Friday, July 31, 2020

வாசிப்பு 2.0 UPGRADED


வாசிப்பு 2.0 UPGRADED

     இதற்கு முன்பாக வாசிப்போம் வாருங்கள் என்கிற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இதனை வைத்துக் கொள்ளலாம். இல்லையானாலும் பாதகமில்லை.
     தகவல் தொழில்நுட்ப புரட்சியானது பல விஷயங்களைக் காணாமல் போகச் செய்துவிட்டது. கேமரா, டேப் ரிக்கார்டர் அல்லது எம்பி3 பிளேயர் அல்லது ஐபாட், கால்குலேட்டர், அத்தாம்பெரிய தலையணை சைஸ் டிக்ஷ்னரி, போட்டோ பிரிண்ட் கடை, ஊரில் உள்ள இதர பல கடைகள், வீடியோ கேம் மற்றும் இறுதியாக அச்சுப் புத்தகங்களின் உபயோகம். எல்லாமே கையடக்க மொபைலுக்குள் வந்துவிட்டதால் நாம் இப்போது குனிந்த தலை நிமிராமல் நடக்கப் பழகிவிட்டோம். தோண்டத் தோண்ட ஏதேனும் கிடைக்கும் தங்கச் சுரங்கமாகவே மாறிவிட்டது அந்த சின்னஞ்சிறு மொபைல்.
     2004 ம் வருடம் நான் நோக்கியா 3315 வாங்கிய போது ஏர்செல் காரன் மெசேஜ் ஃப்ரீ என்று வைத்திருந்தான். அப்போதிலிருந்தே எதாவது ஜோக் தத்துவங்களை பகிர்ந்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது. பிறகு சாம்சங் காரன் 1.2 எம்பி கேமரா மொபைல் போனை வாங்க சொத்தில் பாதியை எழுதிக் கேட்டான். அப்போதுதான் சைனா செட் கொரியன் செட் எல்லாம் உள்ளே வந்து சாமானியனும் கலர் போன் கேமரா போன் வாங்கத்தக்க விலையில் கொடுக்க ஆரம்பித்தான். அதன் பிறகு மெல்ல ஆண்டிராய்டு மொபைல் காலம் தொடங்கியது. நான் முதன் முதலில் சோனி ஆண்டிராய்ட் போன் 2011 ல் தான் வாங்கினேன். அப்போது வாட்சாப் என்கிற ஒரு செயலியே இருப்பது தெரியாமல் ஒரு ஆறு மாதங்களை வீணடித்திருந்தேன்.
2008ல் கம்ப்யுட்டர் வாங்கிய உடனேயே ஃபேஸ்புக் கணக்கு துவங்கிவிட்டேன். NHM Unicode Writer செயலி வந்த பின்பு தான் தமிழில் முகநூலில் எழுத வாய்த்தது. அதற்கு முன்பே பள்ளியில் இருந்த கணினியில் முயன்று தவறிக் கற்றல் முறையில் “பாமினி“ துணையுடன் தமிழில் தட்டச்சப் பழகியிருந்தேன். (ஆங்கில தட்டச்சு கல்லூரி காலத்தில் தனியாக கற்றுக் கொண்டது தான் சுலப டைப்பிங் கைகூடக் காரணம்) இவ்வாறாக தகவல் தொழில் நுட்ப புரட்சி மெல்ல மெல்ல என்னையும் ஆட்கொண்டது. ஊரே ஆண்டிராய்டு ப்ளாட்ஃபார்ம் பயன்படுத்தும் வேளையில் நான் விண்டோஸோடு தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்த காரணத்தினால் உலகின் நம்பர் 1 மொபைல் நிறுவனமான நோக்கியாவே காணாமல் போனது. சோ காலத்துக்கேற்றபடி அப்கிரேட் செய்து கொள்ளவேண்டியது கட்டாயம். இல்லையெனில் வங்கியில் படித்தவர்களிடம் பாரம் நிரப்பக் கெஞ்சுபவர்கள் போல நாமும் சிறு சிறு வேலைகளுக்கு கூட பிறரை சார்ந்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டு விடும்.
