Wednesday, November 8, 2017

லால்குடி டேஸ்-14 மற்றுமொரு பேருந்து பயணம்

பதினோறாம் வகுப்புக்கான கல்வி உதவித் தொகை ரூபாய் தொள்ளாயிரத்து சொச்சம் வழங்கினார்கள்.
அப்போதெல்லாம் செக்கோ அல்லது அக்கவுண்டில் போடுவதோ கிடையாது. மொத்த மாணவர்களின் உதவித் தொகையையும் என்கேஷ் பண்ணி அதற்கென்று உள்ள இன்சார்ஜ் ஆசிரியர் வழங்குவார்.
எனது நண்பன் கெய்சரின் தந்தையான நெசவு ஆசிரியர்தான் வழங்குவார்.
வெள்ளிக் கிழமை அன்று மதியம் தொகை வழங்கப் பட்டது. தொகையை வாங்கியவுடன் பதட்டமாகிவிட்டேன். அப்போது அது பெருந்தொகை. என்னைப் பொருத்தவரை அதெல்லாம் செலவே செய்ய இயலாத தொகை.
எனவே அதனை பத்திரமாக அப்பாவிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்று அன்று மதியமே ஊருக்கு செல்ல முடிவெடுத்தேன். விடுதி மாணவர்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியவர்களை ஊருக்கு செல்லும் படி ஆசிரியர்களே பணித்தார்கள்.
இன்றைக்கு எந்த பஸ்ல போகலாம்?’
ஆனந்த கிருஷ்ணன்
இந்த பஸ் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பேருந்து என்று மாணவர்கள் கூறுவார்கள். அரியலூருக்கு ஒன்று பொய்யூர் வழியே ஜெயங்கொண்டத்திற்கு ஒன்று என இரண்டு பேருந்துகள் ஓடின. அந்த ஆனந்த கிருஷ்ணன் பேருந்து தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கும் நடேசன். வேகத்திற்கும் நல்ல பாடல்களுக்கும் பெயர் போன பேருந்து.
மதியம் 3.30க்கு நேரம். எனவே அந்த பேருந்தை பிடிப்பது என்று திட்டமிட்டு கிளம்பினேன்.
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். கையில் 10 ரூபாய் இருக்கும் போதே 8 ரூபாயை பேருந்துக்கு வைத்துக் கொண்டு 2ரூபாய்க்கு பக்கோடா சாப்பிடுவேன். இப்போ கை நிறைய பணம் வைத்திருக்கும் போது சாப்பிடாமல் இருப்பேனா?’
நல்ல சூட்டோடு தட்டில் அப்போது தான் கொட்டினார் எனது பிரியத்திற்குரிய பக்கோடா மாஸ்டர். முதல் ஆளாக நான் தான் வாங்கினேன். பொட்டலத்தை பிரித்து வாயில் போடுவதற்குள் வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டுவிட்டது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு மறுபடி எடுப்பதற்குள்பாம் பாம்என்று ஆரன் அடித்தபடி உள்ளே வந்து விட்டான் ஆனந்த கிருஷ்ணன்.
அப்படியே சுருட்டி பையில் திணித்துக் கொண்டே பேருந்தை பிடிக்க ஓடினேன். அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி முன் வாசல்படியை ஒட்டி இருந்த சீட்டில் ஜன்னலோரம் கிடைத்தது. பேருந்தினுள் இளையராஜாவின் இசை ராஜாங்கம் நடந்து கொண்டு இருந்தது. பக்கத்து சீட்டில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார்.
பேருந்து எடுத்த போது ஒருவர் ஓட்டமாய் வந்து பேருந்தில் தொங்கியபடி ஓடி வந்து ஒரே ஜம்பில் தொத்திக் கொண்டார். எடுத்து வந்த பையை சரியாக நடைபாதையில் வேலி கட்டியது போல குறுக்கே வைத்துக் கொண்டார். படிக்கட்டை தடுத்திருக்கும் தடுப்பின் மீது எங்களுக்கு நேர் முன்னே அமர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்த மொத்த காற்றையும் அபகரித்துக் கொண்டார்.
“யோவ் யார்துயா இது பேக் குறுக்கால கெடக்கு?” என்றார் கண்டக்டர்.
முன்னாள் அமர்ந்திருந்தவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
“எவன்டா அது பேக நடுவால வச்சிருக்கிறது?” என கோபக் குன்றின் உச்சிக்கு ஏறினார்.
நான் கண்ஜாடையால் முன்னால் இருந்தவர காண்பித்தேன். ஆள் நல்ல உயரமாக சற்று சிவப்பாக வெள்ளை நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார். எனவே கண்டக்டர் சற்று பவ்வியமாக
“சார் இந்த பேக எடுத்து மேல வச்சிடுறீங்களா?”
“வாட் மேன், என் பேக் எங்க வைக்கறதுன்னு எனக்கு தெரியும்” என்றார். சாராய வாடை பேருந்து எங்கும் வியாபித்து அனைவருக்கும் அவரை யார் என்று அறிமுகப் படுத்தியது.
இப்போ கண்டக்டர் உஷார் ஆகி விட்டார், “என்னய்யா போதையா முதல்ல அந்த எடத்து உட்டு ஏந்திரி கீழே விழுந்து செத்து தொலஞ்சின்னா நாங்க கை கட்டி நிக்கணும் இந்த பேக எடுத்து கிட்டு உள்ளே போ” என்று எரிந்து விழுந்தார்.
