Wednesday, July 22, 2020

CHILDREN OF HEAVEN – பெர்சியன் மொழிப் படம்


CHILDREN OF HEAVEN – பெர்சியன் மொழிப் படம்

     1997 ல் வெளியாகி பரவலாக உலகலாவிய கவனத்தை ஈர்த்த ஒரு இரானியப் படம் தான் இந்த சில்ரன் ஆஃப் ஹெவன். இது குழந்தைகள் திரைப்படம் எனவும் கொள்ளலாம் குழந்தைகளை மையமாகக் கொண்ட பெரியவர்களுக்கான திரைப்படம் எனவும் கொள்ள முடியும்.
     அலி, சாய்ரா இருவரும் இரானில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த ஏழ்மையான குடும்பத்தில் உள்ள குழந்தைகள். அப்பா, அம்மா மற்றுமொரு கைக்குழந்தை என ஐந்து பேர்களைக் கொண்ட குடும்பம். ஏழ்மையும் நேர்மையும் உருவானவர் தந்தை. தாய் நோய் வாய்ப்பட்டவர். குழந்தைகள் இருவரும் நன்றாக படிப்பதோடு மிகுந்த பொறுப்போடு சிற்சிறு வீட்டு வேலையையும் செய்கின்றனர்.
     சாய்ராவின் பிய்ந்து போன பள்ளிச் செறுப்பை (Sneakers) தைக்க எடுத்துச் செல்லும் அலி வரும் வழியில் காய்கறி வாங்கும் போது செறுப்பு உள்ள பாலித்தீன் பையை வெளியே வைத்து விட்டு உள்ளே செல்கிறான். இதற்கிடையே காய்கறி கடைகளில் சேகாரமாகும் குப்பைகளை அள்ளும் வண்டி வந்து இவன் செறுப்பு வைத்திருந்த பையையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போய்விடுகிறது. வெளியே வந்து பார்த்தால் செறுப்பைக் காணோம். அவளுக்கு அந்த செறுப்பு சீருடையின் அங்கம். எனவே அது இல்லாமல் பள்ளி செல்ல இயலாது.
     வீட்டிற்கு வந்து அவளிடம் உண்மையை சொல்கிறான். நாளைக்குள் நான் தேடி எடுத்து வந்து விடுகிறேன் என்கிறான். இதற்கிடையே அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு படிக்க அமரும் போது தங்கை எழுத்த மூலமாக “செறுப்பு இல்லாமல் நான் பள்ளிக்கு எப்படிச் செல்வது என்று கேட்கிறாள்” அதற்கு அவன் ”என்னுடைய பள்ளி ஷூவை அணிந்து செல்” என்று பதில் எழுதி தருவதோடு அவளை சமாதானப் படுத்த ஒரு புதிய பென்சிலையும் தருகிறான். தந்தைக்கு தெரிந்தால் அடிவிழும் என்பதை விட தந்தையால் உடனடியாக ஒரு புதிய செறுப்பை வாங்க இயலாதே என்கிற கவலைதான் அவன் செய்த இந்த இடைக்கால ஏற்பாட்டிற்கு காரணம்.
     சாய்ரா காலையில் செறுப்பு அணிந்து கொண்டு பள்ளி செல்ல வேண்டும். பள்ளி முடிந்தவுடன் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வந்து அவனிடம் செறுப்பை தந்து விட வேண்டும். அதைப் போட்டுக் கொண்டு அவன் திரும்ப வேகமாக ஓடிப் பள்ளியை அடைய வேண்டும். தினந்தோறும் இருவரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். (ஈரானில் பெண்களுக்கு காலையிலும் பசங்களுக்கு மாலையிலும் பள்ளி இருக்கும் போலிருக்கிறது.)