”யோவ் கொஞ்சம் மேலப் பாருய்யா, தலைப்பு என்ன போட்டுருக்கு நீ என்ன சொல்ற” என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. அங்கன தான் வரேன் இருங்க.
இப்படியாக தகவல் தொழில் நுட்ப புரட்சி உச்சத்தை எட்டி பரவ ஆரம்பித்த 2012 ம் ஆண்டுகளில் இருந்து நிறைய மாற்றங்கள். அது நமது வாசிப்பிலும் வந்து விட்டது.
அதுவரை ஒரு முனை வாசிப்பாக இருந்தது அதற்கு பின்பு இன்டராக்டிவாக ஆனது. ஆமாம், வாட்சாப் மற்றும் முகநூலில் வாசித்தவுடன் சூடாக பதிலடி கொடுக்க முடிந்தது. அதற்கு முன்பு வாசகர் கடிதம் எழுதி அதற்கு ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணி அது போய் சேர்ந்து என நினைக்கும் போதே கொட்டாவி வருகிறது அல்லவா? மேலும் நாமும் எதையாவது எழுதி நமக்கு வாய்த்த நண்பர்களை வாசிக்க வைப்பதும் எளிதாக கை கூடியதால் எழுதுதல் வாசித்தல் என்று கொஞ்சம் பரபரப்பானது.
இன்டராக்டிவ் வாசிப்பில் அனுகூலம் உடனடி ஃபீட்பேக் என்றேன் அல்லவா? அங்கேதான் குழாயடி சண்டையில் ஆரம்பித்து நேரிலே போய் வெட்டுக்குத்து என்று நீண்டு அவதூறு வழக்குகள் போடும் அளவுக்கு விபரீதமாக வளந்து கெடக்கு.
     உங்க கருத்துக்கு உடனடி பதிலாக ஆமாம், இல்லை என்று சுரத்தில்லாமல் பதில் தருபவர் சாதாரண வாசகர். அதுவே கமெண்ட் செக்ஷனில் வந்து துணைத்தாளெல்லாம் வாங்கி எழுதி தள்ளுபவர் லெஜென்ட் வாசகர். பதில் ஏதும் கைவசம் இல்லாத கையறு நிலையில் கெட்டவார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடுபவர் “ஆர்டினரி சங்கி” வாசகர் அதுவே ஆண்டி இண்டியன் என்கிற அர்த்தத்தில் திட்டினால் அவர் “அல்ட்ரா சங்கி” வாசகர் என தரநிர்ணயம் செய்து ஐஎஸ்ஓ சான்றிதழே வழங்கலாம்.
     என்னதான் கோபமூட்டினாலும் இந்தமாதிரியான உணர்வெழுச்சி மனதுக்கு சற்று போதையை தருகிறது. எனவே தான் மாசத்தில் முப்பதுநாளும் முகநூல் வாசலில் குத்தவச்சி உக்காந்து கெடக்கோம்.
     அப்புறம் இந்த வாட்சாப் செய்தி பரிமாற்றம் என்பது உண்மையிலேயே வேற லெவல்ங்க!! இந்த கொரோனாவ கூட வீடடங்கு, ஊரடங்குன்னு சொல்லி சமாளிக்க முடியுது ஆனா ஒரு வதந்திய ஏது வாட்சப்ல உலாவ விட்டுட்டீங்கன்னு வைங்க வாட்சாப் ஓனரே நினைத்தாலும் அதன் பரவலை கட்டுப்படுத்த இயலாது.
