Saturday, July 25, 2020

புத்தகம் – ஆண்டன் செகாவ் சிறுகதைகள்


புத்தகம் – ஆண்டன் செகாவ் சிறுகதைகள்
ஆசிரியர் – வேற யாருங்க ஆண்டன் செகாவே தான்
மொழி பெயர்ப்பு – வெங்கட சுப்பராய நாயக்கர்
இந்த புத்தகம் கிண்டிலில் வாசித்தேன்.
பள்ளி ஆங்கிலப் பாடங்களில் கதைப் பகுதி நான் டீட்டெயில் என்று வரும். அதில் பல சுவையான ஆங்கிலக் கதைகள் கொடுக்கப் பட்டிருக்கும். அதில் இவரது கெமிலியான் – பச்சோந்தி என்கிற பிரபலமான கதையை வாசித்து இருக்கிறேன். அதிகார மட்டத்திற்கு ஏற்ப போலீஸ்காரர்கள் எப்படி சட்டத்தை வளைக்கிறார்கள் என்பதை ஒரு நாய் மற்றும் கடிபட்டவன் இருவரையும் ஒரு போலீஸ் நடத்தும் விதத்தை  வைத்து சூப்பராக பகடி செய்து இருப்பார்.
     இந்த தொகுப்பில் என்னை வெகுவாக ஈர்த்த மெல்லிய நையாண்டி இழையோடும் கதைகளைப் பற்றி சிறு அறிமுகம் செய்கிறேன்.
     பேச்சாளர் - ஒரு பிரபலமான பேச்சாளர். கல்யாணம், காதுகுத்து, கெடாவெட்டு எதுக்குன்னாலும் போய் மணிக்கணக்கில் சொற்பொழிவை ஆத்து ஆத்துன்னு ஆத்துறவர். ஒரு பிரபலமான ஆடிட்டர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் சொற்பொழிவு ஆற்ற அவரை அழைக்கிறார்கள். அவரும் அவசரகதியில் எங்கேயோ கிளம்பியவர் ’சரி கழுதை ஆத்திப்புட்டுத்தான் போவோமே’ என்கிற ரீதியில் வருகிறார். வந்து ரொம்ப உருக்கமாக, கண்களில் நீர் வரவழைக்கும் வகையில் தெரியாமல் பெயரைச்சொல்லி உயிரோடு இருக்கும் ஒருவரைப் போட்டு பொள பொள என்று பொளந்து கட்டுகிறார். சம்பந்தப் பட்ட நபரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திகைத்துப் போகிறார்கள்.
கொஞ்சம் அதிகம் – ஒரு நில அளவையாளர் ஒருவர் ஒரு நெடுந்தொலைவு கிராமத்துக்கு பயணப்பட வேண்டி ஒரு குதிரை வண்டிக்காரனை அமர்த்திக் கொண்டு செல்கிறார். ஆரம்பத்தில் மெதுவாக நடந்து கடுப்பைக் கிளப்பும் குதிரை கானகப்பகுதி வந்தவுடன் விரைகிறது. நிலஅளவையாளரோ இந்தப் பயல் நம்மை எங்கோ கடத்திச் சென்று பணம் பறிக்க திட்டமிடுகிறான் என்று எண்ணி எனக்கு ஐ.ஜியைத் தெரியும் என்கிற ரேஞ்சில் அள்ளி விடுகிறார். ஆனாலும் வேகம் குறையவில்லை. அப்புறம் நான் துப்பாக்கி வைத்துள்ளேன் என்கிறார் பிறகு அதை வைத்து எனக்கு சுடத்தெரியும் என்கிறார். பையில் சும்மானாச்சும் கையை விடுகிறார். வண்டியோட்டி திடுமென கீழே குதித்து பின்னங்காவ் பிடறியில் பட ஓடுகிறான். ஏன் ஓடினான் என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலைப்பொருள் – கோயில் பிரகாரங்களில் மிகவும் கலைநயத்தோடு காமம் சொட்ட சொட்ட பல சிற்பங்களை பார்த்திருப்போம். உடலுறவின் பல்வேறு யுத்திகள் எல்லாம் கூட வடிவங்களாக செதுக்கப் பட்டிருக்கும். அதுமாதிரி ஒரு கலைப் பொருளை கலைக் கண்ணோட்டத்தோடு வாங்கி மேசை மீது வைத்துக் கொள்வோமா? நிறைய பேர் சற்று சங்கடமாக