Monday, July 27, 2020

வாசிப்போம் வாருங்கள்


வாசிப்போம் வாருங்கள்

“சித்தப்பா நீங்க பெருசு பெருசா எழுதுறீங்க“
“மாமா என்ன பக்கம் பக்கமா எழுதுறீங்க“
“சார், நீங்க நிறைய எழுதுறீங்க”
மேலே உள்ளவைகள் அனைத்தும் நான் காதுபடவே கேட்ட பாராட்டுகள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. அவை அனைத்தும் அங்கலாய்ப்புகள். ’இவ்வளவு பெருசா எழுதுனா எப்படி வாசிப்பதாம்?’ என்பதன் இடக்கரடக்கல்.
நான்கு வரிகளுக்கு மேலே வாசிப்பதே இல்லை என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் இந்த மீம்ஸ் தலைமுறைகளை வாசிப்பை நோக்கித் திருப்புவது நமது கடமை. பேசுவதை நிறுத்தினால் ஒரு மொழி செத்துப் போகும் அல்லவா? அதுபோல வாசிப்பை நிறுத்தினால் அந்த மொழியின் இலக்கியங்கள் இறந்து போகாதா? மொழிசார்ந்த ஆக்குமைகள் அருகிவிடாதா? எனவே தான் இந்தக் கட்டுரை.
பாடப்புத்தகத்தை தாண்டி வாசிப்பு ஆர்வம் உங்களுக்கு துளிர்க்க வில்லை என்றால் உங்கள் ஆசிரியர்களோ பெற்றோரோ வாசிப்பு சுவையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வில்லை என்றுதான் அர்த்தம். எனவே பெற்றோரும் சரி முக்கியமாக ஆசிரியப் பெருமக்களும் சரி குழந்தைகளுக்க வாசிப்பு சுவையை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். மொழிவளமும் வார்த்தை வளமும் இருந்தால் பாடங்களை செய்தியாகவும் பொருளாகவும் உள்வாங்கி அவர்களது சொந்த நடையில் வெளிக்கொணர்ந்து விடுவார்கள். விருப்பம் இன்றி விழுங்கும் மாத்திரைகளைப் போல ஒவ்வொரு வார்த்தையாக விழுங்கி பரிச்சை பேப்பரில் வாந்தியெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. கற்றல் இனிமையாகவும் இயல்பாகவும் நிகழும்.
சரி நான் எப்போது வாசிப்பைத் தொடங்கினேன்? நான் வாசிப்பை எட்டு வயதில் துவங்கினேன். என்ன ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். நான் வாசிப்பை தொடங்கிய இடம் தினமலரின் வெள்ளிக் கிழமை இணைப்பாக அப்போது வந்து கொண்டு இருந்த சிறுவர் மலர். அதில் வரும் படக்கதைகள்தான் நான் முதலில் படித்த பாடம் சாராத விஷயம். எனது நண்பன் மணிவண்ணனுடைய தந்தை ஆசிரியர். அவர் தினமலர் ரெகுலராக வாங்குவார். வெள்ளிக் கிழமைதோறும் சிறுவர் மலரோடு வரும் மணிவண்ணனுக்காக ஆர்வத்தோடு காத்திருந்த நாட்கள் அவை.
நான்காம் வகுப்பு படித்தபோது அதே மணிவண்ணன் வீட்டின் முன்பு ஒரு பெட்டிக் கடை இருந்தது அங்கே 25 பைசா கொடுத்து ராணி காமிக்ஸ் புத்தகத்தை இரவல் வாங்கிச் சென்று படிக்கலாம். இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் 007, பூனைக்கண் மனிதம் மற்றும் கௌபாய் வகை படக்கதைகள் அப்போது என்னுடைய விருப்பத் தேர்வாக இருந்தது.
