Friday, July 31, 2020

இந்தியக் கல்வியின் இருண்ட காலம்


புத்தகம் - இந்தியக் கல்வியின் இருண்ட காலம்

NEP ஐ ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து கல்வித்துறையில் பெரும் ஆளுமைகள் எழுதி பல்வேறு அச்சு ஊடகங்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
விலை – ரூ.80
     பாஜக கூடாரத்துக்குள் துண்டு போடுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கும் போது நடிகை குஷ்பு புதியக் கல்வி ஆதரவு நிலைப்பாடு என்கிற துண்டு போட்டிருக்கிறார். நடிகர் கமலஹாசன் அவர்கள் தேர்தல் சமயத்தில் நீட்டுக்காக டார்ச்லைட்ட எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்செறிஞ்சார் ஆனா இப்போ முழுவதும் தேர்வுகளாலும் நுழைவுத்தேர்வுகளாலும் நிரம்பிய புதியக் கல்விக் கொள்கையை ஆதரிக்கிறார். காரணம் உள்ளே என்ன இருக்கு அதன் பின் விளைவுகள் என்ன என்கிற ஆழமான புரிதல் இல்லாதது தான். (அவங்களும் புதியக் கல்விக் கொள்கை சம்மந்தமா சுருக்கமா போடாம ஒரு 400 பக்கத்திற்கு போட்டு வச்சா எப்படி படிப்பது?)
     அதனாலதான் கல்வித்துறை ஆளுமைகளின் விரிவான அலசல்களை படித்தீர்கள் என்றால் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அனைவருக்கும் ஏற்படும். இந்த புத்தகம் அதற்கு ஒரு நல்ல வழிகாட்டி நூலாக அமையும்.
     சரி புத்தகத்திற்குள் வருவோம்.
தொகுப்பாசிரியர் பேராசிரியர் நா.மணி அவர்களின் தொகுப்புரையில் “உலக முதலாளித்துவ நலன்களும் இந்துத்துவ ஆதிக்க நலன்களும் இணையும் புள்ளியாக உலகமயமாக்கல் தனியார்மயம் தாராளமயமாக்கல் அமைந்துள்ளது” என்கிறார். அந்த நலனைப் பேணவேண்டியே இந்த கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர பாஜக துடிக்கிறது என்று ஆரம்பிக்கிறார்.
புத்தகம் தோழர் ச.மாடசாமி அவர்களின் “பாலகர்கள்!! பத்திரம் இந்தப் பூனையை நம்பவா?” என்றக் கூர்மையான விமர்சனக் கட்டுரையில் ஆரம்பிக்கிறது. மூன்று வயது முதலே மூன்று மொழி என்கிற விஷயத்தில் ”சமஸ்கிருதத்திற்கு கதாநாயக அந்தஸ்து மற்ற மொழிகள் துணைப்பாத்திரங்கள்” என்று தோலுரிக்கிறார். அப்புறம் இந்தியாவில் 45 விழுக்காட்டினர் பேசும் மொழி இந்தி என்று கதைக் கட்டுகிறார்கள். ஆனால் உண்மைநிலவரம் 25 விழுக்காடு என்று இந்து தமிழ் பத்திரிக்கையை மேற்கோள் காட்டுகிறார். ஏற்கனவே தோழரின் ஒரு புத்தகத்தில் பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளுக்கு சொல்ல ஏற்றவை தானா? என்ற வினாவை படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் “பொதுவாக யாரை விலக்குவது என்பது தான் பழைய சமஸ்கிருத கதைகளின் மையம்” என்று அவர்களின் Exclusion பாலிசியை கூறுகிறார். நிச்சயமாக நாம் படித்து உண்மைநிலையை புரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.
அடுத்ததாக ஆர்.ராமானுஜம் என்பவர் எழுதிய கட்டுரையில் வரவேற்கும் அம்சங்கள் என்று தரமற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை களைதல் என்று ஆரம்பிக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு வரையில் இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் ஆமோதிக்கிறார். வரவேற்று எட்டு பாய்ண்ட்டுகள் எழுதிய அவர் எதிர்த்து பத்துப் பாய்ண்ட்டுகள் எழுதியுள்ளார். இறுதியில் ஒ “இந்த வரைவுக் கொள்கை செவ்வாய்க் கிரகத்தில் அமைந்திருக்க கூடிய ஒரு நாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றா?“ என்று இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீது விழுந்த அடி என்று முடிக்கிறார்.

மூத்த கல்வியாளரான சு.சீ.இராஜகோபாலன் அவர்களது சுருக்கமான கட்டுரையில் “ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக் கூடையில் வீசுவதே நமது கடமை” என்று முடிக்கிறார்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் விரிவான நேர்காணலில் மொழித் திணிப்புகள் பற்றி ஆழமாக உரையாடி இருக்கிறார். “அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி முறைமை மூலமாக கல்வி வழங்கப்படுவது தான் மெய்யான கல்வி உரிமை” என்கிறார்.
ஆயிஷா நடராசன் அவர்களின் கட்டுரையில் “சாதாரண மக்களிடமிருந்தும் உழைப்பாளி மக்களிடமிருந்தும் கல்வியை எவ்வளவுக்கெவ்வளவு விலகி இருக்குமாறு செய்யலாம் என்று திட்டமிடுவதே நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்விக் கொள்கை“ என்கிற லெனின் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி சிம்பிளாக விளங்க வைக்கும் அவரது கட்டுரை இந்தியக் கல்வி முறை கடந்து வந்த பாதைகளை எடுத்துக் கூறி இந்தக் கல்விக் கொள்கையின் தன்மைகளை கேள்வி பதில் வடிவில் தெளிவாக அலசியுள்ளது.
உயர்கல்வி தொடர்பான கேடுவிளைவிக்கும் மாற்றங்களை ஆதாரங்களோடு சாடும் பேராசிரியர் ப.சிவக்குமார் அவர்கள் “அர்த்த சாஸ்திரமும் மனுதர்மமும் ஒரு கையில் கார்பரேட் வணிகத்துக்கும், Artificial Intelligence  க்கும் சேவை செய்யும் நிதி ஆயோக் மற்றொரு கையில். இவற்றால் பின்னிப் பிணைந்த  சமூகத்தை அமைப்பதே அவர்கள் கொள்கை” என்று முத்தாய்ப்பு வைத்து முடிக்கிறார்.
மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தனது கட்டுரையில் குழந்தைகள் தங்கள் ஆற்றல் மிகு பருவத்திலேயே பன்மொழிக் கற்க வேண்டும் என்பது எவ்வாறு முரண்பாடானது என்று உண்மைத் தரவுகளின் வழி சாடுகிறார்.
தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் இரா.முரளி அவர்கள் ”ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி…” என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் உயர்கல்வி குறித்த பரிந்துரைகளை நுணுக்கமாக ஆராய்ந்து ராவாக இறங்கி அடிக்கிறார்.
கலகல வகுப்பறை சிவா அவர்களின் கட்டுரையில் “முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்டவர்களை பல்வேறு நிலைகளில் கல்வியில் இருந்தே விரட்ட முயலும் சதித்திட்ட வரைவே இஃது” என்கிறார்.
இவையன்றி இன்னும் சில ஆளுமைகளின் கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஆக, இந்தப் புத்தகத்தை வாசித்தோம் என்றால் எதற்காக புதியக் கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதை ஆழமாக புரிந்து கொண்டு தீவிரமாக எதிர்க்கலாம்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...