Monday, May 27, 2024

அந்த அரபிக் கடலோரம் -1

"அந்த அரபிக் கடலோரம்…" -1
முன் பயணத்திட்டம் ஜனவரி மாதம் நான் திருவனந்தபுரம் பயிற்சிக்காக போனதில் இருந்தே எனது மகனும் மனைவியும் எங்களையும் அங்கே சுற்றுலா கூட்டிக் கொண்டு போயே ஆகவேண்டும் என்று ஐந்து மாதகாலமாக ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரச்சனை என்னவென்றால் நான் திருவனந்தபுரத்தை மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்த்து முடித்தாயிற்று. கன்னியாகுமரியும் குடும்பத்தோடு போய் வந்தாச்சு. ஆக ஒரு மூன்று நாட்கள் பயணத்திட்டம் என்றாலும் அதற்கேற்றாற்போல புதிய இடங்களை பார்த்து வருவது போல திட்டமிட வேண்டும். எங்களோடு எனது இணையரின் அக்கா கயல்விழி மற்றும் மகன் சித்தார்த்தன் என்கிற சித்து(கணினி பொறியியலாளர்) வருவார்கள். அப்புறம் லதா அக்கா அவரது இணையர் அன்பழகன் மாமா (இருவரும் ஆசிரியர்கள்) நிச்சயமாக இணைவார்கள். இந்த குழு எங்களின் வழக்கமான ”டூரிணையர்கள்” மார்ச் மாத இறுதியில் மே மாதம் வரட்டும் உங்களை நிச்சயமாக அழைத்துச் செல்கிறேன். இடம் மட்டும் திருவனந்தபுரம் இல்லை கோழிக்கோடு மற்றும் வயநாடு என்று சொல்லி வைத்தேன். ஏப்ரல் மாத வாக்கில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த போது “உண்மையை சொல்லுங்க இந்த வருடம் டூர் போறோமா இல்லையா?” என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார்கள். அப்போது தப்பிப்பதற்காக பாலக்காடு கோயம்புத்தூர் என்று சொல்லி வைத்தேன். பள்ளி முடிந்தது, பள்ளியின் 6-9 மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் கூட்டத்தில் சமர்ப்பித்தேன். மே மாதம் ஆறு தேதி கரைந்து போனது. அடுத்த நான்கு நாட்களில் பத்தாம் வகுப்பு ரிசல்ட். அப்படின்னா மார்க் ஷீட் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும், டிசி தயார் செய்ய வேண்டும். ஆக மே மாதம் 13 தேதிகள் கரைந்தோடி விட்டன. சரி 18-21 தேதிகளில் செல்லலாம் என்று முடிவு செய்தாகி விட்டது. “போகணும்னு தோணறது ஆனா எங்க போகணும்னு இன்னும் முடிவாகலையே” என்று தங்கப்பதக்கம் ஜுனியர் சிவாஜி கணக்காக கண்ணைக் கசக்கி யோசித்துக் கொண்டே இருந்தேன். சரி கொச்சி – எர்ணாகுளம் – ஆலப்புழா போய்விடலாம், கடல், பேக்வாட்டர்ஸ், படகு சவாரி என்று என்ஜாய் பண்ணலாம் என்று முடிவு செய்து விட்டோம். மைத்துனர் மகன் சாரதியும் (அருணின் வயதொத்தவர்) பயணத்தில் இணைந்தார். குகனோடு ஐவர் ஆனோம் என்பது போல சாரதியோடு எண்வர் ஆனோம். ஆமாம் மொத்தம் எட்டு பேர். தங்குமிடம் குறித்து அலசி ஆராய ஏராளமான ஆப்(பு)கள் இருக்கின்றன. நான் கூகுளாண்டவரிடம் வினவினால் அவரோ ஒரே இடத்தை ஆப்வாரியான ரேட்டோடு காட்டிக் கொடுத்தார். புக்கிங் டாட் காம் ல் குறைவாக காட்டியதால் அவர்களை அணுகி மூன்று தங்கும் அறைகளை பதிவு செய்து கொண்டேன். மூன்று நாட்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் காட்டியது. பணம் எல்லாம் நேரில் கட்டிக் கொள்கிறேன் என்று கறாராக கூறிவிட்டேன். ஆனால் ஐஆர்சிடிசி ஆப்பில் எவ்வளவு தேய் தேய்த்து பார்த்தாலும் ஒரு டிக்கெட்டும் அகப்படவில்லை. ஆக 17ம் தேதி காலை பதினோறு மணிக்கு தட்கல் ரேஸ் ஓடியாகவேண்டும். விடுமுறை தினங்கள் போன்ற பிசியான பயண நாட்களில் ஐஆர்சிடிசி யில் தட்கலில் உள்ள டிக்கெட்டுகளை கைப்பற்றுபவர்கள் அந்தக் கால திருச்சி மாரீஸ் 70 எம்எம் தியேட்டரில் ஐந்து ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்டை எடுப்பவருக்கு நிகரான சாமர்த்தியசாலிகள். நான் அந்த டிக்கெட்டை பலமுறை கைப்பற்றி உள்ளேன். ஆக