நான் எட்டாம் வகுப்பு படித்த போது எங்கள் ஊருக்கு பகுதிநேர கிராம நூலகம் வந்தது. அதில் படக்கதைகள் ஒன்று கூட இல்லை. படிக்காமல் கைகள் நடுங்க ஆரம்பித்ததால் மறுபடியும் அடுத்த நிலையில் நூலகத்தில் வெகு சொற்பமாகவே இருந்த ராஜேஷ்குமார், சுபா, தமிழ்வாணன் போன்றோரின் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் நாவல்கள் வாசித்து முடித்துவிட்டு ”மாவட்ட மைய நூலகத்தில் இருந்து புது புத்தகங்கள் எடுத்து வாங்கண்ணா” நூலகரைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
இதற்கிடையில் வார இதழ்கள் மாத இதழ்கள் வாசிக்கும் பழக்கம் வந்தது. பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்த போது எங்கள் தமிழ் அய்யா(பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன்) ”எத்தனை பேர் இலக்கியங்கள் நாவல்கள் வாசித்து இருக்கிறீர்கள்?” என்றார். நாங்கள் ஒரு நான்கு பேர் கனகம்பீரமாக கையை உயர்த்திக் கொண்டு மற்ற மாணவர்களை சற்று ஏளனமாக “அற்ப பதர்களே” என்பது போல பார்த்தோம். என்ன நாவல்கள் என்றதும் நாங்கள் மேற்படி க்ரைம் நாவல் வகையறாக்களை கூறிய போது “அற்ப புழு“வைப் பார்ப்பது போல பார்த்து விட்டு அவர் சில பெயர்களை அறிமுகப்படுத்தினார். என்னதான் க்ரைம் நாவல் வகையறாக்களை இலக்கியங்கள் என்ற வரையறைக்குள் நுழைய விடாமல் இலக்கிய சுத்திகரிப்பாளர்கள் தடுத்தாலும் பதின்பருவத்தினரை வாசிப்பை நோக்கி இழுப்பது இந்த வகை நாவல்கள் தான். எனவே இலக்கியம் என்றால் அவையும் இலக்கியம்தான் என்பது தான் எனது எண்ணம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த காலத்தில் கல்கியின் படைப்புகள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். செமஸ்டர் விடுமுறையில் சாப்பாட்டு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் நான் விடாமல் வாசிப்பதைப் பார்த்த என்னுடைய அம்மா, “தம்பி பெரிய பெரிய புத்தகமா படிக்கிறான், சீக்கிரம் வேலை வந்துடும் தானே?” என்று அப்பாவியாய் எனது அப்பாவிடம் கேட்க ,“அதெல்லாம் கதை புஸ்தகம்” என்றது இன்னமும் நினைவில் உள்ளது.
கொல்லிமலையில் ஹில்டேல் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த போது அங்கே இருந்த ஒரு கண்ணாடி போட்ட பீரோ நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்த உடன் கை நம நமவென அரிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சாவி வாங்கி அந்த பீரோவை குடைந்து ரக வாரியாக புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு ஒரு பத்து புத்தகங்களை கையோடு தங்கும் அறைக்கு எடுத்துச் சென்று விட்டேன். அப்போது தான் அறிவியல் கட்டுரையாளர் என்.ராமதுரை எனக்கு அப்பல்லோ மிஷன் சார்ந்த தொடர் வழியாக அறிமுகமானார்.
அரசு மேல்நிலைப் பள்ளி, உட்கோட்டையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு உட்கோட்டை கிராம நூலகத்தில் இருந்து நூல் தினமும் ஒன்றாக எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
”வாசிச்சேன் வாசிச்சேன்னு ரொம்ப பீத்திக்கிறியே அதனால ஒனக்கு பைசா பிரயோசனம் உண்டா?” என கேட்க நினைக்கும் உங்க மைண்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன்.