நினைத்து தவிர்ப்பார்கள். இந்தக் கதையில் அதுமாதிரி ஒரு கலைப் பொருளை தனக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு காசுக்கு பதிலாக ஒரு சிறுவன் கொடுத்து நன்றி பாராட்டுகிறான். அதை பெற்ற அவர் அதை மேசையில் வைக்க இயலாது என தனது வக்கீல் நண்பனிடம் தள்ளி விடுகிறார். அவனுக்கும் அதே பிரச்சனை அவன் அதை தனது நண்பனான நடிகனிடம் தள்ளி விடுகிறான். அவனது காரியதரிசியின் ஆலோசனையின் பேரில் அதை கலைப் பொருட்களை வாங்கி விற்கும் ஒரு குடும்பத்தினரிடம் விற்று விடுகிறான். மறுநாள் மருத்துவமனை கதவு தட்டப் படுகிறது. அதே சிறுவன். ”சார் அந்தக் கலைப்பொருள் ஜோடியாக இருந்தால் தான் அழகு. இதோ அதற்கான ஜோடி ஒன்றை ஒருநடிகரிடம் இருந்து வாங்கினேன்” என்று மேசையில் வைக்கிறான். டாக்டர் “ஙே“ என்று விழித்தார்.
குண்டானவன் ஒல்லியானவன் – இந்தக் கதையில் இரண்டு பால்யகால சிநேகிதர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கிறார்கள். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறி மிகவும் அந்நியோன்யத்துடன் பழகுகிறார்கள். அந்த குண்டான நண்பர் மாகாண கவர்னர் என்பது தெரிந்த மாத்திரத்தில் அவர்களது நட்புக்கு இடையில் மேல் கீழ் என்கிற தன்மை வந்துவிடுகிறது. என்ன தான் கவர்னர் மறுத்தாலும் அந்த ஒல்லி நண்பர் அவரை மிகுந்த மரியாதையோடு சற்று விலகி நடத்துகிறார்.
ராஜதந்திரி – நம்மில் நிறைய பேர் இருப்பார்கள். ஒரு சாதாரண விஷயத்தை ரொம்ப ராஜதந்திரமாக செய்ய முனைந்து அதைக் கேலிக்கூத்து ஆக்கிவிடுவார்கள். இந்தக் கதையில் ஒருத்தனுடைய மனைவி இறந்து போகிறாள். சேதி சொல்லி கணவனை அழைத்து வர ஒருத்தன் செல்கிறான். நேரடியாக சொன்னால் அவனுக்கு அதிர்ச்சியில் ஏதேனும் ஆகிவிடும் என்கிற நல்ல எண்ணத்தில் “சிங்கிளாக“ வாழ்வதன் மேன்மையை பற்றி விதந்து ஓதுகிறான். மனைவி சரியான நச்சறிப்பு பிடித்தவர்கள் அப்படி இப்படி என்று அளக்கும் போது வாய்தவறி இரண்டு முறை இறந்து போன விஷயத்தை சொல்லி விடுகிறான். கணவனோ எனது மனைவி இறந்து போய்விட்டாளா என்கிறான். இல்லை நான் எப்போது அப்படி சொன்னேன் என்று சமாளிக்கிறேன் பேர்வழி என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கி மயக்கமுறச் செய்து விடுகிறான். கடைசியில் “இந்தக் காரியத்தை என்னால் செய்ய இயலாது வேறு யாராவது அவனிடம் சொல்லுங்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் மயக்கம் போட்டு விட்டான்” என்று புலம்புகிறான்.
     ஆண்டன் செகாவ் கதைகள் ஆரம்பகால வாசிப்பாளர்கள் வாசிக்க ஏற்றவை. ஏனெனில் அவ்வளவு எளிமை தெளிவு மற்றும் நய்யாண்டி மிக்கது.  மேலை நாட்டு சிறுகதைகளில்எனக்கு ஆண்டன் செகாவ் மற்றும் ஓ.ஹென்றி சிறுகதைகள் மிகவும் பிடிக்கும்.


No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...