எந்த டெக்னாலஜி வந்தாலும் முதலில் இறங்கி கோல் போடுவதில் நம்ம சங்கிகளை அடிச்சிக்க முடியாது. ஆமாம், விண்வெளி, கோள்கள், நாசா விஞ்ஞானி, சேட்டிலைட் அப்புறம் எதாவது ஒரு கோயில் கோபுரம் கிடைச்சா போதும் அம்சமான ஒரு வதந்தி ரெடி. திருக்குறள்ல ரெண்டு வரி வாசிங்கப்பான்னு சொன்னா கேக்கமாட்டாய்ங்க, ஆனா இந்த வதந்திய முழுமூச்சா வாசிச்சி முடிச்சி இந்தப் பெருமையை உலகத்திற்கு அறிவிக்க வேண்டிய தார்மீக கடமையில் இருந்து கிஞ்சிற்றும் விலகக்கூடாது என்று ஒரு பத்து பேருக்காவது பரப்பி விட்டுத்தான் அடுத்த வேலைய பாக்க போவாய்ங்க.
சூரியனில் “ஓம்” என்ற ஓசை, ஆறுநாட்களுக்கு சூரியன் மறையாது, பத்து தலை கொண்ட பாம்பு, விண்கல் விழுவதால் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மொபைலை அணைத்து வைக்கவும், திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறளின் காப்பி (ஆனா எண்கள் எல்லாம் Times New Roman Font ல இருக்கும்), ஸ்கூல் வேன் ஆக்ஸிடென்ட், சுகர் மாத்திரையை தூக்கிப்போடுங்க இதச் சாப்பிடுங்க, அல்லது மென்னுச் சாப்பிடுங்க அல்லது எட்டு போடுங்க, இப்படி வாட்சாப் தேசம் ஒர வதந்திகளின் தேசமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்ற தகவல் கூட வாட்சப்பில் வந்த காரணத்தினால் காலையில கஷ்டப்பட்டு கண்விழிச்சி சூரியன் உதிக்கிறத பாத்து உறுதி செய்ய வேண்டியிருக்கு.
மேலே கூறியது யாவும் மூடநம்பிக்கை சார்ந்த வதந்திகள் என்றால் அரசியல் சார்ந்த வதந்திகள் ஒருபக்கம் வேகமாக திட்டமிட்டு பரப்பப் படுகின்றன.
இரண்டாயிரம் ரூபா நோட்டில் “சிப்“, மோடி ஒரு வீர்ர், தீரர் மற்றும் அசகாய சூரர் என்று மோடியை பிராண்ட் பொசிஷனிங் இன்னமும் செய்து கொண்டு தான் உள்ளனர். அப்புறம் அவருக்கு ஜால்ரா தட்டுவதற்கென்றே, கைத்தட்டினால் ஏற்படும் வைப் (வைப்ரேஷன்னு சொன்னா நீங்க வயசான ஆளு!! என்ன, ஒத்துக்கிறீங்களா?) கொரானாவை ஒழிக்கும், விளக்கேற்றினால் கொரானா எப்படியெல்லாம் துடிதுடித்து சாகிறது, அப்புறம் 700 கோடி உலக மக்கள் தொகையில் இருந்து இந்தியாவில் வாழும் ஒரு 800 கோடி பேருக்கு வங்கி கணக்கில் இருபதாயிரம் கோடி என்று மோடிக்கணக்கில் சாரி கோடிக் கணக்கில் அளந்து விடப்படும் செய்திகள் நமது வாசிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போகின்றதல்லவா?
ஏ.கே74, ஆமைக்கறி, இட்லிக்குள் சிக்கன், அரிசி ஏற்றிச் சென்ற கப்பலை சுட்டு பழக்கியது என்று புஹாபுஹா என்ற பின்னணி இசையுடன் கூடிய சீமானிய வதந்திகள் ஒரு புறம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. அப்புறம் எப்படி நாம் சோஷியல் மீடியாவில் இருந்து நமது கண்களை பேப்பர் மீடியத்திற்கு கொண்டு வர இயலும்?