     ஒரு நாள் காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் வேறு வகுப்பு சிறுமி ஒருத்தி சாய்ராவின் செறுப்பை அணிந்திருக்கிறாள். பள்ளி முடிந்த பின் அவளைப் பின் தொடர்ந்து அவளது வீட்டைக் கண்டு கொள்கிறாள். திரும்ப அண்ணனை அழைத்து வந்து வீட்டைக் கண்காணிக்கிறார்கள். அப்போது தான் தெரிகிறது அவளது தந்தை பார்வையற்றவர். அந்த நிலையிலும் வீடு வீடாக பிரெட் எடுத்துச் சென்று சொற்ப வருமானம் ஈட்டுகிறார். அவளது குடும்ப நிலை இவர்களுடையதைவிட இரங்கத்தக்கதாக இருப்பதால் செறுப்பை திரும்பவும் கேட்க மனமின்றி திரும்பிவிடுகிறார்கள்.
     அடுத்ததாக ஒரு மருந்து அடிக்கும் இயந்திரம் அலியின் தந்தைக்கு கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு ஒரு விடுமுறை நாளில் நகரத்திற்குச் சென்று எதாவது ஒரு மாளிகையில் தோட்ட வேலை செய்து கூடுதல் வருமானம் ஈட்டி வரலாம் என்று மூச்சு வாங்க சைக்கிள் மிதித்துக் கொண்டு அலியும் தந்தையும் செல்கின்றனர். நீண்ட தேடலுக்குப் பின் ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது. செய்து முடித்த ஏராளமான பணமும் கிடைக்கிறது. அவனது தந்தை பலவாறான கனவுகளை சைக்கிளை மிதித்தபடி அவனிடம் சந்தோஷமாக கூறிவருகிறார். அவனோ முதலில் சாய்ராவுக்கு செறுப்பு வாங்கிக் கொடுங்கள் அவளுடையது பிய்ந்து போய் இருக்கிறது என்கிறான். பெரிய இறக்கத்தில் இறங்கும் போது  பிரேக் பிடிக்காமல் ஒரு மரத்தில் மோதி கீழே விழுகின்றனர். நெளிந்து போன சைக்கிள் கட்டு போட்ட மண்டை என ஒரு லாரியில் வீடு திரும்புகின்றனர். கனவு கானலாகிவிட்டது.
     பள்ளியில் ஒரு நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஒன்றை அறிவிக்கிறார்கள். நிறைய பள்ளிகள் பங்கு பெறும் போட்டி. அதில் மூன்றாவதாக வந்தால் கோப்பையுடன் ஒர ஜோடி Sneakers ம் உண்டு என அறிவிக்கிறார்கள். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறான். இவ்வளவு நாட்கள் அண்ணனும் தங்கையும் ஓடிய ஓட்டங்கள் நிற்க வேண்டுமானால் இந்த ஓட்டத்தில் அவன் பரிசு வாங்க வேண்டும். அவளது தங்கையை நினைத்தபடி ஓடுகிறான். இந்த முயற்சியில் அவன் செறுப்பை வென்று தங்கையின் கால்களுக்கு ஓய்வு கொடுத்தானா என்பதை மட்டும் படத்தில் கண்டு கொள்ளுங்களேன்.
     ஒவ்வொரு காட்சியும் அவ்வளவ அருமை. அலியாக நடித்த அந்தப் பையன் கண்களில் சோகத்தை அவ்வளவு அழகாக தேக்கி வைத்து நடித்திருக்கிறான். அவளது நடிப்பைப் போலவே அந்தச் சிறுமியும் அவ்வளவு அழகு. படத்தில் எவரும் கெட்டவர் இல்லை. வேகமாக ஓடிவரும் போது கால்வாயில் ஒற்றைச் செறுப்பு விழுந்து நீரில் வேகமாக அடித்துச் செல்லப்படும் போது அவளோடு நாமும் தவித்துப் போகிறோம். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய செறுப்பு பிரச்சனையை இறுதி வரை சொல்லாமல் சமாளிக்கும் பொறுப்பான அண்ணனாக வரும் அலியாக நடித்தச் சிறுவன் விருதுக்கு தகுதியான அளவு நடிப்பை வழங்கி இருக்கிறான்.
     அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு ஃபீல் குட் மூவி. நிச்சயமாக குழந்தைகளை பார்க்கச் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...