நான் ஆசிரியராக பணியேற்ற பின்பு பாடம் சாராத பல விஷயங்களை மாணவர்களுடன் உரையாடி கற்றலை மெருகேற்றவும் இனிமையாக்கவும் முடிந்தது. அதுவும் ஆங்கிலப் பாடங்கள் நடத்தும் போதெல்லாம் முன்னுரையிலேயே மூன்று நாட்கள் பெட்ஷீட் விரித்து படுத்து இருந்த நாட்கள் உண்டு. பேசப்பேச அவ்வளவு விஷயங்கள் கொட்டும். நான்டீட்டைல் கதைகளை டீட்டைலாக யாரும் நடத்தமாட்டார்கள். ஆனா நான் நடத்துவேன். முத்தலெட்சுமிரெட்டி பாடத்தை நடத்தும் போது பாலினசமத்துவம் பழங்கால பிற்போக்கான நடைமுறைகள் பற்றி பேசாமல் இருக்க இயலுமா? இந்திராகாந்தி பாடம் நடத்தும் போது வங்கிகளின் தேசியமயம், மன்னர் மாநியம் ஒழிப்பு என வார்த்தைகளாக கடந்து செல்லமுடியுமா? நிச்சயமாக சொல்வேன் வாசிப்பு என்னுடைய வகுப்பறைகளை வளமாக்கியது.
2018 ஆகஸ்ட் மாதம் தலைமையாசிரியராக பதவியேற்ற சிலநாட்களில் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் ஆண்டாய்வு நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் வந்தவுடன் வரவேற்று காலை கூடுகைக்கு முன்பு வரை மாணவர்களின் கல்வி பற்றி பேசிக் கொண்டு இருந்தாம். பெல் அடித்தவுடன் ”நிறைய வாசிப்பீங்க போலிருக்கு. நிறய விஷயம் சொல்றீங்க சார்” என்றபடி எழுந்தார். மாலை ஃபீட்பேக் கூட்டத்திலும் என்னையும் வாசிப்பையும் வெகுவாக பாராட்டினார். தலைமையாசிரியராக முதல் ஆய்வுக்கூட்டம் என்பதால் சற்று பதட்டமாகவே இருந்தேன். எதையும் திட்டமிட்டெல்லாம் பேசவில்லை. ஆனால் நம்முடைய  வாசிப்பு நமது உரையாடல்களைக் கூட வளமான(Resourceful) ஒன்றாக ஆக்கிவிடும் என்பதை அன்று உணர்ந்து மகிழ்ந்தேன்.
மற்றுமொரு நிகழ்வு. 2002 ல் வேலைக்கு வந்த புதிதில் புத்தகங்கள் மாற்றப்பட்டன. புதிய புத்தகங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. அங்கே தான் ஒரு குழப்பம் நடந்து போச்சு. திடீரென பயிற்சிக்கு நான்கு ஆசிரியர்களை மாட்ட அளவில் கேட்டிருக்கிறார்கள். உடனே அலுவலகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் புதிதாக பணியேற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து பயிற்சிக்கு வடலூர் வள்ளலார் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கே சென்று பார்த்தால் எல்லோரும் பழம் தின்று கொட்டைப் போட்ட மூத்த ஆசிரியர்கள். அப்புறம்தான் தெரிந்தது புதியப் பாடத்திட்டத்திற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சி அது என்பது. அந்த சமயத்தில் நாங்கள் பயிற்சி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் எங்களது தந்தை வயது உள்ளவர்கள். அந்த பயிற்சியில் அவர்களிடம் கணிதம் பேசினால் மாட்டிக் கொண்டு விடுவோம் என்பதால் பாடத்தை தாண்டி பல விஷயங்களைப் பேசிமுடித்து கொஞ்சமாக கணிதமும் பேசி தப்பித்தேன். வாசிப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் அது முடியுமா?
எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? – உங்களை வசீகரிக்கும் எதையும் வாசியுங்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள், விளையாட்டுக் கட்டுரைகள், பொது அறிவு, வரலாறு, தன்னம்பிக்கை, நகைச்சுவை, அரசியல் என எது பிடிக்குமோ வாசிக்க ஆரம்பித்து விடுங்கள். சும்மா மொபைல் போன் திரையை நொய்யி நொய்யின்னு நோண்டிக்கிட்டு விட்டேத்தியாக இருக்கும் நேரத்தில் நிச்சயமாக வெட்டியாகத்தான் இருப்போம். எனவே சிந்தனையை சற்று மடைமாற்ற புத்தகங்களை கையில் எடுங்கள். வீட்டில் புத்தகம் இல்லையா? நூலகத்தில் உறுப்பினர் ஆகுங்கள். 30 ரூபாய்தான். நண்பர்களோடு டீ குடிக்கும் செலவில் பாதி செலவுதான். ஒரு ஆண்டு முழுவதும் அங்கே உள்ள புத்தகங்களை இரவல் வாங்கி படிக்க இயலும். இல்ல நான் பொழுதுக்கும் மொபைல் திரையோடு குடியும் குடித்தனமுமாக இருந்து பழகிவிட்டேன் என்கிறீர்களா அப்படின்னா உங்கள் மொபைலில் கிண்டில் ஆப் டவுன்லோட் செய்யுங்கள். தினம்தோறும் நூறு தலைப்புகளில் தமிழ் புத்தகங்கள் மட்டுமே விளம்பரத்துக்காக இலவசமாக தரப்படுகிறது தரவிறக்கி படித்து மகிழுங்கள்.
”வாசிப்பின் பலன் உடனே கிடைக்குமா? வங்கிக்கணக்கில் பணம் ஏறுமா?“ என்றெல்லாம் கேட்காதீர்கள். வாசிப்பு என்பது ஒரு மரம் வைத்து நீர் வார்ப்பது மாதிரி அடுத்த நாள் காலையில் பழம் பறிக்க முயலவேண்டாம், ஆனால் குறுகிய காலத்திலேயே உங்களது மொழிவளம் சிறப்பாக வளர்ந்திருக்கும். Vocabulary எனப்படும் வார்த்தை வளம் கூடியிருக்கும். அது நமது எழுத்திலும் பேச்சிலும் எதிரொலிக்கும். வாசிப்பில் புகும் போதே இதைப் படித்து நான் ஐஏஎஸ் பரிச்சையில் பாஸாக வேண்டும், டி.ஆர்பி அல்லது டி.என்.பி.எஸ்.சி பரிச்சையில் வென்று அரசு வேலைக்கு போகவேண்டும் என்ற உள்நோக்கத் தோடு நுழைய வேண்டாம். எந்த எதிர்பார்ப்போ, முன்முடிவோ இன்றி வாசிப்பில் ”தொபுக்கட்டீர்” என்று குதித்து விடுங்கள். வாசிப்பை உணர்ந்து உள்வாங்கி என்ஜாய் பண்ணி செய்யுங்கள். நாளடைவில் மேற்சொன்ன அனைத்து விஷயங்களும் நடக்க வாசிப்பு நல்லதொரு காரணமாக ஆகியிருக்கும்.
போட்டித் தேர்வுக்கு படிக்கும் போது கூட வினா-விடை வடிவங்களில் இருக்கும் புத்தகங்கள் வாசிப்பது வீண்வேலை. சிலபஸ் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய சுவாரசியமாக எழுதப்பட்ட தொடர்பு நூல்களை வாசித்துப் பாருங்கள். பாடத்திட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்புலத்தோடு உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்புறம் என்ன எப்படிக் கேட்டாலும் அந்தப் பகுதியில் வரும் வினாக்களுக்கு விடையளிக்க இயலும்.
எனவேதான் சொல்கிறேன் ”வாசிப்போம் வாருங்கள்; புத்தகங்களை நேசிப்போம் வாருங்கள்”


1 comment:

  1. "நான் வாசிப்பை எட்டு வயதில் துவங்கினேன்" - அட ஆச்சரியமாக இருக்கே... அப்போ நீங்களும் என்னைப்போலவேதானா?!.. நானும் அதே எட்டு வயதில்தான் துவக்கினேன் ... ஆனால் வாசிக்கும் ஆர்வத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தவர் என்னுடைய தந்தை ... பையன் வரும்காலத்தில் புத்திசாலியாக வரவேண்டும் என்பதற்காகவே வருமானத்தை எல்லாம் புத்தகம் வாங்குவதற்காகவே செலவிட்டார். அந்த நன்றிக்காகவே அவருக்கு ஒரு கோவில் கட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...