அப்புறம் இந்த மதவாதிகள் இருக்கிறார்கள் அல்லவா? முகநூலில் இருக்கும் 100 மதவாதிகளும் தன்னுடையது நீங்கலாக மீதி உள்ள 99 கடவுள்களையும் நிராகரிப்பதோடு நிந்திக்கிறார்கள். நாத்திகர்கள் இன்னும் ஒன்றைக் கூட்டி 100 கடவுள்களையும் நிராகரிக்கிறார்கள். இந்த சண்டையில் கடவுள்களின் வீர தீர பராக்கிரமம் என்று அவர்கள் நம்ம காதில் பூ அல்ல பூக்கூடையையே வைப்பது அக்கிரமம். மதவாதிகளில் சற்று மிதவாதிகள் சிலர் உண்டு. (எனது துணைவியார் அந்தவகையினர் தான்) அவர்கள் எதுக்கு வம்பு நாம எந்த சாமியவும் பழிக்கவும் வேணாம் பகைச்சுக்கவும் வேணாம். சாமி தானே பாவம், கழுத கும்புட்டுட்டு போவோம் னு 100 க்கு 102 சாமிய கும்பிடுவதும் அது சார்ந்த பலாபலன்களை பரப்பி தெய்வ கைங்கர்யம் செய்வதும்  சோஷியல் மீடியா வாசிப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அப்புறம் இந்த அரசியல் கட்சிகள் சண்டை படிப்பதற்கு ரம்மியமாக இருக்கும் (சொன்னா நம்புங்க பாஸ் இந்த ”ரம்மி”யமாக என்ற வார்த்தை ஆன்லைன் ரம்மி விளம்பரத்துக்காக வலிந்து திணிக்கப்பட்டது அல்ல). பிரதான அரசியல் கட்சிகளைப் பற்றி பிரச்சினை இல்லை பிரதான எதிரி யாரோ அவரை மட்டுமே இலக்காக வைத்து பங்கம் பண்ணுவார்கள். ஆனால் இந்த இதரக் கட்சிகள் பாடு திண்டாட்டம் தான். ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு எந்தக் கட்சியை கழுவி கழுவி ஊற்றினார்களோ அந்தக் கட்சியோடு கூட்டணி ஏற்பட்ட பின்பு நிலைப்பாட்டை நேரெதிராக மாற்றிக் கொண்டு எழுதுவார்கள். ஏற்கனவே கழுவி கழுவி ஊற்றப்பட்ட செய்தியை முகநூலில் இருந்து கழுவி கழுவி துடைத்து சுத்தமாக்க வேண்டும். மறதியாக பிரதானக்கட்சிகள் தங்களோடு கூட்டணியில் இருக்கும் கட்சியை கவனிக்காமல் வாயை விட்டுவிடுவார்கள். அப்புறம் அந்த சிறிய கட்சிகள் “தோழமைச் சுட்டுதல்” மூலமாகத்தான் தங்களது சுயமரியாதையை தக்க வைத்த அதே வேளையில் கூட்டணியின் ஒற்றுமையையும் கட்டிக் காக்க வேண்டி இருக்கும்.
இந்த வாட்சாப் குழுக்களின் தொல்லை பெருந்தொல்லை. அது ஒரு சுகமான சோகம், ஆசையான அவஸ்தை. அலுவலக ரீதியான வாட்சப் குழுக்கள் நமக்கு சாதகம் பண்ணுதோ இல்லையோ பாதகம் பண்ணுவதில் முன்னணியில் இருக்கிறது. “ஓடவும் முடிவதில்லை ஒளியவும் முடிவதில்லை“. அடுத்த முறை அரசியல் சட்டத்திருத்தம் செய்யும் போது வாட்சாப் குழுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ குட்மார்னிங் குட்நைட் சொல்வோரை நெட்ஒர்க் இல்லாத தீவுக்கு நாடு கடத்த வகை செய்ய வேண்டும். ஸ்ஸ்…அப்பா முடியல.
