புரோமோ வீடியோவை தமிழரசன் ஷேர் பண்ணி இருந்தார்.

     “ம்க்க்கும், என்னத்தய்யா கண்டுபிடிச்ச? இந்தா பாரு ரஞ்சித் படத்த ஷேர் பண்ணி இருக்காரு” என்றார் சதாசிவம் சலிப்போடு.

     இந்த குழப்பத்தை ஆரம்பித்து இயக்கிய தமிழரசன் நமுட்டுச் சிரிப்போடு மதியம் கையெழுத்து போட அட்டெண்டன்சை புரட்டினார்.

     ’ச்சே எல்லாம் இந்த திராவிட ஆட்சியாளர்களால வந்தது. இதுவே வடநாடா இருந்தா எவ்வளவு சுளுவா சர்நேம் வச்சி கண்டுபிடிச்சிருக்கலாம்?!’  என்று சிந்தித்தபடி கழுத்தில் கை வைக்க உடம்பு நெருப்பாக சுட்டது.

     “யோவ், மணி, ஆபீஸ்ல தான் இருக்கியா? ஒரு சின்ன டீட்டெயில் வேணும். எங்க ஸ்கூலுக்கு சர்ப்ளஸ்ல வந்து இருக்கும் தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு ஒண்ணு எட்டு பர்டிகுலர்ஸ் பாத்து சொல்லு” என்று சி.இ.ஓ ஆபீஸ்ல வேலை செய்யும் தனது சொந்தக்கார பையன் மணியிடம் கேட்டார்.

     “சார், அவரு போனவாரம் சர்ப்ளஸ் டிரான்ஃபருக்கு வந்தப்போ,. புதுஸ்கூல்ல குடுத்து எழுதச் சொல்லணும்னு அவரோட டீட்டெயில் இருக்குற பேஜ கிழிச்சி எடுத்துக்கிட்டு போயிட்டார் சார்”

     “என்ன கண்ணன் எதுக்கு நிக்கிறீங்க?”

     “சார் தமிழரசன் வன்னியரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு சார்!”

     “எப்படிய்யா சொல்ற?”

     “சந்தனக் கடத்தல் வீரப்பன் பத்தி ஒரு புத்தகத்தை ஆர்வத்தோடு படிச்சிக்கிட்டு இருந்தார் சார்!”

     “அப்படியாய்யா?! இருக்கும் இருக்கும்” என்று உற்சாகமானார் சதாசிவம்.

     “அதெல்லாம் இருக்காது சார், அவரோட மேஜைமேல கபாலி படத்தில் ரஜினி வைத்திருக்கும் “மை ஃபாதர் பாலய்யா” புத்தகம் கூட இருந்துச்சி சார்” என்று பலூன் உடைத்தார் ஃபிசிக்ஸ் சார்.

     சதாசிவம்முக்கு மறுபடியும் தரை நழுவியது இன்று சற்றே வேகமாக நழுவியது. பள்ளிக்கு ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிக் கொண்டு நேரே பக்கத்து டவுன் தனியார் மருத்துவமனைக்கு சென்றது.

     அடுத்தநாள் ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் ஆப்பிள் பழங்களோடு கண்ணன் மருத்துவமனைக்கு உற்சாகமாக கிளம்பினார். தலைமையாசிரியரின் மன வாட்டத்தை போக்கும் விஷயம் தன்னிடம் இருப்பதாக வலுவான நம்பிக்கையோடு மருத்துவமனை காரிடாரில் துள்ளல் நடையோடு சென்றார்.

     “சார், ஒரு நல்ல சேதி. தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு தெரிஞ்சி போச்சி சார்”

     “என்னய்யா சொல்ற எப்படி?”

     “அவரோட நோட்ஸ் ஆஃப் லெசன் நோட்டோ பின்பக்கத்தில் ராஜராஜச் சோழனோட படத்தை கட்பண்ணி வச்சிருந்தார். மேலும் அவரோட மேசை இழுப்பறையை திறந்து பாத்தேன். அங்கேயும் ராஜராஜன் படம். அதனால நிச்சயமா அவரு நம்ம ஆளுதான் சார்”

     “அட ஆமாய்யா நல்லா கண்டு பிடிச்சய்யா, உன்ன பாராட்டியே ஆகணும்”

     “ஆமா, கிழிச்சாரு, தமிழ்நாட்டுல கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லா சாதிக் காரனுங்களும் ராஜராஜ சோழன நம்ம ஆளு நம்ம ஆளுன்னு தானே சொல்லிக் கொண்டு திரியறான்” என்று ஊசியால் மறுபடியும் பலூனை “டப்“ என்று உடைத்தபடி ஃபிசிக்ஸ் சார் சாத்துக்குடி பழங்களோடு உள்ளே நுழைந்தார்.

     அப்போது கதவை திறந்து கொண்டு ஒரு கூட்டம் திமுதிமுவென்று உள்ளே நுழைந்தது.

     “என்னாச்சு மச்சான்? திடீர்னு எல்லாரையும் பயமுறுத்திட்டீங்க” என்று அக்கரையாக விசாரித்தபடி உள்ளே வந்தார் மகிழம்பந்தல் மணியார் பையன் ராசேந்திரன்.

     “நம்ம பங்காளிப் பையன் தமிழரசனுக்கு உங்க ஸ்கூல்ல வேலை கெடைச்சிருக்காம் எல்லாம் பேசிகிட்டாங்க

     ’அப்பாடா என் வயித்துல பால வாத்தியே மச்சான்’ என்று நிம்மதியாக கையில் சொருகி இருந்த குழாய்களை கழட்டி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

     அப்போது கதவைத் திறந்து கொண்டு அரைகிலோ ஆப்பிளோடு உள்ளே நுழைந்தான் தமிழரசன்.

     “மச்சான் இவரு தான் நீங்க சொன்ன தமிழரசன் சார்” என்று நம்ம ஆளு என்பதை மட்டும் விட்டுவிட்டு உற்சாகமாக கூறினார் சதாசிவம்.

     “இவரா? இல்லையே அவன் பி.டி.ஏவுல டெம்பரவரியால வேல பாக்குறதா சொன்னான்”

     “என்னாது பி.டி.ஏ, டெம்பரவரியா” என்று சத்தமாக பேசிவிட்டு மயங்கி விழுந்தார் சதாசிவம்

     ”பேரு ஒண்ணா இருந்ததால குழப்பமாகிப் போச்சி போல”என்று ராசேந்திரன் தலையை சொறிந்தார்.

     “என்னாது சந்தைக்கடை மாதிரி இத்தன பேரு. நீங்கல்லாம் ஜாப்ல இருக்குறவங்க தானே சார்? ஏன் இப்படி கும்பல் கட்டுறீங்க? டாக்டர் வருகிற நேரம்” என்று அனைவரையும் பத்திவிட்டார் உள்ளே நுழைந்த நர்சு.

     மயங்கி கிடந்த சதாசிவம் அருகில் கலர்கலராக மருந்து மாத்திரைகள் கிடந்தன. ஆனால் நோய் தீர்க்கும் மாத்திரை வெளியே சென்று கொண்டு இருந்தது.

 

    

 

    

 

 

    

    

    

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...