அந்த ரேசுக்கு நான் முற்றிலும் தகுதியானவன் தான். கூகுளாண்டவர் உதவியுடன் இடங்களையும் தெளிவாக தேர்வு செய்துவிட்டேன். முதல் நாள் எர்ணாகுளம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இரண்டாம் நாள் ஆலப்புழா பேக்வாட்டர்ஸ் படகு சவாரி மற்றும் பீச். மூன்றாம் நாள் கொச்சி எர்ணாகுளத்தில் மீதமுள்ள இடங்களைப் பார்த்து விட்டு லுலுமாலில் “வேடிக்கை மட்டும்“ பார்த்துவிட்டு கிளம்புவதாக திட்டம் போட்டாயிற்று. முதலில் இடங்களை அடையாளமிட்டுக் கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு இடத்திற்கும் இடையேயான தொலைவுகளை கூகுள் மேப் துணையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மேப்பை பார்த்தால் போதும் எங்கிருந்து எங்கே எப்படி என்பதை பயண நாளில் நமது எண்வர் குழு கிளம்பும் வேகத்துக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனாலும் மனதில் ஒரு உத்தேச திட்டத்தை வகுத்து நோட்பேட் ஆப்பில் குறித்துக் கொண்டுவிட்டேன். பதினேழாம் தேதி பத்து மணிக்கெல்லாம் போன், லேப்டாப் எல்லாவற்றிலும் சார்ஜ் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டு பத்தே முக்காலுக்கெல்லாம் சித்து போன் மற்றும் என்னுடைய போன் லேப்டாப் என்று ரெடி பண்ணி அமர்ந்து விட்டோம். தட்கலில் ஒரே ஐடிக்கு எட்டு டிக்கெட் எடுக்க இயலாது. எனவே சித்து நான்கு டிக்கெட் நான் நான்கு டிக்கெட் எடுப்பது என்று தீர்மானித்து பெயர் வயது என குறித்துக் கொண்டும் பிரித்துக் கொண்டும் அமர்ந்தோம். பதினோறு மணிக்கு எனது போனில் ஐஆர்சிடிசி ஆப் ”சுத்திச் சுத்தி வந்தீக….” என்று கைவிட்டது. உடனே லேப்டாப்பில் பிரௌசரில் ஏற்கனவே இட்டு வைத்திருந்து ஐஆர்சிடிசி போர்ட்டலை ரீலோட் செய்தேன். என்ன ஆச்சரியம் உடனே உள்ளே போய்விட்டது. உள்ளே புகுந்து மடமடவென்று நான்கு டிக்கெட்டுகளை போட்டு விட்டு சித்துவைக் கேட்டால் “சித்தப்பா என்னோட போன் இன்னும் சுத்திக்கிட்டே தான் இருக்கு என்றான். அதே படம் அதே பாடல் “சுத்திச் சுத்தி வந்தீக…” சரி மறுபடியும் லேப்டாப்பில் டிக்கெட் நிலவரத்தை பார்த்தால் வெய்ட்டிங் லிஸ்ட் 29 என்று காட்டியது. நிலவரம் கலவரமாகிப் போனது. இப்போ என்ன செய்வது. டிக்கெட் கிடைக்காத நான்கு பேருமே நீண்ட நேர பேருந்து பயண ஒவ்வாமை உடையவர்கள். பயணத்திட்டத்தையே ஒத்திவைத்துவிடலாமா என்று அவநம்பிக்கையாக யோசித்தபோது தான் ஒரு பளீர் மின்னல் வெட்டியது. "Premium Tadkal"- ப்ரீமியம் தட்கலை சற்று எட்டிப் பார்த்தால் என்ன என்று உள்ளே சென்று எட்டிப் பார்த்தால் 27 டிக்கெட்டுகள் கெட்டியாக இருந்தன. “எலேய் சம்முவம் உட்றா ப்ரீமியம் தட்கலுக்கு வண்டிய…“ என்று பாய்ந்தேன். தட்கல் நானூறு என்றால் ப்ரீமியம் தட்கல் தொள்ளாயிரம் ரூபாய். “கைபுள்ள விட்றாதடா, வேற வழியில்ல நமக்கு டிக்கட்டப் போடு பேசிக்கலாம்” என்று அசரீரி ஒலித்தது. டக்கென்று தட்டி புக் செய்துவிட்டேன். ஆக லாட்ஜில் ரூம் ரெடி, பயணத்திற்கு டிக்கெட் ரெடி ஆட்களும் அவரவர் இடங்களில் இருந்து திருச்சியில் ரயில் கிளம்பும் நேரமான இரவு எட்டு மணிக்கு வருவதற்கும் ரெடி. ஆகா, பயணத்திட்டம் இவ்வளவு சுளுவா முடிந்துவிட்டதே என்று ஆசுவாசம் அடைந்தேன். ஆனால் அடுத்தநாள் அசம்பிள் ஆவதில் இவ்வளவு இழுபறி ஆகும் என்று நினைக்கவே இல்லை. என்ன இழுபறி?! வெயிட் அன்ட் சீ இன் தி நெக்ஸ்ட் எபிசோட்.

No comments:

Post a Comment

அணுக்கரு உலை - அமைப்பு

அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?! " டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!" "ஆமாம்பா, அணு உலை...