எந்த நிகழ்வாக இருந்தாலும் போட்டோ எவிடென்ஸ் குழுவில் போடச் சொல்லிக் கேக்குறாங்க வாஸ்தவம் தான். அதுக்காக கேலரில இருக்குற மொத்த போட்டோவையும் அள்ளி போட்டுவிடுவதா? ஒரு முறை ஒரே தலைமையாசிரியர் 46 போட்டோக்களை போட்டு சிஇஓ குழுவையே கிடுகிடுக்க வைத்தார்.
அப்புறம் இந்த நண்பர்கள் குருப் இருக்கே, நமக்கு சம்மந்தமே இல்லாத குருப்ல எல்லாம் கோத்துவிட்டுவிடுவார்கள். அந்த குழுவில் இருந்து வெளியே வருவதற்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். அதனாலேயே என்னுடைய எண்ணை குழுவில் தானாக இணைக்க இயலா வண்ணம் செட்டிங்சை மாத்தி வைத்திருக்கிறேன்.
ஃபேமிலி குருப் எப்போதும் பிறந்தநாள் கல்யாணநாள் காதுகுத்து நாள் என கனஜோராக போய்க்கொண்டு இருக்கும். அப்புறம் இந்த YouTube உபயத்தால் கற்றுக் கொண்ட மொத்த வித்தைகளையும் இறக்கி செய்த டிஷ்ஷை சூடு ஆறுவதற்குள் குரூப்பில் இறக்கி வைத்து தெறிக்க விடுவார்கள். பாத்தாலே குமட்டுற பல ஐட்டத்திற்கு கூட டம்மியாக ஒரு ”யும்மி” யை டைப் செய்ததை இப்போ நெனச்சாலும் அழுகாச்சியா வருது. மாசக்கடைசியில் மொத்தக் குடும்பத்துக்கும் சைவ உணவின் மேன்மையையும் உடல் நலத்தையும் பற்றி வகுப்பெடுத்து சில்லறையை சிதற விடாமல் கோவணத்தில் முடிந்து வைத்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கமகமவென்று காலை டிபனுக்கே கறிக்குழம்பை போட்டு அத்தனை திட்டத்துக்கும் வேட்டு வைத்து விடுவார்கள். அப்புறம் என்ன காட்ட வித்தாவது கறிக்கடைக்கு நடையைக் கட்ட வேண்டியது தான்.
ஆக, இவ்வளவு தூரம் இந்த சோஷியல் மீடியாக்கள் நம்மை பிசியாகவே வைத்திருக்கிற காரணத்தினால் என்னவெல்லாம் கெட்டுப் போச்சு தெரியுமா?
  • 1.   செய்தித்தாள்கள் விற்பனை எண்ணிக்கை மளமளவென சரிந்து விட்டது. ஒரு சமயத்தில் ஐம்பது லட்சம் பிரதிகள் எல்லாம் விற்ற நிறுவனங்கள் கூட இப்போது ஐந்து லட்சத்திற்கே திணறுகின்றன.
  • 2.   ஒரு காலத்தில் ஆறு லட்சம் பிரதிகள் விற்ற ஆனந்த விகடன் குமுதம் இதழ்கள் கூட ஒரு லட்சத்திற்கு கீழே இறங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன.
  • 3.   அச்சுப் புத்தக விற்பனையும் கணிசமாக குறைந்து விட்டது.
  • 4.   உண்மைச் செய்திகள் அருகி விட்டன.
  • 5.   கூகுளின் உபயத்தில் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அந்த செய்தியே நம் கண்ணில் காட்டப் படுகிறது. நடுநிலையான கருத்துக்களோ செய்திகளோ புலப்படுவதில்லை.

”வன்புத்தகங்களின் காலம் வழக்கொழிந்து போய் மென்புத்தகங்களாம் மின்புத்தகங்களே எதிர்காலத்தில் கோலேச்சப் போகிறதா?” இப்போவே ரொம்ப லென்த்தா போயிடுச்சி அதனால இன்னொரு பகுதியில் இதைப்பற்றி பேசுவோம்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...