“ஏய் கூல் மேன், ஐ ஆம் ஸ்டடி. யூ டோண்ட் ஒர்ரி மேன்”
“என்னய்யா உள்ள போகச் சொன்னா இங்கிலீஷ்ல திட்டுற” என்றபடி கோபத்தை பையின் மீது காட்டலாம் என்று பையை காலால் நெம்பி தள்ளினார்.
பை சிப்பை போடாததால் இறங்கிய பிறகு போடுவதற்கு வைத்திருந்த ஒரு பாட்டிலும் லுங்கி மற்றும் ஒரு பேண்ட் சர்ட்டும் இருந்தது.
“பைய எங்க வேணா தள்ளு, ஐ வில் சிட் ஹியர் ஒன்லி” என்று கூறவும் இதற்கு மேல் இவனிடம் மல்லுகட்டினால் டிக்கட் போட இயலாது என்று தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டார்.
எங்களுக்கு முதுகு காட்டிக் கொண்டு வாசற்படியை பார்த்த படி அமர்ந்து கொண்டு வந்தார். அவ்வப் போது ஓரமாக குனிந்து எச்சில் துப்பினார். ஜன்னல் சீட்டில் அமர்ந்த எனக்கோ அவ்வப் போது தலையை இறுக்கமாக பிடித்து கூவத்தில் முக்கி எடுத்தது போல இருந்தது. ’என்னா கப்பு?’
“ஏய் புஜ்ஜிம்மா, அம்முக் குட்டி, செல்லக் குட்டி” என்ற சத்தம் கேட்டது.
முன்னால் நின்று கொண்டு இருந்த நடுத்தர வயது பெண்மணியை ஈவ் டீசிங் செய்கிறாரோ என்று அதிர்ச்சி ஆகி விட்டேன். பார்த்தால் அந்த பெண்மணிக்கு முன்னால் ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தையை பார்த்து இவர் கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
இவரை பார்த்து அந்தக் குழந்தை முளைக்காத பற்களை காட்டி சிரித்தபடி வந்தது.
இவர் முகபாவத்தில் பல சேஷ்டைகளை செய்து கொண்டே வரவும் அந்த குழந்தை தேம்பித் தேம்பி சிரித்தபடி வந்தது.
“சார் என் சீட்டுல உக்காந்துக்கோங்க” என்று அவரின் முதுகைத் தட்டினேன். நாற்றத்தில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியல.
“நோ பிரதர். ஐ யாம் ஸ்டடி நோ பிராப்ளம் அண்ட் தேங்ஸ் ஃபார் யுவர் ஆஃபர்” என்றார்.
’ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்…’ என்று ஆரம்பித்தாலே இவர் இங்கிலாந்து மகாராணியின் பேரனோ என்று உற்று நோக்கும் காலமாகையால் (அப்போவெல்லாம் கவுதம் மேனன் படங்கள் பண்ண ஆரம்பிக்க வில்லை) எல்லோரும் திரும்பி பார்த்தனர். அவர் என்னை மதித்து ஆங்கிலம் பேசியதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
“ஓ.கே சார்” என்று அவருக்கு ஆங்கிலத்தில் பதில் மரியாதை செய்து விட்டு எல்லோரையும் ஒரு முறை கம்பீரமாய் திரும்பிப் பார்த்து விட்டு அமர்ந்தேன்.
ஒரு வழியாக புள்ளம்பாடி தாண்டி விட்டது. புள்ளம்பாடி உள்ளே நுழைந்து விட்டு வந்த கேப்பில் ஒரு பேருந்து முந்தி சென்று விட்டது. டால்மியாவில் மூன்று நிறுத்தங்களிலும் ஏறும் டிக்கெட்டுகள் பறிபோய் விடக் கூடாதே என்ற பரபரப்பில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை மிதித்தார். வண்டி சீறியபடி சென்றது.
சாலையோரம் இருக்கும் டால்மியா மைன்ஸ் வரைக்குமே நல்ல சாலை என்பதால் டிரைவர் கவலைப் படாமல் வேகத்தை கூட்டியபடி பார்வையை முன்னே செல்லும் பேருந்தின் மீது செலுத்திய படி சென்றார்.
நல்ல சாலையில் ஒரு சுண்ணாம்புக்கல், லாரியில் இருந்து தவறி விழுந்ததாக இருக்கலாம். டிரைவர் வேகத்தில் அதை கவனிக்காமல் ஏற்றி இறக்கினார்.
“ஏ கொலகாரப் பாவி கொன்னுபுட்டியேடா” என்று பெரிய சத்தம். பார்த்தால் எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவரை காணோம். பேருந்து தரையை தேய்த்தபடி சடன் பிரேக் போட்டு நின்றது.
டயர் கல்லில் ஏறிய அந்தக் கணம் அந்த போதை மனிதர் நிலை தடுமாறி கீழே சரிந்து விடவும் கல்லில் ஏறிய டயர் அவர் மேலும் ஏறி இறங்கி விட்டது.
எல்லோரும் இறங்கி ஓடினோம். அவர் விழுந்த இடம் 200 அடி பின்னே போய் விட்டிருந்தது.
வயிற்றிலும் மார்பிலும் டயர் ஏறி இறங்கி இருந்ததால் முகம் சிதையவில்லை. குடல் சரிந்து விட்டிருந்தது.
நாங்கள் அருகே சென்ற போது கடைசி மூச்சை இழுத்து விட்டாரி. நிலைகுத்திய அந்த கண்களில் ஏக்கம் தவிப்பு துயரம் எல்லாமும் தெரிந்தது. ஒரு குடும்பம் அதன் தலைவனை இழந்து விட்டது.

அப்போது நான் உணர்ந்து கொண்டது “மது போதை கொடிது”. நான் ஒரு டீ டோட்டலராக இருக்க அந்த சம்பவமும் ஒரு காரணம்.

No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...